Thursday, December 14, 2006

கவி 26:டிசம்பர் பக்கங்கள்

டிசம்பர் மாதம்..
போர்வைக்குள் தூக்கம்..
மெதுவாய் திறக்கும்
என் இமைகளின்
இடையினில்
பூக்களைச் செருகிச்
செல்கிறாய்...

உன் புன்னகை..

சூடு பறக்கும்
காலைக் காபி..
ம்ம்ம் பருகும் போது
பரவசம்....
கோப்பை நுனியில்
மிச்சமிருப்பது

உன் முத்தம்...

போர்வை விலக்கிச்
சோம்பல் முறிக்க...
தேகம் நெளிக்கிறேன்..
என் செல்கள்
ஒவ்வொன்றிலும்
முந்தைய இரவினில்
குடிப் புகுந்த

உன் வெட்கம்...

ஜன்னல் வழியே
குளிர் காற்று
முகத்தில் அறைய
மூச்சு காற்றில்
மிஞ்சி நிற்கும்

உன் வெப்பம்.....

சன்னமாய் ஒலிக்கும்
சின்னதொரு பறவைக்
குரலின் வழியே
என் விடியல்
அறிவிக்கும்

உன் சிணுங்கல்...

இப்படி
டிசம்பர் மாதம்
என் டைரியின்
மொத்தப் பக்கங்களும்
சேமித்து வைத்திருப்பது

உன் காதல்...

Tuesday, December 05, 2006

கதை11:அப்பா - பாகம் 2

அப்பா பாகம் 1

மறுபடியும் பஸ் கிளம்பிப் போகவும் நான் டீ குடிச்சு முடிக்கவும் சரியா இருந்துச்சு.


சென்னையிலே ஒரு சாப்ட்வேர் கம்பெனியிலே எனக்கு வேலைக் கிடைச்சு வாழ்க்கை ஒரு மாதிரி ஓட ஆரம்பிச்சது. ரஞ்சனியும் சென்னைக்கு வந்துட்டா, ஒரு அனிமேஷன் கம்பெனியிலே வேலைக்குச் சேர்ந்துட்டா. அப்புறம் என்ன எங்கள் காதல் நாளுக்கு நானூறு எஸ்.எம்.எஸ் முந்நூறு மிஸ்ட் கால், இரு நூறு ஈ மெயில்ன்னு எல்லா சாப்ட்வேர் மக்கள் காதல் மாதிரி ரொம்ப ஜோராவே வளர்ந்துச்சு.

ஒவ்வொரு நாளும் ரஞ்சனி என் வாழ்க்கையில் எனக்கு கடவுளால் கிடைத்தப் பொக்கிஷ்ம்ன்னு வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் என்னைப் பார்க்க ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க நபர் ஒருத்தர் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் லேசாப் புன்னகைத்தார். அவர் முகத்தில் அந்த புன்னகையையும் மீறி ஒரு பயங்கர அழுத்தம் இருந்ததை என்னால சட்டுன்னு கவனிக்க முடிஞ்சது. கவனிச்சேன்.

"நீங்க தானே அஸ்வின்?"

"ஆமா.. ஆனா நீங்க யார்ன்னு எனக்குத் தெரியல்லயே? " என்று தாடையில் கை வைத்து சாக்ரட்டீஸ் போஸ் கொடுத்தேன்.

"நான் அப்பா.. ரஞ்சனியோட அப்பா.." என்று மறுபடியும் புன்னகைத்தார் அந்த மனிதர். நான் தடுமாற்றமாய் கைக்குலுக்கினேன்.

"உங்க் கூடக் கொஞ்சம் பேசணும்.." என்றார் ரஞ்சனியின் அப்பா.

"ஸ்யூர்..." என்ற படி அலுவலக நண்பனுக்கு ரிசப்ஷனில் இருந்து கால் செய்து அவசர வேலையா ஒரு மணி நேரம் வெளியே போறேன் அந்த மொக்கை மேனேஜரை எதாவதுச் சொல்லி சமாளிடான்னு சொல்லிட்டு ரஞ்சனியின் அப்பாவோடு கிளம்பினேன்.


அன்று மாலை ரஞசனியை நுங்கம்பாக்கம் காபி டேவில் சந்திக்கும் போது என் முகத்தில் சந்தோஷம் இல்லை.

"ரஞ்சு உண்மையாவே நீ என்னை லவ் பண்றீயா சொல்லு?"

"ஏன் நாலு வருஷமா வராத சந்தேகம் இப்போ திடீரென்னு வந்து இருக்கு.. உனக்கு என்னாச்சு?" அந்த மீன் கண்கள் என்னைக் கொக்கிப் போட்டப் படி பார்த்தன.

"ரஞ்சு நான் உங்க அப்பாவைப் பார்த்தேன்..பேசினேன்...உனக்கு அப்பா இல்ல செத்துப் போயிட்டார்ன்னு என் கிட்ட எதுக்காகச் சொன்ன?"
அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து திரும்பி கொண்டேன்.. ரஞ்சனி எதுவும் பேசாமல் கட கடவென எழுந்து காபி டேவை விட்டு வெளியே நடந்தாள்.

எனக்கு என்ன செயவது என்றே தெரியவில்லை.. காபி ட்ரேவோடு என் முன் நின்ற சர்வரின் பரிதாபப் பார்வை இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. காபிக்கான பணத்தை அவசரமாய் பர்சில் இருந்து எடுத்து அவனிடம் கீப் த சேஞ்ச் சொல்லிக் கொடுத்து விட்டு ரஞ்சனியைத் தேடி ஓடினேன். பார்க்கிங்ல் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டி பெப்ல் அவள் ஏறி உட்கார போன நேரம் நான் குறுக்கேப் போய் கைக் கட்டிக் கொண்டு நின்றேன்.

"என்னை அப்படிப் பார்க்காதே.. நான் அழுதுடுவேன் " என்றாள் ரஞ்சனி

" ஏய் ஏய் இப்போ எதுக்கு அழுவாச்சி...ஏய் ரஞ்சு"

ஸ்கூட்டியில் இருந்து இறங்கி வந்தவள் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

"ப்ளீஸ் எங்க அப்பாவைப் பத்தி என் கிட்ட பேசாதே.. " அவள் கெஞ்சல் பார்வையில் எனக்கு மொத்தமும் உருகிப் போனது.

நான் ரஞ்சனியைத் தான் காதலிக்கிறேன் அவங்க அப்பா கதை எனக்கு எதுக்குன்னு அப்படியே ரஞ்சனியின் அப்பாவோடு எனக்கு நடந்த சந்திப்பை மொத்தமாய் மறந்துப் போனேன். காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை.

பின்னொரு நாளில் மெரீனாப் பீச்சில் ஒரு மாலைப் பொழுதினில் ரஞ்சனி நான் கேட்காமலேப் பேசினாள்...

"அஸ்வின்...எனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது எங்க அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டார்.."

"இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரா?"

"தெரியாது.. எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாங்க"

"எனக்கு அப்பாங்கற மனுஷன் தேவைப் படும் போது அவர் வர்றல்ல.. இப்போ அவர் எனக்குத் தேவையே இல்ல.. "

அப்பா என்ற உறவினை உதறி ஒதுக்கியதற்கானக் காரணத்தை ஒரே வரியில் சுருக்கமாய் சொல்லிவிட்டாள் ரஞ்சனி..

"எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணாலும் என்னை ஒதுக்கல்ல.. எதோ ஒரு ஹாஸ்ட்டல்ல சேத்து எதோ ஒரு வழியிலே எனக்குக் கரை சேர வழி காட்டுனாங்க...கண்ணன் சார் எனக்கு அப்பாவாக முடியல்லன்னாலும் ஒரு பாதுகாப்பாவது இருந்தார்"

"கண்ணன் சார் யார்?"

"எங்கம்மாவோட இரண்டாவது புருஷன்"

"அப்பாவாம் அப்பா.. எங்கேப் போனார்.. அவரைத் தேடி நான் காத்திருந்த சாயங்காலங்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு நாள் கூட அவருக்கு திரும்பி வர்ணும்ன்னு தோணல்லியே"
ரஞ்ச்னியின் கண்கள் கலங்கவில்லை. உதடுகள் ஒவ்வொரு மூறையும் அப்பா என்ற சொல்லை உச்சரிக்கும் போது துடித்தன.

நான் மௌனமாகவே இருந்தேன்.

"அஸ்வின் உனக்கு இது புரியாது .. இது இருபதைஞ்சு வருஷக் கோபம்... ஏக்கம்... தவிப்பு...வலி.. உறவுகள் வார்த்தையில் மட்டும் இல்ல.. அது ஒரு வாழ்க்கை அஸ்வின்.. பொறுப்புக்களைச் சுமந்து செய்யணும் அஸ்வின்.. இல்லன்னா HELL WITH ALL THE RELATIONS"

பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த பையன் ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு ஒரிரண்டு சுண்டல் பாக்கெட்டுகளைத் தரையில் சிதற விட்டான்.

அதுக்குப் பிறகு ரஞ்சனியிடம் அவள் அப்பாவைப் பற்றி பேசுவதைக் கூடுமானவரை தவிர்த்தேன். அதையும் மீறி எப்போதாவது அந்தப் பேச்சு வந்தால் ரஞ்சனியின் அப்பா கோபம் கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.

இதற்கு பிறகு எனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் நடந்தது. கண்ணன் சாரும் ரஞ்சனியின் அம்மாவும் வந்து ஆசிர்வதித்தார்கள். அவங்கப் பசங்க கூட வந்திருந்து வாழ்த்துனாங்க.. ரஞ்சனியின் அப்பாவும் என்னுடைய விருந்தாளியாய் வந்து மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று எங்களை ஆசிர்வதித்தார்.

அதே ஊரில் எங்கள் இல்லறம் இனிதாய் தழைத்து ஓங்கத் துவங்கியது. சின்னச் சின்னச் சண்டைகள் அப்பப்போ ஊடல்கள் பின்னாடியே தொடரும் கெஞ்சல்கள் அப்புறம் கொஞ்சல்கள்ன்னு வாழ்க்கை நல்லாப் போச்சு.

ரஞ்சனிக்குத் தெரியாமல் மாதம் ஒரு முறை அவ அப்பாவை நான் போய் பார்த்துட்டு வர்றதை வழக்கமாக்கிட்டேன். ரஞ்சனிக்கும் அவ அப்பாவுக்கு உள்ள பல் ஒற்றுமைகளை என்னால உணர முடிஞ்சது... நாங்க நல்ல நண்பர்கள் ஆனோம்...எப்படியும் ஒரு நாள் ரஞ்சனியும் அவ அப்பாவையும் ஒண்ணு சேர்த்துடலாம்ன்னு நான் நம்பிகிட்டு இருந்தேன்..

இந்த நிலையிலேத் தான் எனக்கும் அவருக்குமான அந்தக் கடைசி சந்திப்பு நடந்துச்சு...

"அஸ்வின்.. தேங்க்ஸ்.. நீங்க எனக்குச் செயத் எல்லா விஷயங்களுக்கும் நன்றி"

அவர் இப்படி பேசும் போது எனக்கு ஒண்ணும் புரியல்ல. அவர் கையிலே ஒரு பழைய டைரி இருந்துச்சு. அதை என் கிட்ட நீட்டுனார். நான் அதை மறுக்காம வாங்கிகிட்டேன்.

"அஸ்வின் நான் அதிக நாள் இருப்பேன்ங்கற நம்பிக்கை எனக்கு இல்ல.. யூ நோ என் ஹெல்த் என்னுடையக் கன்ட்ரோல்ல இல்ல.. ஐ அம் டையிங்..." மறுபடியும் ஒரு புன்னகை.

"என்னுடைய வாழ்கையை நான் முடிக்கப் போறேன்.. ஆனா அதுல்ல முற்று புள்ளி அரையும் குறையுமாத் தான் இருக்கும்.. இந்த டைரி ரஞ்சனிக்கு நான் எழுதுனது.. ஆனா எந்தக் காரணம் கொண்டும அவ இதைப் படிக்கவோ பார்க்கவோ கூடாது.. என்னுடைய பாரத்தை உங்க மேல இறக்கி வைக்கிறேன்.. ஐ யாம் சாரி...."

"சார்.. உங்களுக்கும் ரஞ்சனிக்கும் ஏன் இந்த இடைவெளின்னு என்னால புரிஞ்சிக்க முடியல்ல.. நீங்க தப்பு பண்றவர் மாதிரியும் இல்ல...பட் இருந்தும்..." என நான் நீட்டி முழக்கினேன்.

"ரஞ்சனி அம்மாவை வேற பொண்ணுக்காக நான் விட்டுட்டு வர்றல்ல.. அவங்க அம்மா தான் என்னை இன்னொருத்தருக்காக விட்டுட்டுப் போயிட்டாங்க.." அதிராமல் அலட்டாமல் பேசினார் ரஞ்சனியின் அப்பா.

"கண்ணன் சாரா..." எனக்கு விக்கி வியர்த்துப் போச்சு.

"ப்ச் அது பத்தி பேச வேண்டாமே...தப்பு சரின்னு எதுவும் இல்ல...LET US GET ON WITH LIFE" மென்மையான குரலில் அமைதியாய் சொன்னார். புன்னகைக்க முயன்றார். அவர் முகம் மேலும் விகாரமடைந்தது.

அப்புறம் அவரோட சதாம் உசேன்ல்ல இருந்து இந்தியன் கிரிக்கெட் வரை பல விஷயங்கள் பேசிகிட்டு இருந்துட்டுக் கிளம்புனேன்.

அதுக்கு பிறகு இப்போ தான் அவரைப் பாக்கப் போறேன்...ஆனா அவர் என்னைப் பார்க்கப் போறதும் இலல் பேசப் போறதும் இல்ல..... கண் முழிச்சுப் பார்த்தப்போ பஸ் சேலம் புறநகரை அடைந்திருந்தது.

அவர் கொடுத்த டைரியை பையிலிருந்து எடுத்துத் திறந்துப் பார்த்தேன்...

அதில் ரஞ்சனிக்கு அவர் சேர்த்து வைத்திருந்த சொத்து விவரம்... ரஞசனியின் எல்.கே.ஜி காலம் முதல் கல்லூரி காலம் வரை அவள் அம்மா அவளுக்குச் செய்ததாய் ரஞ்சனி இந்த நிமிடம் வரை நம்பிக் கொண்டிருக்கும் அனைத்துச் செலவுகளுக்கான கணக்குகளும் தேதி வாரியாக தக்க ஆதாரங்களோடு இணைக்கப் பட்டிருந்தன...

கடைசி பக்கத்துல்ல அவரோடக் கையெழுத்தில்...

ரஞ்சு நான் உலகத்தின் சிறந்த அப்பாவா இல்லாமப் போயிருக்கலாம் ஆனா நீ நினைக்கிற அளவுக்கு மோசமான அப்பா இல்லம்மா....

எனக்குள் என் உணர்வுகளை அடக்க முடியவில்லை.. என் கிட்ட எதுக்கு இந்த டைரியைக் கொடுக்கணும்.. கொடுக்காமப் போயிருக்கலாமே.. இந்த சுமையை நான் எதுக்கு சுமக்கணும்....

எங்கிருந்தோ ரஞ்சனி அப்பாவின் குரல் என் காதில் கேட்டது...

"அஸ்வின்.. இனிமே நீ தானப்பா ரஞ்சனிக்கு அப்பா.... என்னுடைய அன்பையும் சேர்த்து அவளுக்குக் கொடுப்பீயா"

என்னப் பதில் சொல்வேன்...I THINK I HAVE A LIFE TIME TO ANSWER THAT QUESTION...!!!

Monday, December 04, 2006

கதை11:அப்பா - பாகம் 1

ஜன்னல் ஓரமாய் இருந்த தொலைபேசி அறையின் மௌனத்தைக் கிழிக்கிற மாதிரி அலறியது. வெளியே மழை நின்னும் நிக்காமலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

ரஞ்சனி சோபாவில் காலை மடிச்சுகிட்டு உட்கார்ந்து இருந்தாள். விரல் நகத்தை விடாம கடிச்சுகிட்டே விட்டத்தைப் பார்த்துகிட்டு இருந்தா. தொலைபேசி சத்தம் கேட்டதும் அவளோட அந்த மீன் கண்கள் இன்னும் பெரிசாவே விரிஞ்சுப் போச்சு. அந்தக் கண்ணைப் பார்த்து தானே அவ மேலே காதலாகி கசிந்துருகி இப்போ கணவனாகி..ம்ம்ம் இப்போதைக்கு என் நிலைமையை இதுக்கு மேல விவரிக்க விரும்பல்ல.

தொலைபேசி இன்னும் அலறிகிட்டே தான் இருக்கு... நான் ரஞசனியைப் பார்க்க ரஞ்சனி வேணும்னே என்னையும் தொலைபேசியின் அலறலையும் தவிர்க்கற மாதிரி வேற எங்கேயோ பார்வையைத் திருப்பிகிட்டா.

எனக்கு ரஞ்சனி மேல கோபம் கோபமாய் வந்தது.

"ரஞ்சு.. போன் அடிக்கறது உன் காதுல்ல விழ்றதா இல்லையா?"

பதில் இல்லை.

"ரஞசு நான் உன் கிட்டத் தான் சொல்லுறேன்... "

மறுபடியும் பதில் இல்லை.

இதுக்கும் மேல அவகிட்டச் சொல்லி புண்ணயமில்லன்னு நான் போய் தொலைபேசியைக் கையில் எடுத்து ஹலோ சொன்னேன்...

மறுமுனையில் பேசியவருக்கு ம் கொட்டியபடி ரஞ்சனியை பார்த்தேன். ரஞ்சனி இப்பவும் என்னைப் பார்க்கவில்லை. நான் தொலைப்பேசியைக் கீழே வைச்சுட்டு ஜன்னலைப் பார்த்துட்டு நின்னேன். மழை கொஞசம் வேகமெடுத்த மாதிரி இருந்துச்சு.

ரஞ்சனிப் பக்கம் திரும்பாமல் அறைக்குள் போனேன். அவசர அவசரமா டிராவல் பேக்கல்ல இரண்டு நாளுக்கு தேவையான துணிகளை எடுத்துப் போட்டுகிட்டு மறுபடியும்
ஹாலுக்கு வந்தேன்.

ரஞ்சனி கையிலே டிவி ரிமோட்டை வச்சுகிட்டு கன்னாபின்னான்னு சேனலை மாத்திகிட்டு இருந்தா. என் பக்கம் திரும்பவே இல்லை.

டிவி ரிமோட்டை அவ கையிலே இருந்து வலுக்கட்டாயமாப் பிடுங்கிட்டு அவ கண்களுக்கு நேரா என் கண்களைக் கொண்டு போனேன்...பல முறை நான் பார்த்து பார்த்து பரவசமடைந்த கண்கள் அப்போ அங்கே இல்லை... ஒரு வித வெறுப்பும் கோபமும் எரிச்சலும் அந்தக் கண்களின் அழகினைத் திரைப் போட்டு மறைத்துக் கொண்டிருந்தன.

"லுக் ரஞ்சு... எல்லாம் முடிஞ்சுப் போச்சு... உன்னோட புருஷனா இல்ல.. நல்ல நண்பனாச் சொல்லுறேன்.. எல்லாத்தையும் மறந்துட்டு கிளம்பு"

ரஞ்சனி தன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.. என்னை வெறி வந்தார் போல எட்டிப் பிடித்துத் தள்ளி விட்டாள். அவக் கண்களில் கண்ணீர்...

"அஸ்வின்.. யூ நோ...HOW MUCH I HATE HIM..?" ரஞ்சனி கட்டுபடுத்தக் கூடிய நிலையில் இல்லை. வெடிக்க தயாராக் இருக்கும் ஒரு எரிமலை மாதிரி இருந்தா.

"எஸ் ஐ நோ... நல்லாத் தான் தெரியும்.. அதனாலத் தான் சொல்லுறேன்...அந்த வெறுப்பை எல்லாம் நீ சுமந்தது போதும்.. வா..வந்து தூக்கி எறிஞ்சுட்டு வந்துடலாம்"

ரஞ்சனி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்...அவள் கோபத்தை என் மீது காட்டாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் செய்து தோத்துக்கிட்டு இருந்தா. அந்த நிமிடம் நான் ரஞ்சனியை இன்னும் அதிக அதிகமாய் காதலிச்சேன்...

அவளை விட்டு இரண்டு அடி தள்ளி நின்னேன்...

"மரணத்துல்லக் கூட மன்னிக்க முடியாத தப்புன்னு எதுவும் இல்ல ரஞ்சு... ப்ளீஸ் உங்க அப்பாவும் ஒரு மனுஷன் தான்..அவரை மன்னிக்க முயற்சி பண்ணு..."

அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் நான் வாசல் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தேன்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போய் சேலம் செல்லும் பேருந்தைத் தேடிப் பிடிச்சு ஏறி உட்கார்ந்துகிட்டேன்.

பஸ் கிளம்புறதுக்கு முன்னாடி என் மனசு கிளம்பிடுச்சு..ரிவர்ஸ் கியர் போட்டுகிட்டு பின்னாடி போக ஆரம்பிச்சுடுச்சு..

1999 எம்.சி.ஏ படிக்க மதுரைப் போயிருந்த நேரம்...அங்கேத் தான் ரஞ்சனிய முதன் முதலாச் சந்திச்சேன்.. ரஞ்சனி நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா கலகலப்பு என்பது மருந்துக்கு கூட அவக் கிட்ட கிடையாது. சரியான் சுடுமூஞ்சி.. சுள்ளுன்ணு கோபம் வரும்...யார் கிட்டயும் பேசமாட்டா.. அப்படியே மீறி பேசினாலும் நறுக் தெறிச்சா மாதிரி வெடுக்குன்னு பேசி காயபப்டுத்திடுவா. எனக்கு கலகலப்பா நம்ம ஜோதிகா மாதிரி பொண்ணுங்க தான் இஷ்ட்டம் அதுனால இவ இருக்கற பக்கம் சைட் அடிக்கக் கூட திரும்புனது இல்ல.

ஆனா எப்போ எப்படி என் கவனம் பக்கம் திரும்பிச்சுன்னு எனக்கேத் தெரியல்ல...ஒரு நாள் எதேச்சையா அவளோட நோட் புக் ஒண்ணைப் புரட்டும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சுது..அதுல்ல முழுக்க முழுக்க கவிதை.... எல்லாம் அந்த சுடுமூஞ்சி தான் எழுதியிருந்துச்சு.. படிச்ச எனக்குச் சுத்தமா நம்பிக்கையே வர்றல்ல... அப்படி கவிதைகளை அந்தச் சுடு மூஞ்சியால எழுத முடியுமான்னு...

அவ்வளவு ரசனையான வரிகள் படிச்ச என் மனசை என்னவோ பண்ணிடுச்சு...

நான் நல்லா வரைவேன்...உண்மையாவே.. சரின்னு சுடுமூஞ்சி எழுதுன ஒவ்வொரு கவிதைக்கும் உட்கார்ந்து ஏத்த மாதிரி பென்சில் ஸ்கெட்சஸ் வரைஞ்சு... சுடுமூஞ்சி கிட்டக் கொண்டு போய் நீட்டுனேன்.. ஆனாப் பாருங்க அந்த சுடு மூஞ்சி ஈவு இரக்கமில்லாமல் படங்களை அரையும் குரையுமாப் பார்த்துட்டு

"என்ன இது கிறுக்குத் தனமா படமெல்லாம் வரைஞ்சுகிட்டு... லவ் பண்றீயா?" அப்படின்னு வெடுக்குன்னு கேட்டிருச்சு.

எனக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல்ல...

"ம்ஹ்ம் உன்னை லவ் பண்ணல்ல... ஆனா கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி எல்லாம் பெத்துகிட்டு கடைசி வரைக்கும் நீ எழுதுற கவிதைக்கெல்லாம் இப்படி கிறுக்குத் தனமாப் படம் வரைஞ்சிகிட்டே செத்துப் போயிடணும் அவ்வளவு தான்" அப்படின்னு மூச்சு விடாமச் சொல்லிட்டு சுடுமூஞ்சியைத் திரும்பிப் பார்க்காமல் போயிட்டேன்..

"ஹேய் உனக்குப் பைத்தியமா?" சுடு மூஞ்சி எனக்குப் பின்னால் கத்தியது என் காதில் நல்லாவே கேட்டது. நான் திரும்பவில்லை.

"யூ ... என்னப் பண்ணிட்டு போற...இடியட்.." அன்று வரை சுடுமூஞ்சி அவ்வளவு அலறலாய் கத்தி நான் மட்டுமில்லை எங்க காலேஜ்ல்ல யாருமே கேட்டது இல்ல. மதுரைப் பொண்ணுங்க எல்லாத்துக்கும் சவுண்ட் ஜாஸ்திம்பாம்ங்க.. நம்ம சுடுமூஞ்சியும் அதை அன்னிக்கு நிருபிச்சிடுச்சு.

அதுக்கு அப்புறம் அவ் கிட்ட நான் மூஞ்சிக் கொடுத்துப் பேசவே இல்ல,. ஆனா சுடுமூஞ்சி என்னை ஓரக் கண்ணாலேப் பார்த்துக்கும். அதையே நான் கவ்னிச்சுட்டா அப்படியே கல்கத்தா காளி மாதிரி ஒரு போஸ் கொடுப்பா. அவக் கூட வார்த்தையாலேப் பேசல்லயே தவிர அவளை வரையாத நாளே கிடையாதுன்னு சொல்லலாம்.

பச்சைக் கலர் சுரிதார்ல்ல ஒரு படம்...அந்தச் சுரிதார்ல்ல அவ ஒரு தேவதை மாதிரி இருப்பா.. அந்தச் சுரிதார்ல்ல இருக்கும் போது மட்டும அவ உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை இருந்துட்டே இருக்கும் ( எல்லாம் நம்ம நினைப்பு தான்)..முன் நெத்தியிலே முடி கத்தையா வந்து விழுற மாதிரி நான் வரைஞ்சதலே எனக்கு ரொம்ப பிடித்தமான படம்.. தினமும் ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி அந்த படத்துக் கூட ஒரு ரெண்டு மணி நேரமாவது கடலை போடாமல் நான் தலைச் சாயச்சதாச் சரித்திரமும் இல்ல பூகோளமும் இல்ல.
என் ரூம் மேட் தூக்கம் என்னால் பறி போனது தனி கதை..காதலிச்சுப் பாருங்கப்பா அர்த்த ராத்திரி உளறல்கள் இலக்கியமாத் தெரியும்..

இப்படியே கல்லூரி முடியற நாளும் நெருங்கி வந்துடுச்சு. வெறும் படம் மட்டும் வாழ்க்கைக்குப் போதாதுன்னு முடிவு பண்ணிட்டு நேரா சுடுமூஞ்சியப் பாக்கப் போனேன்.

"ம்ம் சொல்லு எப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற?" அப்படின்னு தைரியாமவே கேட்டுட்டேன். சுடுமூஞ்சி அடிச்சு வைக்கப் போகுதுன்னு ரெண்டு அடி கேப் விட்டெ நின்னேன். ஆனாப் பாருங்க சுடுமூஞ்சி துளி கூட கோபப் படமா கக்கபிக்கன்னு என்னைப் பார்த்து சிரிச்சுடுச்சு. எனக்கு வானம் தலையிலே முட்டுன மாதிரி இருந்துச்சு.. அந்த கணம் பாய்ஸ் பாட்டு எகிறி குதித்தேன் என்னைச் சுத்தி கேக்குது...

கையிலிருந்து ஒரு கவிதை நோட் புக்கை எடுத்து என் கையிலேக் கொடுத்து
"இந்தக் கவிதைக்கெல்லாம் எப்போ நீ படம் வரைஞ்சு முடிக்கிறியோ அந்த நிமிஷமே நான் உன்னக் கட்டிக்க ரெடி"
அப்படின்னு ரெண்டு கண்ணு முழுக்க சிரிப்பு வழிய என்னைப் பார்த்தா... அந்தப் பார்வை ஒண்ணு போதுமே....இன்னும் நூறு ஜென்மம் ஆனாலும் உன்னோடத் தான் என் வாழ்க்கை அமையணும்ன்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டேன்..

பஸ் பிரேக் சத்தம் ஞாபகத்தைக் கலைச்சு விட்டிருச்சு... எழுந்து உட்கார்ந்தேன்...திண்டிவனம் மேம்பாலம் கண்ணில் தெரிந்தது...

பாகம் 2