Saturday, December 29, 2007

ஒரு வருடத்தின் முடிவினில்




நாட்காட்டியின்
மெலிந்த தேகம்
முடியப் போகும்
ஒரு வருடத்தின்
அடையாளமாய்
வரவேற்பறையில்

சவரம் தேடும்
மோவாயைத்
தடவியபடி
விட்டம் பார்த்த
விழிகளில்
எஞ்சி நிற்கும் ஞாபகங்கள்

கைப்பேசியின்
மெல்லிய ஒலியழைப்பு
வரப் போகும் வருடத்துக்கான
வாழ்த்துக்களை
விடாது சொல்லிக் கொண்டிருந்தன

கணிணியின்
அஞ்சல் பெட்டியில்
ஆறாங்கிளாஸ் வரை
ஒன்றாய் படித்து
இடையில் தொலைந்து
ஆர்குட்டில் மீண்டு கண்டெடுத்த
நண்பன் ஒருவன்
குடும்ப படம் போட்டு
புது வருட மெயில் அனுப்பியிருந்தான்..

விடியலின் வெளிச்சத்தைப்
போதையின் இருளில்
கூத்தாடும் மனத்தைக்
கட்டவிழ்த்து விட்டு
கூட்டமாய் வரவேற்க
நட்புக் கூட்டம் ஒன்று
குரூப் சேட்டிங்கில் வந்து
திட்டம் போட்டது..

இந்த வருசாமவாது...
ஒவ்வொரு வருடமும்
விடாது ஒலிக்கும்
பெற்றவளின் பக்தி மணி
காதுக்குள் கணீரென
எக்கோ எபெக்ட்டில்
அதிர்ந்து அடங்கியது...

ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேடங்கள்
எதை ஏற்பது
எதை தவிர்ப்பது
சிந்தனைச் செய்ததில்
சூடா ஒரு கப் காபி
மட்டுமே
அப்போதைக்கு
தீர்வானது..

மின்விசிறியின்
தாள லயத்தில்
நெற்றியில் நாட்டியமாடிய
வியர்வைத் துளியினைத்
துடைந்தெறிந்த விரல்
விசைப் பலகையில்
தட்ட நினைத்த
உனக்கானக் கவிதையின்
கடைசி வரி முட்டியது

முற்று பெறாத
கவிதையும்
விடைத் தெரியாதக்
கேள்வியும் என
இதோ
இந்த வருடமும்
இன்னொரு வருடமாய்
முடியத்தான் போகிறது...

Tuesday, November 27, 2007

கவி 34:இன்னொரு பனிக்காலம்



அழுத்தமாய் பதித்த முத்தத்தில்
உறைந்த உதடுகளின் ஓரம்
உயிர்த்தெழுந்தது காதல்..

கலைந்தக் கனவுகளின் சூட்டில்
அன்றைய பொழுது
அவசரமாய் விடிந்தது..

போர்வைக் குவியலுக்குள்
புதைந்துக் கிடந்தோம்
நானும் என் காதலும்

காதலைக் கட்டிலில்
கட்டிப் போட்டு
கால்கள் விரைந்தன

காதல் கொஞ்சியது
காதல் சிணுங்கியது
காதல் கெஞ்சியது..
காலம் அழைத்தது..

இன்னொரு பனிக்காலம்
இலைகளின் நுனியிலிருந்து
கண் சிமிட்டியது..

Tuesday, November 20, 2007

கதை 13:என்கவுண்டர்/ENCOUNTER


"செவலுரான்...சிட்டி ரவுடி மாதிரி இல்லையே பேரு.." ஆவி பறக்க டீயை உறிஞ்சிய படி ராஜதுரை கேட்டான்.

சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை நிதானமாய் ஊதினான் செல்வா.அவன் கண்கள் சுற்றும் முற்றும் வட்டம் போட்டு ஒரு நிலைக்கு வர ஒரு சில வினாடிகள் பிடித்தன. ராஜதுரையின் கேள்விக்குச் செல்வா எந்தப் பதிலும் சொல்லவில்லை. முழு சிகரெட்டையும் புகைத்தவன் எழுந்து நின்று ஆகாயம் பார்த்தான். ராஜதுரை மிச்சமிருந்த டீயை அவசரமாய் குடித்து விட்டு பாக்கெட்டுக்குள் இருந்து சில்லரையைத் தேடி எடுத்தான். டீக்கானச் சில்லரையை டீக்கடைகாரரிடம் கொடுத்துவிட்டு ஒரு ஹால்ஸ் வாங்கிச் செல்வாவிடம் கொடுத்தான்.

இருவரும் தெருமுனையைத் தாண்டி நடந்தனர். மாலைச் சூரியன் மெல்ல சரிந்துச் தெரு விளக்குகளுக்கு வழி விட்டுக் கொண்டிருந்தது. எரிந்தும் எரியமாலும் இருந்த தெரு விளக்குகளின் மீது பார்வையைச் செலுத்திய படி செல்வா முன்னால் நடந்தான். ராஜ துரை ஒரிரண்டு அடி பின்னால் நடந்தான். அவன் எதோ ஒரு பழைய சினிமாப் பாடலை முணுமுணுத்தப் படி வந்தான். அந்தத் தெருவினில் இருந்த பெரும்பான்மையான வீடுகளில் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. ஒரிரு வீடுகளிலும் வெறும் குண்டு பல்புகள் மட்டும் மிதமான ஓளியைக் கொட்டிக்கொண்டிருந்தன. தெருவில் ரெண்டு மூன்று பழைய ஆம்னி வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன... ஆம்னியில் இரண்டு ஓடி பல ஆண்டுகள் ஆகியிருக்கும் போல இருந்தது.. கண்ணாடிகளில் காக்காக் கூட்டம் கண்டபடி ஆட்டோகிராப் போட்டு வைத்திருந்தன.. நான்கைந்து மோட்டார் சைக்கிள்களும் உடைந்தும் உடையாமலும் நின்றுகொண்டிருந்தன.

செல்வாத் தன் கிழிந்த மேல்சட்டையைத் தூக்கி விட்டுக்கொண்டான். ராஜதுரை நான்கு நாட்கள் மழிக்கப் படாத மோவாயை மெல்லத் தேய்த்துக் கொண்டான். ராஜதுரை தன் குரலை மிகவும் உயர்த்தி அந்த பழைய சினிமாப் பாட்டை உச்ச ஸ்தாதியில் அலறலாய் பாடிய படி நடந்தான். செல்வா அடுத்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தான். தெருவின் இன்னொரு முனையில் இருந்து புத்தம் புதிய ஹோண்டா சிவிக் கார் ஒன்று மெல்ல ஊர்ந்து வந்தது.. சில்வர் நிறத்தில் அந்த இரவின் பின்னணியில் சந்திரனுக்கு சக்கரம் வைத்தார் போல் அம்சமாய் இருந்தது சிவிக் உலா. வினாடிக்கும் குறைவான பொழுதில் செல்வா ராஜதுரை கண்கள் சந்தித்துக் கொண்டன... செய்தியைப் பரிமாறிக் கொண்டன...

சிவிக் கார் இவர்களை நெருங்கி வந்த போது செல்வா ராஜதுரையின் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட நிலை தடுமாறிய ராஜதுரை கார் மீது போய் விழுந்தான்... பிரேக் அடித்து கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியப் படி கண்ணாடியை இறக்கிய டிரைவர் நெற்றி பொட்டில் சத்தமின்றி செல்வா செலுத்திய துப்பாக்கித் தோட்டக்கள் புதைந்தன....

போலீஸ்டா.. முன் பக்கத்தின் மறுபக்க கதவு திறந்தவனின் அலறல் வேகம் எடுக்கும் முன் ராஜதுரையின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா அவனை அமைதிப்படுத்தியது. காரைச் சுற்றி துப்பாக்கி ஏந்தியபடி இருவரும் வட்டமிட...அங்கே கனத்த மெளனம் நிலவியது.. செல்வா.. ராஜதுரை கண்கள் ஒன்றோடு ஒண்ணு பேசிக் கொண்டன..ராஜதுரை கார் கதவைத் திறக்க...

காருக்குள் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் முப்பது-முப்பதைந்து வயது மதிக்கத் தக்க நபர் ஒருத்தர் மயங்கி கிடந்தார். ராஜதுரை குனிந்து அந்த நபரைத் தூக்க முயலவும், அந்த நபரின் வலது கை, கட்டையும் மீறி துரிதமாய் அசைவதை செல்வாக் கவனிக்கவும் சரியாக இருந்தது.

அதை ராஜதுரைக் கவனிக்க வாய்ப்பில்லை. வலது கையில் பாட்டில் போன்ற எதோ ஒரு பொருள் இருப்பதைப் பார்த்து விட்ட செல்வா நோ... என்று அலறவும் ராஜதுரை சடக்கென பதறி திரும்ப அவன் முகம் பார்த்து வீசப்பட்ட திராவகம் சற்று குறி தவற ராஜதுரை சுதாரிப்பதற்குள் மயங்கிய ஆள் ராஜதுரையை தரையில் தள்ளி எழுந்து ஓடவும் சரியாக இருந்தது...

காரின் மறுபக்கம் இருந்து நடப்பதை அரையும் குறையுமாக பார்த்துக் கொண்டிருந்த செல்வா..ராஜதுரையின் உதவிக்குச் செல்வதற்குள் அந்த நபர் தப்பி ஓட ஆரம்பித்து விட்டான்.. நூறு அடி இடைவேளியில் துரத்தல் படலம் துவங்கியது...

கோபமும் ஆத்திரமும் ஓரு சேர சுட்ட ராஜதுரையின் குறி தப்பியது..மூன்று முறை சுட்டப் பின்னும் குறி தப்பிக்கொண்டிருக்கவே ராஜதுரையின் நிதானம் மேலும் தவறியது...செல்வா ஒரு முறை கூடச் சுடவில்லை.ஓடுபவனின் போக்கை அலசிக் கொண்டிருந்தான்.

அவன் ஓட்டத்தை நிறுத்தி விட்டு ஒரு வீட்டிற்குள் குதித்தான்.

இவர்கள் இருவரும் ஒரு உடைந்த ஆம்னியின் பின் பதுங்கியப் படி அவனை நோட்டம் பார்த்தனர்.

"இது வரைக்கும் நீ எத்தனைப் போட்டிருப்ப....?"

செல்வாவின் கண்கள் அந்த வீட்டையே வட்டம் போட்டுக்கொண்டிருந்தன.

"14... ம் போன தின்னவேலி பேட்டை என்கவுண்டரோட உன் ஸ்கோர் 14 ஆயிடுச்சு.. என் ஸ்கோர் 13.. இன்னிக்கு இவனைப் போட்டா என் ஸ்கோரும் 14.. இவனை நாந்தான் போடுவேன்... ஆமா...." ராஜதுரை நெற்றி வியர்வையைத் துடைத்தான். அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே செல்வா தடால் என எழுந்து செவலூரான் இருந்த வீட்டை நோக்கி காட்டாறு போலத் தெறித்து ஓடினான்.ராஜதுரை நடப்பது என்னவென்று சுதாரிப்பதற்குள் துப்பாக்கி சூட்டின் சத்தம் அவன் காதுகளைக் கிழித்தது...

இருள் கவ்வியிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தச் செல்வாவைத் துப்பாக்கி குண்டுகள் வரவேற்றன... ஒரு குண்டு சரியாக அவன் வலது கால் தொடையில் பாய்ந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடச் செய்தது...வலி அவன் உயிர் வரை ஊடுருவியது. செல்வா அதைத் தாங்கிக் கொண்டு அங்கிருந்தப் படிகளில் மெல்ல ஏறினான்... கிட்டத் தட்ட பாதி படிகளில் ஏறிய நிலையில் பெரிய இரும்பு உருளை ஒன்று அவன் மீது வந்து விழுந்தது... செல்வா நிலைத்தடுமாறி தரையில் சாயந்தான்....

தரையில் சரிந்து விழுந்த செல்வாவின் மேல் அவன் துரத்தி வந்த ஆள் ஏறி உட்கார்ந்தான். அந்த வினாடியில் ஒருவர் முகத்தை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டனர்... மீண்டும் அதே இரும்பு உருளையால் அவன் செல்வாவின் முகத்தில் தாக்கினான்.. தாக்குதலின் வேகம் பொறுக்கமுடியாமல் கிட்டத் தட்ட மயக்க நிலைக்குப் போனான் செல்வா.. முகத்தில் ரத்தம் வழிந்தோடியது..

"சேகர்...நீயா செவலூரான்......?" அரை குறை மயக்கத்தில் இருந்த செல்வா தன்னைத் தாக்கியவனின் முகத்தை உற்று பார்த்தப்படி முனங்கினான்.அவன் கண் இமைகள் வலியின் அழுத்தம் காரணமாய் மூடி மூடி திறந்தது...நினைவுகளும் முன்னும் பின்னும் போய் வந்தன...

கல்லூரி காலத்தின் ஞாபகங்கள் அவன் மனத்திரையில் நிழலாட்ட்டம் போட்டன...

சென்னையின் பிரபல கல்லூரி அது...பின்னிரவு நேரம்...கல்லூரி மைதானத்தில் இருந்த பெஞ்சில் தலை கவிழ்ந்து உக்காந்திருந்தான் செல்வா.. கண்களின் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரைக் கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டான். அவன் அருகில் யாருமில்லை.

"ஏய் நீ ரூம் நம்பர் 23 இல்ல..." தனிமைக் கலைக்கும் குரல் கேட்டு செல்வா கண்களைச் சடக்கெனத் துடைத்துக் கொண்டு திரும்பினான். அங்கு குரலுக்குச் சொந்தக்காரனாக மடித்துக் கட்டிய லுங்கியின் ஓரத்தைப் பிடித்தப் படி நின்று கொண்டிருந்தான் சேகர்.இன்று செல்வா முன் இரும்புத் தடியுடன் உட்கார்ந்து இருக்கும் அதே செவலுரான் தான் அந்த சேகர் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை

"இந்நேரம் இங்கே என்னடாப் பண்ணிகிட்டு இருக்க..?? எதாவது குட்டிய வரச் சொல்லியிருக்கியா?" ன்னு செல்வாவைத் தாண்டிப் பார்வையை ஓட்டினான் சேகர். செல்வா எந்தப் பதிலும் சொல்லவில்லை. சேகர் நன்றாகக் குடித்திருந்தான் என்பது அவன் தள்ளாட்டத்திலேயே செல்வாவுக்குப் புரிந்தது.

"பத்து மணிக்கெல்லாம் போர்த்திகிட்டுத் தூங்ககுற பய நியு.. பதினோரு மணிக்கு வெளியேத் திரியற....எதாவது பொண்ணு பிரச்சனையா...அந்த பர்ஸ்ட் இயர் பயலாஜி படிக்குதே பச்சக் கிளி அதுவா...நான் இந்தக் காலேஜ் சேர்மன்டா... இந்தக் கேம்பஸ்ல்ல யார் யார் கூடச் சோடிப் போடுறாங்கன்னு எனக்குத் தெரியும்டா.. ம்ம் பொண்ணு அம்சமாத் தான் இருக்கா..." மப்பில் இருந்தாலும் ஒரளவுக்கு தன்னிலையில் தான் சேகர் இருந்தான்.

சேகர் நல்லவன் இல்ல.. அவங்க அப்பா பெரிய ரவுடி..கொலைக்கெல்லாம் அஞ்சாத குடும்பம் அப்படின்னு காலேஜ்ல்ல பேசாதவங்க யாரும் கிடையாது. செல்வா காதுல்லயும் அது எல்லாமே விழுந்து இருக்கு.அந்த நேரத்தில் அது எல்லாம் அவன் ஞாபகத்துக்கு வந்துப் போனது. செல்வா அப்போதும் எதுவும் பேசாமல் மவுனமாகவே நின்றான்.

"என்னடா ரூம் நம்பர் 23 என்கிட்டச் சொல்ல யோசிக்கிறீயா...சேகர் நல்லவன் இல்ல.. அவங்க அப்பா பெரிய ரவுடி..கொலைக்கெல்லாம் அஞ்சாத குடும்பத்திலிருந்து வந்தப் பையன்.. பொறுக்கின்னு யோசிக்குறீயா?"

செல்வா ஒரு நிமிசம் தன் மனத்தில் ஓடுவது இவனுக்கு எப்படித் தெரிந்தது எனத் துணுக்குற்று திகைத்தான்..பின் சுதாரித்து நிமிர்ந்தான்..

"என்னைப் பத்தி எல்லாரும் இப்படித் தானே யோசிக்கிறாங்க...நீ புதுசா வேற என்ன யோசிக்கப் போற?" எனக் கடகடவெனச் சிரித்தான்.

செல்வன் அப்போது முழுதாய் சேகரின் முகத்தைப் பார்த்தான். போதையில் சிவப்பேறிய கண்கள். வியர்த்துப் போயிருந்த முகம். இதழோரம் தவிழ்ந்த நமுட்டுப் புன்னகை. அவனிடம் ஒரு வசீகரம் இருக்கத் தான் செய்கிறது என நினைத்தான் செல்வா.

"ரெண்டு நாளா அந்தப் புள்ளையக் காலேஜ்க்குக் காணும்.. நீ வேற ஒரு மாதிரியாத் திரியற..பாத்துகிட்டுத் தான் இருக்கேன்... இப்போ இந்த அர்த்த ராத்திரில்ல.. இங்கே பெஞ்ச்ல்ல தனியா.. என்னப் பிரச்சன சொல்லு..." செல்வாவின் தோள் மீது தன் இருகைகளையும் அழுத்தமாய் போட்டுக் கேட்டான் சேகர்.

அந்த அழுத்தமானப் பிடியில் ஏற்பட்ட நம்பிக்கையோ.. இல்லை அந்தத் தருணத்தின் இயலாமையோ என்னவென்று தெரியாமல் தன் வாழ்க்கையின் மிகவும் சிக்கலானப் பக்கத்தை அவனுக்கு செல்வா திறந்துக் காட்ட ஆரம்பித்தான்...அந்த இரவு மிகவும் நீளமானதொரு இரவாய் அமைந்தது..பொழுது விடியும் போது சேகருக்கு போதைத் தெளிந்து விட்டிருந்தது..செல்வா கண்களில் ஒரு தெளிவு தென்பட்டது...

"டேய் ரூம் நம்பர் 23... எனக்கெல்லாம் வாழ்க்கையிலே நிறையப் பிரச்சனைடா.. எங்கப்பனுக்கு நாலு பொண்டாட்டி.. அதுல்ல நான் எந்த பொண்டாட்டிக்குப் பொறந்தேன்னு அவனுக்குத் தெரியாது.. காசு கொடுப்பான்..கட்டுகட்டாக் கொடுப்பான்..ஆனா...விடுறா.. என் பிரச்சனையைப் பேசி என்னப் பயன்.. ஓன் பிரச்சனைக்கு இந்தப் பணம் உதவும்ன்னா வச்சுக்கடா... அப்புறம் யார் தான் தப்பு பண்ணல்ல? எல்லாரும் பண்ணுறோம்...தப்புப் பண்ணிட்டு தப்பிக்க நினைக்கக் கூடாது.. நீ தப்பிக்க நினைக்கல்லடா.. நிக்குறேடா..அதான்டா உன்ன எனக்குப் பிடிக்குது..." சேகர் செல்வாவின் தலையை ஆதரவாய் கோதிவிட்டு லுங்கியை இறக்கிக் கட்டிக் கொண்டு நடந்தான். செல்வா சேகர் போனத் திசையை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.


"இதுல்ல மூவாயிரம் ரூபா இருக்கு.. தேங்கஸ்" மூன்று வாரங்கள் கழித்து சேகரை காலேஜ் ஹாக்கி கிரவுண்டில் தனியாய்ச் சந்தித்த செல்வா ஒரு கவரை மடித்து நீட்டினான். சேகர் எதுவும் பேசமால் கவரை வாங்கிப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்வா கேலரியில் இருந்து இறங்கி நடந்தான்.

கல்லூரியின் எஞ்சிய வருடங்களிலும் சேகரோடு செல்வா நெருங்கிப் பழகவில்லை, சேகர் செல்வாவை எங்குப் பார்த்தாலும் டேய் ரூம் நம்பர் 23 என்று உற்சாகமாய் குரல் கொடுப்பதும் செல்வாப் பதிலுக்கு கை அசைப்பதுவும் தவிர அவர்களுக்குள் வேறு எதுவும் பெரிதாய் கிடையாது....


செல்வா மெல்ல முனங்கினான்... அவன் கண்கள் திறந்துப் பார்க்கும் போது சேகர் என்ற செவலூரான் சுவற்றில் சாயந்தப் படி கால்களை நீட்டி அம்ர்ந்திருந்தான். செல்வா மிகவும் கஷ்ட்டப்பட்டுத் தலையைத் தூக்கினான். வலி அவன் நரம்பு மண்டலத்தை ஊடுருவிப் பாய்ந்தது... அவன் முகம் வலியினால் கோணியது...சேகர் மெல்லச் சிரித்தப் படி அவன் முகத்தருகே வந்து அவன் தலையைத் தூக்க உதவிச் செயதான்.

"டேய் ரூம் நம்பர் 23... உன்னிய நான் மறுபடியும் பாப்பேன்னு நினைக்கவே இல்ல.. காலேஜ் முடிஞ்சவுடனே சொல்லக் கொள்ளாம போயிட்ட" என்றான் அதே பழையச் சிரிப்பு மாறாமல்.

செல்வாவுக்கு வலியின் மிகுதியில் வார்த்தைகள் வரவில்லை. மிகவும் சிரமப்பட்டு தன் உடலை தன் முழு பலம் பயன்படுத்தி சுவற்றின் ஓரமாய் நகர்த்தி அதில் சாய்ந்துக் கொண்டான். கையைத் தலையின் பின்பக்கம் வைத்து அழுத்திக் கொண்டான்.

"ரூம் நம்பர் 23 போலீஸ்காரன் ஆயிட்டே.. ரொம்ப சந்தோசம்ய்யா..நீயுன்னு தெரிஞ்சிருந்தாப் போட்டுருக்க மாட்டேன்.. போலீஸ்காரன்னால்லே பொங்கிப் போயிருது.. கொலைவெறி வந்துருது.." மறுபடியும் அதேச் சிரிப்பு.

"ஆமா.. இப்போ எந்தூர்ல்ல இருக்க? என்னியப் புடிக்கவா..ம்ம்ம் போடவா இங்கே வந்த?" சேகர் செல்வாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். செல்வா வலியின் பிடியில் இருந்து முழுவதுமாக வெளியே வரவில்லை. சுருங்கிய புருவங்களும் கண்களும் அவன் வலியினால் படும் அவஸ்தையை சொல்லிக்கொண்டிருந்தன.

"ம்ம் அட ஒன் பாக்கெட்ல்ல தம் இருக்கு.. ஒண்ணு எடுத்துக்குறேன்" அனுமதியை எதிர்பார்க்காமல் சேகர் சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்.

"கிங்க்ஸா.. காலேஜ்ல்ல அடிச்சது.. இப்போல்லாம் 555 தான் பழகிடுச்சு.. வேற சிகரெட் ஒத்துக்க மாட்டேங்குது" சிரித்தான் சேகர்.

"சரி.. கலியாணம் பண்ணிகிட்டல்ல.. " சேகரின் குரலில் ஒரு தவிப்புத் இருந்தது.

செல்வா மெல்ல தலையாட்டினான்.

"அந்தப் பொண்ணைத் தானே.." சேகரின் குரலில் தவிப்பு அதிகமாகியது.

செல்வா இப்போதும் தலை ஆட்டினான்.

"இப்போ ஒனக்கு குழந்தைங்க இருக்கா?" சேகர் குரலில் தவிப்பு மாறாமல் கேட்டான்.

"இருக்கு.. ரெண்டு.." செல்வாவின் கண்கள் கலங்கிப் போயிருந்தன. வேறு எதோ ஒரு வலியினில் அகப்பட்டவனாய் செல்வாத் துடித்தான். அவன் துடிப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

"எல்லாம் சொகமா இருக்காங்களா?" சேகரின் அக்கறையான விசாரிப்பு தொடர்ந்தது.

ம் கொட்டினான் செல்வா.

சேகரின் முகத்தில் பழையச் சிரிப்பு. சிகரெட்டை மெல்ல இழுத்தான்.

"யார் தான் தப்பு பண்ணல்ல? எல்லாரும் பண்ணுறோம்...தப்புப் பண்ணிட்டு தப்பிக்க நினைக்கக் கூடாது.. நிக்குறேடா..அதான்ய்யா உன்னிய எனக்குப் பிடிச்சுது...பிடிக்குது..."

செல்வாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த பழைய இரவின் சம்பவமும் சேகரின் ஈரம் மாறாத குரலும் செல்வாவின் காதுகளில் விழுந்தது.

"அன்னிக்கு நீ இல்லன்னா எனக்கு என்ன ஆயிருக்கும்ன்னு சொல்லத் தெரியல்ல..அவசரத்துல்ல நான் செஞ்சத் தப்பு... அது அவ வயித்துல்ல வளந்துச்சு...உனக்கு நான் கடன் பட்டிருக்கேன்..என் காதலைக் காப்பாத்துன.. என் காதலியைக் காப்பாத்துன...என்..."

"உன் புள்ளயை அது பொறக்குறதுக்கு முன்னாடியே கொல்ல உனக்கு ஐடியாவும் கொடுத்து பணமும் கொடுத்தேன்..." ஒரு வித அழுத்தம் பிறீட சொன்னான் சேகர்.

"அப்போ வேற வழி இல்ல... அது கொலை இல்ல.... நான் பண்ணத் தப்புக்கு எனக்கு நானேக் கொடுத்துகிட்ட தண்டனை..."

"ஸ்....அதெல்லாம் முடிஞ்சுப் போச்சு.. மறுபடியும் சொல்லுறேன் தப்பு பண்றது இயற்கை... நீ தப்பு பண்ண.. ஆனா ஓடிப் போகல்ல..அதே பொண்ணைக் கட்டிகிட்டு ரெண்டு புள்ளகளைப் பெத்துகிட்டு வாழுறே.. கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... நீ மனுசன்டா..."

சிகரெட்டை அழுத்தமாய் வாயில் வைத்து இழுத்தான் செவலூரான் என்ற சேகர். ஜன்னலுக்கு வெளியே சலசலப்புக் கேட்டு செல்வாக் கஷ்ட்டப் பட்டு எழுந்தான். செல்வா எழும்பும் போது தன்னிடமிருந்த பிஸ்டலைத் தேடினான். சேகர் அதைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தான். சேகர் ஜன்னலோரம் மறைந்திருந்து வெளியேப் பார்த்தான்.அவன் கண்களில் திரளானக் காக்கிச் சட்டைகளின் அணிவகுப்பைச் செல்வாவால் பார்க்க முடிந்தது. சேகர் ஒரு விதக் களைப்புடன் மறுபடியும் சுவற்றோரமாய் சாயந்தான். அவன் உதடுகளில் பழையச் சிரிப்பு நிரந்தரமாய் ஒட்டிக் கொண்டது.

"ஒரு நூறு பேர் இருப்பாயங்களா?" செவலூரான் களைத்தும் கண்களில் பயமின்றிக் கேட்டான்.

"தெரியல்ல.. நாங்க ரெண்டு பேர் தான் வந்தோம்..இது எனக்குத் தெரியல்ல" செல்வாவின் தலை பயங்கரமாய் வலித்தது.

"செவலூரானைப் பிடிக்க நல்லாத் தான் தூண்டில் போட்டுருக்காங்க" என்று பயங்கரமாய் சிரித்தான் சேகர்...செல்வாவுக்குப் பாதி புரிந்தது...இருந்தாலும் அதிகம் யோசிக்க முடியாதப் படி அவன் தலை வலித்தது. மறுபடியும் அரை குறையாய் தன் பிஸ்டலுக்காக அறையைப் பார்வையால் துழாவினான். வெளியே போலீஸ் புட் சத்தம் மெல்லக் கேட்க துவங்கியது. வினாடி இடைவெளியில் சத்தம் கூடியது. செல்வா தட்டு தடுமாறி எழுந்தான்.

"உன்னக் காப்பாத்தணும் அது என் கடமை... என்னைக் கேடயமா வச்சு நீ தப்பிச்சுப் போ" என்று செல்வா உண்மையான அக்கரையோடுச் சொன்னான்.

சேகர் ஒரு ஏளனப் புன்னகைப் பூத்தான்... கைவிரல்களை மடக்கி நீட்டினான். போலீஸ் பூட் சத்தம் இன்னும் அதிகமானது...

"தூண்டில்ல இருக்க புழு நீ.... ஓன் கருணையினால எனக்கு என்னய்யா பிரயோஜனம்? உன்னிய அனுப்பிட்டு உன் பின்னாடியே நூறு பேரு கிளம்பி வந்துருக்கான்.. எதுக்கு... நான் தப்பிக்க நினைச்சா உன்னியப் போட்டுட்டு... நான் உன்னைப் போட்டேன்னு சொல்லி என்னையும் போடுவானுங்க... பசங்க..."

"ஏன் இந்தப் பொழப்பு உனக்கு... உங்க அப்பன் ரவுடின்னா நீயும் ரவுடியாத் தான் சாகணு....மா?" ஆத்திரத்தில் செல்வாவுக்கு வார்த்தைகள் குழறிக் கொட்டின.

"உன் குழந்தைகளுக்கு எத்தனை வயசு...?

"நீ கொஞ்சம் நினைச்சிருந்தா வேற பொழப்புப் பார்த்து இருக்கலாமே.. இப்படி ஒரு நிலமை வந்து இருக்காதே..."

"என் பையனுக்கு ஆறு வயசு...பொண்ணுக்கு மூணு வயசு... நான் வந்த கார்ல்ல அதுகளுக்கு வாங்குன பொம்மை இருக்கு... நிறையவே இருக்கு உன் புள்ளகளுக்கும் எடுத்துக்கோ.. கொடுத்துருவீயா?"

"ஏன் ரவுடி பொழைப்பு...? நீ தான் படிச்சியே.. எத்தனைப் பொழப்பு இருக்கு ஒலகத்துல்ல.." செல்வா தொடர்ந்துப் பேசிக் கொண்டே இருந்தான்.

"என்னை நம்பி வந்துட்டா... என் பொண்டாட்டி.. அவளைக் கோர்ர்ட்.. போலீஸ் ஸ்டேஷன்னு அலையவிட்டறக் கூடாது.. வேணாம்..."

"சேகர்.. நான் உன்னிய எப்படியாவது காப்பாத்துறேன்... என் உசுரைக் கொடுத்தாவது காப்பாத்துறேன்" செல்வா சேகரின் முன் மண்டியிட்டு உட்கார்ந்துப் பேசினான்.

"எங்க அப்பன் சாவுக்கு என் கூடப் பொறந்தவங்க எல்லாரும் பாடையைக் கையிலே எடுத்தானுங்க... நான் எங்கப்பன் கீழேப் போட்ட கத்திய எடுத்தேன்.. அன்னிக்கே எனக்கு கவர்மெண்ட் செலவுல்ல தான் கருமாதின்னு முடிவு ஆகிருச்சுடா... ஓம் பாக்கெட்ல்ல இருக்க அந்த ஒத்த சிகரெட்டைக் கொடு... "
சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தான் சேகர்...ஒரு தரம் புகையை இழுத்து விட்டான்..

"இது எரிஞ்சு முடியற வரைக்கும் எனக்கு நேரம் இருக்கான்னு தெரியல்ல...
நீ எனக்குப் பட்ட கடனுக்கு எதாவது செய்யணும்ன்னு ஆசப்படுறீயா...... ம்ம்ம் இந்தா.....

செல்வாவின் பிஸ்டலை அவனிடம் வீசிவிட்டு தன் சட்டைப் பட்டன்களைத் திறந்துவிட்டு மார்பில் கை வைத்து செல்வாவைப் பார்த்து அதே பழைய நமுட்டுப் புன்னகையைத் தவிழவிட்டான் சேகர்.

செல்வா கடிகாரத்தில் இருந்த முட்கள் வினாடிகளை நகர்த்தத் திராணி இன்றி நின்று போனது.. ஒரு கனத்த மவுனத்திற்குப் பின்... துப்பாக்கி தன் மொழி பேசி மௌனம் கலைத்தது..

கலைந்த மௌனத்தின் மிச்சங்களாய் சிகரெட் தரையில் விழுந்தும் புகைந்துக் கொண்டிருந்தது... பிஸ்டலில் இருந்து மெல்லிய புகை வெளிபட்டுக் கொண்டிருந்தது....

போலீஸ் காரர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சிப்பதற்கு ஒரு வினாடி முன்னதாக செல்வா அவர்களுக்குக் கதவைத் திறந்து விட்டான்.

"மாப்ளே உன் ஸ்கோர் 15 டே.. போட்டுத் தாக்குறே" என்று ஓடி வந்து கட்டிப்பிடித்த ராஜதுரையை வறட்டுப் புன்னகைச் சிந்தி விலக்கி விட்டு நடந்தான் செல்வா.

அந்தி வானம் மெல்ல போர்வை போர்த்த சென்னை இன்னோரு இரவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.ரயில்வே தண்டவாளம் அருகே உட்கார்ந்து உயிர் கிழியும் அளவிற்கு அலறி அழுத செல்வாவின் குரல் காற்றோடு காற்றாக கலந்து காணாமல் போனது.....

அதிகாலை செய்தித் தாள்களில் முதல் பக்கத்தில் சிரித்த முகத்தோடு வெளிவந்திருந்த செல்வாவின் புகைப் படத்தை சேகரின் ஆறு வயது மகன் கிழித்துக் கொண்டிருந்தான்.

Tuesday, November 13, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 6

முந்தையப் பகுதி படிக்க

என்னாத்துக்கு இப்படி ஒரு புது பொரளியைக் கிளப்பியிருக்காங்க.. புரியாம விட்டத்தைப் பார்த்து நானும் யோசிச்சுகிட்டு இருந்தேன்.

அந்தப் பொண்ணு இருக்கப் பக்கம் காத்தடிச்சுக் கூட நாமத் திரும்புனது இல்லையே... எங்கிட்டு இருந்து இப்படி ஒரு கனக்ஷென் கொடுத்தாங்க...ம்ம்ம் மொத்த மூளையும் பிதுங்கி வழியும் அளவுக்கு யோசிச்சுட்டு ஒரு முடிவுக்கு வந்தேன்..

தேவ்... ஊர் உலகத்துக்கு எல்லாம் கச்சேரி வச்சு ரணகளம் பண்ணவன் நீ... அதுல்ல எதோ ஒரு கச்சேரிக் கேட்டவனுக்கு அளவுக்கு அதிகமாகச் சேதாரம் ஆகியிருக்கு..அவன் தான் இப்போ உனக்கு எதிராக் கிளம்பியிருக்கான் அதுவும் கூட்டணி எல்லாம் பேசி வைச்சுக் கிளம்பியிருக்கான்..க்ரிப்பா இருக்கணும் புரியாதா..சிலிப் ஆயிரக் கூடாது..சரித்திரம் சரிஞ்சுரும்ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

அப்போதைக்கு அந்த விசயத்தைப் பத்தி அதிகம் யோசிக்காமல் ஊட்டி பயணத்தின் மீது கவனத்தைப் பதிக்கத் துவங்கினேன்.

யார் யாருக்கு என்னப் பொறுப்புகள் என பகிர்ந்தளிக்கப்பட்டது. கேமரா.. வீடியோ கேமரா.. இன்னப் பிற சமாச்சாரங்கள் என ஒவ்வொரு விசயத்தையும் விரிவாய் திட்டமிட்டுக் கொண்டோம்.. திட்டமிடுதல் முடிந்துப் பயணம் பற்றியே பேசி பேசி ஒரு கட்டத்தில் ரொம்பவே களைத்துச் சலித்துப் போனோம்.


"ம்ம் என்னய்யா இது சுத்தப் போரா இருக்கு.. மணி எட்டு தான் ஆவுது.. ரூமுக்குப் போனா போரடிக்குமே.." குமார் முதலில் சலிப்பை வெளிப்படுத்தினான்.

"ஆமாம்ய்யா.. என்னப் பண்ணலாம்.. லேய் அந்தச் செல் போனை இப்படிக் கொடு.. யாருக்காவ்து எஸ்.எம்.எஸ் போடுவோம்..." மணி திருநாப் போனை வாங்கினான்.

"ம்ஹூம் பாஸ் எஸ்.எம்.எஸ் அனுப்புற அளவுக்கு நம்ம கிட்ட சார்ஜ் இல்லையே... " திருநாப் போனைக் கொடுத்து விட்டு மணி எஸ்.எம்.எஸ் அனுப்பும் முயற்சியில் முக்கால் வாசி ஈடுபட்ட பின் சாவகாசமாய் சொன்னான். மணி முகத்தைப் பார்க்கணுமே..

"கொய்யா..அதை முதல்லச் சொன்னா என்ன?"

"அதுன்னால்ல என்ன எஸ்.எம்.எஸ் டைப் பண்ணி பத்து நிமிசம் பொழுதைப் போக்கிட்டீங்கல்ல சீனியர் ப்ரீயா விடுங்க..." திருநா சிரித்துக் கொண்டேச் சொல்ல, கடுப்பான மணி போனை அவன் முகத்தில் எறிய ஓங்கினான்.

"சீனியர் பேசித் தீத்துக்கலாம்.. தீத்துட்டீங்க்கன்னாப் பேசவே முடியாது.. வேணாம்..ரைட்டா? " கெஞ்சும் பாவனையில் மண்டியிட்டான்.

அதே நேரம் பீச்சுக்குள் ஒரு ஜோடி எங்களைத் தாண்டி இறங்கிப் போனது... ரொம்ப நெருக்கம் ரொம்ப கிறக்கம்..அப்படி ஒரு காதல் ஜோதியைச் சுமந்துகிட்டு மண்ணுல்ல இறங்கி நடந்தாங்க..

"மாப்பூ... இது அதே தான்டா.." குமார் கண்ணடித்தான்.

"சீனியர்.. லவ்வர்ஸ் சீனியர்... பாவம் ப்ரைவேசி கிடைக்காம பீச்சுக்கு வந்துருக்காங்க..எல்லாரையும் எக்குத் தப்பாப் பாக்காதீங்க சீனியர்..." ஜமான் சொன்னது தான் தாமதம் எல்லாருக்கும் சிரிப்புப் பொத்துகிட்டு வந்தது.

பேச்சு இரவுக் காட்சிக்கு எதாவது போலாமா என்ற ரீதியில் நகர்ந்தது.. எந்தப் படம் போனால் டிக்கெட் செட் ஆகும் என்று ஆலோசனைகள் அள்ளித் தெளிக்கப்பட்டன...இது ஒரு பக்கம் நடந்தாலும்.. எல்லோர் கண்களும் அந்த ஜோடியின் மீது அவ்வப்போது போய் வந்தப் படியே இருந்தன..

எங்க ஏரியாவுக்குப் பக்கமாய் இருக்கும் பிராத்தனா ட்ரைவினுக்கு போவதாக தீர்மானம் நிறைவேறியது...திறந்த வெளியில் படத்தைப் பிலீங்க்கா தம் போட்டப் படியே பார்க்கலாம் எனப்து பெரும்பாலானோரின் கருத்து. அந்தக் கருத்தை ஏற்று பிராத்தனா பிளான் ஓ.கே ஆனது.

எப்படியும் இன்னும் ஒண்ணரை மணி நேரம் மிச்சமிருந்தது.. என்னப் பண்ணலாம்..இப்படியே உக்காந்து யோசிச்சா ஒண்ணரை மணி நேரத்தை ஓட்டுவது பெரிதாக இருக்காது எனப்பட்டது..

"மச்சி...மேட்ச் ஆரம்பிச்சுருச்சுடா" குமார் திடீரென அறிவிக்க மொத்தப் பார்வையும் முத்தச் சத்தம் வந்தப் பக்கம் பார்த்து திரும்பியது. "அடக்கொக்காமக்கா... ப்ரைவேசின்னு சொன்ன புண்ணியவான் எங்கேடா.. இதை வச்சே வீடியோ பைரசியே பண்ணலாம் போலிருக்கே..." என்று மணி கமெண்ட் அடித்தான்.

"நைட் ஷோ கேன்சல் பண்ணிரலாமா?" முஸ்தபா கேட்டான்.

ஆக எல்லாரும் அந்த ஜோடியின் மீதே முழு கண்களையும் செருகி வைத்தோம்.

"மாப்பூ கலாய்க்கலாமா" என்று குமார் தூபம் போட்டான்.

"எப்படி?"

"இது தான் பிளான் .." அப்படின்னு குமார் குத்து மதிப்பா ஒரு திட்டம் வரைந்தான்.

அதாவது எங்க மக்களில் இரண்டு பேர் மப்டி போலீஸ் மாதிரி அந்த ஜோடி பக்கம் போக வேண்டும் அங்கிருந்தப் படி பெரிய போலீஸ்க்கு செல்போன் மூலம் தகவல் தரவேண்டும்...இப்படி ஆரம்பித்தது திட்டம். திட்டப்படி ஜாமனும் குமாரும் மப்டி போலீசாகக் களத்தில் இறங்கினார்கள். திருநாவின் மெகா சைஸ் செல்போன் கிட்டத் தட்ட ஒரு வாக்கி டாக்கி போல இருக்கும். அதை ஜமான் கையில் எடுத்துக் கொண்டான்.

போலீஸ்க்கான தகுதிகளாய் ஒரளவு உருண்டு திரண்ட உருவம் கொண்ட ஜமான் தைரியமாக முன்னால் நடக்க.. பின்னால் குமார் நடந்தான். மற்றவர்கள் கரையில் நின்று கொண்டோம்..

"டேய் குமார் நீங்க உள்ளேப் போறீங்க சரி.. பெரிய போலீஸ் யாருடா ஆக்ட் கொடுக்கணும் அதைச் சொல்லாமப் போறீங்க.." கேட்டது நான் தான்..

"மாப்பி மண்ணு.. இது என்னக் கேள்வி கிறுக்குத்தனமா.. பாதி பனைமரம் உயரம் வளந்து இருக்க.. ஓட்ட வேற முடியைக் கட்டிங் போட்டிருக்க... மீசை வேணும்ன்னா லைட்டாத் திருகிக்க... பொருத்தமா இருக்கும்... உனக்கு பெரிய போலீஸ் வேசம்.. ரைட் நாங்கப் போறோம்"

பார்த்த சினிமா போலீஸ் எல்லாம் நினைவுப் படுத்திக்கொண்டு ஒரு மாதிரியாக் கொடுத்தக் கேரக்டருக்குச் செட் ஆக முயற்சித்தேன்.. எஸ்.பி.சவுத்ரி, அலெக்ஸ்பாண்டியன், வால்டர் வெற்றிவேல் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாய் ஒற்றை காலை எடுத்துக் குட்டைச் சுவரில் வைத்து கையை இடுப்பில் இருத்தி கெத்தான ஒரு போஸ் கொடுத்தப் படி நின்றேன்.. மற்றவர்கள் என்னை விட்டு நாலு அடி தள்ளிச் சென்றார்கள்..சோழன் மட்டும் கூட பணிவான இன்னொரு போலீஸாகப் பம்மி நின்றான்.

மணி, சபரி, திருநா, புகாரி எல்லாம் நகர்ந்து மண்ணில் இறங்கி நடந்தார்கள். ஜோடிக்குக் கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்தார்கள். நம்ம மப்டி போலீஸ் ஜமானும் , குமாரும் முதலில் எங்க ஜமா இருந்த பக்கம் போனார்கள்.

"ஹலோ யாருய்யா நீங்க....எந்த ஏரியா?" ஜமான் குரல் கொடுக்க..

"காலேஜ் ஸ்டூண்ட்ஸ் சார்.." முஸ்தபா பம்முவது போல் பதில் சொன்னான்.

"ஐடி கார்ட் இருக்கா?" இது ஜமான்.

"இருக்கு சார்"

"ஏய் நீ எழும்புடா...உன்னைப் பார்த்தா அக்யூஸ்ட் மாதிரியே இருக்க...உன் பேர் என்ன?" ஜமான் கிடைச்சக் கேப்பில் திருநாவைக் கிடா வெட்டினான். திருநா பதில் சொல்லாமல் முறைத்தான்.

"டேய் என்ன லுக் விடுற... கேட்டாப் பதில் சொல்லணும்... இப்படி எல்லாம் முழிக்கக் கூடாது.. " ஜமான் உதார் அதிகமாக.

இதற்குள் ஐடி கார்ட்களைப் பரிசோதிப்பது போல் வாங்கிப் பார்த்த குமார்.."ஆமா சார் எல்லாம் காலேஜ் பசங்க தான் " கரெக்ட்டா இருக்கு அப்படின்னு சொன்னான்.

"டேய் மொறைக்காதடா ..போ..போ.." ஜமான் சவுண்டை வேண்டுமென அதிகப் படுத்தினான். பக்கத்திலிருந்த ஜோடியை லேசாக கலவரப்படுத்தும் முதல் முயற்சியில் ஜமான் வெற்றியடைந்தான் என்றே சொல்லவேண்டும். ஜோடி கொஞ்சமாய் விலகியது.

முஸ்தபா,திருநா, மணி,சபரி எல்லாம் அங்கிருந்து கிளம்புவது போல எழும்ப ஜமானும் குமாரும் அடுத்து நகர்ந்து ஜோடிப் பக்கம் வந்தனர்.

"ஆமா சார்.. விசாரிச்சுட்டேன் சார்... அது காலேஜ் பசங்க சார்... ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல சார்...அடுத்து சார்.. ஆமா சார்... ரைட் சார்....ஆமா சார் ஒரு ஜோடி இருக்கு சார்.. விசாரிக்கிறேன் சார்... " போனில் பாவ்லா காட்டியப் படி ஜோடி பக்கம் போய் நின்றான் ஜமான், அவன் கூடவே குமாரும் நின்றான்.

"எந்த ஏரியா?" ஜமான் அதட்டலாய் கேட்க....

"நாங்க ப்ரண்ட்ஸ் சார்.." ஜோடியில் ஒருத்தன் பதட்டமாய் பதில் அளித்தான்.

"எந்த ஏரியான்னு கேட்டா என்னப் பேசுற?" ஜமான் குரலில் கறார் கூட்டிக் கேட்டான்.

"இல்ல சார்.. நாங்க தப்பு எதுவும் பண்ணல்ல சார்?" அவள் பதில் சொன்னாள்.

"இது ஆவுறதில்ல... அங்கேப் பாருங்க ஆபிசர் நிக்குறார்.. அங்கேக் கூட்டிட்டுப் போறேன்..வந்து பேசுங்க" ஜமான் நான் இருக்கும் பக்கம் கை நீட்டினான். ம்ம் ஒரு மாபெரும் கலைஞனின் நடிப்பாற்றலுக்கு ஏற்ற வேடம் இல்லை என்றாலும் கொடுத்த வேடத்தில் மின்ன வேண்டும் என்ற எண்ணத்தில் தலையை உயர்த்தி அண்ணாந்து சும்மா இன்னும் கெத்துக் கூட்டி போஸ் கொடுத்தேன்.

"டேய் லாங்க்ல்ல இருந்து நீ நிக்குறது மட்டும் தான் தெரியும் ... உன் முகத்தை இப்படி எல்லாம் பீலிங் காட்டுறேன்னு செய்யற எபெக்ட் எல்லாம் நான் மட்டும் பார்த்து பீதியடைய வேண்டி இருக்கு சோ..உன் பிலீங்கைக் கன்ட்ரோல் பண்ணு" பக்கத்தில் இருந்த சோழன் என் நடிப்பு வெள்ளத்துக்கு அணைப் போட்டான்.

ஜோடி பதில் பேச முடியாமல் உளறி கொட்ட.. திட்டமும் தெளிவுமாய் அது எப்படிப் பட்ட உறவு என எங்களுக்கு ஊகிக்க முடிந்தது.

"சார் ஆபிசர் எல்லாம் வேணாம் சார்.. மன்னிச்சு விட்டுருங்க சார்.. நாங்க இப்படியே ஓடிப் போயிரோம் சார்..." அவன் கெஞ்சியே விட்டான்.

"ம்ம்ம் என்னது ஓடியேப் போயிடுவீங்களா." அப்படியே ஒரு யோசிக்கும் எபெக்ட் கொடுத்த ஜமான் குமாரைப் பார்த்தான்.

"ஓகே மன்னிச்சுடுறோம்...எங்கே ஓடுங்கப் பார்ப்போம்" என்றான் ஜமான். அவன் அப்படி சொன்னது தான் தாமதம் அந்த ஜோடி ஓடின ஓட்டம் பார்க்கணுமே... யம்மாடியோய் கரண்ட் கம்பியை வச்சு கீ கொடுத்த மாதிரி ஒரு ஓட்டம்.. மின்சார ஓட்டம்...

அவங்கப் போய் வெகு நேரம் வரை எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை....

"டேய் கவுரி இந்நேரம் சென்னைக்குள்ளே நுழைஞ்சு இருப்பான்ல்ல.. அவனுக்குப் போனைப் போடு மாப்பி.. அவனையும் படத்துக்குச் சேத்த்ருவோம்" என்று முஸ்தபா சொன்னான்.

"ம்ம்ம் நானும் மூணு நாலு வாட்டி ட்ரை பண்ணிட்டேன்... லைன் போகவே மாட்டேங்குதுப்பா.. இந்த ஆர்.பி,ஜியும் அதோட நெட்வோர்க்கும் கடுப்புப்பா.." என்று திருநா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் செல்பேசியில் கவுரியின் நம்பர் மின்னியது...

"மாப்பிக்கு ஆயுசு நூறுடா.. பேசிகிட்டு இருக்கும் போதே லைன்ல்ல வர்றான் பாரு.." என்ற படியே செல்லை ஆன் செய்து..." சொல்லுடா மச்சி... எங்கே இருக்க?" என ஆரம்பித்தான் திருநா..ஆனால் மறுமுனையில் பேசியது கவுரி இல்லை என்பது அடுத்தச் சில வினாடிகளில் எங்களுக்குத் தெரியவந்தது.

போனைக் கீழே வைத்த திருநா அப்படியேக் குட்டிச் சுவரில் உட்கார்ந்தான்

"கவுரியும் அவங்க அப்பாவும் வந்த கார் ஆக்சிடென்ட் ஆயிருச்சாம் திண்டிவனம் பக்கம்..கவுரி ஸ்பார்ட்ல்ல அவுட்டாம்.. அவங்க அப்பா ஹாஸ்பிட்டல் போற வழியிலே ..." திருநாவால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை..

எல்லாரும் அப்படியேக் குட்டிச் சுவரில் தலைக் கவிழ்த்து அமர்ந்தோம்....

அடுத்தப் பகுதியினில் முடியும்

Wednesday, October 31, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 5

இது வரை குட்டிச் சுவரில் நடந்தக் கதை

"சீனியர் இதெல்லாம் நல்லால்லங்க... கலகலப்பா இருந்தவங்க நீங்க.. இப்படி ஒரு சின்னப் பிரச்சனைக்காக பேசாம இருக்கது நல்லாயில்ல... நான் வேணும்ன்னா சோழன் சீனியர் கிட்டப் பேசட்டுமா" முஸ்தபா அன்றைய குட்டிச் சுவர் சபையிம் மவுனத்தை முதலில் கலைத்தான்.

எனக்கும் குமாருக்கும் என்னப் பதில் சொல்வதென்று புரியவில்லை. ஒன்றும் பேசமுடியாமல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"சொல்லுங்க சீனியர்.. என்ன இருந்தாலும் ஒண்ணுக்குள்ளா ஒண்ணாப் பழகிட்டீங்க...சின்னப் பிரச்சனை..பேசித் தீக்க முடியாதப் பிரச்சனைன்னு எதுவும் இல்லையே.." ஜமானும் கூடச் சேர்ந்துக் கொண்டான்.

குமார் அங்கிருந்து எழுந்து நடந்தான். நான் நடக்கக் கூடத் தோன்றாமல் குமார் போகும் திசையைப் பார்த்தப் படி இருந்தேன்.

"சோழன் சீனியர் கோவத்துல்ல எதோப் பேசிட்டார்.. நட்புக்குள்ளே இதெல்லாம் சகஜம் தானே... கை நீட்டியிருக்கக் கூடாது தான்... ஆனாலும் உங்க பிரண்ட் தானே...மறந்துரலாமே சீனியர்... இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த வாழ்க்கை..." முஸ்தபா தன் கருத்தை அழுத்தினான்..

அதற்கும் நான் பதில் பேசாமல் இருந்தேன்.. உண்மையில் என்னப் பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை.

குமார் அலை வாசலில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்தேன். என் மவுனம் முஸ்தபாவுக்கு சங்கடம் கொடுத்ததோ என்னவோ தெரியவில்லை..

"சீனியர் அதிகமாப் பேசியிருந்தா மன்னிச்சுருங்க.. மனசுக் கேக்கல்ல அதான் பட்டதைச் சொல்லிட்டேன்..." என்று அவனும் மவுனம் ஆனான்.

அங்கு மிகவும் கனத்த மவுனம் நிலவியது... எங்களைக் கடந்து மும்பை எக்ஸ்பிரஸ்..குட்ஸ் வண்டி... ஏன் ஜெட் ஏர்வேஸ் கூடப் போனது... அன்று யார் கவனமும் அதில் இல்லை.... சரி முழுமையாக அதில் இல்லை...நான் தான் மவுனத்தைக் கலைத்தேன்.

"கவுரி கார் எப்போ வருது.?"

"இன்னிக்குக் கிளம்புறான் சீனியர்... காலையிலே போன் பண்ணி பேசினேன்... சாயங்காலம் சென்னை வந்துருவான்" திருநா பதில் சொன்னான்.

"எங்கேயாவது டூர் போலாம்ப்பா... இந்தப் புராஜக்ட் டென்சன்.. அது இதுன்னு ரொம்ப ஓவராப் போயிருச்சு...என்னச் சொல்லுறீங்க?" நான் கேட்டேன்.

"நல்ல ஐடியா சீனியர்... ஊட்டி போயிருவோம்.. குன்னூர்ல்ல நம்ம மாமாவுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு" திருநா சொன்னான்.

"என்னப்பா ஊட்டி ஓ.கேவா?"

"ஓ.கே. சீனியர்" ஜமான் முதல் ஆதரவு ஓட்டுப் போட்டான்,

"எத்தனைப் பேர்?" திருநா கணக்கு எடுக்க ஆரம்பித்தான்.

"நான்...குமார்...மணி..சபரி...உங்கப் பசங்க நாலு பேர்...அப்படி இப்படிப் பார்த்தா பத்து பேர்ப்பா" நான் கணக்குச் சொன்னேன்.

"ரைட்.. வெள்ளிக் கிழமைக் கிளம்பிருவோம்... போயிட்டு சனி, ஞாயிறு., திங்கள் இருந்துட்டு செவ்வாய் ரிட்டன் கிளம்பிருவோம்" திருநாவும் நானும் கிட்டத்தட்டப் பேசி முடித்தோம்.

"இருங்க சீனியர் நான் கவுரிகிட்டப் பேசி ஓ.கே பண்ணிடுறேன்... செல் போனை எடுத்துக் கொண்டு ஓரமாய் போனான் திருநா.

குமார் அதற்குள் அலை ஓரமிருந்து திரும்பி வந்தான். மணியும் சபரியும் அப்போது தான் வந்துச் சேர்ந்தார்கள். அவர்களிடமும் ஊட்டி ட்ரிப் பிளான் பற்றி சொன்னோம்..எல்லாரும் ஒரு மாதிரி ஓ.கே சொல்லி விட்டார்கள். அடுத்தக் கட்டமாய் செலவுக்கான ஏற்பாடுகள் என பயணத் திட்டம் என முழுவீச்சில் உருவாக்கம் பெற ஆரம்பித்தது. கவுரியின் புது சென், மற்றும் திருநாவின் ஆம்னி என இரண்டு வண்டிகளில் கிளம்புவதாய் முடிவானது.. யார் யார் எந்த வண்டிகளில் போவது என்பது வரை பக்காவாய் பேசி வைத்துக் கொண்டோம். இதற்குள் போன் பேசி முடித்த திருநா குதூகாலமாய் திரும்பி வந்தான்.

"கவுரியும் அவங்க அப்பாவும் கிளம்பிட்டாங்களாம்... இன்னும் இரண்டு மூணு நேரத்துல்ல சென்னை வந்துருவாங்களாம்.. அவங்க கோயில் பிளானை அடுத்த வாரத்துக்கு மாத்தியாச்சாம்... அதுன்னால இந்த வாரம் அவங்க வண்டி நமக்குக் கிடைச்சுடும் நோ ப்ராப்ளம்ன்னு சொல்லிட்டான்.. சோ ஊட்டி கன்பர்ம்ட்" திருநா சொல்லவும் எல்லோருடைய உற்சாகமும் இன்னும் ஒரு படி அதிகமானது.

முஸ்தபா மட்டும் அவ்வளவு ஆர்வமாய் இல்லை என்பது எனக்குப் புரிந்தது..

"முஸ்தபா..என்ன ஆச்சு?" நான் கேட்டேன்.

"ஒண்ணுமில்ல சீனியர்.."

"புகாரி விசயமா...?"

"இல்ல சீனியர்"

"சரி... எனக்கும் சோழனும் எந்தப் பிரச்சனையுமில்ல... எனக்கு இப்பவும் அவன் நண்பன் தான்.. ஊட்டி ட்ரிப்க்கு சோழனைக் கூப்பிடலாம்.. என்ன குமார் சொல்லுற?" நான் குமாரைப் பார்த்தேன். லேசாகத் தயங்கிய குமார்.. சோழன் வருவதில் தனக்கு எதிர்ப்பு இல்லை என மெல்ல தலையை மட்டும் அசைத்துச் சொன்னான். முஸ்தபாவின் முகத்தில் அப்போது தான் சந்தோசம் பொங்கியது.

"தேங்க்ஸ் சீனியர்" என்றான் முஸ்தபா.

அதற்கு பிறகு குட்டிச் சுவரில் வழக்கமான ரகளை ஆரம்பம் ஆகியது... சிகரெட்கள் புகைந்தன.. புது புது பட்டங்கள் வழங்கப் பட்டு நடைப் போடும் அழகுகள் ஆராதிக்கப்பட்டன.. ஒரு இடைவேளைக்குப் பின் குட்டிச் சுவரின் கலகலப்புத் திரும்பியது..

"இன்னிக்கு நைட் ஜமான் தான் நமக்கு ட்ரீட்...எல்லாரும் ரெடியா இருங்க" என்றான் திருநா.

"எதுக்கு?"

"இந்த சட்டைக்காக தான் சீனியர்...பைய இந்த ஒரே சட்டையை லீவ் விட்டதுல்ல இருந்து தோய்க்காம கொள்ளாம இன்னிக்கு வரைக்கும் எட்டாவது நாளாப் போட்டிருக்கான்..."

"அப்படி என்னச் சட்டை இது?"

"ஷாலினி வாங்கிக் கொடுத்தச் சட்டை சீனியர்"

"அதுக்குன்னு அதை இப்படியாக் கொடுமைப் படுத்தறது.. நீ தான் குளிக்க மாட்டேங்குர.... அதையாவது குளிக்க வை...நாத்தம் தாங்கல்லடா சாமி" திருநா மூக்கைப் பொத்திச் சிரித்தான்.

"இல்லை சீனியர் டெய்லி பர்ப்யூம் போடுறேன் சீனியர்... நாத்தம் எல்லாம் இல்ல... நீங்க வேணும்ன்னா..." ஜமானின் அந்த முயற்சி எங்கள் அனைவரையும் கலவரப்படுத்த தெறித்து ஓடினோம். "ஜமான் அங்கேயே நில்லு...இல்ல கொலை முயற்சியிலே கேசு கொடுத்துருப்வோம்டா" முஸ்தபாவின் மிரட்டலையும் மீறி ஜமான் முன்னேற முயற்சிக்க ஓட்டத்தின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினோம்...

அப்போது சர்ரென்று வந்த பைக்கின் குறுக்கே போய் விழுந்தான் குமார்...பைக்கில் இருந்தது சோழன். கீழே விழுந்த குமார் ரோட்டின் ஓரத்துக்கு உருண்டான். பைக் அப்படியே போட்டு விட்டு குதித்தச் சோழன் குமாரை நோக்கி ஓடினான்.

குமாரைச் சோழன் தூக்கி விடவும் நாங்கள் அங்கேப் போய் நிற்கவும் சரியாக இருந்தது.. சோழனும் குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்.

"பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா....." ஜமான் அந்த இடத்தில் ராகம் போட... சட்டெனத் திரும்பி எல்லாரும் அவனைத் துரத்த ஆரம்பித்தார்கள்...

வேகமாக ஓடும் போது என் தோளோடு தோள் உரசிய சோழன் கிசுகிசுப்பாய் என் காதில் சொன்னான்...

"மாப்பூ கை நீட்டிட்டேன் மன்னிச்சுரு..."

"ஆங் எனக்குக் கேக்கல்ல.." ஓடிக்கொண்டே நானும் சொன்னேன்.

சட்டென என்னை இழுத்துப் பிடிச்சு நிறுத்திய சோழன் மீண்டும் அதே மாதிரி சட்டையைப் பிடித்துச் சத்தமாச் சொன்னான்..

"அன்னிக்கு இப்படி உன் சட்டையைப் பிடிச்சுட்டேன்...எதோ கோவத்துல்லப் பிடிச்சுட்டேன்..தப்புன்னு இப்போ ஒத்துக்குறேன்...மன்னிப்புக் கேட்டா ஓவரா சீன் போடுற... ஒழுங்காச் சொல்லு மன்னிப்பீயா மாட்டீயா... " அவன் கையில் என் சட்டை இருந்தது..அந்தச் சட்டைக்குள் நான் இருந்தேன்.

"சரி சரி... மன்னிப்புத் தானே வச்சிக்கோ..எடுத்துக்கோ...இப்போ என் சட்டையை விடு... நாங்க எல்லாம் சட்டையைத் தினம் தோய்ச்சுப் போடுற டைப்...." நான் சவுண்ட் விட மீண்டும் இருவரும் ஓட ஆரம்பித்தோம்.

அன்றும் மழை வந்தது....

"மன்னிப்பு எல்லாம் இருக்கட்டும்... நீ சொன்னது உண்மையா?" நான் கேட்டேன்.

"எது உண்மையான்னு கேக்குற?"

"நித்யாவை நீ லவ் பண்ணுறதாச் சொன்னது..."

"ஆமா உண்மை.. நீ தான்டா எனக்கு வில்லன்"

"நானா.. நான் என்னடா பண்ணேன்?" ஓட்டத்தை நிறுத்தாமலேக் கேட்டேன்.

"ஆமாடா நீ தான் வில்லன்.. ஏன்னா அவ உன்னைத் தான் விரும்புறாளாம்.."

"என்னது?" அப்படியே முன்னால் ஓடிக்கிட்டு இருந்தவன் பின்னாலே ஓட ஆரம்பிச்சேன்...

"டேய் உண்மையாத் தான் சொல்லுறேன்.. உன்னைத் தான் நித்யா விரும்புறா...உன்னைத் தான் கல்யாணம் பண்ணப் போறாளாம்.. கைப்பட எழுதிக்கொடுத்திருக்காப் பாக்குறீயா?" சோழன் முன்னால் ஓடிக் கொண்டேக் கேட்டான். நான் பின்னாலே நின்றேன்.

அதற்கு முன்னால் ஓடியவர்கள் அதற்குள் ஜமானைப் பிடித்து விட்டிருந்தார்கள்.

"டேய் மாப்பி உனக்கும் எனக்கும் தான் போட்டி...பாத்துரலாமா ஒரு கை.." சோழன் சிரித்துக் கொண்டேக் கேட்டான்..

"போங்கடா நீங்களும் உங்க காதலும்...." வைதேகி காத்திருந்தாள் மாஸ்டர் டிங்கு சொல்லும் டயலாக் என்னையுமறியாமல் என் வாயில் இருந்துக் கிளம்பியது

தொடரும்..

Sunday, October 21, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 4

முந்தையப் பகுதி

போலீஸ் ரோந்து வண்டியின் முன் கண்ணாடியை இறக்கிய இன்ஸ்பெக்டர் எங்களை ஏற இறங்க பார்த்தப் பார்வையில் உள்ளுக்குள் தேக்கி வச்சிருந்த மொத்த தைரியமும் கரைந்து கண் முன்னே கடலில் கலக்க கட்டுக்கடங்காமல் பாய்ந்தது...

"என்னப் பண்ணுறீங்க,,இந்த் நேரத்துல்ல இங்கே?" அவர் கேள்வி கேட்டு விட்டார் ரொம்ப சுலபமா,,அவுட் சிலபசில் பரீச்சையில் கேள்வி கேட்டால் எப்படி முழி பிதுங்கி முன்னால் வருமோ அதே மாதிரி ஒரு நிலைமை...மேல் உதடு கீழ் உதட்டோடு ஓட்டிக் கொண்டது எனக்கும் குமாருக்கும்..அவரவர் உதடு அவரவர் உதட்டோடுத் தான் ஒட்டிக்கொண்டது என்பதையும் இங்கேயேத் தெளிவு படுத்திவிடுகிறேன்..

"என்னப் பதிலைக் காணும்...?" கூட வந்தக் காவலர் ஏத்திவிட...

"இது யார் பைக்?" இன் ஸ்பெக்டர் அடுத்தக் கேள்வியைக் கேட்டார்.

"சார்... எங்க பைக் தான் சார்... மழை பெய்யுது அதான் பைக் எடுக்கமுடியாம கார்ல்ல வெயிட் பண்றோம் சார்..." கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகளை இழுத்து சொன்னோம்...

"பைக் மட்டும் தான் காரணமா.. இல்ல பேரல்ஸும் காரணமா?" இன்ஸ்பெக்டர் தம்ஸ் அப் சிம்பளை வாயில் கவுத்திக் கேட்டார்...

"இல்ல சார் நான் வேணும்ன்னா ஊதி காட்டவா?" எஞ்சிய தைரியத்தில் வார்த்தைகள் வழிந்தெழுந்தன..

"நீ ஊதி எல்லாம் காட்ட வேணாம்.. ஊத்தி கொட்டனதே அங்கே பக்கத்துல்ல தான் கிடக்குது...அதுவே எல்லாத்தையும் சொல்லிருச்சு.." இன்ஸ்பெக்டர் கைக் காட்டிய இடத்தில் ரெண்டு காலி பீர் பாட்டில்கள் மழையில் நனைந்தப் படி ஒன்றோடு ஒன்று உரசியப் படி ரொமான்ஸ் சீன் காட்டிக் கொண்டிருந்தன.. எங்களுக்கு ஆக்ஷ்ன் சீன் கன்பர்ம் ஆகி கொண்டிருந்தது...

"எந்த காலேஜ்?"

"சார் சாரி சார்...பிரண்ட்க்கு பர்த்டே அதான்...."

"யாருக்கு பர்த்டே?" இன் ஸ்பெக்டர் கேட்க."இவனுக்கு" எனப் பதிலாய் ரெண்டு குரல்கள் கேட்டன. ஒண்ணு என்னுது நான் சொன்ன இவன் குமார். இன்னொரு குரல் குமாருடையது அவன் சொன்ன இவன் நான்...

அப்புறம் என்ன... ஒரே ஸ்டார்ட் மீசிக் தான்...

இன்ஸ்பெக்டர் வீட்டு தங்கமணி அன்னிக்கு அவருக்குப் பிடிச்ச கருவாட்டு குழம்பைப் பக்குவமா வச்சு ஊத்தியிருக்காங்கப் போல...நாங்க கருவாடா ஆகாம தப்பிச்சோம்...தங்கமான மனுசன் அட்வைஸ் மழைப் பொழிஞ்சதோட விட்டு அனுப்பிட்டார்...அவர் அட்வைஸ் மழை பொழியறதை நிறுத்தவும் மழையும் கொஞ்சம் நின்னுச்சு...

"தம்பிகளா.. இனி நான் உங்களைப் பீச் பக்கம் இப்படி பார்த்தேன்... அவ்வளவு தான் சொல்லிட்டேன்..." ஜீப் போனது... எங்களுக்கு மூச்சு வந்தது...

எல்லாம் முடிந்ததும் எழுந்து வந்த திருமா...

"சீனியர்... யார் சீனியர் அந்த அங்கிள் .. ரொம்ப நேரமா உங்ககிட்ட பேசிகிட்டு இருந்தார்.. எதாவது பிரச்சனையா சீனியர்.. சொல்லுங்க.. உங்க அங்கிள் நம்ம அங்கிள்.. கூட்டத்தோடு களம் இறங்கிருவோம்" அப்ப்டின்னு சொல்லிகிட்டேக் குட்டிச் சுவர் பக்கம் தேங்கியிருந்த குளத்தில் மல்லாக்க விழுந்தான்.

அதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு வாரத்துக்கு நாங்க யாரும் குட்டிச் சுவர் பக்கம் போகல்ல.. ஜூனியர்ஸ்க்கு இன்டஸ்டிரீயல் ட்ரிப் எங்களுக்கு புராஜக்ட் ஓர்க் பைனல் பேஸ்ன்னு ஒரே பிசி. குட்டிச் சுவருக்கு போறதுக்கு எங்க யாருக்கும் நேரமில்ல..

அன்னிக்கு குட்டிச் சுவருக்கு மறுபடியும் போக வேண்டிய சூழ்நிலை உருவாச்சு...காரணம் சோழன்..

வழக்கம் போல இன்னொரு காதல்...சோழனுக்கு காதல் வரும்ன்னு யாராவது எங்கிட்ட பந்தயம் வச்சிருந்தா என் மொத்தச் சொத்தையும் எழுதி தர்றதா பந்தயம் வ்ச்சிருப்பேன்.. ( சொத்துக் கணக்கு கேக்கறவங்க கிட்ட பந்தயம் வைக்கிறதுல்ல)

"மாப்பி.. நான் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்டா...." சோழன் சொன்னதும் ஓ போட்டு அவனை அப்படியே கட்டிப் பிடிச்சு முதல் வாழ்த்து சொன்னது நான் தான்.

"மச்சான் முத்தப்பர் சரியான யோசனைக்கார பெரிய மனுசர்டா... மாட்டை இனியும் சும்மா விட்டா ஊர்ல்ல ஒரு வயக்காடும் வெளங்காதுன்னு வெவரமாப் புரிஞ்சிகிட்டு மூக்கணாம் கயித்தை ரெடி பண்ணிட்டாரு போல.." குமார் சொன்னான்.

"பொண்ணு சொந்தமா?" சபரி கேட்டான்.

"பேர் என்ன?" மணி கேட்டான்

"பேர் நித்யா"

"படிப்பு நம்மளை விட கம்மியா? அதிகமா?" நான் கேட்டேன்.

"படிப்பு நம்ம எம்.பி.ஏ தான்"

"என்னது நித்யா எம்.பி.ஏவா இது முத்தப்பர் வீசுற முக்கணாம் கயிறு மாதிரி தெரியல்லயே... சொந்தமா தயாரிச்ச தூக்கு கயிறு மாதிரி இல்ல இருக்கு?" நான் கேட்டதும் சோழன் முகம லேசாய் மாறியது.

" நம்ம கிளாஸ் நித்யாவா... அந்த பெங்களூர் பொண்ணாடா?" மணி வாய் விட்டு அதிர்ச்சியாய் கேட்டான்.

"இரு மாப்பி டென்சன் ஆவாதே... நீ அவளை லவ் பண்ற மாதிரி மாப்பிக்கும் அவளை லவ் பண்ண உரிமை இல்லையா.. உடனே அதிர்ச்சி ஆனா எப்படி?" நான் கேட்டேன்.

"நான் சீரியசாச் சொல்லிகிட்டு இருக்கேன்..." சோழன் பேசினான்.

அதே சமயம் ஜூனியர் கோஷ்ட்டியும் அங்கே திருநாவின் காரில் வந்து இறங்கியது.

காரைக் கவுரி சங்கர் ஓட்டிக் கொண்டு வந்தான்.

"என்ன கவுரி..இப்போ ரோட் கன்ட்ரோல் வந்துருச்சா.. ஓ,கேவா?" பேச்சு சோழன் காதல் விவகாரத்தில் இருந்து கொஞ்சம் திசை மாறியது..

"புது வண்டி எப்போ எடுக்கப் போற...?"

"அப்பா மாருதி சென் புக் பண்ணிட்டார்... இன்னும் இரண்டு வாரத்துல்ல எடுக்கப் போறோம்... எடுத்துட்டு அப்பாவும் நானும் சென்னைக்கு வர்றோம்... அம்மா தங்கச்சி எல்லாரும் இங்கேயிருந்து கிளம்பி திருப்பதிக்கு ஒரு ட்ரிப் போறதாப் பிளான் சீனியர்" கவுரி சொன்னான்.

"கவுரி உங்க ரோட் ட்ரிப் முடிஞ்சதும் நாம போறோம்... மொத்த ஜமாவும் கிளம்புறோம்.. கொடைக்கானல் போறோம் காட்டேஜ்ல்ல ரூம் போடுறோம்.. கூத்து கட்டுறோம்.. ஓ,கே"

"கண்டிப்பா சீனியர்.. நீங்க கேக்கவே வேணாம்..என் கார் உங்க கார் சீனியர்" கவுரி சிரிப்பும் சந்தோசமாய் சொன்னான்

"என்ன சீனியர் ரோட் கன்ட்ரோல் வந்துருச்சான்னு கேக்குறீங்க...வராதா சீனியர்... சொல்லிக் கொடுக்கரது யார்...பட்டுக்கோட்டை ஷூமேக்கர் திருநாவாச்சே..."

"பட்டுக்கோட்டை பிரபாகர் தெரியும்..இந்த ஷூமேக்கர் யார்டா மாப்பி அவருக்கு உறவா?" ஜமான் நிஜமாலுமே தெரியாமல் கேட்டான்.

"ஷூமேக்கர் தெரியல்ல உனக்கு... எத்தனை வருசமாடா கார்ல்ல போற.. வெளக்கெண்ணெய் உனக்கெல்லாம் பொண்ணு செட் ஆவுது பாரு... அதுவும் ஷாலினி உனக்கு செட் ஆயிட்டாளே" தன் வயித்தெரிச்சலை பொங்க விட்டான் திருநா

"நிறுத்து... உனக்கு கில்பர்ட் ரோட்ரிக்ஸ் தெரியுமா...?"

"என்னது? யார் அது?" திருநா ஜெர்க் அடித்து நிற்க...

"நீ பொறந்ததுல்ல இருந்து கார்ல்ல தானே போறே.. உனக்கு கில்பர்ட் ரோட்ரிக்ஸைத் தெரியல்லங்கற...அதுவும் தஞ்சாவூர்காரன்ன்னு வேற வெக்கம் இல்லமா வெளியே சொல்லிகிட்டு திரியறயே வெங்கல்ம்"

"சரி அது யார்டா?..சொல்லு எனக்குத் தெரியாத கில்பர்ட்..?"

கில்பர்ட் அண்ணேன் எங்கப் பக்கத்து தெருவுல்ல கார் மெக்கானிக் செட் வச்சிருக்கார்... எங்க ஏரியாவுல்லேயே பெரிய மெக்கானிக்டி மாப்பி...

கடுப்பான திருநா இறங்கி ஜமானைத் துரத்த ஜமான் மண்ணில் இறங்கி ஓடினான்..

"சீனியர் கடல்ல குளியல் போட்டு எவ்வளவு நாள் ஆச்சு.. போட்டுருவோமா.. மணி நாலு தானே ஆவுது.." முஸ்தபா எடுத்துச் சொல்ல... எல்லாருக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது,,, சரசரவெனக் கடலை நோக்கி ஓடினோம்...

"எருமை...வருதுடோய்...." கடைசியாய் ஜமான் குதித்தப் போது ஜூனியர்ஸ் கோரசாய் கத்தினார்கள்.

சோழன் கரையோரம் ஒதுங்கி தம்மை பற்ற வைத்து புகையை வளையம் வளையமாய் விட ஆரம்பித்தான்.

"சோழருக்கு என்னாச்சு?" கவுரி கேட்டான்.

"எத்தனைத் தமிழ் படம் பாத்துருப்ப இப்படி கேக்குற,,, பிரச்சனை வந்துருச்சாம் அதான் பீல் பண்ணுறாராம்...அதான் புகையா விட்டு பீலிங்கை பில் டப் பண்ணுறார்.." குமார் சொன்னான்

"லவ்வா?" கவுரி கேட்டான்.

"ஆமா" குமார் சொன்னான்.

"பொண்ணு யார்?"

"எங்க கிளாஸ் பொண்ணு தான்.... நீ கூடப் பாத்து இருப்ப....அந்த பெங்களூர் பார்ட்டீப்பா"

"யார் நித்யாவா சீனியர்... " கவுரி நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான்..

"ஆமா நீ சிரிக்கிறது புரியுது... பொண்ணுக்கு தமிழ் சுத்தமாத் தெரியாது... நம்ம ஆளுக்கு கன்னடம் கொத்தில்லா.. ரெண்டுக்கும் இங்கீலிஷ் சோ சோ ட்ரபிள்... இதுல்ல என்ன மண்ணுல்ல லவ் வந்துச்சோ.... நம்ம சோழன் லவ் பத்தி தெரியாது... பிக் அப்... ட்ராப்... எஸ்கேப்..." நான் சொல்லிச் சிரித்தேன்...

"அதுக்கு ஏன் இவ்வளவு பில்டப் கொடுக்குறார் சோழர்?"

"அதானே கூப்பிட்டேக் கேட்டுருவோம்... டேட்டிங்.... செட் ஆகல்லன்னா ரெண்டு கட்டிங்ன்னு இல்லாம எக்ஸ்ட்ராவா நாலு சிகரெட்டை வேஸ்ட் பண்ணுறானே... " குமார் சொல்லிக் கொண்டே எழுந்து சோழனை நோக்கி போனான்.

நாங்கள் அலைகளில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.. அலையும் அதிகமில்லை....

"டேய் என் மானம் கப்பலேறிடும்டா.. உருவனவன் ஒழுங்காக் கொடுத்துருங்கடா..." ஜமான் குரல் பெரிதாய் ஒலித்தது...திருநா சிரித்தப் படி வேகமாய் உள் நீச்சல் போட்டான்...

"டேய் இப்படியே எந்தரிச்சி போய் உன் கார்ல்ல உக்காந்துருவேன்டா..உருவனதைக் கொடுத்துடுடா" ஜமான் அடுத்த எச்சரிக்கை கொடுத்தான். அதுக்கும் திருநா மசியவில்லை.

"உங்காரை இன்னிக்கு பெட்ரோல் ஊத்தி கொளுத்துறேன் பாருடா.. ஜமான் எழுந்திரிக்கப் போனான்.

அப்போது கரையோரமாய் சோழனுக்கும் குமாருக்கும் நடந்த வாக்குவாதத்தை நாங்கள் யாரும் கவனிக்கவில்லை.. ஜமானைக் கலாய்ப்பதில் மொத்த ஜமாவும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். நான் தான் எதேச்சையாய் கரைபக்கமாய் முதலில் என் பார்வையைத் செலுத்தினேன்..

அங்கு எதோ சரியில்லை என்று எனக்குப் படவே எழுந்து விழுந்து கரையை நோக்கி ஓடினேன்.

நான் கரையை அடையவும் குமாரைச் சோழன் பிடித்து மண்ணில் தள்ளிவிடவும் சரியாக இருந்தது...நான் குமாரைத் தூக்கி அவன் தோளில் இருந்த மண்ணைத் தட்டி விட்டேன். இதற்குள் மொத்த ஜமாவும் பதறியடித்து கரையேறி இருந்தார்கள்.. சோழன் உச்சக் கட்டக் கோபத்தில் இருந்தான்..என்னால் அதை நல்லாவே உணர முடிந்தது.. குமார் எதுவும் பேசாமல் மெதுவாய் என் கையை உதறி விட்டு திரும்பி நின்றான். எனக்கு என்ன நடந்திருக்கும் என சரியாக யூகிக்க முடியவில்லை... என்னப் பேசுவது என்ற குழப்பத்தோடு நின்றேன்.

என்னைப் போலவே எல்லாரும் அதிர்ச்சியில் நின்றார்கள். ஐந்து வருட கால நண்பர்கள் மண்ணில் உருண்டு புரண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சி வராது...

கவுரி தான் முதலில் பேசினான்.

"சீனியர்..என்ன இது...?"

"டேய் நீ பேசாத.. சின்னப்பையன்.... உனக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு விருப்பமும் இல்ல தேவையும் இல்ல...மேல பேசுன அசிங்கமாப் போயிரும்..." சோழன் வார்த்தைகளில் அனல் தெறித்தது.

"சோழா... மாப்பி...பிரச்சனை என்னவா இருந்தாலும் கை நீட்டுறது சரியில்லடா மாப்பி.. வா பேசலாம்.." அவன் தோளில் நான் கையைப் போட்டேன்...

என் கையை ஓங்கி தள்ளியவன் ஆத்திரத்தோடு வந்து என் சட்டையைப் பிடிச்சான்

"டேய் மெட்ராஸ் புத்தியைக் காட்டிட்டீயேடா.... ஊர்காரப் பைய ஒருத்தன் இங்கே வந்து லவ் பண்ணக் கூடாதா? உன்னிய நண்பன்னு நினைச்சு என் காதலை... என் மனசைத் தொறந்துச் சொன்னா..அதை ஊரையேக் கூட்டி வச்சு நக்கல் பண்ணுறீயா.... த்தூ.... மனுசனடா நீ எல்லாம்... பழகிட்டேன்... உன் வீட்டுல்ல ரெண்டு நாள் சாப்பிட்டுட்டேன்டா அந்த காரணத்துக்காக இத்தோட நிறுத்திக்கிறேன்...." என் சட்டையை விட்டுக் கையை எடுத்தான். சோழன் கண்களில் ஆத்திரம்...கோபம் ..வெறி... எரிச்சல்.. எல்லாம் சேர்ந்த ஒரு வலி தெரிந்தது..

"டேய் குமாரு நல்லாயிருடா.. ஊர் பாசம் உனக்கும் இல்லாம போயிருச்சு இல்ல... இந்த மெட்ராஸ்காரனோடச் சேந்து நீயும் என்னை ஓட்டுற இல்ல.....இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சகவாசமும் இல்லடா.... மயிராப் போச்சு போங்கடா..." சோழன் கால்கள் தள்ளாட நடந்து குட்டிச் சுவரைத் தாண்டி நடந்துப் போனான்.

அதன் பின் யாரும் அங்கு எதுவும் பேசவில்லை.. குட்டிச் சுவரில் வெகு நேரம் வரை அப்படியே அமர்ந்து விட்டு சொல்லிக்கொள்ளாமல் எல்லாரும் கலைந்துப் போனார்கள்.. எனக்கு வாய் விட்டு கத்த வேண்டும் போலிருந்தது....

டேய் மாப்பி.... சட்டையிலே கை வச்சிட்டியேடா.... பதில் சொல்லுறேன்டா.. மனசுக்குள்ளேச் சொன்னாலும்... மொத்தத்தில் உடைந்து தான் போயிருந்தேன் நானும்...

இன்னும் வரும்

Tuesday, October 02, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 3

முந்தையப் பகுதி

ஒரு வழியா புகாரியின் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கண்டு இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் குட்டிச்சுவரில் அடுத்த முக்கிய கூட்டம் நடந்தது. இம்முறை எந்தப் பிரச்சனையுமில்ல..இந்தச் சிறப்புக் கூட்டத்துக்குக் காரணம் கொண்டாட்டம்... கொண்டாட்டத்துக்கு கொண்டாட்டத்துக்கு அழைப்பு வச்சது நம்ம ஜமான்...

மொத்த ஜமாவும் ஒருத்தர் பை ஒருத்தரா குட்டிச்சுவரில் ஆஜராக ஆரம்பித்தோம்.

"மும்பை எக்ஸ்பிரஸ் போயாச்சா?" சோழன் ஆர்வமாய் கேட்டான்..

"இன்னிக்கு அரை அவர் லேட் மாப்பி" குமார் பதில் சொன்னான்.

"பீச் பாசஞ்சர் போயிருச்சா?" சோழனின் அடுத்தக் கேள்வி.

"இல்லடீ மாப்பி"

"அந்த குட்ஸ் வண்டி எல்லாம் கடந்துருச்சா?"

"அதெல்லாம் எப்பவோ போயிருச்சுடா மாப்பூ"

"ஜெட் ஏர்வேஸ் டைம் இல்ல இப்போ"

"ஆமா ஆமா" குமார் அதிகப் பட்ச ஆர்வத்தோடு பதில் சொன்னான்.

"ஜெட் ஏர் வேஸ் பிளைட் இன்னிக்கு கேன்சலப்பா... " மணி பைக்கை நிறுத்தி விட்டு வந்தான்.

"ஏன்?" எல்லோரும் ஒரே நேரத்தில் ஏக ஆர்வத்தில் அவனைப் பார்த்துக் கேட்டோம்.

"பைலட் பிளேனைக் கடத்திகிட்டுப் போயிட்டாராம்.. பயணிகள் வேற பிளேன் பார்த்துக்கோங்கன்னு சொல்லச் சொன்னார்" மணி சிரிச்சுகிட்டேச் சொன்னான்.

குழப்பம் வேணாம்.. இந்த மும்பை எக்ஸ்பிரஸ், பீச் பாசஞ்சர், குட்ஸ் வண்டி, ஜெட் ஏர்வேஸ் எல்லாம் எங்களுக்காகவே(??!!!) மாலை நேரங்களில் எங்கள் குட்டிச் சுவர் பக்கமாய் நடக்கும் அல்ட்ரா மாடர்ன் அழகு தேவதைகளுக்கும் அழகு தேவதைகளாய் தங்களை நினைத்துக் கொள்பவர்களுக்கும் நாங்கள் சூட்டி அழைக்கும் பட்டங்கள்.

முக்கியமா அந்த ஜெட் ஏர்வேஸ் தேவதை இருந்தாளே.. அவளுக்கு வயசு முப்பதுக்குள்ளே இருக்கணும்.. பஞ்சாப் தேசத்து கோதுமையில் என்னவெல்லாம் ஊட்டச்சத்து இருக்குன்னு எங்களை ஆராய்ச்சியே பண்ண வச்ச அழகு அவ... சும்மா அரேபியன் குதிரை மாதிரி அவ டக் டக் டக்ன்னு நடக்குற பாணி இருக்கே.. எங்க மொத்த ஜமாவும் அப்படியே கிறங்கிப் போயிருவோம்... மணி தான் அவளைப் பத்திய மொத்த விவரங்களையும் விசாரித்தான்...

ஜெட் ஏர்வேஸில் வேலை..செம சம்பளம்.. இன்னும் கல்யாணம் ஆகல்ல... பொண்ணு தண்ணி தம்முன்னு செம ஷோஷியல்... ஒரே ஒரு பாய் பிரண்ட் பைலட்டாம்... மணி இருந்த பிளாட்டில் அடுத்த பிளாக்கில் தான் அவளும் குடியிருந்தாள். மணி பாதி உண்மையும் மீதி வன்மையாகவும் அவளைப் பற்றி எடுத்து விடும் கதைகளுக்காகவே மணிக்கு எங்க ஜமாவில் தனி மரியாதை உருவாகி வந்தது.

"டேய் அப்போ இன்னிக்கு பிளைட்டும் போச்சா.. பார்ட்டின்னு வரச்சொல்லிட்டு பயபுள்ள ஆளை இன்னும் காணும்" கவுரி பேசினான்.

"அவன் சொன்னான்னு சொல்லித் தான் இன்னிக்கு புராஜக்ட்க்குக் கூட பங்க் அடிச்சுட்டு வந்துருக்கோம்.." சபரி சொன்னான்.

நேரம் ஆறரையைக் கடந்தது... லேசான இருட்டோடு மழை மேகமும் வானில் சூழத் தொடங்கியது.

"என்னாத்துக்கு பார்ட்டி எதுக்கு பார்ட்டின்னு கேக்குற பழக்கமே நம்ம வெ.ஆ. சங்கத்துக்கே கிடையாதே...ஓசியிலே மோர் ஊத்துறாங்கன்னு சொன்னாலே ஓம்போது கிலோ மீட்டர் கால் வலிக்க நடந்தேப் போய் லிட்டர் கணக்குல்ல குடிச்சுத் தீக்கறவங்க நாம.. பய பீர் ஊத்துறேன் வாங்கன்னு கூப்பிட்டு விட்டா ஏன் எதுக்குன்னு கேக்க முடியுமா?" பழம் பெருமையைப் பேசினான் மணி.

ஜமான் வரக் காத்திருந்தக் கேப்பில் சிகரெட்கள் புகைந்தன... எங்களைக் கடந்த அம்சமான அழகுகளின் காந்த சக்தியில் அவ்வப்போது ஈர்க்கப்பட்டு பார்வைகளை சிதற விட்டு இதயங்களைப் பதற விட்டு குட்டிச்சுவரில் நகராமல் அமர்ந்திருந்தோம்.

ஏழு மணி வாக்கில் திருநாவின் ஆம்னி வேன் சரட்டென வந்து குட்டிச்சுவர் முன்னால் பிரேக் அடித்தது... கதவைத் திறந்து ஜமான் பின் சீட்டில் இருந்து அந்த இருட்டிலும் அசத்தலானக் கருப்பு கண்ணாடிப் போட்டுக் கிட்டு இறங்கினான்...

"ஹாய் சீனியர்ஸ் அன்ட் ஹாய் மாப்பிஸ் " ஜமான் பயங்கர துள்ளலோடு குட்டிச்சுவரில் ஏறி உட்கார்ந்தான்.

திருநா ஆம்னியை ஓரம் கட்டிவிட்டு பின்னாலே வந்துச் சேர்ந்தான்..

"டுடே அ யாம் வெரி வெரி ஹேப்பி மாப்பிஸ்.." ஜமான் காற்றில் கைகளைச் சுழல விட்டு செம எமோஷனலாப் பேசினான்.

"எருமை மாடு கூலிங் கிளாஸ் போட்டு டிஸ்கவரில்ல இது வரைக்கு எதாவது படம் காட்டியிருக்கானா?" முஸ்தபா என்னிடம் கேட்டான்.

"இல்லய்யா" இது என் பதில்.

"இருங்க சீனியர்..இந்த எருமை மாடு இன்னிக்கு பண்ற சலம்பல் மொத்தத்தையும் இந்த கேமிராவில்ல கவர் பண்ணி மனித உருவில் ஒரு எருமையின் அட்டகாசங்கள்ன்னு டிஸ்கவரிக்கு வித்து டாலர் பார்க்கலாம்" முஸ்தபா கையோடு இருந்த சிங்கப்பூர் டிஜியை ஆன் செயதான்.

"முஸ்தபா இங்கே என்னய்யா நடக்குது?"

"சீனியர் கலர் மீன் ஒண்ணு நம்ம குளத்து ஓரமா நின்னு குட்டையைக் கலக்குன எருமை மாடு ஒண்ணைப் பார்த்து கண் அடிச்சுருச்சாம்.. அதான் நடந்துருக்கு" முஸ்தபா பூடகமாகவே பேசினான். கேமிராவில் அவன் தீவிரமானான்.

"சீனியர்ஸ் அன்ட் மை பேட்ச் மாப்பீஸ்... இன்னிக்கு டுடே.. ஷாலினி என் கூட லஞ்ச் சாப்பிட்டா...அவ வீட்டுல்ல இருந்து கொண்டு வந்த எலுமிச்ச சாதத்தை ஒரு தட்டுல்ல போட்டு எனக்குச் சாப்பிடக் கொடுத்தா.. நானும் அவளும் ஒண்ணாச் சாப்பிட்டோம்"

யூ நோ ஐயாம் வெரி ஹேப்பி..." ஜமான் கண்ணாடியைக் கழட்டாமலே ஆகாயம் பார்த்தான். ஆகாயம் ஏற்கனவே இருட்டிப் போயிருந்தது...

முஸ்தபா அந்தக் கணத்தைக் கிட்டத்தட்ட பி.சி.சிரிராமாவே மாறி கேமிராவில் அடைத்துக்கொண்டிருந்தான்.

"ஒரு எலுமிச்ச சாதம் தந்ததுக்காடா இந்த பார்ட்டி" சபரி கேட்டான்.

"சீனியர்.. அது வெறும் சாதம் இல்ல...அதுல்ல என்ன எல்லாம் இருந்துச்சு தெரியுமா?"

"அடப் பாவி ட்ரீட்ன்னு கூப்பிட்டு அந்த மீந்துப் போன எலுமிச்சம் சாதத்தைப் பொட்டலம் கட்டிக் கொண்டாந்துட்டீயா..கொய்யாலே" கவுரி சங்கர் மெய்யாலுமே பதறி விட்டான்..

"மிச்சம் இருக்கு அதை நான் எனக்கு எடுத்து வச்சிருக்கேன்" தன் பாக்கெட்டைத் தடவினான் ஜமான்.அப்படியே ஒரு ஏகாந்த நிலைக்குப் போன மனநிலையில் காட்சியளித்தான் ஜமான்.

முஸ்தபா கேமிராவை நிறுத்திவிட்டு சரியா முகம் பக்கம் போய்.. ச்சூ....இந்தக் காக்காத் தொல்லைத் தாங்கல்லடா சாமி.. ச்சூ ச்சூ... என்று விரட்டி ஜமான் இன் தியான நிலையைக் கலைத்தான்.

"என்ன முஸ்தபா.. பாவம் பைய பிலீங்க்ஸா இருக்கான்..அதைப் போய் நக்கல் பண்ணிகிட்டு நல்லாவா இருக்கு" நான் ஜமானுக்கு பரிந்துப் பேச...

"அட என்ன சீனியர் நீங்க... பொதுவா.. சாப்பிடறதுக்கு முன்னாடி காக்காவுக்கு எல்லாம் ஒரு வாய் சோறு போடுவாங்க இல்ல.. அதை மாதிரி அந்தப் புள்ள இந்த காக்காவுக்கு கொஞ்சமாக் கொடுத்துருக்கும்.. இது அதுல்ல பாதியைத் தெரியாம பொட்டலம் போட்டு மடிச்சு வேற கொண்டாந்துருக்கு.. அதைப் போய் பிலீங்க்ன்னு தப்பா கணக்குப் பண்ணுறீங்களே"

"அட இல்லப்பா எப்படியோ...அவன் அந்தப் புள்ளையை விரும்புறான்... சின்னப் புள்ள மனசு நொந்துறப் போவுதுப்பா"

"அய்யோ சீனியர்...இது மாதிரி இவன் பார்ட்டி கொடுக்கறது இது எத்தனாவது தரம் தெரியுமா?"

"ஆமா சீனியர் போன ட்ரிப் ஜீன் ஸ் படம் ரீலிஸ் ஆனப்போ திருச்சியிலே மொத நாள் செகண்ட் ஷோ அதைப் பாத்துப்புட்டு என் மனசுக்கு ஏத்தப் பொண்ணு கிடைச்சுட்டான்னு ராத்திரி பீர் ஊத்தி பய பண்ண சலம்பல் இருக்கே..." கவுரி பிளாஷ் பேக் சொல்ல...

"அது மட்டுமா.. அங்கே பைனல் இயர்ல்ல.. காலேஜ் லெக்சரர் ஒண்ணைப் பார்த்து.. எதோ ஒரு நாள் அவங்க யதார்த்தமா.. ஜமான் யூ ஆர் வெரி அப்படின்னு சொல்ல.. இந்தப் பன்னி அதை வச்சுகிட்டு அன்னிக்கு ராத்திரி என் செயினை அடமானம் வச்சு பீர் ஊத்தினான்.. இதுல்ல வேடிக்கை என்னான்னா அந்த லெக்சரருக்கு கல்யாணம் ஆகி ரெண்டு கொழந்தங்க வேற இருக்கு"


"சீனியர்.. இது மனிதக் காதலே இல்லை....சீனியர்... சரி வாங்க நாம ஆரம்பிக்கலாம்.." கவுரி அழைப்பு விடுக்க.. மணி, சபரி, சோழன், முஸ்தபா, எல்லோரும் ஆம்னிக்குள் போனார்கள்.

குமாருக்கும் எனக்கும் ஆளுக்கொரு பெப்ஸி மற்றும் செவன் அப் பாட்டில்களை எடுத்துக் கொடுத்தான் திருநா.

"சீனியர்... அவங்கச் சொல்லுறதை எல்லாம் கேர் பண்ணாதீங்க... அப்போ அப்படி எல்லாம் நான் இருந்தது என்னவோ உண்மை தான்... ஆனா அது வேற... இப்போ எனக்கு வந்துருக்கது உண்மையானக் காதல்... ஷாலினியை நான் சீரியசா லவ் பண்ணுறேன்..." ஜமான் கண்களில் கனவு மிதக்கப் பேசினான்.

இதைக் கேட்டு திருநா அழ ஆரம்பித்தான்.. தேம்பி தேம்பி அழுதான்...

"என்னாச்சு?" நான் ஜமானைக் கேட்டேன்.

"அவன் ஒயின் ஷாப்ல்லே ஊத்திகிட்டான்...அவன் தண்ணி அடிச்சா அழ ஆரமபிச்சுடுவான்" ஜமான் சொன்னான்.

"ஆகா அருமையானா நட்பு மக்கா.. உன் சந்தோசத்தைப் பைய அங்கேயேக் கொண்டாட ஆரம்பிச்சுட்டானா?"

:"இல்ல அவன் துக்கத்தை அங்கேயே சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான் அதான் அவனுக்கு மட்டும் அங்கேயே பீர் ஊத்திட்டேன்"

இதைக் கேட்டு திருநா அழ ஆரம்பித்தான்.. தேம்பி தேம்பி அழுதான்...

"என்னாச்சு?" நான் ஜமானைக் கேட்டேன்.

"அவன் ஒயின் ஷாப்ல்லே ஊத்திகிட்டான்...அவன் தண்ணி அடிச்சா அழ ஆரமபிச்சுடுவான்" ஜமான் சொன்னான்.

"ஆகா அருமையானா நட்பு மக்கா.. உன் சந்தோசத்தைப் பைய அங்கேயேக் கொண்டாட ஆரம்பிச்சுட்டானா?"

:"இல்ல என் சந்தோசம் அவனுக்கு துக்கமாப் போயிருச்சு..."

"என்னச் சொல்லுற?"

"ஆமா அவனும் ஷாலினியை லவ் பண்ணுறான்.. நட்புக்கும் காதலுக்கு நடுவுல்ல அவன் ஊஞ்சல் ஆடுகிட்டு இருக்கான்..."

பெப்சியைத் திறக்கவும் அது பொங்கியது...அதை விட எனக்கும் குமாருக்கும் சிரிப்பு அதிகமாய் பொங்கியது.

வானத்தில் சூழ்ந்த மேகங்கள் பெரும் சீற்றமெடுத்து மழையைப் பொழிய ஆரம்பித்தது.. பீச்சிலிருந்தக் கூட்டம் மொத்தமும் கலைய ஆரம்பித்தது..

மொபைல் பாராக மாறிய ஆம்னியில் நம்ம மக்களின் அலம்பல் அல்லோலப்பட்டது...

"மாம்ஸ் பீச்சேக் காலியாவுது..கிளம்பலாம்ய்யா" ஜமான் குரல் கொடுக்க..

"என் மைக் லீக்குது நான் மொட்ட படியாது..." மணி குழற...

"ஒண்ணும் இல்ல.. மணியோட பைக் நிக்குதாமா அதை அவன் ஓட்ட முடியாதுன்னு சொல்லுறான்" அப்படின்னு மணியின் வாக்கியத்தை சபரி மொழிபெயர்த்தான்.

மொத்த ஜமாவும் வண்டிக்குள் மழைக்கு ஒதுங்க...நான் டிரைவ்ர் சீட்டில் உட்கார்ந்தேன்.. கொஞ்சம் மழை விட்டதும் மணி பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பலாம் என திட்டம்.. வாட்ச்சைப் பார்த்தேன் மணி ஓன்பதரையைத் தாண்டி விட்டது.. மழையோ குறைவதாய் தெரியவில்லை..

பத்து மணியை நெருங்கியது.. மழை பேயாட்டம் ஆடியது..

வண்டிக்குள் பீரோட்டம்.... வண்டிக்கு வெளியே மழை நீரோட்டம் என நிலைமை ஒரு மாதிரி எக்குதப்பாப் போயிகிட்டு இருந்துச்சி... இடையிலே திருநா வேற சவுண்ட்டா அழ ஆரம்பிக்க..சொல் சிலம்பாட்டம் வேற தொடங்கிடுச்சு...

நடக்கிறது நடக்கட்டும் என நான் வண்டியைக் கிளப்ப முற்படுகையில்..

டேய் தேவ்.. என் மைக் என் மைக்... அப்படின்னு மணி கத்த ஆரம்பிச்சான்..

அது மட்டுமின்றி எதிரில் பிரகாசமான லைட் அடித்தப் படி மாநகர காவல் ரோந்து வண்டி வந்துக் கொண்டிருந்தது... பீச்சில் வேற யாரும் இல்லாத நிலையில் மழையில் நின்ற எங்கள் வண்டி அவர்களின் சந்தேகத்திற்கு இலக்கானதில் எந்த வியப்பும் இல்லை....

கொட்டும் மழையைத் தாண்டியும் குமாருக்கும் எனக்கும் வேர்த்தது...

புல் பீம்ல்ல ஹெட் லைட்டை வண்டி மீது செலுத்தியவாறு ரோந்து வண்டி எங்கள் பக்கம் வந்து நின்றது..

சரியாக அதே நேரத்தில் முழு மப்பில் இருந்த திருநா பெரும் குரல் எடுத்து

"பிளடி இங்கே ஒருத்தன் பீலிங் தெரியாம எவன்டா அவன் வெளியே இருந்து லைட் அடிச்சு டார்ச்சர் பண்றது.. பிளடி WHO IS THAT DISTURBANCE I SAY..." அப்படின்னான்.

ஆகா... கிரவுண்ட்டை லெவல் பண்ணிட்டான் பைய... இனி இன்ஸ்பெக்டர் வந்து மொசைக் போடணும் அது தான் பாக்கி" அப்படின்னு பிரமைப் பிடிச்சுப் போய் சீட்டில் அமர்ந்து வினாடிகளை நகர்த்தினேன்...

குட்டிச் சுவர் இன்னும் வரும்...

Tuesday, September 25, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 2

வாரம் ஒரு பாகம் வெளியிட தான் விருப்பம் கொண்டிருந்தேன்.. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இரண்டாம் பாகம் வெளியிடுவது தள்ளி போய் விட்டது.. பொறுத்தருள்க... இனி அடுத்த வாரம் குட்டிச் சுவரின் வரலாறு சரியான் தருணத்தில் வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

சென்ற பாகம் படிக்க...

இனி...

உயர் ரக நாய் குட்டியைக் கையில் பிடித்த படி பாவாடைப் போட்டச் சுட்டிச் சிறுமி ஒருத்தி அந்தப் பக்கமாய் போனாள். வழக்கமாய் எங்கள் குட்டிச் சுவர் கச்சேரி நடக்கும் நேரத்தில் அந்த நாய் அங்கு வருவது வழக்கம் ஆனால் கூட்டி வரும் ஆள் தான் மாறியிருந்தது...

பஞ்சாயத்து தீவிரத்தில் நாங்கள் நாயை அன்று அவ்வளவாய் கவனிக்கவில்லை.. ஆளுக்காளு புகாரியின் மீது வந்த புகார் பத்திரிக்கையிலே ஆழ்ந்திருந்தோம்.

ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்ச விவரத்தைப் பரிமாறிகிட்டு இருந்தோம்.

"ஹாய் அங்கிள்.. எப்படி இருக்கீங்க? ஏன் இரண்டு வாரமா வீட்டுக்கு வர்றல்ல.. இந்த வாரம் வாங்க கேரம் போர்ட் ஆடலாம்.. லாஸ்ட் டைம் மாதிரி இல்லாம இந்த டைம் அக்காவை ஜெயிக்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்" அந்தச் சுட்டிப் பொண்ணு சுறுசுறுன்னு பேசிகிட்டேப் போக.. பஞ்சாயத்தைப் பஞ்சராக்கிட்டு மொத்தப் பேரும் அந்தப் பொண்ணு பேச்சுக் கொடுத்துட்டு இருந்த 'அங்கிளை' ஆங்கிள் ஆங்கிளாகக் கிழித்தெறியும் கோபத்தோடு பார்த்தோம்...

"பை அங்கிள்.. அக்காவுக்கு இன்னிக்கு எதோ ஸ்பெஷல் கிளாஸ்.,..அதான் பப்புவை நான் வாக்கிங் கூட்டிட்டு வந்தேன்.. சீக்கிரம் போகணும் வர்றேன்.." அந்தச் சுட்டிப் பொண்ணு கடந்துப் போனாள்.

"இது என்னாஆஆது" முஸ்தபா கேட்டான்.

ஜமான் ஒரு படி மேல போய் புகாரி கழுத்தைப் பிடித்தான்.."இப்போ நீ வாயைத் திறக்கல்லன்னு வை ... எப்பவும் திறக்க வேணாம்...ஒர்ரே ஊர்காரன்ங்கற பாவத்துக்கு உன்னோட நக்கீரன் ஜூவின்னு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வச்சுருவப் போலிருக்கு..."

"இது ஷாலினிவோட தங்கச்சிடா" ஜமான் கழுத்தில் இருந்து கையை எடுத்தான். அதே வேகத்தில் அவனை மண்ணில் தள்ளி மேல ஏறி உட்கார்ந்தான்.

"என் கிளாஸ் மேட் ஷாலினி வீட்டுக்கு நானே போனது இல்ல... நீ என் ரூம் மேட் நான் கொடுத்த ஒத்த இன்ட்ரோ வச்சுகிட்டு அவ வீட்டுக்குப் போய் அவளோடு கேரம் போர்ட் எல்லாம் விளையாடி இருக்கே... அவ நாய் கூட எல்லாம் ப்ரண்ட் பிடிச்சிருக்கே... அவ தங்கச்சி உன்னிய அங்கிள்ன்னு கூப்பிடற அளவுக்கு பில்டப் பண்ணியிருக்க... ஆனா என் கிட்ட எதையுமே சொல்லல்ல... துரோகி.. உன்னக் கொன்னாலும் தப்பில்லடா.." அக்கம் பக்கம் ஆயுதம் தேடினான் ஜமான்.

அதற்குள் உஷாரன நாங்கள் ஓடி விழுந்து அவர்களைப் பிரித்தோம்..ஜமானுக்கு ஆத்திரம் தீரவில்லை.

"மாப்பூ இப்போ இருக்க பிரச்சனைய பாப்போம் அப்புறம் உங்க பஞ்சாயத்துக்கு வருவோம்..." முஸ்தபா சமாதானம் பேசினான்.

"மாப்பி... இந்த வெளக்கெண்ண அப்படியே அடிப்பட்டு சாகட்டும்.. இவன் எனக்கு நண்பன் இல்ல.. துரோகி.. நான் அந்த ஷாலினியை சைட் அடிக்கிறேன்.. மனசாரக் காதலிக்கிறேன்ன்னு எத்தன தடவைச் சொல்லியிருப்பேன் ஆனா அதையும் மீறி இவன் ..." ஜமான் என் பிடியில் இருந்து திமிரப் பார்த்தான். நான் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். ஜமான் கண் கலங்கிவிட்டது.. எங்களுக்கு எல்லாம் சிரிப்பு பொங்கியது.. ஆனால் கட்டுப்ப்டுத்திகிட்டோம்.

குமார் ஜமானைக் கூட்டிகிட்டு ஓரமாய் போனான்.

குட்டிச் சுவரில் குத்த வைச்சு உட்கார்ந்து இருந்த புகாரி எதற்கும் அது வரை வாய் திறக்கவில்லை. விசாரித்து விசாரித்துக் களைத்துப் போனான் முஸ்தபா.

குட்டிச்சுவர் கச்சேரிகளில் பங்கேற்கும் மாமணிகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.. கொஞ்சம் லேட்டு தான்.. என்னப் பண்றது பிரச்சனைத் தீவிரத்தில் அறிமுகம் தாமதம் ஆகிருச்சு.

பிரச்சனையின் நாயகன் புகாரி, பஞ்சாயத்து தலை முஸ்தபா, ஜமான் இவங்களை எல்லாம் நீங்க ஏற்கனவே சந்திச்சுட்டீங்க... இவங்க எல்லாரும் ஒரே வீட்டை வாடகைப் பிடித்து வெவ்வேறு கல்லூரிகளில் மேலாண்மை துறையில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். இதில் ஜமான் எங்கள் கல்லூரி மாணவன். இவர்கள் தவிர்த்து இன்னும் சந்திக்கவிருக்கும் நண்பர்கள் கவுரிசங்கர் (எ) கவுரி, திருநா (எ) திருநாவுக்கரசு, ரிச்சி.
இது தவிர சீனியர் கோஷ்ட்டியில் அடியேன், குமார் (எ) முத்துக்குமாரமூர்த்தி, சோழன் (எ) ராஜராஜன், மணி, சபரி.

"எலய்ய்ய்.. இந்தாப் பார் இதானே உங்க வாப்பா நம்பர்.. உங்க மயனுக்கு வர்ற வாரம் நிக்காஹா ஏற்பாடாகியிருக்கு குடும்பத்தோடு கிளம்பி வாங்கன்னு போன் பண்ணிச் சொல்லிட்டு அடுத்தப் பொழப்பப் பாக்கப் போறேன்.. அதை விட்டுட்டு சும்மா என்ன பணண? எப்போ பண்ண? அப்படின்னு இவனைப் போய் கேட்டுகிட்டு...." சோழன் பத்து எண்களையும் விரல் பதித்து அழுத்த.. புகாரி தலையைத் தூக்கினான்.

அங்கு ரிங் போவதை ஸ்பீக்கரில் போட்டான் சோழன். புகாரி வேகமாய் வந்து போனைப் பிடுங்கி நிறுத்தினான்.

எல்லாரும் அவனையே பார்த்துக்கிட்டு இருந்தோம். விறைப்பாய் நின்ன புகாரி அப்படியே உடைஞ்சு அழ ஆரம்பிச்சான்.. தேம்பி தேம்பி அழுதான்.. அழுகை நிற்கவே இல்லை. தள்ளிக் கோபம் கொப்பளிக்க நின்ன ஜமான் கூட கொஞ்சம் உருகிப் போயிட்டான். புகாரி அழுதப் படியே சொன்னான்.

"ஒரே ஒரு வாட்டி...."

"ஓரே ஒரு வாட்டி.." ஜூனியர்கள் கோரசாக ரீப்பிட்டு அடித்து ஆர்வம் மேலிட நின்றனர்.

"ஒரே ஒரு வாட்டி அவ கிட்ட கிஸ் பண்ணலாமான்னு கேட்டேன்.."

"அப்புறம்..." ஜூனியர்களோடு எங்கள் ஆவலும் கூடியது.

"அவளும் சரின்னு சொன்னா"

"அடப் பாவி... என்னாச்சு" திருநா வாயைப் பொளந்தான்.

"சனிக்கிழமை அவங்க வீட்டுக்கு வரச் சொன்னா.."

" சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ் இது தானா?" ஜமான் கடுப்பாய் கேட்டான்.

"சனிக்கிழமை கிளம்பி அவங்க வீட்டுக்குப் போனேன்.."

குட்டிச் சுவரில் கால் மடக்கி அமர்ந்தோம். குமார் என் தோள் மீது இருகைகளை வைத்து தீவிரமாய் கதைக் கேட்கும் போஸில் இருந்தான். கவுரி கையில் சிகரெட் புகைந்து முடிந்ததைக் கூடக் கவனிக்காமல் அடுத்த நிகழ்வு என்ன என்பதில் ஆர்வம் காட்டினான். மணி பொளந்த வாயில் நாலு ஈ உள்ளே போயிட்டு வெளியே வந்தது தெரியாமல் புகாரி அடுத்து என்னச் சொல்லப் போகிறான் என்பதிலே கவனமாய் இருந்தான்.

வழக்கமாய் வாக்கிங் போகும் சிக் ஆன்டிகள் மீது கூட அன்று யார் கவனமும் செல்லவில்லை. குறிப்பாய் திருநா கவனம் போகவில்லை அது தான் பெரும் ஆச்சரியம்.

"அன்னிக்கு அவ வீட்டுல்ல தனியாத் தான் இருந்தா.. கேரளா ஸ்டைல் புடவைக் கட்டிகிட்டு தலையிலே மல்லிகைப் பூவெல்லாம் வச்சுக்கிட்டு இருந்தா.. எனக்கு ஒரு மாதிரியா ஆகிப் போச்சு"

"டேய் பாத்தவுடனே காஞ்ச மாடு கம்பம் காட்டுக்குள்ளே பாஞ்ச மாதிரி பாஞ்சிட்டியாடா" திருநா ஆர்வம் அடங்காமல் கேட்டான்.

அவனை முறைத்த புகாரி.. மேலும் தொடர்ந்தான்.

"அவ ரூமுக்குக் கூட்டிட்டுப் போனா...அவ வரைஞ்சப் படமெல்லாம் காட்டுனா... என்ன அழகு தெரியுமா?"

"த்தூ.. ஒரு பொண்ணோடு ரூமுக்கு தனியாப் போய் படமாப் பார்த்த நீயு... படம் போட்டிருக்கணுமே" கவுரி அங்கலாயத்தான். முஸ்தபா முகம் சுளித்தான். குமார் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

"அப்புறம்.. கேரளா நேந்திரம் சிப்ஸ் கொடுத்தா... நல்லா இருந்துச்சு"

"அடச்சே தின்னி பண்டாரம்.. உனக்கெல்லாம் வாய்ப்பு அமையுது பார்..." திருநா பொங்கினான்.

"எல்லாம் சரி.. அது தான் மாலா வீட்டுல்ல அவ ரூம் வரைக்கும் போயிருக்கே இல்ல.. அப்புறம் எதுக்குடா நீ ஷாலினி வீட்டுக்கும் போனே..." ஜமான் இடையில் இப்படி கேட்டதும் அடக்க முடியாமல் எல்லாரும் சிரிச்சுட்டோம்...

"அட ஜமான் செல்லம்.. இருடா... இந்தக் கதையை முதல்ல முழுசாக் கேப்போம் அப்புறம் உன் விசயத்துக்கு ஒரு நல்ல வழி பாப்போம்... " குமார் ஜமானை சமாதானப்படுத்தினான்.

"புகாரி நீ கன்டினீயு பண்ணு" மணி சொன்னான்.

"சிப்ஸ் சாப்பிடப் பிறகு காபி குடிச்சோம்.. அவக் கையாலப் போட்டக் காபி..."

திருநாவும் , கவுரியும் நறநறவென பல் கடித்தனர்.

"கொஞ்ச நேரம் என் பக்கத்துல்ல உக்காந்து பேசிகிட்டு இருந்தா.. நான் அவ உதட்டையேப் பார்த்துகிட்டு இருந்தேன்..."

"ஆமா ஆமா செம உதடு அவளுக்கு " கவுரியும் திருநாவும் ஆமோதிப்பாய் தலையசத்தனர்.

புகாரி லேசாய் கோபத்தில் முகம் சிவந்தாலும் அதைக் காட்டிக்காமல்.. மேலே தொடர்ந்தான்..

"அவ என் கிட்ட உட்காந்தாளா... எனக்கு ஒரே சூடாப் போச்சு... பேச்சே வர்றல்ல.. அவளும் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிச்சா"

"ஆகா மச்சான் அப்புறம்"

"வா மேலே மாடிக்குப் போலாம் இன்னிக்கு நிலா முழுசா அழகா இருக்குன்னு சொன்னா"

"ம்ம்ம்ம்ம் அடி ஆத்தி ரொமான்ஸ் டோ..." திருநா முழங்கினான்.

"சின்ன மாடிப் படி அவ முன்னாடி ஏற... நான் பின்னாடி போனேன்.. மல்லிகை வாசம் வேற.."

"அய்யோ அய்யோ" திருநாவும் கவுரியும் புகாரியின் காலடியில் உட்கார்ந்தார்கள்.

நிலா காயுது பாட்டை மணி ஹம்மிங் பண்ண.. திருநாவும் கவுரியும் கோரஸில் இணைந்தனர்.

"அங்கே மாடியிலே.. நானும் தைரியம் வரவழைச்சுகிட்டு..."

கோரசை மக்கள் நிறுத்திவிட்டு புகாரியைப் பார்த்தனர்.

"அங்கே மாடியிலே அவ அப்பா..அம்மா...மூணு தங்கச்சிங்க எல்லாரும் இருந்தாங்க...நான் ஷாக் ஆயிட்டேன்"

"நாங்களும் தான்டா நாசமாப் போனவனே.. கீழே ரூம்ல்லயே கிடைச்ச வாய்ப்பை வாயைப் பொளந்துகிட்டு விட்டுட்டே" கவுரி சபித்தான்.

"அவங்க வீட்டுல்ல எல்லாருக்கும் என்னை இன்ட்ரோ பண்ணி வச்சா.. தஞ்சாவூர் மில் ஓனர் பையன் அப்படின்னு.. என்னோட பெஸ்ட் பிரண்ட்ன்னு சொன்னா.. அப்புறம் அவங்க வீட்டுல்ல நைட் சாப்பிட்டேன்..கேரளா சமையல்.. தேங்கா தூக்கலா இருந்துச்சி...எல்லாம் வெஜ் ஐட்ட்ம் தான்..."

"த்தூ த்தூ... டேய் சோத்துப் பண்டாரம்... போதும்டா" கவுரி கொந்தளித்தான்.

"அப்புறம் பேசிட்டு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு நான் கிளம்புனேன்,,, கிளம்பும் போது..."

"மச்சி குட் நைட் கிஸ்ஸிங்கா" திருநா மீண்டும் ஆர்வம் பொங்கக் கேட்டான்.

"கிளம்பும் போது அவளாத் தான் கேட்டா முத்தம் கேட்டியே வேணாமான்னு..."

"அட்ரா சக்க" பொண்ணுங்க எல்லாம் பாஸ்ட்டா இருக்காளுகப்பா

"நானும் ஆர்வமா அவளைப் பார்த்தேன்.. அவ என் கையைப் பிடிச்சு... மெதுவா அதுல்ல ஒரு முத்தம் கொடுத்துட்டு பை சொல்லிட்டா"

"மாப்பி அவ உன்னை போப் ஆண்டவர் ரேஞ்சுக்கு உயர்த்திட்டாடா" திருநா சொல்ல, எல்லாருக்கும் சிரிப்பு பீறிட்டது...குட்டிச்சுவரில் எழுந்து நின்று அடக்கமாட்டாமல் சிரித்தோம்.

"அது தவிர நான் அவளை ஒண்ணும் செய்யல்லடா"

புகாரியின் கடைசி வாக்கியம் எல்லாருக்கும் கேட்கவில்லை. கேட்ட நான், முஸ்தபா, சோழன் மூன்று பேரும் யோசனையில் ஆழ்ந்தோம்...

குட்டிச் சுவரின் வரலாறு இன்னும் வரும்

Monday, September 03, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 1

"டேய் புகாரி... அந்தப் பொண்ணை என்னப் பண்ணச் சொல்லித் தொலைடா" சுத்தி நின்னு ஒரு பத்து பேர் கேக்குறாங்க...ம்ஹூம் மூணு கோழியை முழுசா முழுங்கிட்டு முட்டையையும் ஆப் பாயில் போட்டுத் திங்க அலையறவன் மாதிரி புகாரி முழிச்சானேத் தவிர பதில் சொல்லல்ல.

நம்ம பயல்வ ரெண்டு பேர் பைக்கைச் சாத்திட்டு வேகமா இறங்கி வர்றான்வ.. கண்ணுல்ல கொல வெறி சிவப்பாத் திரண்டு நிக்குது.. மத்தவங்க எல்லாம் மிரண்டு போயிட்டோம். ஆனா நம்ம புகாரி அசரவே இல்ல.. வானத்தைப் பாத்துகிட்டு மோவாக் கட்டையத் தேயச்சுகிட்டு பரிதாபமா முழிச்சானேத் தவிர பேசவே இல்ல..

"இவனை எல்லாம் வெட்டிரணும் மாப்ளே... பிளேடு இருந்தாக் கூட போதும் கொடுங்கடா"ன்னு கோவமாப் பாஞ்சான் ஜமான்.

நம்ம பைய எதுக்கும் அசரல்லயே..

"இந்தா இங்கேப் பார் ஊர் விட்டு ஊர் வந்து இருக்கது படிக்கத் தான்.. பல்லக்குல்ல ஏறி மாப்பிள்ளையாப் போறதுக்கு இல்ல.. உங்க வாப்பா எங்களையே நம்பித் தான்டா உன்னைய மெட்ராஸ்க்கு பஸ் ஏத்துனார்.. உண்மையைச் சொல்லிரு இல்ல மகனே உனக்கு இங்கிட்டே சங்குத் தான்.." அப்படின்னு முஸ்தபா ஒரேடியாச் சிரியஸ் பேச்சு பேசுனான்.

"செல்லம்.. சொல்லிருடா.."விஜய் கொஞ்சி பார்த்தான்.

"மாப்பூடேய் உன்னிய வச்சு எங்க அம்புட்டு பேத்துக்கும் ஆப்படிச்சுருவாங்கடா"
மூர்த்தி கெஞ்சிப் பார்த்தான்.

பைய எதுக்குமே மசியல்ல.. வாயிலே சிப் வைச்சுத் தைச்ச மாதிரியே இருந்தான்.. நேரம் ஆக ஆக குட்டைச் சுவரின் மீது பிரச்சனையின் பாரம் ஏற ஆரம்பித்தது... சிகரெட்கள் புகைந்து தீர்ந்தன..

முதல்ல எங்க குட்டிச்சுவரை மீட் பண்ணுங்க...

திருவான்மியூர் பீச்ல்ல இருக்கார் நம்ம கதையின் நாயகன்.. 2001ல்ல நடந்த விஷயங்களின் விரிவானக் கொசுவர்த்தி சுத்தல் தான் இந்தக் குட்டிச் சுவரின் வரலாறு..இது மொத்தமும் கதையல்ல... நிஜம் .. வழக்கம் போல கொஞ்சம் ஏத்தம் இறக்கம் இருக்கும்..

இப்போ நம்ம புகாரியின் பிரச்சனைக்கு வருவோம்..

புகாரி மற்றும் புகாரியின் பிரச்சனைகளை அலசிக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அனைவரும் டெல்டா மாவட்டப் பகுதியில் இருந்து நம்ம சென்னைக்கு உயர் கல்வி கச்சேரி பண்ண வந்திருந்தாங்க.. அதாவது என் கல்லூரியில் எனக்கு ஜூனியர் மக்கள்.

நானும் நம்ம பங்காளிகளும் அப்போத் தான் புராஜக்ட் செய்யிறோம்ன்னு வெட்டி வாழ்க்கையின் செழுமையான பொழுதுகளை அந்தக் குட்டிச்சுவரில் கழித்துக் கொண்டிருந்தோம்.. பொழுது சாய ஆரம்பிச்சாப் போதும் அங்கிட்டு போய் மாநாடு போடறது தான் நம்ம பொழப்பு.... சரி அந்த பெருமைமிக்க மாநாடுகள் பத்தி போகப் போக இன்னும் விரிவாச் சொல்லுறேன் இப்போ நமக்குப் பத்தி எரியற பிரச்சனை புகாரியின் பிராப்ளம் தான்.

புகாரி நல்ல வெள்ளைத் தோலுகாரன்... இந்தா நம்ம சல்மான் கான், ஆமீர் கான்,
ஷாருக்கான் மாதிரி தென்னிந்தியாவுக்கு இவன் ஒரு அழகாபுரி அழகேசன்...(அப்படின்னு அவனுக்கு ஒரு நினைப்பு... ஜூனியர் மக்களும் அதை நல்லாவே ஏத்தி பில் டப்புஐ நல்லாவே மெயின்டெயின் பண்ணுனாங்க) கானை எல்லாம் அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ தெரியல்ல ஆனாப் பயலுக்கு காதல் சேட்டை ஜாஸ்தி...

பொண்ணுன்னுச் சொல்லி விளக்கு கம்பத்துக்கு மிடியை மாட்டி விட்டாக் கூட அது பக்கமா போய் நின்னுகிட்டு .. ஹேய் யூ பூட்டிபூல்... யுவர் மம்மி பூட்டிபூல்.. யுவர் பாட்டி வெரி பூட்டி பூல்.. யுவர் டேடி வெரி வெரி பூட்டிபூல்ன்னு டோட்டல் பேமிலியையும் கவர் பண்ணிட்டு வந்துருவான்..

இப்படி ஒரு பட்டாம்பூச்சியா பறந்து திரிஞ்ச அவன் வாழ்க்கையிலே விதி விதவிதமாக்
கெட் அப் போட்டு விளையாண்டதால தான் அன்னிக்கு எங்க குட்டிச் சுவர் சொம்பும் ஆலமரமும் இல்லாத ஒரு பஞ்சாயத்து சபையா உருமாற வேண்டியதாப் போச்சு

விதி வேற என்னக் கெட்டப்புல்ல வந்து கும்ம்பி அடிக்கும் எல்லாம் ஜிகிடி வேஷம் தான் போட்டுகிட்டு புறப்பட்டு வந்து பொரட்டிப் போட்டுச்சு... மாலான்னு ஒரு பொண்ணு...அவன் காலேஜ்.. பஸ்ல்ல பாத்துருக்கான்...பாக்குற எல்லாப் பொண்ணையும் பிட்டிபூல் சொல்லுறவன் நிஜமான பியூட்டியைப் பார்த்தா என்னச் சொல்லுவான்.. எதையும் யோசிக்காம சொல்லிட்டான்...

ஐ லவ் யூ.....

அட்ரா சக்க அட்ரா சக்க..ன்னு ஆளுக்காளு அவனை உசுப்பேத்தி அவன் செலவுல்ல இதே குட்டிச்சுவர்ல்ல அவன் ஐ லவ் யூ சொன்னதுக்கு பார்ட்டி கொண்டாடி பசங்க எல்லாம் தீர்த்தம் ஆடியது ஒரு பொன்மாலைப் பொழுது... அந்தப் பொன்மாலைப் பொழுதில் நல்ல வேளை சீனியர் கூட்டம் மொத்தமும் ஆப்சென்ட். அன்னிக்கு நடந்தக் கிளைக் கதையை அடுத்தாப்புல்ல சொல்லும் போது சீனியர் மொத்தமும் ஆப்செண்ட் ஆனதுக்கு நான் ஏன் சந்தோசப்பட்டேன்ன்னு உங்களுக்கு விளங்கும்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவன் காதல் கொடியாய் செடியாய் வளர்ந்தது...அந்தக் காதலுக்கு பாரியாய் இருந்து நம்ம ஜூனியர்கள் காரை தேரனேக் கொடுத்துக் காதல் பவனிக்கு உதவினார்கள்..

சீனியர்களாகிய நாங்க கதைக் கேட்பதோடு சரி...நம்ம பய வாழட்டும்ன்னு நல்ல எண்ணத்திலே எட்ட நின்னு ஆசிர்வதிச்சுட்டு இருந்தோம்.

இந்த நிலைமையிலேத் தான் ஒரு நாள் அந்தச் செய்தி எங்கக் காதுக்கும் வந்துச்சு.. வாங்க தேவ் நீங்களும் பஞ்சாயத்துக்குன்னு கூப்பிட்டு அனுப்புனாங்க.. மறுக்க முடியுமா? போய் நின்னோம்..

விஷயம் இது தான் மாலாவோட அப்பா நம்ம ஆளை அவர் பொண்ணைச் ஒரு வாரத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிக்கோ இல்லன்னு என் பொண்ணூ செத்துப் போயிருவான்னு இன்னொரு ஜூனியரை நேராக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கார்... அதுவும் காலேஜ்க்குப் போய்..

நம்ம பசங்க பயலைக் கூப்பிட்டு என்னடா ஆச்சு.. எதுக்கு அவங்க அப்பன் காலேஜ் வந்து அப்படி பேசிட்டுப் போறார்... பொண்ணு வேற செத்துப் போறேன்னுச் சொல்லுதாம்.. டேய் மண்டையா சொல்லுடா எதாவது தப்பு கிப்பு பண்ணித் தொலைச்சிட்டியான்னு...விடிய விடிய உக்கார வைச்சி விசாரிச்சு இருக்கான்வ

விடிய விசாரணை முடிஞ்சதுல்ல ஆறு பாட்டில் பீர், பத்து அவிச்ச முட்டை, சிக்கன் சட் டிஷ்ன்னு விசாரணைச் செலவு அதிகமாய் போனது தான் மிச்சமாம்.

இனி சரிப்படாதுன்னு தான் குட்டிச் சுவருக்கு விசாரணையை மாத்திட்டான்வ.. எங்களையும் கூப்பிட்டனுப்பி ம்ம்ம்ம் இப்போ முதல் வரியைப் படிங்க...

எங்களுக்கும் பொறுமை எல்லைத் தாண்டி எக்ஸ்பிரஸ் வேகத்திலேப் போயிட்டு இருந்துச்சு... அப்புறம்...

குட்டிச் சுவரின் வரலாறு இன்னும் வரும்

Saturday, July 28, 2007

சின்னக்குளம் - தம்பி கதிரின் மடல்

சமீபத்தில் பக்கம் 78ல் பதிந்த தொடர் பற்றி நிறைய சந்தோஷம் தரும் கருத்துக்கள் வந்தன. அதில் கொஞ்சம் கூடுதல் சந்தோஷம் தரும் விதத்தில் நம்ம தம்பி கதிர் எழுதிய மின்மடல் அமைந்தது. அந்த சந்தோசத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் தம்பியின் அனுமதியோடு

அண்ணன் தேவ்,

தமிழ்மணத்துல தொடர் எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. எத்தனை பேர் இருந்தாலும் நேர்த்தியா சொன்னவங்கன்னு
பார்த்தால் அதிகம் தேறாது. ஒவ்வொரு பாகமா படிக்கறதுல விருப்பமே இல்லை எனக்கு அதனால்தான் தொடரே
படிப்பதில்லை. முதல் இரண்டு பகுதியை வெளியிடும்போதே படித்திருந்தாலும் அதற்கடுத்த வந்ததை படிக்காமல் விட்டு விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்பு மொத்தமாக ஏழு பாகங்களையும் ப்ரிண்ட் எடுத்து அறைக்கு கொண்டு போய்
படித்தேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அனுபவமா இருந்தது.

self narration மட்டும்தான் ஒரு படைப்பை அல்லது பழைய நினைவை முழுமையாக சொல்ல முடியும், வெறும் உரையாடல்கள் கொண்ட கதைகள் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. சின்னக்குளத்தில் நிறைய உரையாடல் இருந்தாலும் எதுவுமே சலிப்பை ஏற்படுத்தல. அங்கங்கே உங்களோட நகைச்சுவை உணர்வு பார்த்து ஆச்சரியப்பட்டேன். :)

வேலை முடிஞ்சு போய் டய்ர்டா பெட்ல உக்காந்து இந்த கதைய படிச்சிட்டு நிமிர்ந்து பார்த்தா முகத்துல ஒரு புத்துணர்ச்சி.
இதுதான் படைப்பாளியோட வெற்றி.

நாம் நிறைய கதைகள் படித்திருக்கலாம் ஆனால் படித்தவற்றில் பாதித்த ஏதோ ஒரு சிறுகதைதான் ஞாபகத்துக்கு வரும்.

ஒரு கதைய படித்து முடித்தபின் ஒரு சலனமோ, ஒரு தாக்கத்தயோ, ஒரு புன்னகையையோ விட்டு செல்ல வேணும்.

பதின்ம வயதில் எல்லாருக்கும் ஒரு நிறைவேறாத காதல் இருக்கும் அந்த காதல்தான் நம் வாழ்க்கையையே தீர்மானிக்கிற சக்தியாக கூட மாற வாய்ப்பிருக்கு. ஆனா அந்த காதலை யாருமே நகைச்சுவையா சொல்ல மாட்டாங்க, அதையும் இயல்பா
எடுத்து சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

நிறைய எழுதுங்க. நிறைவாக எழுதுங்க

அன்புடன்
தம்பி

Thursday, July 19, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 7 (இறுதி பாகம்)

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 6

கால்பந்தாட்ட மேட்ச்ல்ல முதல் பாதி முடியும் போது லேசா மழைத் தூற ஆரம்பிச்சது... மேகம் சும்மா கரு கருன்னு இருட்டிகிட்டு வந்துச்சு. மழைக்கெல்லாம் ஆட்டத்தை நிறுத்துற வழக்கம் கிடையாதுங்கறதால மழையை யாரும் பெரிசாக் கண்டுகிடல்ல..

ஆட்டத்தைப் பாக்க வந்தவங்கத் தான் ஒதுங்க இடம் தேடிகிட்டு இருந்தாங்க.. முதல் பாதி முழுக்க என்னைக் களத்தில் இறக்கல்ல.கரையில்ல இருந்து தான் மேட்ச்சைப் பாத்துகிட்டு இருந்தேன்..

பிரகாசபுரத்துகாரன்வ நல்லாவே ஆடுனான்வ.. முதல் பாதியில்ல பத்தாவது நிமிசம் நாங்க முதல் கோல் வாங்குனோம்.. அடுத்தக் கோல் நாப்பதாவ்து நிமிசம் வாங்குனோம்.. எங்கப் பயல்வளும் நல்லாத்தான் ஆடிட்டு இருந்தான்வ... ஆனா அவன்வ ஆட்டம் பேய்த் தனமால்லா இருந்துச்சி.. முதல் பாதி முடிய இரண்டு நிமிசம் இருக்கும் போது எட்வின் எங்க டீமுக்கு ஒரு கோல் போட்டது கொஞ்சம் உயிர் கொடுத்தாப்பல்ல இருந்துச்சி.. அந்த அடிப்பட்ட காலையும் வச்சுகிட்டு எட்வின் அட்டகாசமா ஆடுனாப்பல்ல. கோல் விழுந்தவுடனே விசில் அடிக்க வைச்சுட்டான் மனுசன்.. அவ்வளவு அழகாக் கோல் அடிச்சான்ய்யா.

ப்ரேக்ல்ல வந்து ஆளுக்கு ஆள் தண்ணியை எடுத்து தலையிலே கவுத்திகிட்டு உக்காரும் போது இஸ்ரா தான் ரேச்சல் மேட்ச் பார்க்க வந்திருப்பதைக் காட்டினான். குடைக்குள் மறைந்திருந்தாள். நான் இருந்தப் பக்கம் பார்ப்பதையேத் தவிர்த்தாள். நான் வைத்தக் கண் வாங்காமல் அவளையே வெறித்துப் பார்த்தேன்..

இஸ்ரா சிரித்தான்.

"எதுக்குல்லே சிரிக்கா.. இங்கே நான் என்ன உனக்கு ஷோவாக் காட்டுதேன்?"

"ஆமாடே ஷோ தான் நடக்கு... வெங்கலம்.. அவ உனக்கு யார்ல்லே.. அவ யார் கூடப் போனா உனக்கு என்ன? அது அவ விருப்பம்டே.. நீ கிறுக்குப் பைய மாதிரி கிடந்துக் கத்துறா... நாளைக்கு அவ ரயிலேறி பாம்பேப் போயிருவா... மறுக்க சின்னக்குளம் வர்றாளோ வர்றல்லயோ... நமக்கெல்லாம் அவச் சினேகிதம் சரிபடாதுலேய்.. என்ன விளங்குதா?" என் தலையை கோதிவிட்டான்.

இஸ்ரா ஒரு பாசக்கார பைய, என் மேல அக்கறை உள்ளவன்.. அவன் சொன்னா சரியாத் தான் இருக்கும். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். ரேச்சல் மேல கோபப்பட எனக்கு என்ன வந்துச்சு... அது வரை என் மனசைக் காயப்படுத்திகிட்டு இருந்த வலி லேசான மாதிரி இருந்துச்சு..ஆனாலும் வ்லி முழுசாப் போகல்ல.. ஒரு ஓரத்திலே போய் உக்காந்துக்குச்சு.. அது அங்கேத் தான் இருக்கும்... நிரந்தரமா இருக்கும்ங்கறது அப்போ எனக்குத் தெரியல்ல.

அதுக்குள்ளே மழையும் வேகமெடுக்க் ஆரம்பிச்சுருச்சு...

"ஜெர்ரி.. இறங்குலே..இது வரைக்கும் ஆட்டத்தைப் பாத்துருப்பால்லா.. அவன்வ கேம் பிளான் விளங்குதா.. ஜெபா, இஸ்ரா டிபன்ஸ் ஆடுங்க.. ஆல்டன்.. ஆஸ்வால்ட் மிட் மீல்ட் பாருங்க.. ஜெர்ரி நீ என் கூட பார்வேர்ட்ல்ல இறங்கு.... முடிஞ்ச் வரைக்கும் மோதிப் பாத்துருவோம்ல்ல மக்கா...." எட்வின் அண்ணன்(திடீரென எட்வின் மீண்டும் அண்ணன் ஆனாவ)கை என் கையை இழுத்துப் பிடிச்சது. மனிதச் சங்கிலியா கையைக் கோத்துகிட்டு கிரவுண்ட்குள்ளே இறங்குனோம்...

ஆட்டத்தின் அடுத்தப் பாதி ஆரம்பம் ஆச்சு...ஆரம்பிச்சு அஞ்சாவது நிமிசத்துல்ல என் தாடைப் பேந்து ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... பிரகாசபுரத்து டிபன்ஸ் பிளேயர் அசால்ட்டா அபன்ஸ் பன்ணதுல்ல வந்த வினை... ஒரு துணியை வச்சு ரத்தத்தைத் துடைச்சுட்டு வலியைக் காட்டாமக் கெத்தா மறுபடியும் ஆட தயார் ஆயிட்டேன்..ஆனா மக்கா வலி உள்ளுக்குள்ளே உயிர் வரைக்கும் வாங்கி எடுத்தது. எப்படியோ சமாளிச்சு நின்னுகிட்டேன். ரேச்சல் பாக்குறாளான்னு வேற அந்த வலியிலும் ஓரக் கண்ணால் பார்த்தேன். அவளும் பார்த்துகிட்டு தான் இருந்தாள்.

இரண்டாவது பாதியிலே முப்பது நிமிசத்துக்கு யார் பக்கமும் கோல் விழல்ல. ஆட்டம் ரொம்ப் நெருக்கமாப் போயிட்டு இருந்துச்சி.. அந்த நிலையிலே நான் கொடுத்த பாஸ் ஒன்றை வெகு நேர்த்தியா ஆல்டன் கோலாக மாற்றி கணக்கை சம் நிலைக்குக் கொண்டு வந்தான்.

கொஞ்சம் மெப்பா ஆட ஆரம்பிச்ச எதிரணி சுதாரிச்சு ஆட ஆரம்பிச்சான்வ.. அதோட விழைவை ஆட்டம் முடிய பத்து நிமிடம் இருக்கும் போது நான் சந்தித்தேன்.. எதோ எருமை மாடு ஒண்ணு பறந்து வந்து பல்லைக் க்ளோஸ் அப்பல்ல காட்டுனாப்பல்ல் இருந்துச்சு.. அவ்வளவு தான் எனக்குத் தெரிஞ்சுது.. நான் மல்லாக்க விழ என் மேல அந்த எருமை குப்புற விழ என் கை விழுந்த இடத்தில் இருந்த கூரானக் கல்லில் பட்டு கிழிந்தது... முழங்கையில் இருந்து பொங்கிய ரத்தம் கை முழுக்க நனைச்சுருச்சு.

எட்வின் அண்ணன்..(இப்போ அண்ணன் தான் ) ஓடி வந்து தன் பனியனைக் கிழித்து என் கையில் கட்டி ரத்தத்தை நிறுத்தினாவ. எனக்கு கண் எல்லாம் கட்டிருச்சு... ஏற்கனவே தாடைப் பேந்துருச்சு...அவ்வளவு தான் நான் மயங்கி சரிஞ்சுட்டேன்.. என்னப் பொறுத்தவரைக்கும் மேட்ச் முடிஞ்சுப் போச்சு....

"னான்... ஆடுறே....ன்ன்.. என்னை அனுப்...பா....தீ...ய..." கடைசியா இதைச் சொன்ன மாதிரி ஒரு நினைப்பு இருக்கு. ஆனா உறுதியா என்னச் சொன்னேன்னுத் தெரியல்ல..

அப்புறம் நான் கண்முழிச்சுப் பாக்கும் போது எங்க வீட்டுல்ல இருந்தேன். கையிலே கட்டுப் போட்டிருந்தாங்க. நடுவில்ல டாக்டர் வந்து டிடி எல்லாம் போட்டிருக்கார்.. வீரனுக்கு எதுவுமே தெரியல்ல..( நான் தான்ய்யா அந்த வீரன்)..

கண்முழிச்சப் பொழுதில் ந்டந்ததை எல்லாம் நான் ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கும் போது மாடியிலே என் ரூமுக்கு வெளியே நீலக் கலர் தாவணி தெரிஞ்சது...மறுபடியும் அதே தாவணி.. நான் எழுந்து வந்தேன்.. தாவணியின் நுனி கிழிந்து இருந்தது நன்றாக தெரிந்தது...ஆனால் தாவணியைக் கட்டியிருந்தது....

"இது உங்க தாவணியா?" இப்படி ஒரு அறிவுபூர்வமானக் கேள்வியை ரொம்பவும் விறைப்பாக் கேட்டேன்...

"எலேய் எய்யா.. கையிலேயும் தாடையிலும் தானே அடிப்பட்டுச்சுன்னு சொன்னாங்க.. உனக்கு எங்கே எல்லாமோ இல்ல அடிப்பட்டுருக்கும் போல... அவ அவளோடச் சீலையைக் கட்டாம உன் சீலையையாக் கட்டுவா?" எங்கப் பாட்டி தான் குறுக்கிட்டு வாய்பந்தல் போட ஆரம்பிச்சாங்க..

எனக்கு அடுத்து என்னக் கேட்பதுன்னுத் தெரியாம ஒரு மாதிரியா நெளிஞ்சுகிட்டு நின்னேன்... பிரின்சிலின் அக்காவுக்கு என் நிலைமைப் புரிஞ்சுதோ என்னவோ.. என்னைப் பார்த்து மெதுவாச் சிரிச்சாங்க.. பிரின்சிலின் அக்கா ரேச்சலுக்கு உறவு.. நானும் இஸ்ராவும் எப்படியோ அப்படின்னு வச்சுக்கலாம். அவங்க நாசரேத் காலேஜ்ல்ல பி.எஸ்.இசி இரண்டாம் வருசம் படிக்கிறாங்க.. அதிகம் பேசுனதுல்ல.. ஆனா எங்கேப் பாத்தாலும் சிரிப்பாங்க.. சொகம் விசாரிப்பாங்க.. எங்கப் பாட்டிக்கு அந்த அக்கா மேல பாசம் அதிகம்.. அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாங்க போவாங்க..

பாட்டி அடுப்பாங்கரை பக்கம் போறதுக்குப் படி இறங்குனாங்க..நான் இன்னும் குழப்பத்திலே நின்னுகிட்டு இருந்தேன்...பிரின்சிலின் அக்கா பாட்டிப் போகும் வரை எதுவும் பேசாமல் அமைதியா இருந்தாங்க..பாட்டிப் போனதும் அந்தக் கவரை எடுத்து என்கிட்ட நீட்டுனாங்க...

"என்னது?"

"ரேச்சல் கொடுக்கச் சொன்னா..."

நான் கடகடன்னு கவரைப் பிரிச்சேன்... உள்ளே கிரிஸ்டல் கீ செயின் ஒண்ணு இருந்துச்சு.. அதை விருட்டென்னு எடுத்துட்டுப் போய் ஜன்னல் வழியா ரூம்குள்ளே வந்து விழுந்த வெயில்ல காட்டுனேன்... அதுல்ல..

"TO LOVING FRIEND JERRY FROM RACHAEL" அப்படின்னு தங்க கலர்ல்ல மின்னுச்சு.. வாய் விட்டு படிச்சாலும் சத்தம் வெளியே வரல்ல..கவர்க்குள்ளே வேற எதுவோ கூட இருந்துச்சு, என்னன்னுப் பார்க்கும் ஆவலில் அவசரம் காட்டுனேன்.. உள்ளே இருந்த தின்னவேலி அல்வா பாக்கெட்டைப் பாத்ததும் என்னையுமறியாமல் எனக்கு சிரிப்பு வந்துச்சு.

கீ செயினை கைக்குள்ளேப் பொத்தி வச்சுக்கிட்டேன்..

"உனக்கு இன்னிக்குப் பொறந்த நாளாமே.. கோயில்ல பெயர் வாசித்தாவளாம்.. அது தான் கிப்ட் வாங்கி வச்சிருக்கா ரேச்சல்"

"அதை அவளேக் கொடுத்து இருக்கலாமே..." என்று நான் அரையும் குறையுமா இழுக்க.

"கொடுக்கத் தான் வந்தா.. நீ எந்திரிக்க மாதிரி தெரியல்ல.. அதான் காத்திருந்துப் பாத்துட்டு என் கிட்டச் கொடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டா"

"போயிட்டாளா... எங்கே?"

"இன்னிக்கு ரேச்சல் லீவு முடிஞ்சு ஊருக்குப் போறால்லா.. அஞ்சு மணிக்கு நாசரேத்துல்ல திருச்செந்தூர் ட்ரெயின் பிடிக்கப் போயாச்சி.." பிரின்சிலின் அக்கா சொல்லவும் நான் கடிகாரத்தைப் பார்த்தேன்..அதுல்ல மணி நாலு இருவதைஞ்சு.

வாரிச் சுருட்டி எழுந்தவனை மறுபடியும் பிரின்சிலின் அக்காவின் குரல் தடுத்தது..

"அப்புறம் இது தான் என் சீலைத் தான்..."

"என்னது..?"

"ஆமா... நீ கேட்டக் கேள்விக்குப் பதில்.. அன்னிக்கு மோட்டார் ரூம்ல்ல நீ பார்த்தது எட்வின் தான்.. எட்வின் அவியக் கூட இருந்தது..."

எனக்கு எல்லாம் புரிந்து விட்டது.

"ரேச்சலுக்கு ரொம்ப நாளா தாவணிப் போடணும்ன்னு ஆசை.. அதுக்குச் சிக்குனது இந்தக் கிழிஞ்சத் தாவணி... அவ ஆசையா அன்னிக்குத் தாவணிக் கட்டிகிட்டு உன்னைப் பாக்க வந்தா நீ என்னவெல்லாமோ பேசிட்டீயாம்... அவியச் சொன்னாவ..ஆனா ரேச்சல் வாய் திறக்கல்ல...எனக்கு மனசுக் கேக்கல்ல...அதான் சொல்லிரணும்ன்னு அவியக் கிட்டக் கூடச் சொன்னேன்.."

"அக்கா எனக்கு இப்போ ரேச்சலைப் பாக்கணும்... நேரமில்ல.. உங்கக் கிட்ட வந்துப் பேசுறேன்.." மாடி படியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடினேன்..

"உம்மோவனுக்கு நல்லாக் கிறுக்குத் தான் பிடிச்சிருக்குப் போ" பாட்டி எனக்குப் பின்னால் என் அம்மாவிடம் சொன்னது தெளிவாய் காதில் விழுந்தது..

பென்னி அண்ணன் டிவிஎஸை கடனாய் வாங்கி சும்மாக் காட்டுப் பாதையிலே இறக்கிட்டு பறந்தோம்ல்லா.. கல்லையும் முள்ளையும் பாவப்பட்ட டிவிஎஸ் டயரல்ல தாங்க முடியல்ல.. காத்துப் போனப் பின்னாடி அது மேல இருந்த என்னோடப் பாரத்தைச் சுத்தமா அதால்ல தாங்க முடியாம என்னைக் குப்புற கவுத்துப் போட்டிருச்சு... ஏற்கனவே இருந்தச் சேதாரத்த்தை கூட்டி வச்சு பார்க்கும் போது இது ஒண்ணும் ரொம்ப பெரிசாத் தெரியல்ல...

கவுந்த டிவிஎஸும் நானும் நிமிந்தப்போ மணி நாலரை இருக்கும்...இன்னும் ஒரு மூணு இல்ல மூணரை கிலோ மீட்டர் போகணும்.. நல்லா கெதியா இருந்து ஓடுன்னாலே இருவது நிமிசம் ஆயிருமே..இப்போ இருக்க என் பாடி கண்டிசனுக்கு இரண்டு மணி நேரம் ஆனாலும் ஆச்சரியமில்ல...

அந்நேரம் பார்த்து..அக்கம் பக்கம் ஒரு சைக்கிளைக் கூடக் காணும்.. இறங்குற சூரியன் இரக்கமில்லாம முகத்துல்ல முக்காடு போடச் சொல்லி மிரட்டிகிட்டிருந்தான்.. நான் அப்படியே சேர்ந்துப் போய் உக்காந்துட்டேன்... ஒரு இரண்டு நிமிசம் ஓடியிருக்கும்... பக்கத்துல்ல பைக் உறுமுற சத்தம் கேட்டு நிமிந்தா எட்வின் அண்ணனும் பின்னாலே இஸ்ராவும்...

"லேய்.. உன்னிய விரட்டிகிட்டுத் தான் பின்னாலே வந்தோம்...மறுபடியும் அடியா?" இஸ்ரா இறங்கி ஓடி வந்தான்.

"மெட்ராஸ்காரனுக்கு பேச்சு மட்டுமில்ல.. அடி ஓதை வாங்கி வீரமும் காட்டத் தெரியும்ங்கறது இப்போ இந்த ஊர்காரவீயலுக்கு தெரிஞ்சிருச்சுல்லா"

எட்வின் அண்ணன் சிரித்தாவ... இஸ்ராவும் சிரித்தான்.. நானும் தான்.. என்னச் சிரிக்க சிரிக்கத் தாடையிலே யாரோ உக்காந்து குத்துறாப்பல்ல இருந்துச்சு... இருந்தாலும் சிரித்தேன்..

நாசரேத் ரயில் நிலையத்துக்குள் நாங்கள் நுழையும் போது...ரயில் எஞ்சின் புகையைக் கக்க ஆரம்பிச்சுருச்சு... புகைவண்டி காலமது... அந்த ஊர்ல்ல அதிகமா யாரும் ரயிலேற மாட்டாங்க.. வண்டி நிக்கப் போறது அஞ்சு நிமிசமோ... அதுக்கும் கூட ஒரு நிமிசமோ...

ரேச்சலைக் கண்டுபிடிக்கிறது எனக்கு அதிக சிரமமாயில்லை... ரேச்சல் அவள் அப்பா, அம்மா, தம்பி..இன்னும் அவள் குடும்ப மக்கள் ரயில்டியிலே நின்னுப் பேசிக்கிட்டு இருந்தாங்க..நான் தயக்கமா ரேச்சலைப் பாத்துகிட்டு நின்னேன்...அவங்க அப்பா சிரிச்சார்...அவ தம்பி ஓடி வந்தான்..

"ஹேப்பி ப்ர்த்டேவாமே உனக்கு.. அக்காச் சொன்னா.." என்று கைக் கொடுத்தான்.

பாக்கெட்டுக்குள் இருந்த சாக்லேட்டை எடுத்து அவனுக்குக் கொடுத்து தேங்க்ஸ் சொன்னேன். அவங்க அப்பா, அம்மா, நாசரேத் ஸ்டேஷன் மாஸ்டர்.. அப்புறம் அங்கே இருந்த எல்லாருக்கும் என் பர்த்டே சாக்லேட் கொடுத்தேன்.. எல்லாரும் எனக்கு ஹேப்பி பர்த் டே சொன்னாங்க... என் வாழ்க்கையிலே ரொம்பவும் சந்தோஷமானப் பர்த்டே அது...

"அடப் பாவி.. கூடவே இருந்த எனக்கு ஒத்தச் சாக்லேட் தர்றல்ல.. அங்கே அள்ளி இல்லா விடுறான்.." ஆமா இஸ்ரா தான் எட்வின் அண்ணன் கிட்டச் சொல்லிகிட்டு இருந்தான்.

ரயில் எஞ்சின் சவுண்ட் விட்டுருச்சு...எல்லாரும் வண்டியிலே ஏறிட்ட்டாங்க.. ரேச்சல் படிகளில் நின்றாள்.. நான் நடையில் கொஞ்சம் வேகம் கூட்டி ரேச்சல் பக்கம் போனேன்... என்னாலே எதுவும் பேச முடியல்ல..அவளைப் பாத்துகிட்டே நின்னதுல்ல கண்ணுல்ல தண்ணி வந்துருமோன்னு பயம வந்துருச்சு.. பொது இடத்திலே வீரன் அழுதுற கூடாதுல்லா.. அதுவும் இத்தனைப் பேர் பாத்தா என்னா ஆகும்...ஆனா ரேச்சல் கண் கலங்கிருச்சு...

"எதுக்கு இப்போ இங்கே வந்த?" கண்ணீரும் சிரிப்பூமாய் கேட்டாள்

"ஏய்... மெட்ராஸ்காரன் பர்த்டேக்கு கிப்ட் மட்டும் வாங்கிட்டு சும்மாப் போயிட்டான்னு நீ நினைச்சுரக்கூடாதுல்லா...அதான் பர்த்டே கேக் கொடுக்க வந்தேன்"

ரயில் நகர ஆரம்பித்தது.. நான் கேக் பாக்ஸ் எடுத்து அவளிடம் நீட்டினேன்... அவள் கண்களில் கண்னீர் மீறிய சந்தோஷம் சட்டெனத் தெரிந்தது...

ரயிலோடு நானும் நகர்ந்தேன்

"ம்ஹூம் தின்னவேலிக்கார பையத் தான்லே நீ...இப்படி ரயில் பின்னாடி ஓடி வரத் தான் லாயக்கு... பத்தாம் கிளாஸை சீக்கிரம் முடிச்சுட்டு மேலே படிக்க பாம்பேக்கு வந்துருடா.. உன்னை பாம்பேக்காரனா நான் மாத்திடுறேன்" நகர்ந்த ரயிலின் ஓசையோடு என் காதுபட சொன்னாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் ரேச்சலின் கைப்பிடித்து அவசரத்திலும் அவசரமாய் முத்தம் ஒன்று கொடுத்தேன்.. ரயில் வேகமெடுத்தது.. என் இதயத்துடிப்பு போலவே...

ரேச்சலும் ரயிலும் கொஞ்ச நேரத்தில் பார்வையில் இருந்து மறைந்துப் போனார்கள்..

நான் அங்கிருந்த ஸ்டேஷன் பெஞ்சில் போய் சாய்ஞ்சேன்.... எனக்கு ரொம்பப் பக்கத்துல்ல விசுக் விசுக்குன்னு அழுகை சத்தம் கேட்டு நான் திரும்ப அங்கே எங்க ஊர் பொடியன் தொப்புளான் கண்ணீர் விட்டபடி நின்னுகிட்டு இருக்கான்

நான் அவனைப் பாத்தேன்.. அவன் என்னைப் பாத்தான்...

"என்னடா எதுக்கு அழுவுற?"

"ம்ம்ம் நான் அந்த அக்காவை லவ் பண்ணுறேன்.. அந்த அக்கா என்னை விட்டுட்டுப் போவுது " என்றானே பார்க்கலாம்...

எட்வின் அண்ணன், இஸ்ரா இரண்டு பேரும் இதைக் கேட்டுட்டுச் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க நானும் அவங்களோடச் சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். தொப்புளான் கண்ணைத் துடைச்சுட்டு நான் கொடுத்த சாக்லேட்டைச் சாப்பிட ஆரம்பிச்சான்..

எங்களுக்குச் சிரிப்பு இன்னும் அதிகமாப் போயிருச்சு...


பிகு: மேட்ச் முடிவு பத்தி ஆர்வமுள்ளவங்களூக்கு.. நான் மயங்கி விழுந்தப் பின் எனக்கு பதில் தொப்புளானைத் தான் களத்தில் இறக்கியிருக்காங்க.. அது வரை புட்பாலை உதைத்து அறியாத தொப்புளான் சின்னக்குளத்துக்காக ஒரு கோல் அடிச்சது அடுத்து வந்தப் பல ஆண்டுகளுக்குச் சின்னக்குளத்து நிரந்தரப் பேச்சு பொருள் ஆகிப் போச்சு... இப்போ தொப்புளான் என்ற பால் மதுரையில் ஒரு ஜவுளிக் கடைக்கு முதலாளியாயிட்டான்.

எட்வின் அண்ணனுக்கும் பிரின்சிலின் அக்காவுக்கும் அதுக்கு இரண்டு வருசம் கழிச்சி சின்னக்குளத்துல்ல வச்சு கல்யாணம் நடந்தது.. பயங்கர வெட்டுக் குத்து எல்லாம் நடக்கப் போய் அப்புறம் தான் எட்வின் அண்ணன் தாலி கட்டுனாவ. அவங்களுக்கு இரண்டு பசங்க... இரண்டு பேரும் இப்போ அண்ணன் மாதிரியே நல்லா புட் பால் ஆடுறானுவளாம்.. இப்போ காட்டுப் பாதையிலே மோட்டார் ரூமே இல்லையாம்.. எட்வின் அண்ணன் தான் இடிச்சதா பென்னி அண்ணன் சொன்னாங்க ஆனா எட்வின் அண்ணன் ஒத்துக்க மாட்டேங்கறாங்க...

ம்ம்ம் நீங்க எல்லாரும் கேக்குறது புரியுது.. ரேச்சல் தானே...கடைசியாப் பிரின்சிலின் அக்காக் கல்யாணத்துக்கு வருவான்னு எதிர்பாத்து ஊருக்குப் போயிருந்தேன்.. வர்றல்ல... அப்புறம் எஸ்தர் பாட்டிப் போனதுக்கும் அவங்க வீட்டுல்ல இருந்து யாரும் வர்றல்ல...ஒரு கட்டத்துக்கு மேல அவங்க குடும்பத்தோட யாருக்கும் தொடர்பில்லாமலேப் போயிருச்சு... ஒவ்வொரு விடுமுறைக்கும் ரேச்சலை பார்ப்போம் அப்படிங்கற நம்பிக்கையிலேத் தான் ஊருக்குப் போவேன்... ஆனா பாக்கமுடியறதில்ல...

இதோ இப்போ ரொம்ப நாளுக்குப் பொறவு ஊருக்குப் போறேன் எப்பவும் போல அதே நம்பிக்கையோட....

இப்போதைக்கு சின்னக்குளத்துக்கும் விடுமுறைகளுக்கும் விடுமுறை விட்டுருவோமா...

Tuesday, July 17, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 6

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 5

"லேய் எல்லாம் சரி... மோட்டார் ரூம் கதை ஊருக்குள்ளே அரசல் புரசலா அடிபடுற விசயம் தான்... கண்டிப்பா நம்ம நம்ம ஊர் மக்களா இருக்காது.. வெளியூர்காரனாத் தான் இருக்கும்... இங்கே யாருக்கும் அப்படி தைரியம் வராதுலேய்.." இஸ்ரா விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான்.

"நம்ம ஊர்ல்ல யார்ட்டல்லே யமஹா பைக் இருக்கு?"

"யார்ட்டயேயும் இல்ல..சும்மாக் குழப்பிட்டுத் திரியாதல்ல வெங்கலம்..மேட்ச்க்கு உனக்கு ஷூ ரெடி பண்ணிட்டேன்...இந்தா இன்னும் பத்து நிமிசத்துல்ல காபியைக் குடிச்சுட்டுக் கிளம்பு"
இஸ்ரா விளையாட தோதான உடையை மாட்டிகிட்டு ஷூவையும் மாட்டிகிட்டு காபி வாங்க அடுப்பாங்கரை பக்கம் போனான்.


நான் இன்னும் யோசனையில் ஆழ்ந்தப்படியே இருந்தேன்...ஒரு வழியா எதோ நினைப்பிலே ஷூவையும் மாட்டிகிட்டு இஸ்ரா நீட்டுனக் காபியையும் குடிச்சுப்புட்டு அவன் கூட விளையாடக் கிளம்புனேன்..

போற வழியெல்லாம் எங்கிட்டாவது யமஹாவோ... கருப்புச் சட்டையோ கண்ணுல்லப் படுதான்னு கண்ணை அகலமாத் திறந்துப் பாத்துகிட்டே போனேன். எந்தப் பக்கமும் நான் தேடுன எந்தப் பொருளும் கண்ணுல்ல சிக்கவே இல்ல.. ஒவ்வொரு தெருவா போய் டீம் மொத்தத்தையும் கூட்டிகிட்டு கிரவுண்ட் பார்த்துப் போனோம்..

"லேய் மக்கா நில்லுங்கடா..." பாம்பே போலீஸ்காரரின் சிங்கக்குரல் எங்களைத் தடுத்தது.. நிறுத்தியது. பாம்பே போலீஸ்காரருன்னு சொல்லுறதை விட ரேச்சல் அப்பான்னா உங்களூக்கு சட்டுன்னு புரிஞ்சிடும்.

"இது தான் புட் பால் டீமா.. யார்லே கேப்டன் இதுல்ல?"

"எட்வின் அண்ணன்..அவிய நேராக் கிரவுண்ட்க்கு வர்றேன்ன்னு சொல்லிட்டாவ.." இஸ்ரா தான் பதில் சொன்னான்.

"லேய் நீ தாவீது மகனா.. தூத்துக்குடியிலேத் தானே இருக்கா.. உங்க அத்தைக்கு ஒரு மகன் இருக்கான்லா மெட்ராஸ்காரன் அவனும் டீம்ல்ல இருக்கானா? எங்கேலே அவன்?"

என்னைப் பத்திக் கேக்குறார்ன்னு தெரிஞ்சதும் எனக்கு அடி வயிரில் லேசா ஒரு சின்னப் பிரளயமே நடந்து முடிஞ்சுப் போச்சு. நான் மெல்ல தலையை நீட்டி அவர் முன்னால் இஸ்ராவுக்கு நெருக்கமாய் போய் நின்னேன்.

"உங்க அப்பன் தாவீதும் நானும் சின்னக்குளம் புட் பால் டீமுக்கு ஆட இறங்குனோம்ன்னா செயிக்கமாத் திரும்ப மாட்டோம்.. இப்போ மவன் நீ.. அவன் இடத்தைப் பிடிச்சிருக்கா.. எனக்குப் பொட்டப்புள்ளயாப் போச்சி.. இல்லன்னா இறக்கி விளையாட விட்டராலாம்... " என்று சொல்லிவிட்டுச் சத்தம் போட்டு சிரித்தார்

"இப்போ இறக்கிவிட்டாலும் அவ நல்லாவே ஆடுவா.." வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாம விழுங்கிக்கொண்டேன்.

'சரி.. மூணு வருசமா தொடர்ந்து அந்தப் பிரகாசபுரம்காரன்வட்ட மிதிபட்டுட்டுல்லா கிடக்கியளாம்டே.. சின்ன்க்குளத்து இளவட்ட்ங்களுக்கு விளையாட்டு வரல்லயா இல்ல சொனைக் கெட்டுப் போச்சாடே..' என்று கேட்டு விட்டு எங்கள் பதிலுக்காக எங்களைப் பார்த்தார்.

"சொணை எல்லாம் கெடல்ல...விளையாடுறவங்க வினைச் சரி இல்ல..விளையாடத் தெரிஞ்சவனை இறக்கி விட்டாத் தானே விளையாட முடியும்.. சும்மா மெப்புக்கு ஓடத் தெரியாதவனை எல்லாம் ஆட விட்டா அலறி அடிப்பட்டுகிட்டுத் தான் வர்றணும்"

"இதான் உன் அத்தை மோவனா.. அவன் அம்மாவை மாதிரியாத் துடுக்காப் பேசுதான்.. ரேச்சல் உன்னியப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா..சரியாத் தான் இருக்கு, ஆமா உன்னிய ஆட்டத்துல்ல இறக்க மாட்டேன்னு யார் சொன்னது?" என்று சிரிச்சிகிட்டேக் கேட்டார்.

"மாமா சோமா இருக்கியளா...?"

"வாய்யா எட்வின்..உன்னியப் பத்தி பையக் குத்தம் சொல்லுதான்.. ஆட்டத்துல்ல இவனுவளைச் சேக்காமா ஒதுக்கி வைக்கியாமே ஏம்ப்பா?

"மாமா பைய இன்னும் பள்ளியூடத்துல்ல பத்தாப்பே முடிக்கல்ல...ஆனா ஆடணும்ங்கான்... பிரகாசபுரத்துல்ல எல்லாம் காலேஜ் முடிச்சப் பயல்வ.. இங்க நம்ம செட்ல்ல எல்லாம் சின்னப்பயல்வ... நான்..ஆல்டன்..ஜெபா..குரூஸ்.. இப்படி கொஞ்சம் வேர் தான் அவன்வ டீம்க்கு சரியான குரூப்...என்னப் பண்ண? எனக்கும் கால்ல அடிப் பட்டுருச்சு..இந்த வருசமும் கஷ்ட்டம் தான்.."

"பத்தாப்பு படிக்கப் பையன் பந்தடிச்சா பந்து கோல்குள்ளே போவாதோ... உங்க வயசு வரைக்கும் வளந்து தான் பந்தடிக்க வர்றணுமோ... மூணு வருசமா நாங்களும் தான் பாக்கோம்ல்ல.. உங்க குரூப் கும்பி கிழிஞ்சு வந்த நிக்கக் கதையை..." நான் கொஞ்சம் காட்டமாகவே பேசிவிட்டேன். எட்வின் அண்ணனுக்கு முகம் சிவந்து விட்டது.

"எலேய் மெட்ராஸ்காரா பேச்சு எல்லாம் உஙக ஊர் பொழ்ப்புக்கு வேணும்ன்னா சரியா வரும்... இந்தப் பக்கம் எல்லாம் வெத்துப் பேச்சு வெத்தலைச் சுண்ணாம்புக்குக் கூட ஆவாதுலேய்.." ரொம்ப விறைப்பும் முறைப்பும் சேர்த்துகிட்டு என்னைப் பாத்து எட்வின் அண்ணனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்துச்சு.

'சரி மக்கா.. இந்த வருசம் போட்டியிலே நீங்க செயிச்சா.. ஆளுக்கு அம்பது ரூவாத் தாரேன்... என்ன?"
வார்த்தை வளர்வதைத் தடுக்க ரேச்சல் அப்பா இடையில் குறுக்கிட்டு தன் அறிவிப்பை வெளியிட்டார். அப்படித் தான் நான் நினைக்கிறேன்.

வார்த்தைகளின் வேக வீச்சு அப்போதைக்கு அங்கே கட்டுப்பட்டாலும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறுன பார்வையிலே அனல் சும்மா கொந்தளிச்சதுன்னு சொல்லணும். எட்வின் அண்ணன் (ம்ஹ்ம் இனிமே என்ன நொண்ணன் வேண்டிக்கிடக்கு..) எட்வின் என்னைப் பார்த்தப் பார்வையில் எனக்கு எல்லாச் சேதியும் திருத்தமா விளங்கிப் போச்சு. வில்லங்கத்தை மொத்தமா விலை பேசி வாங்கியாச்சுன்னு புரிஞ்சுப் போச்சு... எட்வின் என்னை மொறைப்பதை நிறுத்தவில்லை.. ஒரு கட்டத்தில் நானும் அடப் போடாங்க என்று திருப்பி மொறைக்க ஆரம்பிச்சேன்...

இப்படி ஒரு வரலாற்று மதிப்பு மிக்க பனிப்போர் துவங்கியதை கொஞ்சமும் உணராம மொத்த டீமும் ரேச்சல் அப்பாவின் அறிவிப்பைக் கேட்டு ஆர்வத்தில் ஆனந்தக் கூத்தாடிக்கொண்டிருந்தது.

எட்வின் நடந்துப் போவதையேப் பார்த்துக்கொண்டு நான் நின்றேன்... சந்துக்குள் போன எட்வினுக்குப் பின்னால் பைக் உறூமும் சத்தம் கேட்டது.. சந்தேகமின்றி அது யமஹா பைக் சத்தமே தான்.. வேற எதையும் யோசிக்காமல் நான் தெறிச்சுக் குதிச்சி சந்தை நோக்கி ஓடினேன்.

அங்கே கருப்புச் சட்டையைக் கழுத்தில் கட்டிக்கொண்டு மோட்டார் ரூம் அருகே நான் பார்த்த அதே யமஹா பைக்ல்ல ஏறி எட்வின் பறப்பதை நான் பார்த்தேன்...

"அடப்பாவி நீ தானா அவன்....உன்னியக் கண்டுபிடிச்சாச்சு உங்கூட இருந்த ராசாத்தியையும் கண்டுபிடிச்சுட்டேன்னு வை.. இருக்கட்டும் என் ராசாக்கட்டி... என்னையவா கட்டம் கட்டி மட்டம் தட்டுற..மெட்ராஸ் காரன் வாயைத் தொறந்துப் பேசுனா நீ முடிஞ்சுப் போயிருவடா என் எட்வின் அண்ணா"

அன்னிக்குச் சாயந்திரம் பிராக்டீஸ்க்கு எட்வின் வந்திருந்தாலும் விளையாடல்ல, நாங்க எல்லாம் விளையாடுனோம்... நான் நல்லா விளையாடியும் எட்வின் வேணும்ன்னு என்னை மட்டம் தட்டுனான். ஒரு கட்டத்துல்ல எனக்கு ஆத்திரம் பொங்கிருச்சு... பந்தை ஓங்கி அவன் மேல அடிக்கப் போயிட்டேன்.....இஸ்ரா வந்து நிறுத்திட்டான். எட்வினும் அதைக் கவனிக்கல்ல.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் எட்வின் என்னைக் எகடியம் பண்னிகிட்டு இருந்தான்.. நான் பொறுத்துப் போயிட்டு இருந்தேன்..காரணமே பெரிசா இல்லாம எனக்கும் எட்வினுக்கு பகை வளந்துகிட்டேப் போச்சு... சின்னப் பையன்னா அவ்வளவு இளக்காரமா.. உன்னை இந்த லீவு முடிஞ்சு ஊருக்குப் போறதுக்குள்ளேப் போட்டுக் கொடுக்காமப் போறதுல்லன்னு எனக்கு நானே சபதமெல்லாம் போட்டுகிட்டேன்.

எட்வின் பத்தி நான் கண்டுபிடிச்ச பரம ரகசியத்தை இன்னும் இஸ்ரா கிட்டச் சொல்லல்ல. அதுக்குச் சம்யம வாய்க்கல்ல. இஸ்ரா கிரவுண்டுக்கு வந்ததிலே இருந்து கிட்டத் தட்ட பிலேவின் மறுபிறப்பு ரேஞ்ச்சுக்கு படம் காட்டிகிட்டு இருந்தான்.

திடீரென்னு விளையாடிகிட்டு இருந்த அத்தனைப் பயலும் ஆட்டத்தை நிறுத்திட்டு திபு திபுன்னு கிரவுண்ட் ஓட ஒரு முக்குக்கு போய் குத்த வச்சுட்டாங்க...

அன்னிக்குத் தான் முதல் தடவையா பிராக்டீஸ் போயிருந்தாலே அதுக்கானக் காரணம் எனக்குப் புரியல்ல.. இஸ்ரா பிராக்டீஸ் போகும் நேரம் நான் பெருமபாலும் இழுத்து மூடிகிட்டு தூங்கிருவேன்... அழைக்காத இடத்துக்கு சும்மா வேடிக்கைப் பாக்கக் கூடப் போறதுல்லன்னு அவ்வளவு வைராக்கியம் எனக்கு..

நானும் இஸ்ராவும் தான் கடைசியாப் போனோம்...

எல்லாருக்கும் கொறிக்கறதுக்கு பலகாரம் வந்து இருந்துச்சு... அதிரசம், நெய் முறுக்கு, மஸ்கோத அல்வா, ஓமப்பொடி, ரவா லட்டு, விவிக்கா, முந்திரிக் கொத்துன்னு வகை வகையா வந்து இருந்துச்சு...ஆசையா எடுக்கப் போனவன்
"எலேய் நல்லாத் தின்னுப்புட்டு மல்லாந்துராதீய... விளையாடணும்... நாளைக்கு ஆட்டத்துல்ல செயிச்சா இதை மாதிரி இன்னும் ரெண்டு மடங்கு உண்டுல்லா" என்று எட்வின் சொன்னதைக் கேட்டு அப்படியே நகர்ந்து போய் சொம்புல்லருந்த தண்ணியை மடக் மடக்குன்னு குடிக்க ஆரம்பிச்சேன்..

தண்ணியைக் குடிச்சுட்டு தலையை இறக்கிப் பார்த்தா.. எதிரில் ரேச்சல் நிக்குறா...

அப்படியே மின்னல் கண்ணுக்குள்ளே வந்து வெட்டுற மாதிரி சிரிப்பு... சடைப் பின்னிச் சும்மா இரண்டு மொழம் பிச்சிப் பூவை வச்சுகிட்டு... சன்னமா முகத்துக்கு பவுடர் போட்டும் போடாமலும்.. கையிலே நாலு கல் வளையல்... காதுல்ல சின்னதா வைரக்கல வச்ச தொங்கட்டான் குலுங்குது.. அவளைப் பார்த்துகிட்டே குடிச்சத் தண்ணிய விழுங்க மறந்துட்டு வாயைத் தொறந்தப் படியே நின்னுட்டேன்.. ஆங் அந்த முன் நெத்தியிலே சுருளா சுருளாக் குவிஞ்ச முடியை வாயை வச்சு காத்து ஊதி கலைச்சு விட்டு கண் சிமிட்டினாப் பாருங்க... குடிச்சத் தண்ணி பொறை ஏறி இரும ஆரம்பிச்சேட்டேன்,

"ம்ஹூம் உங்க ஊர் பசங்க எல்லாம் நல்லா வாயைப் பொளந்துகிட்டு சைட் அடிக்க மட்டும் தாண்டா லாயக்கு...." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

"யார் இப்போ சைட் அடிச்சா?"

"அப்போ இப்போ இவ்வளவு நேரம் .. நான் இங்கே வந்து அஞ்சு நிமிசம் ஆச்சு... இந்த அஞ்சு நிமிசமும் நீ என்ன நாலு கொயர் நோட்டு நிறைய டைப்பா அடிச்ச?"

"அது நான் உன்னை இப்படிப் பார்த்ததே இல்லையா அதான் கொஞ்சம் அதிர்ந்து நின்னூட்டேன்"

சுளுக்கெனச் சிரித்தவள்.." ஏன் இப்போ எனக்கு என்ன ஆயிருச்சுன்னு அதிர்ந்துட்டே?"

"அது நீ பொண்ணு மாதிரி எல்லாம் ... அது தான் தாவணி எல்லாம் போட்டுகிட்டு... எங்க ஊர் பொண்ணு மாதிரி தலை எல்லாம் வாரி.. பூ எல்லாம் வச்சு..." என்ன என்னவோ சொல்ல முயன்று உளற ஆரம்பிச்சேன்.

"அதாவது.. அன்னிக்கு சொன்னீயே .. பொண்ணுன்னா.. அப்படின்னு ஒரு டயலாக் அது மாதிரி இப்போ நான் இருக்கேனா?" லேசா வெட்கப்பட்ட மாதிரி இருந்தாள். அவள் ஏற்கனவே ரோஜாப் பூ கலர்.. இப்போ சிவப்பு ரோஜாக் கலருக்கு அவள் முகம் மாறியது.

"ம்ம்ம் " என்று நான் தலையசைக்க.. அவள் தாவணியின் நுனியெடுத்து முகம் மறைத்து வெட்கத்தை ரொம்பவே உறுதி செய்தாள்.

ரேச்சல் முகம் மூடிய நீலக் கலர் தாவணியின் நுனி கிழிந்திருந்தது என் கண்ணில் பளிச்செனப்பட்டது. அதைப் பார்த்த நான் சித்தம் தடுமாறி நின்ற அதே வேளையில்
அங்கே யமஹா பைக்ல்ல சீறி வந்த எட்வின் பைக்கை ஒரு முறுக்கு முறுக்கி...

"ரேச்சல் வாப் போலாம்.... நேரமாச்சுல்லா" என்றது இடிச் சத்தத்தை விடவும் பலமாய் என் காதுல்ல விழ்ந்துச்சு. தாவணியை விரல் நுனியாலே பிடிச்சுச் சுத்திகிட்டே ரேச்சலும் பைக்கில் ஏறப் போனா.

கிழிந்த நீலக் கலர் தாவணி, யமஹா பைக், எட்வின் எல்லாமாய் சேர்ந்து என்னை முறுக்கியது... எட்வின் வண்டியை இன்னும் முறுக்கினான்.
வண்டி சீறியதை விட எனக்குள் எதோ ஒன்று எக்குத் தப்பாய் சீறியது..ரேச்சல் மெதுவாய் நடந்துப் போய் வண்டியின் பின்னால் ஏறி கொண்டாள்.

அவ்வளவு தான்.. அதற்கு மேலும் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை...ஆன மட்டுக்கும் ஆவேசம் கொண்டு பைக்கைப் போய் மறிச்சு நின்னுகிட்டேன்..உள்ளுக்குள்ளே உறுமுன மனத்தின் ஓசையை வார்த்தைகளாய் வெடிச்சுத் தள்ள ஆரம்பிச்சேன்..

"எங்கேப் போறீங்க... மோட்டார் ரூமுக்கா....ச்சீ... வெக்கமா இல்ல..."நான் இப்படிச் சொல்லக் கேட்டதும் எட்வின் கைச் சட்டென்று வண்டியில் இருந்து விடுபட வண்டி நின்று போனது.

ஆனால் எட்வின் எந்த மறுப்பும் சொல்லாதது எனக்கு அந்த நிலையிலும் ஆச்சரியம் அளித்தது. என் கோவத்தை மேலும் கிளறிவிட்டது.எட்வினை விட்டு விட்டு பின்னால் ரேச்சலை எட்டிப் பார்த்தேன்.. அவள் முகத்தைப் பார்க்க சுத்தமாய் திராணியற்று அவள் தலை தூக்கவும் நிலத்தைப் பாத்தேன்.

"உனக்கு என்னக் காட்டுப்பாதையிலே பம்பாய் பசங்க செய்யறதச் செய்ய இங்கே ஒரு ஆள் கிடைச்சுட்டானா....? அதுக்குத் தானே நீ ஆசைப் பட்ட... நான் பாத்தேன் எலலா இழவையும் பார்த்தேன்.... உங்க அசிங்கம் எல்லாத்தையும் பாத்துத் தொலைச்சேன்.... ச்சீ..த்தூ....' கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன் போல கத்தினேன்.

விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி இதெல்லாம் நடந்துக் கொண்டிருந்தது. இதற்குள் பலகாரம் சாப்பிட்டப் பல பேரும் கலைந்துப் போயிருந்தார்கள்... எட்வின் .. ரேச்சல்.. நான் மூவரும் மட்டும் மீதமிருந்தோம்....நான் போட்ட சத்தம் கேட்டு இஸ்ராவும் வந்துச் சேர்ந்தான்..

"இன்னும் ஏன் நிக்குறீங்க... போங்க.. போய்யா அவளை மோட்டார் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ... " என்று நான் முழுசாய் சொல்லி முடிக்கும் முன் என் கன்னத்தில் அது வரை நான் அறிந்திராத வலியைத் தர்ற மாதிரி ஒரு அறை விழுந்தது...காதுக்குள்ளே வண்டு வந்து கும்மி அடிக்கிறாப்பல்ல ஒரு எபெக்ட் ஆயிருச்சு.

வலியின் தீவிரம் என் நரம்பு மண்டலங்களில் வேகமாய் பரவிக்கொண்டிருந்தது...சில வினாடிகளுக்கு நடப்பது எதையும் என்னாலே கிரகிக்கக் கூட முடியாம தரையிலே உக்காந்துட்டேன்... லேசாத் தெளிஞ்சுப் பாத்தப் போது எட்வின் மவுனமாய் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருப்பது தெரிந்தது... அவன் தலைக் கவுந்துக் கிடந்தது.

வண்டி கிளம்பியது...வண்டியில் ரேச்சல் இருந்தாள் என் கண்ணில் இருந்து வண்டியும் ரேச்சலும் மெல்ல மெல்ல மறைஞ்சாங்க. அதே சமயம் என் கண்களில் கண்னீர் கட்டுப்ப்டாமல் ஓட ஆரம்பித்தது...

தரையில் கிடந்த என் மீது இஸ்ராவின் நிழல் நீண்டு கிடந்தது...

"நாளைக்கு மேட்ச் மட்டும் இல்லன்னா நீ பேசுன்ன பேச்சுக்கு உன்னிய இங்கேயே வெட்டிப் போட்டிருப்பேன்டா" பைக் மறைந்த பின் அங்கு நிலவிய கடும் மவுனத்தை அதிரும் வார்த்தைகளால் உடைச்சுப் போட்டான் இஸ்ரா.

பைக் போனத் தடத்தையே வெறித்துப் பார்த்தப் படி கையை முழங்காலில் குவித்து நான் உட்கார்ந்திருந்தேன்... சின்னக்குளத்தில் சாய்ங்காலச் சூரியன் சத்தமின்றி குளத்திற்குள் இறம்ங்கிக் கொண்டிருந்தது...

என் மீது படிஞ்சிருந்தப் புழுதியை எல்லாம் உதறி விட்டுக்கொண்டு கண்ணில் வழிந்த கண்ணீரை இன்னொரு கையை வச்சுத் துடைச்சிகிட்டுகடும் வெறி வந்தவனாய் எழும்பி நின்று எட்டு ஊருக்கும் கேட்கும் குரலில் நான் அலறினேன்...

"என்னை அடிச்சது எவன்டாஆஆஆஆஆஆஆஆஆ??"

விடுமுறையின் கடைசி நாள் பொழுது விடிய இன்னும் சரியாய் 12 மணி நேரம் மீதமிருந்தது..அந்த 12 மணி நேரத்துக்குப் பின்... தொடரும்