Wednesday, July 11, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 3

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 2

வீட்டில் பாட்டி சுட்ட அதிரசமும் கைமுறுக்கும் கொறித்துக் கொண்டே மொட்டை மாடியில் இஸ்ராவும் நானும் உட்கார்ந்திருந்தோம். இஸ்ரா திருட்டு 'தம்' பற்ற வைத்தான். நானும் அவனும் மாறி மாறி ஆளுக்கு ஒரு இழுப்பு இழுத்தோம். கருப்பட்டி காப்பி ஆளுக்கு ஒரு தம்ளர் பக்கத்தில் எடுத்து வைத்திருந்தொம். அதையும் ருசி பார்த்து உறிஞ்சினோம்.

"பாம்பேகாரிக்கு நக்கல் அதிகமாப் போயிருச்சு.. தின்னவேலிகாரனுக்கு அருவாத் தூக்கத் தான் தெரியும்ன்னு எகடியம் பேசுதா.. அவளையேத் தூக்குறோம்லே.. அப்போத் தான் அவ கொழுப்பு அடங்கும்"
திருட்டு தம்மின் போதை ஏற சும்மா விரலைச் சொடக்கிட்டேச் சொன்னேன்

"எலே வெளக்கெண்ணெய்.. அவ போலீஸ்காரன் மோவா.. அவ அப்பன் காதுக்கு.. ம்ஹும் மூக்குக்கு நீ இப்போ முக்கி அலறுன விசயம் போச்சுன்னு வை... சரடு சரடா உன்னியப் பிரிச்சுத் தொங்கப் போட்டுருவான்...பொத்திகிட்டு இருக்கீயா"

இஸ்ரா அடக்குனாலும் எனக்கு கோவம் கொஞ்சமும் குறையவில்லை. கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் இஸ்ரா சொன்ன எதையும் ஒதுக்கியும் தள்ள முடியாது...அதுல்ல ஆபத்து என் அறுவுக்கும் எட்டாமல் இல்லை. இந்த யோசனையிலே அன்னிக்கு இரவு கழிந்துப் போயிடுச்சு.

விடிஞ்சும் விடியாம மறுநாள் காலையிலே மொத்த ஜமாவும் குளத்துக்குக் குளிக்கக் கிளம்பிட்டோம்

"ஏலேய்.. முங்கு நீச்சல் போடுவோமா.."

தீர்மானமாய் எல்லாப் பயல்வளும் தண்ணியில் இறங்கிட்டாங்க..நம்ம மெட்ராஸ் வாழ்க்கையிலே ஒரு பாக்கெட்டும் அரை பக்கெட்டுமாக் குளிச்சுப் பழகுன பழக்கத்திலே நீச்சலுக்கு ஏது வழி...அதுன்னால கரையோரமா உக்காந்து துணியை எல்லாம் காவல் காத்துகிட்டு இருந்தேன்..கையோடு கொண்டுப் போயிருந்த பக்கெட்ல்ல குளத்துத் தண்ணியை கோரி ஊத்தி மக் வைச்சு எடுத்து தெளிச்சு குளிக்கவும் முன்னேற்பாடு எல்லாம் பண்ணி வச்சுருந்தேன்.. நேரப் போக்குக்கு அவிச்ச பனங்கிழங்கு ரெண்டை மென்னு தின்னுகிட்டு இருந்தேன்.

ஆம்பளை ஆட்கள் குளிக்குற இடத்துக்கும் பொம்பளை ஆட்கள் குளிக்கும் இடத்துக்கும் பாதை ஒண்ணு தான் ஆனா இடைவெளி உண்டு...

ரேச்சலும் அவள் வீட்டு சிறுசுப் பட்டாளமும் குளிக்க குளத்துக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்.. அவள் என்னைப் பாக்கறதுக்கு முன்னாடியே நான் அவளைப் பாத்துட்டேன்...

பக்கெட்டும் மக்குமா என்னைப் பார்த்தா நம்ம கதைக் கிழிஞ்சிப் போயிரும்ன்னு அவசர அவசரமா பக்கெட் தண்ணியைச் சரிச்சுக் கொட்டுனேன். பக்கெட்டைத் துணிக்கு அடியிலேப் போட்டு மூடிட்டு துணியாவது மணியாவது என இடத்தைக் காலி செய்து கிளம்ப நினைக்கையில் இஸ்ராவின் குரல் எங்கிருந்தோ இடியாய் இறங்கி குறுக்கே குத்தவைத்து என் கால்களை ஓட முடியாமல் இடறிவிட்டது.

"எலேய் மெட்ராஸ்காரா.. அந்த துண்டை எடுத்துப் போடுடா.. இங்கன் மீன் நிறைய கிடக்கு இன்னிக்கு மீன் சோறு தான்..."

அவன் குரல் கேட்டு ரேச்சல் என் பக்கம் திரும்பினாள்.

"என்ன,,, குளிக்காம கரையோரமா உக்காந்து கவிதையா எழுதுற" ஒரு வித நமுட்டு சிரிப்போடு கேட்டாள். அவ சிரிப்பு என்னை உசுப்பேத்தும் பாருங்க... ஒரு மாதிரி ஆயிடும்,

"எனக்கு ஓடம்புக்கு சோமில்ல.. இருமல்..அதான் குளிக்கல்ல..." ஒரு வாறாக சமாளித்தேன். மூணு முறை தொண்டையைச் செருமி இருமி வேற காட்டுனேன்.

"நான் கூட நீச்சல் தெரியாமத் தான் இப்படி துணியைக் காவ்ல காத்துகிட்டு இருக்கீயோன்னு நினைச்சுட்டேன்" என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள்.

"மெட்ராஸ்ல்ல நம்ம குரூப்ல்ல நான் தான் பெரிய நீச்சக்காரன் தெரியும்ல்ல.. என்னியப் போய் எகத்தாளமா நினைக்கப்பிடாது.. போ போய் குளம் கலங்கறதுக்குள்ள குளிச்சு குருத்தா எழுந்து போ"

"மெட்ராஸ்ல்ல எங்கே நீந்துவ... கூவம் ஆத்துல்லய்யா" மறுபடியும் சிரிப்பு... இந்த முறை ஏகத்துக்கும் எகத்தாளம் ஓங்கி ஒலித்தது.

கரையில் நான் கதி கலங்கி நிற்பது தெரியாமல்...இஸ்ரா என்னமாய் வில்லத்தனம் பண்ணான் தெரியுமா.. அது எனக்கு சத்தியச் சோதனை..

"ஏலேய் வெளக்கெண்ணெய்.. தண்ணீயக் கண்டா ஜன்னியக் கண்டவன் மாதிரி ஓடுறான்னு தான் ஓரமா உக்காரச் சொல்லியிருக்கு... துண்டை எடுத்துப் போடச் சொன்னா அதுக்குமால்ல உனக்கு இடுப்பு வலிக்கு.. என்ன இழவு மெட்ராஸ்காரனோ.." இஸ்ரா சத்தமாய் என் பிரதாபங்களை ஊருக்கு ஒலிபரப்பு செய்த படிதண்ணியை விட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தான்..அவன் வந்த திசையில் இருந்த ஓட மரங்களின் மறைவு ரேச்சலின் இருப்பை அவனுக்கு அறிவிக்க வில்லை.. அவன் இன்னும் அதிகமாய் என் நீச்சல் சாதனைகளை புகழ்ந்தப் படியே வந்துக் கொண்டிருந்தான்..என்னாலும் அவனை எந்த விதத்திலும் தடுக்க முடிய்வில்லை.

"அட உனக்கு நீச்சல் தெரியாதா" இது அவள் கேட்டிருந்தாக் கூடப் பரவாயில்ல.. அவள் தம்பி குண்டோதரன் கேட்டது தான் எனக்கு ஓடனே தண்ணியிலே குதிச்சு தற்கொலை பண்ணிக்கணும்ன்னு யோசிக்க வச்சுருச்சு.

"தின்னவேலிகாரனவது அருவா தூக்க லாயக்கு.. நீ ம்ஹூம்..."
அப்படின்னு என்னை ஏற இறங்க பார்த்து இடுப்பில் கை வைத்து பி.எஸ் .வீரப்பா பாணியில் சிரித்தாள்.

"சரி சரி.. ப்சங்களா.. உங்க எல்லார் துணியையும் இந்த அண்ணன் கிட்டக் கொடுங்க இவர் பத்திரமாக் காவல் காத்துப்பார்... என்ன. வாங்கப் போலாம்... அப்படின்னு துணியை எல்லாம் வாங்கி என் அனுமதியைக் கூட எதிர்பாராமல் என் கையில் திணித்து விட்டு குளம் பார்த்து தன் கும்பலை நடத்திப் போனாள்.

இது நடக்கவும் இஸ்ராவும் என்னை வந்து அடையவும் சரியாய் இருந்தது.அவள் சிரிப்பு என் காதுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அந்தச் சிரிப்போடு இஸ்ராவின் கேலியும் சேர்ந்துக் கொண்டது.

"எலேய் அதிர் வேட்டு போடப் போறேன்னு அலறுன.. இங்கே பாம்பேக்காரி துணி எல்லாம் காயப்போடறதுக்கு வ்சதியா கொடிக்கணக்கா ஆடாம் அசையாம பிடிச்சுக்கிட்டு நின்னுட்டு இருக்கீயே.."

எனக்கும் ரேச்சலுக்கும் இப்படி அரசல் புரசலாப் போயிட்டருந்த மோதல் இஸ்ராவுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கா அமைஞ்சுப் போனது என் துரதிர்ஷ்ட்டம்ன்னு தான் சொல்லணும்.

அதே வாரத்தில் ஒரு நாள் மொட்டை மாடியிலே பத்து மணி வரைக்கும் தூங்கிட்ட இருந்த என்னை அரக்க பரக்க வந்து எழுப்பினான் இஸ்ரா.

"எலேய் பாம்பேக்காரி நம்ம வீட்டுக்கு வந்துருக்கா... நேத்து என்னவாச்சும் வம்பு பண்ணீயா?"

அவன் சட்டெனக் கேட்டதும் பாதி தூக்கக் கலக்கமும் என்னை புரட்டிப்போட்டது. மடிச்சுக் கட்டிய லுங்கியை (லுங்கி கட்ட ஆரம்பிச்சு ஒரு மூணு மாசம் தான் ஆகியிருந்தது.) இன்னும் ஏத்தி கட்டிக்கிட்டு மாடிப் படியிலே இறங்கி ஓடுனேன், இஸ்ரா எனக்கு முன்னாடியே கீழே போயிட்டான். மாடிப் படி வீட்டுக்கு வெளியேத் தான் இருந்துச்சு.. அங்கே இருந்து அவளை வச்சக் கண்ணு வாங்காமப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

வீட்டுல்ல இருந்த எல்லாருக்கும் கேக் கொடுத்துட்டு ஆசி வாங்கிட்டு இருந்தா.

என்னாத் தான் திமிர் பிடிச்சவளா இருந்தாலும் மெட்ராஸ்ல்ல கூட நான் இப்படி ஒரு அழகைப் பார்த்தது இல்லை.. ம்ம்ம் பெருமூச்சு விட்டுகிட்டேன்.. அந்த கண்ணு சும்மா என்னமா விளையாடுது... உதட்டை மடிச்சு.. குவிச்சு...அய்யோ அதை அப்படியே பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கே.. கழுத்துல்ல சின்னதா ஒரு தங்க செயின்.. அதுல்ல ஒரு சின்ன சிலுவை... அம்மா செய்யுற மைசூர் பாக் கலர்ல்ல கழுத்து.. அதுக்கு.. இப்படி என் பார்வை பயணம் போய்கிட்டு இருக்கும் போது இஸ்ரா வந்து பிரேக் போட்டான்.

"லேய் இன்னிக்கு ரேச்சலுக்கு பிறந்தநாளாம்... கேக் கொண்டு வந்துருக்கா.. எடுத்துக்கலே..."

"HAPPY BIRTHDAY...அப்படியே பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்த மாதிரி அவளையே பாத்துகிட்டு நின்னேன்.. அப்புறம் லேசா கிறக்கம் குறைஞ்சு..

"உன் ட்ரெஸ் ரொம்ப சூப்பரா இருக்கு.. பாம்பேல்ல எடுத்ததா?"
கேட்கணும்ன்னு கேட்டாலும்.. அந்த ட்ரெஸ் அவளுக்கு அவ்வளவு பாந்தமாப் பொருந்திப் போயிருச்சு.. சந்தன கலர் பிறகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான நிறமா மாறிப் போனதற்கு அன்னிக்கு ரேச்சலை அந்த ட்ரேஸில் பார்த்ததும் ஒரு காரணமா இருக்குமோன்னு அடிக்கடி நினைச்சுக்குவேன்.

"ம்.. சரி ப்ர்த் டேன்னா எங்க பாம்பேல்ல பிரண்ட்ஸ் எல்லாம் கிப்ட் கொடுப்பாங்க.. உங்க மெட்ராஸ்ல்ல கொடுப்பீங்களா.. இல்லை கேக் மட்டும் வாங்கி சாப்பிட்டுட்டு வாயைத் துடைக்காமப் போயிடுவீங்களா?"

வலது கையை வச்சு வாயைத் துடைச்சுகிட்டேன். அவ அதுக்கும் சிரிச்சா..

"கிப்ட் எல்லாம் கொடுப்போம்.. பொம்பிளை பிள்ளைக்குக் கொடுக்குற மாதிரி கிப்ட் கொடுக்கலாம்ன்னா.. நீ என்னப் பொம்பிள்ளை பிள்ளை மாதிரியா நடந்துக்குற?"

"பொம்பிள்ளை பிள்ளைன்னா எப்படி நடந்துக்கணும்?" இடுப்பில் கை வைத்து தலையை சரித்து உதட்டுல்ல கோபம் தேக்கி கேட்டாள். நான் கிறங்கிப் போயிட்டேன்.

"அது.. எப்படின்னு விளக்கம் எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது... ஆனா எங்க ஊர் பொம்பிளைப் பிள்ள மாதிரி நீ இல்ல.. அது மட்டும் என்னாலே அடிச்சு சொல்ல முடியும்.."

"ம்"

"சரி.. உனக்கு என்ன கிப்ட் வேணும் கேளு.. முடிஞ்சா வாங்கித் தாரேன்.. நீ கொடுத்தக் கேக்கைத் தின்னுட்டு சும்மாப் போயிட்டேன்ங்கற பேர் எல்லாம் என் பரம்பரைக்கு வேணாம்"

"ம்..ப்ச்.. வேணாம்.... உன் கிப்டை உனக்குப் பிடிச்ச மாதிரி உங்க ஊர் பொம்பிளை பிள்ளைக்கு ப்ர்த் டே வந்தாப் போய் வாங்கிக் கொடு.. நானும் எனக்குப் பிடிச்ச மாதிரி ஆம்பிளை பையன் கிட்ட வாங்கிக்குறேன்.." என்று சொல்லிவிட்டு விருட்டெனப் போனவள் முன்னால் ஓடிப் போய் மறித்து நின்றேன்.

"என்ன நக்கலா.. வேணாம்... அது என்ன? உனக்கு பிடிச்ச மாதிரி ஆம்பிளை பையன்... பாம்பேகாரனா இருக்கணுமோ.. மழு மழுன்னு வெள்ளையா சேட் வீட்டு பையனா... இந்தி எல்லாம் பேசணுமோ...சொல்லு"

"ம்ம்ம்.. அதெல்லாம் எனக்கு விளக்கமாச் சொல்லத் தெரியாது... விடு... இது என்ன சென்னைப் பேஷ்னா?"

அப்போது தான் நானும் கவ்னித்தேன்.. அவளைப் பார்க்கும் ஆவலில் அரக்க்ப் பரக்க வந்த வேகத்தில் லுங்கிக்குப் பதில் போர்வையை மடித்து அதை ஏற்றி வேறு கட்டி வந்திருக்கிறேன் என்று..

விடுமுறை அனுபவங்கள் தொடரும்

8 comments:

சேதுக்கரசி said...

ஹாஹா.. கடைசி பத்தி படிச்சிட்டு சிரிப்பு தாங்கல :-D

இலவசக்கொத்தனார் said...

//அவளைப் பார்க்கும் ஆவலில் அரக்க்ப் பரக்க வந்த வேகத்தில் லுங்கிக்குப் பதில் போர்வையை மடித்து அதை ஏற்றி வேறு கட்டி வந்திருக்கிறேன் என்று..//

:))))

மனதின் ஓசை said...

தேவு.. சூப்பரு.. எப்படிய்யா இப்படியெல்லாம்? கலக்கல்..சீக்கிரம் அடுத்த பகுதிய போடு..

அனுசுயா said...

//சந்தன கலர் பிறகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான நிறமா மாறிப் போனதற்கு அன்னிக்கு ரேச்சலை அந்த ட்ரேஸில் பார்த்ததும் ஒரு காரணமா இருக்குமோன்னு அடிக்கடி நினைச்சுக்குவேன்//
அப்படீங்களா ஆபீசர் நிசமாவா?

ஆனா கடைசி பத்தி ரொம்ப சூப்பருங்கோ

siva gnanamji(#18100882083107547329) said...

//லுங்கிக்குப் பதிலா போர்வை....//

நல்லவேளை பா....
லுங்கினாலும் கட்டியிருந்தியே

கோபிநாத் said...

ஆஹா....தலைவா...நீ தான் என் குரு ;))))

சூப்பரு தல ;)))

CVR said...

என் வலைப்பதிவு நண்பர்கள் பலர் உங்கள் எழுத்துக்களுக்கு தீவிர விசிறிகள். உங்களை பற்றி நான் ஒரு மூச்சு விட்டால் கூட பொறுக்க மாட்டார்கள்!!
அது ஏன் என்று இனிமேல் யோசிக்க மாட்டேன்!!
முன்று பாகமும் எழுத்து நடை அற்புதம்!!
அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க!! :-)

G.Ragavan said...

போர்வை போர்வை போர்வை ஹோஓஓஓஓஓஓஓ! :))))))))))