Tuesday, December 15, 2009

பனி தேசத்துப் பக்கங்கள்

விரல்கள் உறையும் வினாடிககளில்
ஆறாவது விரலின் புகையினோடு பரவும் எதோ நினைவுகள்
ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்தோடும் ஈரத் துளிக் கோலங்கள்
விழி முனைகளில் உதிர்ந்து விழும் கனவுகளின் மிச்சங்கள்
இலைத் தொலைத்த மரங்கள் கருகி தொங்கும் கிளைகள்
இதயச் சுவர்களில் மெல்ல படியும் வெறுமையின் எச்சங்கள்
வீதியோரம் வெளிறிய புற்செடிகளின் நடனங்கள்
தூரச் சூரியனின் கதகதப்பு தேடும் தேகத்தின் தாகங்கள்
இணைத் தேடும் பறவையின் காதல் பரபரப்பு
இனம் புரியாத எதோ ஒரு பரிதவிப்பு
அந்தியில் பூக்கும் பனிதேசத்து வானம்
மனதோரம் அழுத்தும் ஒரு வித பாரம்
மேகம் போர்த்திய விண்வெளி
தூக்கம் கலைந்த பின்னிரவு
கட்டியணைத்து காமம் தெளிக்கும் குளிர்
கசங்கிய போர்வைக்குள் தீயென தகிக்கும் தனிமை
முத்தமிட்டு மோகம் விதைக்கும் பனிக்காற்று
தொட்டு விடும் தூரத்தில் என் ஆசைகள்
சில்லென சில்லென பனிமழை....
இன்னொரு இரவு....இன்னும் நீளுகிறது....
பனித்தேசத்தின் பக்கங்கள் கையொப்பம் கேட்க...
வெற்று தாளாய் இந்தப் பக்கமும் புரண்டு ஓடுகிறது...

Saturday, August 01, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 5

தென்கிழக்கு வாசமல்லி - 4

மழை எல்லாம் ஓய்ஞ்சுப் போய் இரண்டு வாரம் முடிஞ்சு போச்சு... கல்லூரி திறக்க ஒரு வாரம் இருந்துச்சு..வீட்டை விட்டு வெளியேவே வர்றல்ல... வியாழக்கிழமை சாயந்திரம் வீட்டு வாசல்ல சைக்கிள் மணி சத்தம் கேட்டு ஜன்னல் வழியாப் பாத்தேன்..அங்கே வைத்தி நின்னுகிட்டு இருந்தான்...

அடுத்த பத்தாவது நிமிசம் வைத்தி சைக்கிளை வேகமா மிதிக்க நான் பின்னாடி உக்காந்து இருக்க..கிரவுண்ட் பக்கம் போய் சேர்ந்தோம்... வைத்தி பாக்கெட்டில் இருந்து எடுத்து பத்த வச்ச சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்துட்டு என் கிட்ட கொடுத்தான்..நானும் என் பங்குக்கு நிதானமா ஒரு இழுப்பு இழுத்தேன்...

"நாளைக்கு தலைவர் படம் ரிலீஸ்...டிக்கெட் சொல்லிட்டேன்...காலையிலே 11 மணி ஷோ....நீ இல்லாம இப்போ வரைக்கும் தலைவர் படம் மொத நாள் மொத ஷோ நான் பாத்தது கிடையாது...."

"பேனர் எல்லாம் சொல்லியாச்சா...?"

"ம்ம் சொல்லியாச்சு..ஸ்டார் கட்டுறான்வ நம்ம பையல்வ...பாளையங்கோட்டை பாயும் புலி மன்றம்ன்னா சும்மாவே...அதிர விடணும்ல்லா"

மாத்தி மாத்தி சிகரெட்டை இழுத்து விட்டதுல்ல புகையோடச் சேந்து உள்ளுக்கு இருந்த பகையும் வெளியே போயிருச்சு...மனசு லேசான மாதிரி இருந்துச்சு...நிலா நடு வானத்துக்கு வர்ற வரைக்கும் வைத்தியும் நானும் ஊர் சுத்தித் திரிஞ்சோம்...சூடா ஒரு டீயை போட்டுட்டு அப்படியே பேரின்ப விலாஸ் தியேட்டர்ல்ல போய் தோரணம் கட்டுற அழகை எல்லாம் பாத்து ரசிச்சுட்டே நின்னோம்....தலைவர் பட ரிலீஸ்ன்னா தமிழ்நாட்டுக்கே திருவிழாவாச்சே... திருநெல்வேலி சீமை மட்டும் சும்மாவா என்னா...

போஸ்ட்டரில் தலைவர் வேட்டி சட்டை நெத்தியில் பட்டை கழுத்தில் உத்திராச்சக் கொட்டை எனப் பட்டயக் கிளப்பிகிட்டு இருந்தார்...

நானும் சரி வைத்தியும் சரி மறந்து கூட அவளைப் பத்தி அதுவரைக்கும் ஒரு வார்த்தைக் கூட பேசல்ல...நான் ரொம்ப கவனமா இருந்தேன்...வைத்தி என்னை விட கவனமா இருந்தான்...ஒரு கட்டத்துல்ல எல்லாத்தையும் பேசி தீத்துட்டு என்னப் பேசுறதுன்னு புரியாம வைத்தியும் நானும் ஆளுக்கு ஒரு புறம் நிலாவைப் பாக்க ஆரம்பிச்சோம்...

"அந்த நிலா...நம்மளைப் பாக்குதுடா வைத்தி...." நான் தான் முதல்ல பேச ஆரம்பிச்சேன்...

"இல்லலே...அந்த நிலா உன்னியத் தான் பாக்குது... அதுக்கு நான் இருக்கதே தெரியாதுல்ல" வைத்தி சொன்ன பதில் எனக்கு சட்டுன்னு பிடிபடல்ல..

"எலேய் வைத்தி...நிலாவுல்ல இருக்க கறை உன் கண்ணுக்குத் தெரியுதாடே...நல்லாப் பாத்து சொல்லுடே.." நான் விடாமல் வைத்தியை வம்புக்கு இழுத்தேன்..

"ஏப்பூ...நிலாவுல்ல குறையுமில்ல...கறையுமில்ல... பாக்குறவன் கண்ணுல்ல தான் கோளாறு இருக்கு....நிலான்னா அழகுலே...அம்சம்லே....ரசிக்க பழகுலே...."

"ஏ வைத்தி என்ன பேச்சுல்ல ஒரு உள்ளர்த்தம் வச்சே பேசுற மாதிரியே இருக்கு....என்ன சொல்ல வர்ற"

"பொடியுமில்ல வெடியுமில்ல..வெங்கயாம்...நான் சுத்தி வளைக்காம விசயத்துக்கு நேராவே வருதேன்... நீ எல்லாம் ஒரு மனுசனால்லே....ஊத்தவா பயலே.." சடக்குன்னு வைத்தி கேட்ட கேள்வியிலே ஒரு கணம் திகைச்சுப் போயிட்டேன்.. என் திகைப்பு அடங்குறதுக்குள்ளே அவன் மறுபடியும் பேச ஆரம்பிச்சுட்டான்...நான் ஒண்ணு நினைக்க வைத்தி ஒண்ணு நடக்க...எதோ ஒண்ணு நடக்க என்னமோ ஆகி போயிருச்சுன்னு வைத்தி பேசி முடிக்கும் போது தோணுச்சு...

என் மனசு ரொம்ப தெளிவாயிருந்துச்சு... எனக்கும் வைத்திக்கும் இருந்த பிணக்கு தீந்த சந்தோசம் ஒரு புறம்ன்னா மறுபுறம் இன்னொரு சந்தோசம்...அந்த சந்தோசத்தை வார்த்தையிலே எப்படி விவரிக்கறதுன்னு எனக்கு இப்போக் கூட பிடிபடல்ல...

"லேய்...அவளை நான் விரும்புனது உண்மை....நீயும் அவளை விரும்புறன்னு தெரிஞ்சதும் கொதிச்சது உண்மை..அதுல்ல நீ என்னை நக்கலடிச்சதுல்ல எனக்கு கோபம் கிளை விட்டு கிளம்புனதும் உண்மை..ஆனா இதை எல்லாம் விட பெரிய உண்மை என்னன்னா.. அவ என்னை விரும்பல்லங்கறது தான்....அது தெரிஞ்சப்போ அப்படியே நொறுங்கி போயிடுச்சு நம்ம மனசு....அண்ணாச்சி ஓயின் ஸ் பார்ல்ல இருக்க டேபிள் நனைய நனைய தண்ணியப் போட்டு அழுதேன் தெரியுமா.....அதுவும் தனியா...ஒருத்தனுக்கு காதல் தோல்வின்னு சாய்ஞ்சு அழுவுறதுக்கு தோள் கொடுக்கறவன் தான் உண்மையான நண்பன்...ஆனா எனக்கு நண்பனே வில்லனா போயிட்டானேன்னு விடிய விடிய வாட்டர் பேக்கேட் பிழிய பிழிய பீல் பண்ணேன்லே...."

வைத்தியும் என்னை மாதிரி தான் அவளை விரும்பியிருக்கான்...பாவம் பைய. நான் தான் கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கணும்..ஆனா என்னப் பண்ணுறது காதல்ன்னு வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாமல்லா போவுது... வைத்தி பேச பேச அவன் மேல எனக்கு நட்பு பொங்கி வழிந்தது...

"லேய்...மொதல்ல நான் ரொம்ப நம்பிக்கையாத் தான்லே இருந்தேன்...கல்யாணம் எல்லாம் எந்த மண்டபத்துல்ல வைக்கிறது... சமையலுக்கு யார்....கல்யாணத் துணி எல்லாம் கூட போத்தீஸ்ல்ல எடுக்கணும்...எனக்கு என்ன கலர்...அவளுக்கு என்னக் கலர்ன்னு ..ப்ச்..மொத்தமும் கெணத்துல்ல விட்டெரிஞ்ச கல்லாப் போயிருச்சு..அன்னிக்கு அவ அழுதுகிட்டே வந்து என் தங்கச்சிகிட்டே நின்னப்போ....அதுக்கு அப்புறம் அவப் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என் கனவு கோட்டைக்கு வச்ச் ஒவ்வொரு களவெடிலே...."


வைத்தி பேச பேச மனசுக்குள்ளே ஒரு பக்கம் பட்டாம்பூச்சியும் இன்னொரு பக்கம் கரப்பான் பூச்சியும் ஊர்ந்துகிட்டு இருந்துச்சு...

"லேய் மன்னிச்சுக்க... நம்ம ஊர் எருமை மாட்டுக்கும் உனக்கும் ஒரே கலர்...நான் வெளுப்பு இல்லன்னாலும் உன்னியவிட எட்டு மடங்கு கலர்...இதை நீயே ஒத்துக்குவடே...அப்புறம் சிரிப்பு அப்படின்னா என்னன்னே தெரியாத ஒரு முகம்...கலைச்சு விட்ட தலை முடி....உர்ர்ன்னு ஒரு பார்வை....இப்படி ரொமான் ஸ்க்கு கொஞ்சமும் செட் ஆகாத பைய நீ....இதுக்கு எல்லாம் அந்த பிள்ளையை தேம்பி தேம்பி அழ வைக்குற மாதிரி அப்படி ஒரு நாற பேச்சு வேற பேசியிருக்கே...."

நான் பேசுனது எல்லாம் வைத்திக்கு தெரிஞ்சு இருக்கு.... மூக்களகிக்கு வேற தெரிஞ்சுப் போச்சுன்னு தெரிஞ்சுகிட்டேன்...அவ நேரா அங்கே போய் தான் அழுதுருக்கா....அதுவும் தேம்பி தேம்பி அழுதுருக்கான்னு தெரிஞ்சதும் மனசுல்ல அப்படியே எதோ ஒண்ணு உருகி ஓட ஆரம்பிச்சது...

"எங்கிட்டோ போற எவனோ நம்ம பத்தி தப்பாப் பேசிட்டான்னு வை... அவனைத் திருப்பி திட்டிபுடுவோம்...இல்ல அவன் நாக்கை அறுத்து அவன்ட்டேயே கொடுத்துரணும் ஒர்ரு கோவம் தான் வரும...ஆனா அழுகை வராதுல்லா...அவளுக்கு அழுகை வந்துருச்சு...அதுவும் நிக்காம தேம்பி தேம்பி அழுகுறா....மனசு தாங்கல்லலே....."

வைத்தி என் முகத்தை உத்துப் பாத்துகிட்டே பேசுனான்..என் தொண்டைக் குழிக்குள்ளே பந்து மாதிரி எதோ ஒண்ணு உருண்டு உருண்டு ஓடுது... பேச்சு குழல்ல எதோ அடைப்பு வந்தாப்புல்ல நான் அப்படியே தலையைக் கவுத்துகிட்டேன்...

"அப்பா திட்டுனா கூட அழுவாத பிள்ளையாம்.... எட்டூர் போய் என்னவெல்லமோ சேம்பியன் சிப் வாங்குன பிள்ளையாம்....நம்ம இந்திரா காந்தி அம்மா பேரை அந்தப் பிள்ளைக்கு எதுக்கு வச்சாங்களோ அந்தப் பேருக்கு ஏத்த மாதிரியே திடமா நிக்கற பிள்ளை....அந்தப் பிள்ளைய கண் கலங்க வச்சுட்டீயே வெங்கப் பயலே...அங்கிட்டு இங்கிட்டுன்னு நான் காவாலித் தனம் பண்ணியிருக்கலாம்.... நீ அந்தப் பிள்ளை கிட்ட சொன்ன மாதிரி நான் பொறுக்கி பய தான்ன்னு வச்சுக்குவோம்லே.... ஆனா அந்தப் பிள்ளை தேவதை மாதிரிலே....பொறுக்கிக்குக் கூட பொசுக்குன்னு உள்ளுக்குள்ளே மல்லிவாசம் தான் வீசும் அந்தப் புள்ளையைப் பாத்தா... எனக்கும் அப்படி தான் ஆச்சு....."

இதைச் சொல்லும் போது வைத்தியின் குரல் கொஞ்சம் நடுங்கிப் போயிருச்சு...வைத்தி தோள் மேல என் கையைப் போட்டு மெதுவா அழுத்துனேன்...

"ம்ம்ம் ஆனது ஆச்சு...பாதி ராத்திரி வரைக்கும் அடிச்ச சரக்கு தெளிஞ்சு வெளிச்சத்துல்ல யோசிச்சேன்...இந்தாக் காலையிலே ஆத்துல்ல போய் ஒரு குளியல்ல போட்டேன்...எப்படி பாத்தாலும் நீ யாருடா? நம்ம பைய.....உன் சந்தோசம் தான் என் சந்தோசம்... நல்லா இருந்துட்டு போ....கொஞ்சம் குத்தும் அப்புறம் குடையும்... இன்னொருத்தி வந்து மாமனுக்கு கஞ்சி காய்ச்சு ஊத்துனா என் மனசு ஆறிடப் போவுது...அப்படின்னு தேத்திக்கிட்டு சைக்கிளை எடுத்துட்டு உங்க வீட்டுக்கு காலையிலே வந்து சேந்துட்டேன்..."

காலையிலே நாலு மணி வரைக்கும் தூக்கம் வர்றல்ல... அப்புறம் முடிவு பண்ணேன்... தப்பெல்லாம் என் பேர்ல்ல தான்... அப்படி பேசி இருக்க கூடாது.... மன்னிப்பு கேட்டுரணுப்பா... நாளைக்கு விடிஞ்சதும் முதல் வேலையே அது தான்.... தீர்மானம் பண்ணிட்டு படுத்து தூங்கி போனேன்...

காலையிலே எந்தரிச்சு மல்லி செடிக்கு கொஞ்சம் கூடுதல் கவனிப்பு எல்லாம் முடிச்சுட்டு...சைக்கிள் எடுத்துட்டு அவப் பாட்டு கிளாஸ் போயிட்டு வர்ற வழியிலே போய் நின்னேன்..... கிளாஸ் முடிச்சுட்டு வர்ற வரைக்கும் காத்துகிட்டு நின்னேன்... ஒரு நாலு சிகரெட் புகைச்சு முடிச்சேன்...

"அவளுக்கு தில்லியிலே எதோ காலேஜ்ல்ல இன்டர்வியூ வந்துருக்காம்.... நேத்து சாயங்காலம் மதுரைக்குப் போயி..அங்கிருந்து பிளேன் பிடிச்சு சென்னை போய் அப்படியே தில்லி போறதாச் சொன்னா.....இந்நேரம் தில்லி போயிட்டு இருப்பான்னு நினைக்கிறேன்....." வெக்கம் ப்ளஸ் கெத்து ரெண்டும் கெட்டு மூக்களகி கிட்ட விசாரிச்சு அறிஞ்ச விவரம் இது....அவ திரும்பி வருவாளா...எப்போ வருவா.... எதுவுமே மூக்களகிக்குத் தெரியல்ல...அவத் தெரிஞ்சக்கவும் இல்ல...

அடுத்த சில நாட்கள்ல்ல அவங்க வீட்டை யாரோ ஒரு ஆளுக்கு வாடகைக்கு விட்டிருப்பதா அம்மா சொல்லித் தெரிய வந்துச்சு...அவங்க குடும்பம் திரும்பவும் தில்லிக்கே போயிட்டதாகவும் ஊருக்கு வர்ற திட்டத்தை இன்னும் கொஞ்ச வருசங்களுக்குத் தள்ளிப் போட்டிருப்பதாகவும் பேச்சு வாக்குல்ல அங்கே இங்கே காதுல்ல விழுந்துச்சு...

அவக் கிட்ட நான் கேக்க நினைச்ச மன்னிப்பு எனக்குள்ளேவே பத்திரமா பொதிஞ்சு வச்சிருந்தேன்...அவ நட்டு வச்சு நான் தண்ணி ஊத்தி வளத்த மல்லி செடி நிறைய பூக்க ஆரம்பிச்சது... அந்த வாசம் தினமும் மனசையும் வேலியோரத்தையும் நிறைச்சு வச்சது.... பூவரசம் மரப் பொந்து பக்கம் ஒரு மரங்கொத்தி பறவை ஒண்ணு வந்து கொத்து கொத்துன்னு கொத்திகிட்டு இருந்த அழகை ரசிச்சிட்டு இருந்த போது தான்..பொந்துல்ல இருந்து தலை நீட்டுன அந்த வெள்ளை கவர் கண்ணுல்ல பட்டுச்சு...

சில சமயங்களில் மெளனம் கூட நல்ல இசையாவது உண்டு.... அதை ரசிக்க தெரிய வேண்டும் அவ்வளவு தான்....

நான் மிகவும் ரசிக்கும் கச்சேரி உன் மவுனங்களே..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன் ரஞ்சனி பிரியதர்ஷினி

(Sometimes silence can be musical..you need to listen to it
My most admired music is your silence
Happy Birthday - Love Ranjani Priyadarshini)

ஆங்கிலத்துல்ல இருந்த அந்த வரிகளை திரும்ப திரும்ப படிச்சேன்.....

காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் கடவுளின் மிகச் சிறந்த பரிசுகள்....( TO LOVE AND TO BE LOVED ARE GOD'S MOST VALUED GIFTS TO A MAN)

பூவரசம் மரத்தின் அடியில் காம்பஸ் வச்சு செதுக்கி வச்சேன்....

பல வருசத்துக்கு முன்னாடி செதுக்குனது...இன்னும் அப்படியே இருக்கு அந்த மரத்துல்ல.... அந்த பர்த்டே அதுவும் தான் அப்படியே இருக்கு.... கொஞ்சம் பழுப்பேறி போச்சு...பரவாயில்ல...என் முதல் காதலின் அடையாளம் ஆச்சே அது.... அப்படி பழசை எல்லாம் நினைச்சுகிட்டே பூவரசு மரத்தடியிலே ரொம்ப நேரம் நின்னேன்.... லேசா தூறல் போடவும் அப்படியே பொடி நடை போட்டு வீட்டுக்குள்ளே போய் டிவியைப் போட்டேன்....

"ஏரிக்கரை பூங்காற்றே.. நீ போற வழி தென்கிழக்கோ....தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடி ஒரு சேதி சொல்லி...." தூறல் நின்னுப் போச்சு படத்து பாட்டு ஓடுச்சு... முகத்துல்ல ஒரு சிரிப்போட நானும் அந்த பாட்டை பாத்து ரசிச்சேட்டு இருந்தேன்...

TO LOVE AND TO BE LOVED ARE GOD'S MOST VALUED GIFTS TO A MANஎன்னையுமறியாமல் என் உதடுகள் முணுமுணுத்தன..

(தென்கிழக்கு வாசமல்லி இப்பகுதி இத்தோடு முடிகிறது....மீண்டும் என் வாழ்க்கையில் இந்த மல்லி வாசம் வீசியது.. வேறொரு சூழலில் வேறொரு சந்தர்ப்பத்தில் சமயம் கிடைக்கும் போது அதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.. இப்போதைக்கும் முற்றும்... நன்றி)

Tuesday, June 09, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 4

தென்கிழக்கு வாசமல்லி - 3

வைத்தியநாதன் எனக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சக் காலத்துல்ல இருந்து எனக்கு நண்பன்..என் மனச்சாட்சிகிட்ட சொல்லாம மறைக்க நினைச்ச எத்தனையோ விசயங்களைக் கூட நான் வைத்திகிட்ட மறைச்சது இல்ல...அவன் தங்கச்சி மூக்களகியைக் கூட எனக்காக கை ஓங்கி வைத்தி அடிச்ச சம்பவம் நிறைய இருக்கு...

வைத்திக் கூட சேர்ந்து செஞ்ச ஒவ்வொரு விஷ்யமும் என்னையும் மீறி என் கண்ணுக்குள்ளே வரிசை கட்டி நிக்க ஆரம்பித்தன...முப்பது கிலோ மீட்டர் தாண்டி போய் டென்ட் கொட்டாயிலே முதல் முதலா பலான படம் பார்த்தது...அவங்க மாமா சிகரெட்டை மாத்தி மாத்தி அடிச்சு முதல் தம் அனுபவம் பெற்றது...சரக்கு அடிக்க ஒரு வாரமாக் காசு சேர்த்து பத்தாமப் போய் மூக்களகி கொலுசை சுருட்டி வித்து என் முதல் தண்ணி பந்தல் அமைச்ச வள்ளல் என் வைத்தி....ச்சே ஒரு பொண்ணுக்காக போய் அவன் மேல கையை வச்சுட்டோமேன்னு ஒரு பக்கம் மனசு லேசா வலிக்க ஆரம்பிச்சது...

இங்கேயே இருந்தா ஒரு நிலையிலே மனசு நிக்காது...அப்படியே டவுண் பஸ் ஏறி தென்காசி வரைக்கும் போயிட்டு வருவோம்...மனசு அமைதியாகிரும் அப்படின்னு ஒரு கணக்கு போட்டுட்டு பஸ் ஸ்டாண்ட் பார்த்து நடக்க ஆரம்பிச்சேன்...டீ கடையிலே போய் ஒரு தம் போட்டுட்டு ஒரு டீயும் அடிச்சுட்டு போலாம்ன்னு டீ கடை பக்கம் ஒதுங்குனேன்...

டீயைச் சூடா தொண்டைக்குள்ளே இறக்கிட்டு ரோட்டை வேடிக்கைப் பாத்துகிட்டே நின்னேன்... சல்லுன்னு என்னைத் தாண்டி ஒரு டிவிஎஸ் 50 தாண்டிச்சு....புழுதி கிளப்பிட்டுப் போன வண்டி சந்தேகமில்லாமல் வைத்தி வீட்டு வண்டி தான்...வண்டியிலே போனது வைத்தி...பின்னாடி உக்காந்துப் போனது அவளே தான்....மிச்சமிருந்த டீயை சடக்குன்னு வந்த கோபத்திலே தூர எறிஞ்சுட்டு வண்டி போன பக்கம் எரிச்சலாப் பாத்துட்டு நின்னேன்...

"தம்பி டீ காசு ஒண்ணே காலைக் கொடுப்பா.." டீக்கடைகார் அண்ணன் குரல் கேட்டு பாக்கெட்டில் கை விட்டு காசைத் துழாவி எடுத்து கொடுத்தேன்...

தென்காசி பிளானைக் கேன்சல் பண்ண்ட்டு ஆத்திரமா வீட்டைப் பார்த்து திரும்பி நடந்தேன்...ம்ம்ம் கிரவுண்ட்க்குத் தான் போயிருப்பான்..அங்கே தான் வண்டி ஓட்டச் சொல்லித் தர முடியும்..அங்கேயே போய் பாத்துருவோம் அப்படின்னு கிளம்பினேன்..

நாலு ஆள் ஆச்சு சரியா தூங்கி....ப்ச்...என்னா அடி தெரியும்ல்ல....விளையாட்டுன்னா அதுல்ல இவ்வளவு கோவம் ஆகாது...பாவம் பையன்...." அம்மாவின் குரலைக் கேட்டு கட்டிலில் இருந்து உடம்பை கஷ்ட்டப் பட்டு நகத்தி ஜன்னல் பக்கம் தலையை நீட்டுனேன்.

பக்கத்து வீடு கிட்டத்தட்ட முடியற நிலைக்கு வந்துருச்சி...இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நாள்ல்ல பால்காய்ப்பு இருக்கும்ன்னு நினைச்சுகிட்டேன்...அம்மா என் கதையைத் தான் பிரசங்கம் பண்ணிகிட்டு இருக்காங்கன்னு நல்லா புரிஞ்சது...அவளும் அங்கே இருக்காளான்னு ஜன்னல்ல எவ்வளவு முடியுமோன்னு அவ்வளவு தலையை நெளிச்சுப் பார்த்தேன்...நீலத் துப்பட்டா காற்றில் ஆடியது தெரிந்தது அவளும் அங்கேத் தான் இருந்தா...

"மேட்ச்ல்ல தோத்துட்டாங்கன்னு தனியா வந்த இவனை பனை மட்டையிலே போட்டு விளாசு விளாசுன்னு விளாசி இருக்கான்வ...முதுகுல்ல பட்டை பட்டையா தொலி உரிஞ்சு...இப்போத் தான் கொஞ்சம் பரவாயில்ல...ஆனா ரொம்ப சிரமப்பட்டுட்டான்...."

அச்சோ அய்யோ என அக்கறையாய் விசாரிப்புகள் தொடர்ந்தன..அதுல்ல ஒரு அச்சோவாச்சும் அய்யோவாச்சும் அவ சொல்லியிருப்பாளான்னு காதைத் தீட்டிக் கேட்டும் என்னாலக் கண்டுபிடிக்க முடியல்ல..

முதுல்ல வலி பின்னி எடுக்க குப்புற படுத்துட்டு கண்ணை மூடிகிட்டேன்....எப்போ தூங்குனேன்...எப்படி தூங்குனேன்னு தெரியாமலே தூங்கிப் போயிட்டேன்...லேசான மல்லிகை வாசம் சித்தம் துளைக்க முழிப்பு தட்டுனப்போ ஜன்னல் வெளியே வானம் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறி போயிருந்தது

ம்ம் மணி ஆறாகியிருக்கும்...மல்லி வாசம் எங்கே இருந்து வருதுன்னு ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தேன்...அந்த மல்லி கொடியிலே அங்கே ஒண்ணும் இங்கெ ஒண்ணுமா மொட்டு எல்லாம் மெல்ல விரிஞ்சு கிடந்துச்சு..வலியையும் மீறி ஒரு புத்துணர்வு வந்துச்சு அப்படி ஒரு அழகானக் காட்சி அது...ஒரு துண்டை எடுத்து மேலுக்குப் போத்திட்டு கீழே போய் நின்னேன்...அப்பா மல்லி வாசம் என்ன ஒரு அற்புத வாசம்...மூச்சை நல்லா இழுத்து மல்லி வாசத்தை எனக்குள்ளே இழுத்துகிட்டேன்...

"ம்ம்ம்ஹும்..."

"ம்ம்ம்கூம்"

"ம்ம்ம்ம்ம்ம்கூஊஉம்"

"காதுல்ல கூட செம் அடி போலிருக்கு....சுத்தமாப் போயிடுச்சு போல..." சுளுக்குன்னு ஒரு சிரிப்பு சத்தம் வேற உசுப்பு ஏத்த பொட்டியை உரசுன வத்திகுச்சி மாதிரி சர்ன்னு திரும்புனேன்..பூவைப் பாத்து புயல் வணக்கம் வச்சு பாத்து இருக்கீங்களா...அப்படி ஒரு காட்சி அங்கே நடக்க இருந்துச்சு..ஆனா ஒரு சின்ன இடைவெளியில் நடக்காமல் தடுக்கப்பட்டது....

ரேடியோவில்ல சிம்புவோட அப்பா பொன்னான மனசே பூவான மனசே நீ வைக்காத பொண்ணு மேல ஆசன்னு பாடிகிட்டு இருந்தார்....பொல்லாத மனசு எங்கே அறிவுரையைக் கேக்குது.... ஒத்த சடைப் போட்டு தோளுக்கு முன்னாடிப் போட்டிருந்தா அதுல்ல நீளாமா மல்லிகை பூ....பாவாடைத் தாவணியிலே தாமிரபரணியின் சலசல குளிர்ச்சியோடு மலர்ச்சியா நின்னுட்டிருந்தா... பத்த வச்ச பூவாணாம்...பூக்காம புஸ்ஸாகிப் போனப்புல்ல என் கோபம் நான் எவ்வளவோ தடுத்தும் என்னைக் கேக்காம வெளிநடப்பு செய்துகிட்டு இருந்துச்சு....

மொத்தக் கோபத்தையும் ஒத்தச் சிரிப்புல்ல ஊதி தள்ளிட்டா....இருந்தாலும் கெத்து குறையாமல் போலி முறைப்பு காட்டிட்டு அவளைப் பாத்தேன்...

"ம்ம் யாராவது அப்பாவி சிக்கிட்டா....சப்புன்னு அடிச்சு தான் வீரன்ன்னு நினைப்புல்ல திரியறது...அப்புறம் உண்மையா அடிதடிக்கு அஞ்சாதவங்க வந்தா...அடி உதைன்னு வாங்கிட்டு ஆஸ்பிட்டல் போய படுக்குறது.. இதெல்லாம் என்ன சங்கதியோ...."

"அப்பாவியா...யாரு அப்பவி?" அணையப் போன கோப தீயில் அவப் பேச்சு எண்ணெய் விட்டது போலிருந்துச்சு...

"வைத்தி தான்....பாவம் வைத்தி...தெரியுமா?"

"நிப்பாட்டிட்டு கிளம்பிரு....போதும்" வலி அதிகமா இருந்தும் இரண்டு கைகளையும் தூக்கி அவளைக் கும்பிட்டு தான் கேட்டேன்....

"ஒண்ணு அடி தடி இல்லைன்னா கும்பிடா..." மறுபடியும் அதே சிரிப்பு...

"போதும் போயிரு...." என் குரல்ல இருந்த கடுமை எனக்கே ஆச்சரியமா இருந்தது..

"போகல்லன்னா.. என்ன பொம்பள பிள்ளை தானே....வைத்தி மாதிரி அப்பாவியா வாங்கிட்டு போயிருவேன்னு நினைப்பா.... கராத்தே பழகி இருக்கேன்..பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன்.....தெரிஞ்சுக்கோ.." அப்பவும் அவ சிரிச்சுகிட்டே தான் சொன்னா..

"சரிடீ... கேக்குது... உனக்கு உன் தாவணியைப் பிடிச்சிட்டு பின்னாலே வரதுக்கு அந்த வைத்தி தான் லாயக்கு... அவன் அப்பாவி தான்.... இப்போ என்னை வெறுப்பு ஏத்தறதை விட்டுட்டு அவனைத் தேடிப் போறீய்யா..." எப்படியோ என் கோபத்தை கொட்டி தீர்த்த திருப்தி எனக்குள்ளே வந்துச்சு....

"என்னச் சொன்ன..... வைத்தியைத் தேடிப் போகணுமா... தப்பா பேச வேணாம்... சொல்லிட்டேன்..." முதல் முறையா அவ முகத்துல்ல சிரிப்பு தொலைஞ்சுப் போயிருந்துச்சு....எனக்கு லேசா சிரிப்பு வந்துச்சு..

"ஆமா..அவன் கிட்டத் தான் போகச் சொன்னேன்.... ரெண்டு பேரும் சேந்து தானே வண்டியிலே ஒட்டிகிட்டும் உரசிகிட்டும் வீதி உலா வந்தீங்க.... என்னா சிரிப்பு.... என்னா நெருக்கம்...."

"என்னப் பேசுறன்னு புரிஞ்சு பேசுறீய்யான்னு யோசிச்சுக்கோ..." அவ முகத்தில் சிரிப்பு சுத்தமாப் போய் ஒரு இறுக்கம் நிறைஞ்சு இருந்தது..

"ஆமா எல்லாம் தெரியுது... உங்க தில்லியிலே எப்படின்னு தெரியாது... இங்கே ஒருத்தன் கூட ஒருத்தி சுத்துன்னா அது தான் அர்த்தம்...அதுவும் வைத்தியைப் பத்தி உன்னை விடஎனக்குத் தெரியும்...உன்னை என்ன எல்லாம் பண்ணியிருப்பான்னும் .. தெரிஞ்சுக்க முடியும்..அந்தக் கேவலப் பொழப்பு எனக்கு வேணாம்...போயிரு..."

ஆத்திரத்தில் பொங்குவாள்ன்னு பாத்தா..பொல பொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா.....சொன்ன சொல்லைப் பத்தி நினைக்கல்லன்னாலும் அவ அழுதது என்னமோ மாதிரி ஆயிடுச்சு...அப்பவும் கூட எனக்கு அவ மேல கோபம்ன்னு சொல்ல முடியாது..வைத்தி மேலத் தான் கோபம்... வைத்தியை அவ மெச்சுனது தான் கோபம்... அந்தக் கோபத்துக்கான காரண காரியங்களை ஆராயுற மனசுல்ல நான் அப்போ இல்லை...
அவ அழறதைப் பாக்க பிடிக்காம நான் திரும்பிகிட்டேன்....

எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கேத் தெரியாது.... நான் திரும்பி பாக்கும் போது அவ அங்கே இல்லை....அந்நேரத்துக்கு நான் சந்தோசம் தான் பட்டிருக்கணும்.... ஆனா மனசு ஒரு ஓரமா வலிச்சது...அந்த வலி அப்படியே மனசு முழுக்க பரவ ஆரம்பிச்சது....

ராத்திரி முழுக்கத் தூங்க முடியல்ல... கட்டில்ல புரண்டு உருண்டு படுத்துப் பாத்தேன்..உறக்கம் பிடிக்கல்ல... அவ அழுகையும் சிரிப்பும் மாறி மாறி என் கண்ணு முன்னாடி வந்துப் போச்சு...

அட வெக்கம் கெட்ட விளக்கெண்ணெய்.... அந்தப் புள்ள மேல பிரியமாத் தானே இருக்க அப்புறம் எதுக்குடா அந்தப் புள்ளயைக் கண்ணீர் விட வச்ச.... உள் மனசு சாட்டை சுத்திச்சு... அந்த சாட்டை முனையைப் பிடிச்சு இழுத்த சைத்தான் மனசு... மாப்பி பொம்பளை புள்ள அழுகை எல்லாம் நம்பிராதே... நீ ஆம்பளை.... என்னச் செஞ்சுபுட்ட..... வில்லங்க வைத்தி என்னச் செஞ்சியிருப்பானோ அந்த உண்மையைத் தானே சொன்ன அப்படின்னு சப்பைக் கட்டு கட்டுச்சு...

இரண்டு மனமும் ஒவ்வொரு பக்கம் பிரிஞ்சு கிடக்க... நான் மல்லாந்து விட்டம் பாத்து கண் மூடாம இரவைக் கழிச்சேன்....

காலையிலே செம மழை....கண் முழிச்சி ஜன்னல் வழியாப் பாத்தேன்... மழையடிச்ச வேகத்துல்ல நேத்து பூத்த பிஞ்சு மல்லி செடி முறிஞ்சுப் போய் கிடந்துச்சு...

இன்னும் வாசம் வீசும்

Wednesday, June 03, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 3

தென்கிழக்கு வாசமல்லி - 2

"என்ன மாப்பி...கொஞ்ச நாளா ஒரு தினுசாத் திரியுற...என்ன சேதி..."

"எலேய் வைத்தி...இந்த காதல் காதல்ன்னு சொல்லுறான்வளே அப்படின்னா என்னலே..."

"ம்ம் அப்படிக் கேளு மாப்பி சொல்லுறேன்...தண்ணி அடிக்கும் போது....காரமாக் கொஞ்சம் போல ஊறுகாயை தொட்டு உள் நாக்குல்ல வைக்கும் போது ஜிவ்வுன்னு ஒரு கரண்ட் கிளம்பும் அதை ரசிச்சிருக்கீயோ...."

சரக்கை நினைச்சுகிட்டே உள்நாக்கை மடிச்சு ஊறுகாய் ஞாபகத்தோட வைத்திக்கு ஆமா போட்டேன்.

"வாழ்க்கையே ஒரு போதை மாப்பி...அந்த போதைக்கு ஒரு மகா பக்கப் போதை தான் இந்த காதல்....போதை தீருற வரைக்கும் நீ தான் ராஜா....உலகமே உனக்கு கூஜா......ஆனா மாப்பி எந்த போதையும் ஒரு நாள் இறங்கியேத் தீரும் அது உலக நியதி... காதலும் அப்படித் தான்...சரக்கடிச்ச மறு நாள் காலையிலே எந்தரிக்கும் போது தான் லைட்டாத் தலை வலிக்கும்... ஆனா காதலிச்சா.....விடாமா தலை வலிக்கும்...." ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி முடிச்சுட்டான் வைத்தி...

"வைத்தி...நீ சொல்லுறது குத்து மதிப்பாத் தான் புரியுது...ஆனா காதல்ங்கற மேட்டர் கொஞ்சம் கிக்காத் தான் இருக்கும் போல இருக்கு....கொஞ்ச நாளா இந்த எளையராஜா போடுற பாட்டெல்லாம் என்னை மனசுல்ல வைச்சே போடுற மாதிரி இருக்கு...அப்புறம்....பள்ளியூடத்துல்ல புரியாத பாரதியார் கவிதை எல்லாம்....இப்போ விளக்கமா விளங்குற மாதிரி இருக்கு...முக்கியமா இப்போ எல்லாம் இந்த பேர் அன்ட் லவ்லி வெளம்பரம் எனக்கு ரொம்பப் புடிக்குதுடா.."

"உன் மாமன்வளுக்கு எல்லாம் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் காதலிக்கற வயசுல்ல பொண் பிள்ளையே கிடையாது..அப்புறம் எப்படி... காலேஜ்ல்ல கூட எல்லாப் பிள்ளையளும் நீ வரது தெரிஞ்சுடுத்துன்னாத் தெறிச்சுன்னா ஓடரதுகள் .... எப்படிப் பாத்தாலும் உனக்கு இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே...." வைத்தி கன்னத்தில் கை வைச்சு குத்த வைத்தான்

"லேய் வைத்தி...என் மாமன்வளுக்கு பிள்ளையல்வ இருந்தாலும் நாங்க லவ் எல்லாம் பண்ணிர மாட்டோம்.. நமக்குன்னு ஒரு லெவல் இருக்குல்லா...காலேஜ்ல்ல மீனாவும் ரம்பாவும் படிக்கிறாள்வ...நாங்க லவ் பண்ணுறதுக்கு பைக் எடுத்துட்டு கிளம்ப...போடா"

"மாப்பி... அதுகளும் அஜித் விக்ரம்ன்னு ஆசப் பட்டதாத் தான் சொல்லிட்டுத் திரியரதுகள்....நக்கல்.. மகா நக்கல் பிடிச்சதுகள்..."

"எவளுக்குமே அசராத என்னைய அவ ரொம்பவே அசைச்சு பாத்துட்டா வைத்தி...சும்மா ஒரு மின்னல் பொண்ணா வந்தப்பால்ல இருக்கு அவ நடவடிக்கை எல்லாம்...அப்படி ஒரு துறுதுறுப்பு குறுகுறுப்பு,,,அழகுல்ல லேசா வீரா படத்துல்ல வர்ற மீனா மாதிரி இருக்கா...மாடர்ன் ட்ரெஸ் போட்டா நதியா மாதிரி இருக்கா....லவ்ன்னு ஒரு வில்லங்கத்தைப் பண்ணா அவளைத் தான்டா பண்ண்ணும்ன்னு ஒரு தீர்க்கமான முடிவுக்கே வந்துட்டேன்டா"

"மாப்பி...ஆரம்பத்துல்ல அப்படித் தான் இருக்கும்..ஆறாங்கிளாஸ் படிக்கறச்சே குஷ்பூ படத்துக்கே தாலிக் கட்டி பொண்டாட்டி ஆக்குனவன் தானே நீ....அப்புறம் மீனா வந்தாப்போ அதே தாலியை மீனா படத்துக்கும் கட்டி பீல் பண்ணல்லயா.... விடு இதுவும் அப்படித் தான்....இன்னிக்கு இவ..நாளைக்கு இன்னொருத்தி...."

"ப்ச் வைத்தி....என் மவனே....என் மனசுல்ல இருக்கதை எப்படி சொல்லுவேன் உனக்கு.....நீயும் நானும் சாரா டக்கர்ல்ல எத்தனையோ பேரைப் பாத்துருக்கோம்... எப்படி எல்லாம் ரசிச்சிருக்கோம்...அதெல்லாம் சும்மா மேலுக்குத் தொட்டுப் போற காத்து மாதிரி இவ அப்படியே உள்ளுக்கு போயிட்டாடா... மூச்சு காத்து மாதிரி முழுசும் நின்னுட்டு இருக்காடே..."

"சரி வா பொழுது சாயறதுக்குள்ளே கிழக்கே பனங்காட்டுக்குள்ளே நல்ல கள்ளு கிடைக்கரதாம் அடிச்சுட்டு விவரமாப் பேசுவோம்..." வைத்தி அழைப்பை ஏற்க முடியாத படி அப்போ ஒரு சம்பவம் ஆகிப் போச்சு.

வைத்தியோட தங்கச்சி மூக்களகி மாலதியும் அவக்கூட சைக்கிள்ல்ல நம்ம தேவதையும் எங்களைப் பாத்து தான் வந்துட்டுருந்தாங்க..அவசர அவசரமாத் தலையைக் கோதிவிட்டுகிட்டேன்.... சட்டையை ஒரு முறை நேரா இழுத்து விட்டுகிட்டேன்...மாலதி நேரா வைத்தி பக்கம் போய் சைக்கிளை நிறுத்தினா...என்னை முறைப்பா ஒரு பார்வை பார்த்தா..மனசுல்ல வைஜெயந்தி ஐ.பி.எஸ்ன்னு நினைப்பு... என்.சி.சியிலே இருந்தா எதோ இந்திய ராணுவத்திலேயே இருக்கர மாதிரி ஒரு மிதப்பு...ஏழாம் நம்பரை திருப்பிக் கொஞ்சம் தட்டி போட்ட மாதிரி ஒரு மூக்கு...அதான் அவளுக்குப் பேர் மூக்களகி..அவளுக்கு நான் அந்தப் பேரை வச்சதால எனக்கும் அவளுக்கும் பல வருச பகை....சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னைக் கவுக்க அவ தவறுனதே இல்லை... இப்போக் கூட அவப் பாத்தப் பார்வையிலே எதோ ஒரு வில்லங்கம் இருக்கற மாதிரியே எனக்குத் தெரிஞ்சது..என் தேவதை மேல நான் தீவிர நோக்கமா இருந்ததாலே மூக்களகியப் பெருசாக் கண்டுக்கல்ல..


"வைத்தி பாட்டு கிளாஸ்க்குப் போற வழியிலே சைக்கிள் பஞ்சர் ஆயிடுத்து..உன் சைக்கிள் கொடு...எங்களுக்கு கிளாஸ்க்கு நேரம் ஆரது,,"

"ம்ம்க்கும் மூக்களகிக்கு வெடிகுண்டு தொண்டை...பேசுன்னாலே தீபாவளி ஆட்டோம் அரை சவுண்டுல்ல வெடிச்ச மாதிரி இருக்கும்,,,இதுல்ல பாட்டு வேறயா...சோகம்டா...எனக்குச் சிரிப்பு கொள்ளல்ல.. நான் நினைச்சதே அவளுக்குக் கேட்டிருச்சுப் போல...

"வெட்டிப் பசங்களோட சுத்தாதே....பீடி சிகரெட் எல்லாம் குடிக்கிற கிராதகப் பசங்களோடச் சேந்தா நன்னாப் படிக்கிற நீயும் நாயாட்டம் போயிடுவன்னு அப்பா சொல்லற மாதிரி ஆயிடப் போற..." என்னைப் பார்த்து மேம்போக்காச் சொல்லுற மாதிரி சொன்னா மூக்களகி

அந்த மூக்குல்ல மொளகாத் தூல் முக்கா கிலோ வாங்கி கொட்டணும் போல எனக்குக் கோபம் பொத்துகிட்டு வந்துச்சு..இருந்தாலும் என் தேவதை பக்கத்துல்ல இருக்குறாளேன்னு அடக்கிட்டு நின்னேன்....

"வைத்தி..இது என் சினேகிதி....பேர்....உனக்குத் தான் தெரியுமே....அவளுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது... அப்படியே உன் சைக்கிள்ல்ல ஓட்டச் சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா..."

"ஓ தாராளமா.... நம்ம ஊருக்கு விருந்தாளியா வந்து இருக்கா.. நாமத் தானே எல்லாம் செய்யணும்...சைக்கிள் மட்டுமில்ல டிவிஎஸ்...இந்த பஜாஜ் சன்னி...இதெல்லாம் கூட ஓட்டச் சொல்லித் தரலாமே ப்ரீயா இருக்கச்சே ஆத்துக்கு அழைச்சுண்டு வா மாலு.."

"ஆமா ஆமா வைத்தி அண்ணன் பெரிய ரேஸ் பைக் டிரைவர்....ஆறு கண்டம் போய் அறுநூறு ரேஸ் ஜெயிச்சுட்டு வந்துருக்கார்...உங்களுக்கு எல்லா வண்டியும் ஓட்டச் சொல்லித் தருவார்... சைக்கிளை வாங்குன நாள்ல்ல இருந்து இன்னி வரைக்கும் முழுசா குரங்கு பெடல் ஒழுங்காப் போட்டது இல்ல...மொக்கச்சாமி இன்னிக்கு என்ன வெளம்பரமாப் பேசுறான் பாருய்யா" வழக்கம் போல எனக்குள்ள என் மன வாய்ஸ் கேட்டது...தேவதை...தேவதை...எக்குத் தப்பா எதுவும் பேசக் கூடாதுன்னு அமைதியாவே நின்னேன்...

அவ என்னடான்னா என்னைத் திரும்பிக் கூடப் பாக்கல்ல வைத்தி என்னவோ பெரிய விஞ்ஞானி மாதிரியும் அவன் விடுற ரீல் எல்லாத்தையும் எதோ புதிய பூகோளத் தத்துவம் மாதிரியும் அப்படி கவனிச்சுக் கேட்டுட்டு இருந்தா....எனக்கு அதுக்கு மேலயும் பொறுக்கல்ல...

"ஏரிக் கரை பூங்காற்றோ ....." பாட்டை மெதுவா விசிலடிக்க ஆரம்பிச்சேன்.... அப்பவும் அவக் கவனிக்கல்ல..சரின்னு கொஞ்சம் வால்யூம் ஏத்தி அடிக்க ஆரம்பிச்சேன்....

"சீ பொறுக்கி...." அப்போ பாத்து அந்தப் பக்கம் வந்த அடுத்த வருச உலக அழகி போட்டிக்கு அப்போக் கிளம்புன எங்க உள்ளூர் குமரிக இரண்டு நான் அதுகளைப் பாத்து தான் விசிலடிச்சேன்ங்கற நினைப்புல்ல என்னத் திட்டிட்டுப் போனாளுக... அந்தத் திட்டு மூக்களகி காதுல்ல விழுந்திருந்தாக் கூடப் பரவாயில்ல... அவ..அதான் தேவதைக் காதுல்ல விழுந்து தொலைச்சிருச்சு...

மூக்களகிக்கு மூக்கு முட்டச் சிரிப்பு... அப்படி சிரிச்சா...பாக்க பயங்கரமா இருந்துச்சு... இவளும் சிரிச்சிருந்தாப் பரவாயில்ல... ஆனா ஒரு மாதிரியாப் பாத்தாளே பாக்கணும்... விசிலை முழுங்கன மாதிரி என் முகம் ஆயிடுச்சு...

"சரி நாங்க கிளம்புறோம்...லேட்டாரது...நீ கிளம்பி ஆத்துக்குப் போய் உன்னையும் யாராது பொறுக்கிக் கூட்டத்தோடச் சேத்துடப் போறா..." மூக்களகி வெற்றி களிப்பில் சைக்கிள் ஏறினாள் கூடவே என் தேவதையும் போனாள்...

"வைத்தி மவனே..உன் தொங்கச்சிக்கு ஒரு நாள் இருக்கு.. மூக்குல்ல மூணு ஆணி அடிக்கப் போறேன் பாரு...."

"விடுரா..சின்ன வயசுல்ல இருந்தே உனக்கும் அவளுக்கு ஆகரதுல்ல...இது என்ன புதுசா?" வைத்தி சைக்கிள் போற திசையில்ல இருந்து இன்னும் கண்ணை எடுக்காமலே என்கிட்டச் சொன்னான்.

"அதுக்குன்னு இன்னொரு பொண்ணு முன்னாடி....இப்படி பண்ணுறது நல்லா இல்ல...."

"ச்சே விடு மாப்பி...அவளும் நம்மாத்து பொண்ணு தான்....அப்படி எல்லாம் உன்னைத் தப்பா நினைக்க நான் விட்டுருவேனா..."

"உங்காத்துப் பொண்ணுன்னா..உனக்குச் சொந்தமா..."

"சொந்தம் மாதிரின்னு வச்சுக்கலாம்...அவ பேர் ரஞ்சனி...ஊர் தில்லி...அப்பாவுக்கு மத்திய அரசாங்கத்துல்ல உத்தியோகம்..ப்ளஸ் டூ முடிச்சிருக்கா... ஐ.ஐ.டிக்கு என்டரண்ஸ் எழுதியிருக்கா...நன்னாப் பாடுவா...பரதம் தெரியும்..சமையல்ல ஒரளவு தெரியுமாம்...எரோனாடிக்கல் படிக்கணும்ன்னு லட்சியமாம்...இப்போ நம்ம ஊருக்கு லீவுக்கு வந்துருக்கா....வீடு கூட கட்டின்டு இருக்கா உங்காத்துப் பக்கத்துல்ல..அது அவ அப்பா ரிட்டையர் ஆனப் பிறகு செட்டில் ஆரதுக்காம்.."

"வைத்தி மவனே இவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சுருக்கே..எப்படிடா?"

"நம்ம மனசுக்குப் பிடிச்சவாளைப் பத்தி தெரிஞ்சுக்கறதுல்ல என்னடா கஷ்ட்டம்"

வைத்தி சொன்னது சரக்குன்னு நடு நெஞ்சுல்ல அரிவாள் எடுத்து கோடு போட்ட மாதிரி எரிஞ்சது...

"டேய் வைத்தி மவனே....நான் காதல் பத்தி உன் கிட்டப் பேசுனது எல்லாம்..."

"ஆமாடா மாப்பி... காதல் ஒரு போதை தான்....இப்படி ஒரு பொண்ணு கூட இருந்தா வாழ்க்கை முழுக்க அந்த போதையிலே இருந்துடலாம்டா.... சரி தானே..." நான் சொல்ல வந்த விசயத்தை வைத்தி சொன்னான். அதை வேற ரொம்ப ரசிச்சு கண்ணை எல்லாம் மூடி நெஞ்சுல்ல கை வைச்சு சிலாகிச்சுச் சொன்னான்...

"வைத்தி அந்தப் பொண்ணை நான் லவ் பண்ணுரென்...."

நான் சொன்னதை வைத்தி காதில்ல வாங்குன மாதிரியே தெரியல்ல... ரெண்டு கையையும் நெஞ்சுல்ல வஎய்ச்சுகிட்டு ரொம்ப ரொமான்டிக்கா முகத்துல்ல சிரிப்பை எல்லாம் வர வச்சுகிட்டு காதலுக்கு மரியாதை விஜய் மாதிரி போஸ் கொடுத்துகிட்டு இருந்தான். நான் செமக் கடுப்பாயிட்டேன்.

"டேய் வைத்தி மவனே... நான் சொன்னது கேட்டுச்சா..அந்தா அந்த சைக்கிள்ல்ல உன் தொங்கச்சி மூக்களகி கூடப் போறாளே அந்தப் பொண்ணை நான் லவ் பண்ணுறேன்... நீ வேற நல்ல பொண்ணைப் பாத்து லவ் பண்ணிக்கோ நானே வேணும்ன்னா உன் லவ்க்கு உதவி பண்ணுறேன்.. இப்போ போஸ் கொடுக்கறதை நிறுத்திட்டு இறங்கி வா..."

நான் கொஞ்சமும் எதிர்பாக்காத மாதிரி வைத்தி பக பகன்னு சிரிக்க ஆரம்பிச்சான்...

"மாப்பி நீ என்ன லூசாடா... நான் தான் அவளை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டேன்ல்ல.. அப்புறம் வந்து.... இப்படி பேசுற..போ..போய ஆத்துல்ல போய் நான் கொடுத்த தம் நன்னா இழுத்து விட்டு யோசி...உனக்கே புரியும் அவளுக்கு நான் தான் சரின்னு..."

"டேய்...மவனே வைத்தி...வெளையாடதே...நான் சீரியசாச் சொல்லுறேன்....அவளை நான் தான் லவ் பண்ணுறேன்... வம்பு பண்ணாதே சொல்லிட்டேன்..."

"மாப்பி..பொண்ணு எங்க ஆளுங்க... புரியுதா..... வீணா வேல் கம்பு வீச்சரிவாளுக்கு உன் உயிரைக் கொடுத்துராதே...உங்க ஆளுங்க பக்கம் எதாவது பொண்ணு இருந்தாச் சொல்லு நாங்க ஜோடியா வந்து உதவுறோம்...." வைத்தியின் நக்கல் என்னைச் சுள்ளுன்னு தாக்கிச்சு,,,


வைத்திக்கு யோசிக்கக் கூட நேரம் கொடுக்காம அவன் மீது மேகமாப் பாய்ஞ்சேன்.. கொத்தா அவன் சட்டையைப் பிடிச்சு கீழே தள்ளுனேன்.... மண்ணுல்ல நானும் அவனும் உருண்டோம் புரண்டோம்.... அவன் மேல் உதடு கிழிஞ்சு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... விடாமல் நானும் வனை அடித்தேன்....வைத்தி எம பாதக பைய அடிக்கக் கூடாத இடத்துல்ல சட்டுன்னு முட்டியை வச்சு எத்திட்டான்...

அவ்வளவு தான் குடல் மொத்தமும் வாய் வழியா வந்துரும் போல வலி பொங்கியது... சத்தம் கூடப் போட முடியாமல் முழங்கால் போட்டு உட்கார்ந்தேன்...

நிமிர்ந்து பார்த்தால் மூக்களகி பக்கத்தில் தேவதை....


"சேராதன்னு சொன்னாக் கேக்குறீயா..முரட்டுத் தனமா அடிச்சு இருக்கான் மாட்டுப் பைய...." மூக்களகி வைத்தியின் காயத்தை பார்த்து பரிசோதனைச் செஞ்சுட்டு இருந்தா...

வைத்தி அப்பாவியா மூஞ்சை வச்சிகிட்டு நின்னான்...உதட்டுல்ல வழிஞ்ச ரத்தம் வேற நல்லாவே அவனுக்கு வேலை செஞ்சது... என் மெய் வலியை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முக்கு முனகிட்டே எழுந்து நின்னேன்...

அப்போ என் தேவதை கையில் ஒரு வெள்ளை கைக்குட்டை இருந்துச்சு... அந்த கைக்குட்டையாலே அவளே வைத்தியோட உதட்டு ரத்தத்தைத் துடைச்சு விட்டா...

அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு 'அங்கே" அடிப்பட்டதை விட மனசுல்ல ஆயிரம் மடங்கு வலிச்சுது... வைத்தி என்னைப் பாத்து பரிகாசமாப் புன்னகைத்தான்....நடக்கக் கூட முடியாமல் ஒரு மாதிரி நின்னுட்டு இருந்தேன் நான் அவங்க மூணு பேரும் அங்கிருந்து போவதைப் பாத்தப் படியே...

இன்னும் வாசம் வீசும்

Monday, April 06, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 2

தென்கிழக்கு வாசமல்லி - 1

ஒரு மூணு மாசமிருக்கும் வீடு ஒரளவு வளர ஆரம்பிச்சுருச்சு...வேலை ஜரூராக நடந்துகிட்டுருச்சு...ஒரு நாள் மதிய நேரம் பொழுது போகாமல் பக்கத்து வீட்டு கட்டுமான வேலைகளை வேடிக்கைப் பாத்துக்கிட்டே நம்ம மரம் பக்கம் வந்து ஒதுங்குனேன்..உணவு முடிச்ச வேலையாட்கள் அப்போது தான் வேலைக்குத் திரும்பிக்கிட்டிருந்தாங்க. சிலோன் ரேடியோவில் பாட்டு ஓடிக்கொண்டிருந்துச்சு....இடைஇடையே அறிவிப்பாளர் அப்துல் அமீதின் குரலில் தேன் ஈழத் தமிழ் வந்து காதில் பாய்ஞ்சிட்டு இருந்துச்சு

அக்கம் பக்கம் பார்த்து விட்டு பொந்துக்குள் கைவிட்டு ஒரு பேப்பரில் சுத்தியிருந்த அந்தப் பொருளை எடுத்துப் பிரிச்சேன்...உள்ளே புத்தம் புது 555 சிகரெட் பாக்கெட் கண்ணைக் கவர்ந்தது..


வைத்தியைச் சும்மாச் சொல்லக்கூடாது.. சொன்ன மாதிரியே சரக்கைக் கொண்டு வந்துட்டான்..அவங்க மாமா துபாய்ல்ல இருந்து வந்துருக்கார்...வரும் போது பல வகை வஸ்துகளோடு வந்ததாகவும் அந்த வஸ்துகளில் சிலவற்றை எங்களுக்கும் பங்கு தருவதாய் வைத்தி வாக்கு கொடுத்திருந்தான்... அந்த வகையில் எனக்கு கிடைத்தப் பங்கைத் தான் நான் உள்ளங்கையில் வைத்து ரசிச்சுகிட்டு இருந்தேன்....பாக்கெட்டே எவ்வளவு கிக்கா இருக்கா... சிலாகிச்சிட்டு இருந்தேன்...

பாக்கெட்டை உள்ளங்கையில் வைத்து தேய்ச்சேன் அப்படியே மெதுவா சிகரெட்டை எடுத்து உதட்டில் வச்சு பத்த வைக்காமல் கொஞ்ச நேரம் திரும்பவும் கண்களைச் சுத்த விட்டேன்...பக்கத்து காம்வுண்டில் பீடி பிடிச்சிட்டு இருந்த கொத்தனாரிடம் நெருப்பு கடனாய் வாங்கி பத்த வச்சிக்கிட்டு ஒரு கையைத் தலைக்குப் பின்னால் வைத்து மரத்தில் சாய்ஞ்சு நின்னேன்..புகையை ரசிச்சு ருசிச்சு தலைக்கு மேலே விட்டேன்..

அடுத்து நீங்கள் கேட்கவிருக்கும் பாடல் தாவணிக் கனவுகள் படத்தில் இருந்து..ஏரிக்கரை பூங்காற்றே என்ற பாடல் வருகிறது...கேட்டு ரசியுங்கள்.... அப்துல் ஹமீத் சொல்லிமுடிக்கும் போது..காற்றில் அசைந்த எதோ ஒண்ணு என் தோள் மேல விழுந்துச்சு..அதை அப்படியே என்னன்னு கூட பாக்கமால் ஒதுக்கி விட்டுட்டு சிகரெட் சுகத்தில் நான் லயிக்க முயற்சித்தேன்..ஆனால் திரும்பவும் என் தோள் மீது அதே பொருள் வந்து விழுந்துச்சு...இந்த முறை என்னன்னு பாக்கத் திரும்புனேன்..

முளைச்சு காத்துல்ல பறக்க கிளம்பிடிருந்த நம்ம மல்லிச்செடி தான் என் தோளைத் தொட்டு துழாவிக்கிட்டே இருந்துருக்கு...கொடின்னா படரக் கொம்பு வேணுமே..அதான் என் மேல படர முயற்சி பண்ணியிருக்கு... தென்கிழக்கு வாசமல்லி...என்னைத் தேடி ஒரு சேதி சொல்லி... ரேடியோ பாட்டுக் கூட நானும் ஒரு ராகத்தைச் சேர்த்து முணுமுணுத்துகிட்டே மல்லி செடிக்கு ஒரு கொழு கொம்பு தயார் பண்ணி முடிச்சேன்... நம்ம மரத்துல்ல கொம்பை லேசா சாய்ச்சு கொடியை படர்த்தி விட்டுட்டு.... மிச்சமிருந்த சிகரெட்டை ஊத திரும்புனா.. வெளியே போன அம்மா வீட்டுக்குள் நுழையறது கண்ணுல்ல பட்டுச்சு.. சிகரெட்டை எங்கே எறியறதுன்னு தெரியாம...அவசரத்துக்கு நம்ம பாதுகாப்பு பெட்டகமானப் பொந்துக்குள்ளே தூக்கிப் போட்டேன்...வாடை போறதுக்கு காத்துல்ல கையை ஆட்டிகிட்டு இருந்தேன்...
என்னோட கெட்ட நேரம் அம்மா நான் இருக்கும் இடம் நோக்கியே வந்துட்டு இருந்தாங்க...எனக்கு லேசா புரையேறி இருமல் வந்துச்சு...என்னைத் தாண்டி அம்மா போகும் போது தான் எனக்குப் பின்னாடி அவ நிக்கறதையே நான் கவனிச்சேன்...அம்மா கையில் இருந்த எதோ ஒரு பொருளை அவகிட்டக் கொடுத்துட்டு என்னமோ பேசிகிட்டு இருந்தாங்க...காதை நீட்டி கேட்டும் ஒண்ணும் சரியா விழல்ல..
இவ்வளவு நேரம் நான் இங்கே நின்னப் போது அவ என் கண்ணுல்ல படவே இல்லை..இப்போத் தான் வந்துருப்பாளோ...இல்ல நான் தம் மயக்கத்தில் அவளைக் கவனிக்கல்லயே.... ச்சே தம்மை விட அவளோட அருகாமை தர்ற போதை இருக்கே...அதுவல்லவா சுகம்...அப்படியிருக்க அவ பத்தடி தூரம் வந்தாலே என் ஆண்மனம் அலை பாயுமே...பின்னாடியே இருந்திருந்தாக் கவனிக்காம விட்டிருப்பேனா ..வாய்ப்பே இல்ல...இப்போத் வந்துருக்கணும் எனக்கு நானே சமாதானம் சொல்லிகிட்டு நின்னேன்..
"ம்ம்ம் எதோ புகையிற வாடை வருதே..." அம்மாவோட குரல் என்னை என் யோசனை உலகத்தில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து வெளியே போட்டுது...
"ஆமா...ஆன்ட்டி...ம்ம்ம் அதோ அந்த இடத்தில்ல இருந்து தான் புகை வருது...." அவள் கைக் காட்டுன இடம்..மிகச் சரியா என் ரகசிய உலகத்தின் நுழைவாயிலே தான்.... கை நீட்டுனது மட்டுமில்லாமல்...சட்டுன்னு நான் ஒரு நிலைக்கு வந்து நடக்கிறது என்னன்னு நான் உகிக்கறதுக்குள்ளே..கட்டுமான இடத்தில்ல இருந்து ஒரு குடம் தண்ணியை எடுத்துட்டு வந்து மின்னல் வேகத்தில்ல பொந்துக்குள்ளே ஊத்தியும் விட்டுட்டா...
நான் மென்னு முழுங்கி அப்படியே அடி வயித்துல்ல சுருண்ட பயப்பந்தை வெளியே தள்ள முடியாம அடுத்து என்ன நடக்குமோன்னு சிலையாகி நின்னுட்டு இருந்தேன்...
யாரோ சிகரெட் புடிச்சுட்டு மரத்துல்ல போட்டுருக்காங்க ஆன்ட்டி...அதை அணைக்காமலே போட்டிருக்காங்க போலிருக்கு...அதான் தீ புடிச்சிருக்கு...
எந்தக் கிறுக்குப் பைய புத்தி இப்படி போச்சு...மரத்துல்ல கொண்டு கொள்ளியை போட்டிருக்கான்..வெத்து பைய..... என்னைப் பெத்த அம்மா சொன்னதுல்ல கொஞ்சத்தை மட்டுமே என்னால இங்கே சொல்லமுடியும்.. அம்மா மொத்தமும் சொல்லி முடிக்கும் வரை அவ என்னை ஒரு நமுட்டு பார்வை பார்த்தாப் பாருங்க....உங்க அம்மா சொல்லுறது எல்லாமே சரிடா.... நீ அப்படித் தான்ன்னு பார்வையாலே அவளும் அம்மாப் பேச்சுக்குப் பின்பாட்டு பாடுற மாதிரியே எனக்குத் தோணுச்சு...
"இது எல்லாம் இங்கே வேலை செய்யற பையல்வ வேலையாத் தான் இருக்கும்... உங்க வீட்டாளுக கிட்ட சொல்லி வைம்மா" அம்மா இதைச் சொல்லிகிட்டு இருக்கும் போது எனக்கு சிகரெட் பத்த வைக்க நெருப்பு கொடுத்த புண்ணியவான் அங்கு பீடி பிடிக்க வந்துகொண்டிருந்தார்..
சனியன் சரவெடி கொளுத்தி சட்டைக்குள்ளே வச்சுட்டு அது வெடிக்கறதை வேடிக்கை பாக்காமப் போவாது போலிருக்கே....
அம்மா வாம்மா..ஒரு காபித் தண்ணி போட்டு கொடும்மா...அதான் நெருப்பை அந்த புள்ள அணைச்சுருச்சுல்லா....விடு நான் பாத்துக்குறேன்.... அம்மாவை கையைப் பிடிச்சு இழுக்காத குறையா நான் வீட்டுக்குள்ளே போக வைக்க நான் முயற்சி பண்ணிட்டு இருந்தேன்...
"மேஸ்த்திரி அண்ணேன்..இங்கே வந்து இனிமே சிகரெட் பிடிக்கக் கூடாது...யாரோ சிகரெட் பிடிச்சுட்டு இந்தப் பொந்துக்குள்ளே பாதியிலே பயந்து வீசியிருக்காங்க...அது தீ பிடிச்சிருச்சு...." அவள் பொறுமையா ஆனா ரொம்ப சத்தமாவும் கதையைச் சொல்லிட்டு இருந்தா...அப்பப்போ என்னை ஒரு கேலி பார்வையும் மெல்லிய சிரிப்புமா வேற பாத்துகிட்டே சொன்னா...
"அம்மா இது காசுக்கார ஆளுக பிடிக்க சிகரெட்ல்லா.. நமக்கு எல்லாம் பீடியே சாஸ்திம்மா...இருந்தும் நீங்க சொல்லிடீயே இனி இந்தப் பக்கம் நம்ம ஆளூக யாரும் பீடி சிகரெட் பிடிக்காம பாத்துகிடுதேன்....மத்த ஆளுக திருட்டு பீடி பிடிக்க வராம அந்த வீட்டு ஆளுகளை பாத்துகிடச் சொல்லுங்க... பீடி பிடிக்கோம்ன்னு வீட்டை எரிச்சிரப் போறான்வ..." மேஸ்த்திரி என்னை ஓரப் பார்வை பாத்துக் கொண்ட பீடி பிடிக்க வேறிடம் தேடிக் கிளம்பினார்..
ஒரு வழியா அடிக்க இருந்த புயல் அமைதியாக் கரையக் கடந்த மாதிரி இருந்துச்சு...ஸ்ப்ப்ப்ப்ப்பா...அப்படின்னு மெதுவா ஒரு பெருமூச்சு விட்டுகிட்டேன்... அவ ரொம்ப நிதானமா வந்து கொஞ்சம் எட்டி பொந்தைப் பார்த்தா....
"ம்ம்ம் எல்லாம் காலி....கண்ட கண்ட புக்....திருட்டு சிகரெட்....ஒண்ணும் மிஞ்சல்ல....ஒரு அழகான செடி வளர்ற இடத்துல்ல இந்த விளங்காதப் பொருள் எல்லாம் இருக்குதுன்னே யோசிச்சேன்...சொந்த செலவுல்ல அதை எல்லாம் அகத்திக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்...அப்புறம் உங்க அம்மா சொன்னது புரியுதா... இனிமே இங்கே நோ சிகரெட்... இப்போதுல்ல இருந்து இந்த இடம் மரம் எல்லாம் என் மல்லிச் செடிக்கு மட்டுமே சொந்தம்... புரியுதா...."
சடையை என் முகத்துல்ல படுற மாதிரி விசிறி அடிச்சுட்டு நடந்துப் போனா...
அந்த நிமிசத்தில்ல எந்த ஒரு மனுசனுக்கும் வர வேண்டிய நியாயமானக் கோபம் கூட எனக்கு அவ மேல வர்றல்ல..அது ஏன்ன்னு எனக்கு சுத்தமாப் புரியாம மரத்துல்ல சாய்ஞ்சுட்டு நின்னேன்....
என்னையுமறியாமல் தென்கிழக்கு வாசமல்லி பாடலை என் வாய் முணுமுணுத்தது

வாசம் இன்னும் பரவும்

Monday, March 16, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 1

கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருச இடைவெளிக்குப் பின்னாடி நெல்லைச் சீமைக்கு வர்றேன்....சொந்த பூமி காத்துக்குன்னு ஒரு தனி சுகம் இருக்கத் தான் செய்யுது... ஒரு ஊரை விட்டு மறு ஊருக்குப் பிழைக்கப் போன எல்லாருமே இதை ஒத்துப்பாங்க...


பஸ் பயணம் அலுப்பா இருந்தாலும் தாமிரபரணி ஆத்து மணலைப் பார்த்ததும்... ஒரு சின்ன சிலிர்ப்பு அதுவா எனக்குள்ளே வந்துருச்சு... முன்ன எல்லாம் தண்ணி இருந்தது... இப்போவெல்லாம் மண்ணாவது இருக்கேன்னு சந்தோசப் பட வேண்டியது தான் போலிருக்கு...

ஹைகிரவுண்ட் எல்லாம் தாண்டி அப்படியே நடந்தே வீடு வரைக்கும் போனேன்... கையிலே அதிகமான சுமை இல்ல... போகும் போதே ஊரையும் வீதியையும் வேடிக்கைப் பாத்துகிட்டே போனேன்.. ஊருக்கும் எனக்கும் இடைவெளி அதிகமாகி போயிருந்தது புரிந்தது...பழைய அடையாளங்கள் பல இடங்களில் மாறி போயிருந்தது...ஒத்தையும் இரட்டையுமாய் அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருந்த காமராஜ் நகர் குடியிருப்பில் இப்போ ஏகத்துக்கும் வீடுகள்...மாடி வீடு மாடல் வீடுன்னு நகரத்து வாச்னை வீசியது...

இந்த மாற்றங்களிலும் அதிகம் மாறாமல் எங்கள் வீடு...மாற்றுவதற்கு அவசியமும் இல்லை... ஒரே பையன் நான் ஊருக்கு வருவதே இல்லை... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் போதுமான வசதிகளோடு வீடு அமைந்து விட்டது... கடைசியாய் என் கல்யாணத்துக்கு வீட்டை அலங்கரித்திருக்க வேண்டும் அதுக்கும் நான் இடம் கொடுக்கவில்லை.. லவ் மேரேஜ் இல்ல பண்ணிகிட்டேன்.. அதுவும் இரண்டு வீட்டையும் எதிர்த்து...அப்புறம் வெளிநாட்டுக்கு போய் அங்கேயே முதல் பையன் பிறந்து... பின்னாடியே ஒரு பொண்ணும் பெத்து... ஒரு வழியா இரண்டு வீட்டோடும் சமாதான உடன்படிக்கை போடுறதுக்கே வருசம் அஞ்சாகிடுச்சு...


அப்புறம் அப்படி இப்படி சில்லரை சேகரிப்பில் தேசாந்திரியாய் திரிஞ்சு சென்னை தான் நம்ம ஜாகைன்னு முடிவு பண்ணி இதோ ஒரு வருசம் ஆகிருச்சு...இப்படி எத்தனையோ காரணங்கள் ஊருக்கு நான் வராமல் போவதற்கு...ம்ம்ம் இப்போ நிச்சயமா வர வேண்டிய காரணம் அமைஞ்சுப் போச்சு...


அப்பாவுக்கு உடம்பு முடியல்ல.... எவ்வளவோ போன்ல்ல சொல்லியும் கேக்கல்ல.. சென்னையிலே நல்ல வ்சதி இருக்கு பாத்துக்கலாம் வாங்கன்னு கேட்டுப் பாத்தேன்.. கெஞ்சிப் பாத்தேன்...

ம்ம்மென் வீட்டு வாசல் மிதிக்காத பையன் வீட்டுக்கு நான் வந்து போனதே என் பேரப் பிள்ளைகளுக்காகத் தான்... அவன் வீட்டுல்ல கிடையா கிடந்து வைத்தியமெல்லாம் நான் பாக்க மாட்டேன்... எங்க அப்பா கிட்ட இருந்து தான் எனக்கும் வைராக்கியம் பிடிவாதம் எல்லாம் வந்துருக்கும்ன்னு யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... ஆபிஸ்க்கு லீவ் சொல்லிட்டு பஸ் பிடிச்சுக் கிளம்பிட்டேன்... ஒரு இரண்டு நாள் கழிச்சு என் மனைவியும் பிள்ளைகளூம் ரயிலில் வர மாதிரி டிக்கெட் போட்டுக் கொடுத்துட்டேன்... என்னாலே முடியல்லன்னா அவ வந்து எப்படியாவது அப்பாவை சென்னைக்குக் கூட்டிட்டுப் போறதுன்னு திடமான முடிவு. எடுத்தாச்சு..

வீட்டு வாசலுக்கு வந்து நின்னவுடன் பூத்துக் கிடந்த பூரசு மரம் என் மொத்த கவனத்தையும் இழுத்துப் போட்டது...
என்னைப் பார்த்த உடனே அதுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சுப் போச்சு.... காத்துல்ல அதுவும் சேர்ந்து கொஞ்சம் வேகமாவே கிளைகளையும் இலைகளையும் அசைச்ச மாதிரி இருந்துச்சு...அதில்ல மிச்சமிருந்த பனித்துளிகளை எல்லாம் என் மேலே வாறி இறைச்சு வரவேற்ற மாதிரி எனக்குப் பட்டுச்சு.. அந்த பனித்துளிகளை துடைக்க மனம் வரவில்லை.. மெதுவா பூரசு மரத்துக்கு கிட்டப் போய் நின்னு ஒரு பழைய நண்பனை பல வருசம் கழிச்சுப் பார்த்தா நெஞ்சோடு தழுவுக்குவோமே அதே மாதிரி பூரசு மரத்தை தோளோடு அணைத்தேன்... மரத்தில் இருந்த குருவிகள் கீச்சு கீச்சு எனக் கத்தின... மரம் இன்னும் கொஞ்சம் பாசத்தோடு அசைந்தது...மரத்தின் வலப்புறத்தில் இருந்த அந்தப் பொந்து இன்னும் அதே அளவில் இருந்தது என் கண்ணில் பட்டது...

"எய்யா...எப்போ வந்தா...." அம்மாவின் குரல் என்னை மரத்தின் நினைவுகளில் இருந்து விடுவித்து வெளிகொண்டு வந்தது...

அப்பாவைப் போய் பார்த்தேன்... கொஞ்சம் தளர்ந்து தான் போயிருந்தார்...வார்த்தைகள் மெதுவாகத் தான் வெளியே வந்தன... பேசிக்கலாம் இப்போத் தானே வந்து இருக்க...அப்படின்னு அம்மா அப்போதைக்கு அணைப் போட்டு கையில் காபி தம்பளரை கொடுத்தாள்...
கருப்பட்டி காப்பி...ஸ்ஸ்ஸ்...ஆர அமர ருசித்து குடிக்க ஏத்த இடம் நம்ம பூரசு மரத்தடி பக்கம் தானே... எத்தனை ஆண்டுகால பழக்கம்...ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் அந்த சுகத்தை அனுபவிக்க மனம் அலைந்தது...

மரத்தடியில் போய் நின்று பக்கத்து காம்பவுண்டை எட்டிப் பார்த்தேன்...அந்த பெரிய வீடு அப்படியே இருந்தது...அங்கு நிறைய சிறூவர்கள் விளையாடி கொண்டிருந்தார்கள்...அவர்கள் விளையாட்டில் கொஞ்சம் நேரம் லயித்து நின்றேன்...இப்படித் தானே நாமும் ஒரு காலத்தில் இருந்த்தோம்.. அந்த நினைப்பே இனிமையாக இருந்தது..

இப்போக் கூட அந்த பெரிய வீடு கட்ட ஆரம்பித்த நாள் எனக்கு நல்லா நினைவிருக்கு... பொங்கல் முடிஞ்ச நேரம்...வழக்கம் போல ஒரு கையில் கருப்பட்டி காப்பியும் மறுகையில் தினந்தந்தி பேப்பரும் வச்சிக்கிட்டு பூரசு மரம் பக்கம் வந்து நின்னேன்... சிந்துபாத் லைலா கன்னித்தீவுல்ல அன்னிக்கு என்னாச்சுன்னா பாத்துட்டு..அப்படியே சாணக்கியன் சொல்லையும் படிச்சுட்டு...தலையைத் தூக்குன்னா...பக்கத்து காம்பவுண்ட்ல்ல ஒரு பெரிய கார்...கான்ட்டசான்னு ஞாபகம் வந்து நிக்குது...காரிலிருந்து இரண்டு வேட்டி கட்டிய பெரியவர்களும்..கூடவே மடிசார் கட்டிய மாமிகளும் இறங்கி நடந்துப் போய்கிட்டு இருந்தாங்க.. அந்த நிமிசம் அவங்களுக்குப் பின்னாடி நடந்ததை நான் கவனிக்கல்ல....

ஆனா சலக் சலக்ன்னு கேட்ட கொலுசு சத்தம் என்னைத் திரும்ப வச்சுடுச்சு.. ஒரு சின்ன இடைவெளி விட்டு...ஒரு பொண்ணு....அப்பாடா...மின்னல் கொடி மின்னல் கொடின்னு அப்படின்னு எதோ நாவல்ல எல்லாம் படிச்சுத் தான் இருக்கேன்.. அன்னிக்குத் தான் பார்த்தேன்...சும்மா அந்த சடையை அப்படித் தலையைச் சுத்தி போட்டாப் பாருங்க..கருப்பட்டி காப்பி என் கையிலே இருந்து தெறிச்சுருச்சு...

கண்ணு இமையா இல்ல அது பட்டாம்பூச்சி இறக்கையா... அது துடிக்கிற துடிப்புல்ல இங்கே பாத்த என் இதயம் வெடிக்கவே ஆரம்பிச்சுருச்சு.... பட்டுப் பாவாடைத் தாவணியிலே குத்தால அருவி அங்கே மலை விட்டு இறங்கி வந்த மாதிரி அப்படி ஒரு துறுதுறுப்பு...போகிற போக்கில் அப்படியே பூரசு மரம் பக்கம் ஒரு பார்வையை சிதற விட்டுட்டு சிறகடிச்சு போயிட்டே இருந்தா...நான் மரத்தைச் சுத்தி சுத்தி அந்தப் பார்வை விழுந்த இடத்தைத் தேடி ரணமாகிப் போனேன்..
அந்த நேரம் பார்த்து காலை நேயர் விருப்பத்தில் ஒரு பாட்டு போட்டாங்க...நல்லாவே ஞாபகம் இருக்கு... ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கா.. தென்கிழக்கு வாசமல்லி....ராஜாவின் இசைக்கு அடிமையாக ஆரம்பித்திருந்த காலக்கட்டமது..

"சரி உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கணுமா...இல்ல கான்டீன்ல்ல பாத்துக்க்குறீயா..."
இதைக் கேக்க வந்த அம்மா அங்கே பக்கத்துல்ல நடக்கற சடங்குகளை எல்லாம் பாத்துட்டு அப்படியே கதையை வேற பக்கம் ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க..எனக்கும் கொஞ்சம் தேடாமலேத் தகவல் வந்து சேர்ந்துருச்சு...

புதுசா வீடு கட்டப் பூஜை பண்ணுறாங்கப் போல... பெரிய ஆபிசராம்டா..தில்லியிலே இருக்காவளாம்..சொந்த ஊர்ல்ல பூமி வேணும்ன்னு வீடு கட்டப் போறாவளாம்...ஒரே பொண்ணாம்..ஒரு பையனாம்...பொண்ணு இப்போத் தான் காலேஜ் சேரப் போவுதாம்...எங்களுக்கும் பக்கத்து காம்பவுண்டுக்கும் ஒரு வேலி மட்டுமே இடையில் இருந்தது..
அந்த வேலியோரம் தான் பூரசு மரமும் நின்னுச்சு..அதுக்கடியிலே நின்னுகிட்டு அம்மா சொன்னத் தகவலை எல்லாம் உள் வாங்கிகிட்டேன்..

சரி சாப்பாடு...அம்மா மறுபடியும் கேக்க..

இன்னிக்கு நான் காலேஜ் போகல்ல..கொஞ்சம் மேலுக்கு சரியில்லதா மாதிரி இருக்கு...திடீரென முகத்தை தொங்கப் போட்டுட்டுச் சொன்னேன்...
அம்மா என்னை மேலும் கீழும் பார்த்தாள்...கட் அடிக்க இப்படி ஒரு காரணமா... அப்படின்னு அம்மா கேட்பது போல் இருந்தது..அம்மா போய் வெகு நேரம் வரை நான் அங்கேயே இருந்தேன்...

இன்னும் ஏரிக்கரை பூங்காற்றே பாட்டு காற்றில் மிதந்து வந்து கொண்டே இருந்தது...இந்த முறை பாட்டு கான்ட்டசா கார் டேப் ரிக்கார்டரில் இருந்து வந்துக் கொண்டு இருந்தது...

பூரசு பொந்தில் இருந்து அந்த வார பிலிம் பேர் எடுத்து ஒரு ஓரமாய் உட்கார்ந்து புரட்ட ஆரம்பித்தேன்..நடுப்பக்கத்தில் ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சிப் படம் ..அதையே அப்படி இப்படி பார்த்துக் கொண்டிருந்ததில் பக்கத்தில் ஆள் வந்து நின்றதை கூட நான் கவனிக்கவில்லை...

பிலிம் பேர் எல்லாம் அந்தக் காலத்தில் வீட்டில் தடைச் செய்யப் பட்ட புத்தகம்..வீட்டில் தடை விதிக்கப்படும் எந்த பொருளுக்கும் அடைக்கலம் கொடுப்பது என் நண்பன் பூரசு மரத்தின் பல ஆண்டு காலமாய் எனக்கு செய்து வரும் உதவி...அதற்கு எனவே தனக்குள் ஒரு தனி பெட்டகமே திறந்து கொண்டவன்...ஊர் பார்வைகு அது வெறும் பொந்து அவ்வளவே...

"தம்பி..." குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தேன்...மடிசார் மாமிகளில் ஒருத்தர் என் பக்கம் நின்று கொண்டிருந்தார்..கையில் எதோ பழம் வகையறா...இருந்த ஒரு தட்டு இருந்தது...அம்மா அதற்குள் அங்கு வந்து விட்டாள்..பரஸ்பர அறிமுகம்..அப்படியே அம்மாவும் மாமியும் பேச்சு வார்த்தை எனப் பழக ஆரம்பித்து விட்டனர்..

"மல்லிகைச் செடின்னா இவளுக்கு அப்படி ஒரு ஆசை.. அதான் சொந்த வீடுன்னுதும் முதல் வேலையா ஒரு செடியைக் கொண்டு வந்துட்டா... "மாமி அம்மாவிடம் சொன்னது எதேச்சையாக காதில் விழுந்தது...

அவளும் அங்கேத் தான் பக்கத்தில் மண்ணைப் போட்டு நொண்டிக் கொண்டிருந்தாள்..அவளுக்கு உதவியாக அவள் தம்பி கையில் ஒரு சின்னக் கம்பியோடு வந்து நின்றான்...பாவாடையை லேசாக தூக்கி இடுப்பில் மடிப்பில் மடித்துக் கட்டியிருந்தாள்..கணுக்காலில் கட்டியிருந்த சலங்கை சிணுங்கியது...முன்னால் வந்து விழுந்த பட்டுக் குழலை கைகளால் அவ்வப்போது விலக்கி விட்டுக் கொண்டாள்...

ம்ம் சரிடா..நம்மளும் உதவி செய்ய வேண்டியது தான்..கைலியை லேசா மடிச்சுக் கட்டிட்டு சின்னப் பையன் கிட்ட இருந்து கம்பியை வாங்கிட்டுப் போய் அவளுக்கு நேர் எதிரில் உட்கார்ந்தேன்.. என்னை நிமிர்ந்து பார்க்காமலே அவள் வேலையில் தீவிரமாக இருந்தாள்..ம்ம் நான் எதாவது பேச்சு கொடுக்கலாமா..அப்படின்னா எப்படி எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டே இருக்கும் போது நான் கொஞ்சமும் எதிர்பாக்கல்ல...

"உங்களுக்கு ஷில்பா ஷெட்டி ரொம்ப பிடிக்குமோ....."
இது தான் என்னிடம் அவள் கேட்ட முதல் கேள்வி...

ஷில்பா செட்டி...அது யார்றா.. ஒரு வேளை கிரிக்கெட் பிளேயரா... இல்லை மல்லிகை சம்பந்தமா எதாவது மேட்டரா... ஒரு கணம் குழம்பி போயிட்டேன்...

"ஓகோ பேரேத் தெரியாமத் தான் படத்தை அந்த மாதிரி சுத்தி சுத்தி பாத்துகிட்டு இருந்தீங்களா,,,,," தம்பியை தண்ணி எடுத்துட்டு வரச் சொல்லி விரட்டி விட்டுட்டு என் கிட்ட அடிக்குரலில் கேட்டாள்.. அப்போவும் என்னை நிமிர்ந்து பார்க்கல்ல... செடியை நட்டு முடிச்சுட்டு சுத்தி சின்ன சின்னக் கல்லை வச்சு அழகா பாத்திக் கட்டிகிட்டு இருந்தா...

தண்ணியைத் தம்பிகாரன் கிட்ட இருந்து வாங்கி மெதுவா அந்த செடியின் இலைகளுக்கு வலிக்காதவாறு தெளித்தாள்..

"ஆன்ட்டி வீடு கட்டுற வரைக்கும் இந்த செடியைக் கொஞ்சம் பாத்துக்கணும்..தண்ணி எல்லாம் சரியா ஊத்தணும்... கொஞ்சம் உதவி பண்ணுறீங்களா" எங்க அம்மாக் கையைப் பிடிச்சிகிட்டு அவக் கேட்டதும் எங்க அம்மா அப்படியே உருகிப் போயிட்டாங்க,,, நான் உருகி உருகுவேக்கே போயிட்டேன்ன்னு சொல்லணுமா என்ன..

"இந்தச் செடி எங்க பொறுப்பு... என் பையன் இங்கேயேத் தான் இருப்பான்.. அவன்கிட்ட தண்ணி ஊத்தி பாத்துக்கச் சொல்லுறேன்... நீ கவலைப் படவே வேணாம் போதுமா" அம்மா வாக்கு கொடுத்துவிட்டாள்...

"ம்ம்ம்..ஆன்ட்டி இன்னொரு விஷய்ம்..அந்த மரப் பொந்துல்ல நிறைய பூச்சி இருக்குன்னு நினைக்கிறேன்... பேசாம தீவச்சி விரட்டி விட்டுருங்க... மரத்துக்கும் நல்லது என் மல்லிகை செடிக்கும் நல்லது..." என்னைப் பார்த்து லேசாக கண் சிமிட்டினாள்

"அப்படியா அம்மா.. நான் கூட ரொம்ப நாளா அந்தப் பொந்துல்ல தீ வைக்கணும்ன்னு தான் இருக்கேன்.. இந்தப் பையத் தான் நானே வைக்கிறேன்...அந்தா இந்தான்னு இழுத்து அடிச்சிகிட்டு இருக்கேன்... ம்ம்ம் இனி காலந்தாழ்த்தாம வச்சுர வேண்டியது தான்..." அம்மாவும் அவளை அமோதித்தாள்...

ஆகா அழகா இருக்காளேன்னு அசந்தா..நம்ம அடிவாரத்தையே ஆட்டிடுவா போலிருக்கே...தம்பி உஷார்டா.. எனக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது..அது வெறும் பொந்து இல்லை என் சுவீஸ் பேங்க் லாக்கர்.. என்னுடைய பல வருட ரகசிய வைப்புகளின் காப்பகம்...பெட்டகம்.. எனக்கும் என் நண்பன் பூரசு மரத்துக்கும் மட்டுமே தெரிந்த கணக்கு வழக்கு அது...வந்த முதல் நாளே அதில் இவள் மூக்கை நுழைக்கிறாளே....

காலையில் என் கண்களுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்தவள்..இதோ மாலை சூரியன் மயங்குவதற்குள் அவளே அவளே தான் ஒரு ராட்சசியாகத் தெரிகிறாளே...

ம்ம்ம்ம் தம்பி பொண்ணு கிட்டே கொஞ்சம் சூதனாமா இருந்துக்கோன்னு புத்தி நெத்தி பொட்டில் அடிச்சு சொல்லுது...ஆனா மனசு இருக்கு...கிறுக்கு பைய மனசு....அது பாட்டுக்கு அத்துகிட்டு ஒரு பக்கமா தென்கிழக்கு வாசமல்லின்னு பாடிகிட்டு குத்தால மலை காத்து கணக்கால்லா திரியுது...

வாசம் இன்னும் வீசும்...