Monday, April 30, 2007

கவி 31:இதுவும் ஒரு கவிதை தான்




ரகசிய பார்வைகள்
மெளன மொழிகளில்
வரைந்த ஒரிரு கடிதங்கள்

காற்றில் கலந்து
ஜன்னல் தட்டும்
ஆசையின் முத்தங்கள்

கசக்கிய காகிதங்களில்
வழியும் கவிதைகளில்
இருந்து எட்டிப் பார்த்துச் சிரிக்கும்
அன்புத் தோழியாய் தமிழ் மொழி..

அம்மாவின் புடவையில்
அழகாய்த் தானிருக்கிறாய்
கணினித் திரையில்
மாயாஜாலச் சித்து வேலை..

அதிகாலைக் கனவினில்
மாலைகள் மாற்றியாச்சு
பலிக்கும் என்றும
பக்கத்து அறை நண்பன் சொல்லி வைக்க
பிள்ளைகளுக்குப் பேரும் கூட வைச்சாச்சு..

வாழ்க்கையின் அர்த்தம்
எப்படி யோசித்தாலும்
வட்ட நிலா முகத்தழகி
வீட்டு வாசலுக்கே வழி சொல்ல..

முடிவெடுக்க முடிந்தது
வார்த்தைகளுக்கு வண்ணம் அடித்து
அழகிய ஆரமொன்று
கோர்த்து எடுத்து
விருப்பம் சொல்ல நினைக்கையிலே

கல்யாணம் என்று
கலகலப்பாய் பத்திரிக்கை
நீட்டுகிறாள்
கருவிழிக்குச் சொந்தக்காரி..

சேர்த்து வைத்த ஆசைகளை
கண்ணீராய் கண்ணுக்குள் புதைத்து விட்டு
வலியிலே பூத்த பூவாம் புன்னகையை
கல்யாணத்தின் முதல் பரிசாய்
கன்னியிடம் கொடுத்து நடக்கிறேன்...

(பி.கு.இது சிந்தாநதி அறிவித்துள்ளப் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை)