Tuesday, November 20, 2007

கதை 13:என்கவுண்டர்/ENCOUNTER


"செவலுரான்...சிட்டி ரவுடி மாதிரி இல்லையே பேரு.." ஆவி பறக்க டீயை உறிஞ்சிய படி ராஜதுரை கேட்டான்.

சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை நிதானமாய் ஊதினான் செல்வா.அவன் கண்கள் சுற்றும் முற்றும் வட்டம் போட்டு ஒரு நிலைக்கு வர ஒரு சில வினாடிகள் பிடித்தன. ராஜதுரையின் கேள்விக்குச் செல்வா எந்தப் பதிலும் சொல்லவில்லை. முழு சிகரெட்டையும் புகைத்தவன் எழுந்து நின்று ஆகாயம் பார்த்தான். ராஜதுரை மிச்சமிருந்த டீயை அவசரமாய் குடித்து விட்டு பாக்கெட்டுக்குள் இருந்து சில்லரையைத் தேடி எடுத்தான். டீக்கானச் சில்லரையை டீக்கடைகாரரிடம் கொடுத்துவிட்டு ஒரு ஹால்ஸ் வாங்கிச் செல்வாவிடம் கொடுத்தான்.

இருவரும் தெருமுனையைத் தாண்டி நடந்தனர். மாலைச் சூரியன் மெல்ல சரிந்துச் தெரு விளக்குகளுக்கு வழி விட்டுக் கொண்டிருந்தது. எரிந்தும் எரியமாலும் இருந்த தெரு விளக்குகளின் மீது பார்வையைச் செலுத்திய படி செல்வா முன்னால் நடந்தான். ராஜ துரை ஒரிரண்டு அடி பின்னால் நடந்தான். அவன் எதோ ஒரு பழைய சினிமாப் பாடலை முணுமுணுத்தப் படி வந்தான். அந்தத் தெருவினில் இருந்த பெரும்பான்மையான வீடுகளில் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. ஒரிரு வீடுகளிலும் வெறும் குண்டு பல்புகள் மட்டும் மிதமான ஓளியைக் கொட்டிக்கொண்டிருந்தன. தெருவில் ரெண்டு மூன்று பழைய ஆம்னி வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன... ஆம்னியில் இரண்டு ஓடி பல ஆண்டுகள் ஆகியிருக்கும் போல இருந்தது.. கண்ணாடிகளில் காக்காக் கூட்டம் கண்டபடி ஆட்டோகிராப் போட்டு வைத்திருந்தன.. நான்கைந்து மோட்டார் சைக்கிள்களும் உடைந்தும் உடையாமலும் நின்றுகொண்டிருந்தன.

செல்வாத் தன் கிழிந்த மேல்சட்டையைத் தூக்கி விட்டுக்கொண்டான். ராஜதுரை நான்கு நாட்கள் மழிக்கப் படாத மோவாயை மெல்லத் தேய்த்துக் கொண்டான். ராஜதுரை தன் குரலை மிகவும் உயர்த்தி அந்த பழைய சினிமாப் பாட்டை உச்ச ஸ்தாதியில் அலறலாய் பாடிய படி நடந்தான். செல்வா அடுத்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தான். தெருவின் இன்னொரு முனையில் இருந்து புத்தம் புதிய ஹோண்டா சிவிக் கார் ஒன்று மெல்ல ஊர்ந்து வந்தது.. சில்வர் நிறத்தில் அந்த இரவின் பின்னணியில் சந்திரனுக்கு சக்கரம் வைத்தார் போல் அம்சமாய் இருந்தது சிவிக் உலா. வினாடிக்கும் குறைவான பொழுதில் செல்வா ராஜதுரை கண்கள் சந்தித்துக் கொண்டன... செய்தியைப் பரிமாறிக் கொண்டன...

சிவிக் கார் இவர்களை நெருங்கி வந்த போது செல்வா ராஜதுரையின் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட நிலை தடுமாறிய ராஜதுரை கார் மீது போய் விழுந்தான்... பிரேக் அடித்து கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியப் படி கண்ணாடியை இறக்கிய டிரைவர் நெற்றி பொட்டில் சத்தமின்றி செல்வா செலுத்திய துப்பாக்கித் தோட்டக்கள் புதைந்தன....

போலீஸ்டா.. முன் பக்கத்தின் மறுபக்க கதவு திறந்தவனின் அலறல் வேகம் எடுக்கும் முன் ராஜதுரையின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா அவனை அமைதிப்படுத்தியது. காரைச் சுற்றி துப்பாக்கி ஏந்தியபடி இருவரும் வட்டமிட...அங்கே கனத்த மெளனம் நிலவியது.. செல்வா.. ராஜதுரை கண்கள் ஒன்றோடு ஒண்ணு பேசிக் கொண்டன..ராஜதுரை கார் கதவைத் திறக்க...

காருக்குள் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் முப்பது-முப்பதைந்து வயது மதிக்கத் தக்க நபர் ஒருத்தர் மயங்கி கிடந்தார். ராஜதுரை குனிந்து அந்த நபரைத் தூக்க முயலவும், அந்த நபரின் வலது கை, கட்டையும் மீறி துரிதமாய் அசைவதை செல்வாக் கவனிக்கவும் சரியாக இருந்தது.

அதை ராஜதுரைக் கவனிக்க வாய்ப்பில்லை. வலது கையில் பாட்டில் போன்ற எதோ ஒரு பொருள் இருப்பதைப் பார்த்து விட்ட செல்வா நோ... என்று அலறவும் ராஜதுரை சடக்கென பதறி திரும்ப அவன் முகம் பார்த்து வீசப்பட்ட திராவகம் சற்று குறி தவற ராஜதுரை சுதாரிப்பதற்குள் மயங்கிய ஆள் ராஜதுரையை தரையில் தள்ளி எழுந்து ஓடவும் சரியாக இருந்தது...

காரின் மறுபக்கம் இருந்து நடப்பதை அரையும் குறையுமாக பார்த்துக் கொண்டிருந்த செல்வா..ராஜதுரையின் உதவிக்குச் செல்வதற்குள் அந்த நபர் தப்பி ஓட ஆரம்பித்து விட்டான்.. நூறு அடி இடைவேளியில் துரத்தல் படலம் துவங்கியது...

கோபமும் ஆத்திரமும் ஓரு சேர சுட்ட ராஜதுரையின் குறி தப்பியது..மூன்று முறை சுட்டப் பின்னும் குறி தப்பிக்கொண்டிருக்கவே ராஜதுரையின் நிதானம் மேலும் தவறியது...செல்வா ஒரு முறை கூடச் சுடவில்லை.ஓடுபவனின் போக்கை அலசிக் கொண்டிருந்தான்.

அவன் ஓட்டத்தை நிறுத்தி விட்டு ஒரு வீட்டிற்குள் குதித்தான்.

இவர்கள் இருவரும் ஒரு உடைந்த ஆம்னியின் பின் பதுங்கியப் படி அவனை நோட்டம் பார்த்தனர்.

"இது வரைக்கும் நீ எத்தனைப் போட்டிருப்ப....?"

செல்வாவின் கண்கள் அந்த வீட்டையே வட்டம் போட்டுக்கொண்டிருந்தன.

"14... ம் போன தின்னவேலி பேட்டை என்கவுண்டரோட உன் ஸ்கோர் 14 ஆயிடுச்சு.. என் ஸ்கோர் 13.. இன்னிக்கு இவனைப் போட்டா என் ஸ்கோரும் 14.. இவனை நாந்தான் போடுவேன்... ஆமா...." ராஜதுரை நெற்றி வியர்வையைத் துடைத்தான். அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே செல்வா தடால் என எழுந்து செவலூரான் இருந்த வீட்டை நோக்கி காட்டாறு போலத் தெறித்து ஓடினான்.ராஜதுரை நடப்பது என்னவென்று சுதாரிப்பதற்குள் துப்பாக்கி சூட்டின் சத்தம் அவன் காதுகளைக் கிழித்தது...

இருள் கவ்வியிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தச் செல்வாவைத் துப்பாக்கி குண்டுகள் வரவேற்றன... ஒரு குண்டு சரியாக அவன் வலது கால் தொடையில் பாய்ந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடச் செய்தது...வலி அவன் உயிர் வரை ஊடுருவியது. செல்வா அதைத் தாங்கிக் கொண்டு அங்கிருந்தப் படிகளில் மெல்ல ஏறினான்... கிட்டத் தட்ட பாதி படிகளில் ஏறிய நிலையில் பெரிய இரும்பு உருளை ஒன்று அவன் மீது வந்து விழுந்தது... செல்வா நிலைத்தடுமாறி தரையில் சாயந்தான்....

தரையில் சரிந்து விழுந்த செல்வாவின் மேல் அவன் துரத்தி வந்த ஆள் ஏறி உட்கார்ந்தான். அந்த வினாடியில் ஒருவர் முகத்தை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டனர்... மீண்டும் அதே இரும்பு உருளையால் அவன் செல்வாவின் முகத்தில் தாக்கினான்.. தாக்குதலின் வேகம் பொறுக்கமுடியாமல் கிட்டத் தட்ட மயக்க நிலைக்குப் போனான் செல்வா.. முகத்தில் ரத்தம் வழிந்தோடியது..

"சேகர்...நீயா செவலூரான்......?" அரை குறை மயக்கத்தில் இருந்த செல்வா தன்னைத் தாக்கியவனின் முகத்தை உற்று பார்த்தப்படி முனங்கினான்.அவன் கண் இமைகள் வலியின் அழுத்தம் காரணமாய் மூடி மூடி திறந்தது...நினைவுகளும் முன்னும் பின்னும் போய் வந்தன...

கல்லூரி காலத்தின் ஞாபகங்கள் அவன் மனத்திரையில் நிழலாட்ட்டம் போட்டன...

சென்னையின் பிரபல கல்லூரி அது...பின்னிரவு நேரம்...கல்லூரி மைதானத்தில் இருந்த பெஞ்சில் தலை கவிழ்ந்து உக்காந்திருந்தான் செல்வா.. கண்களின் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரைக் கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டான். அவன் அருகில் யாருமில்லை.

"ஏய் நீ ரூம் நம்பர் 23 இல்ல..." தனிமைக் கலைக்கும் குரல் கேட்டு செல்வா கண்களைச் சடக்கெனத் துடைத்துக் கொண்டு திரும்பினான். அங்கு குரலுக்குச் சொந்தக்காரனாக மடித்துக் கட்டிய லுங்கியின் ஓரத்தைப் பிடித்தப் படி நின்று கொண்டிருந்தான் சேகர்.இன்று செல்வா முன் இரும்புத் தடியுடன் உட்கார்ந்து இருக்கும் அதே செவலுரான் தான் அந்த சேகர் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை

"இந்நேரம் இங்கே என்னடாப் பண்ணிகிட்டு இருக்க..?? எதாவது குட்டிய வரச் சொல்லியிருக்கியா?" ன்னு செல்வாவைத் தாண்டிப் பார்வையை ஓட்டினான் சேகர். செல்வா எந்தப் பதிலும் சொல்லவில்லை. சேகர் நன்றாகக் குடித்திருந்தான் என்பது அவன் தள்ளாட்டத்திலேயே செல்வாவுக்குப் புரிந்தது.

"பத்து மணிக்கெல்லாம் போர்த்திகிட்டுத் தூங்ககுற பய நியு.. பதினோரு மணிக்கு வெளியேத் திரியற....எதாவது பொண்ணு பிரச்சனையா...அந்த பர்ஸ்ட் இயர் பயலாஜி படிக்குதே பச்சக் கிளி அதுவா...நான் இந்தக் காலேஜ் சேர்மன்டா... இந்தக் கேம்பஸ்ல்ல யார் யார் கூடச் சோடிப் போடுறாங்கன்னு எனக்குத் தெரியும்டா.. ம்ம் பொண்ணு அம்சமாத் தான் இருக்கா..." மப்பில் இருந்தாலும் ஒரளவுக்கு தன்னிலையில் தான் சேகர் இருந்தான்.

சேகர் நல்லவன் இல்ல.. அவங்க அப்பா பெரிய ரவுடி..கொலைக்கெல்லாம் அஞ்சாத குடும்பம் அப்படின்னு காலேஜ்ல்ல பேசாதவங்க யாரும் கிடையாது. செல்வா காதுல்லயும் அது எல்லாமே விழுந்து இருக்கு.அந்த நேரத்தில் அது எல்லாம் அவன் ஞாபகத்துக்கு வந்துப் போனது. செல்வா அப்போதும் எதுவும் பேசாமல் மவுனமாகவே நின்றான்.

"என்னடா ரூம் நம்பர் 23 என்கிட்டச் சொல்ல யோசிக்கிறீயா...சேகர் நல்லவன் இல்ல.. அவங்க அப்பா பெரிய ரவுடி..கொலைக்கெல்லாம் அஞ்சாத குடும்பத்திலிருந்து வந்தப் பையன்.. பொறுக்கின்னு யோசிக்குறீயா?"

செல்வா ஒரு நிமிசம் தன் மனத்தில் ஓடுவது இவனுக்கு எப்படித் தெரிந்தது எனத் துணுக்குற்று திகைத்தான்..பின் சுதாரித்து நிமிர்ந்தான்..

"என்னைப் பத்தி எல்லாரும் இப்படித் தானே யோசிக்கிறாங்க...நீ புதுசா வேற என்ன யோசிக்கப் போற?" எனக் கடகடவெனச் சிரித்தான்.

செல்வன் அப்போது முழுதாய் சேகரின் முகத்தைப் பார்த்தான். போதையில் சிவப்பேறிய கண்கள். வியர்த்துப் போயிருந்த முகம். இதழோரம் தவிழ்ந்த நமுட்டுப் புன்னகை. அவனிடம் ஒரு வசீகரம் இருக்கத் தான் செய்கிறது என நினைத்தான் செல்வா.

"ரெண்டு நாளா அந்தப் புள்ளையக் காலேஜ்க்குக் காணும்.. நீ வேற ஒரு மாதிரியாத் திரியற..பாத்துகிட்டுத் தான் இருக்கேன்... இப்போ இந்த அர்த்த ராத்திரில்ல.. இங்கே பெஞ்ச்ல்ல தனியா.. என்னப் பிரச்சன சொல்லு..." செல்வாவின் தோள் மீது தன் இருகைகளையும் அழுத்தமாய் போட்டுக் கேட்டான் சேகர்.

அந்த அழுத்தமானப் பிடியில் ஏற்பட்ட நம்பிக்கையோ.. இல்லை அந்தத் தருணத்தின் இயலாமையோ என்னவென்று தெரியாமல் தன் வாழ்க்கையின் மிகவும் சிக்கலானப் பக்கத்தை அவனுக்கு செல்வா திறந்துக் காட்ட ஆரம்பித்தான்...அந்த இரவு மிகவும் நீளமானதொரு இரவாய் அமைந்தது..பொழுது விடியும் போது சேகருக்கு போதைத் தெளிந்து விட்டிருந்தது..செல்வா கண்களில் ஒரு தெளிவு தென்பட்டது...

"டேய் ரூம் நம்பர் 23... எனக்கெல்லாம் வாழ்க்கையிலே நிறையப் பிரச்சனைடா.. எங்கப்பனுக்கு நாலு பொண்டாட்டி.. அதுல்ல நான் எந்த பொண்டாட்டிக்குப் பொறந்தேன்னு அவனுக்குத் தெரியாது.. காசு கொடுப்பான்..கட்டுகட்டாக் கொடுப்பான்..ஆனா...விடுறா.. என் பிரச்சனையைப் பேசி என்னப் பயன்.. ஓன் பிரச்சனைக்கு இந்தப் பணம் உதவும்ன்னா வச்சுக்கடா... அப்புறம் யார் தான் தப்பு பண்ணல்ல? எல்லாரும் பண்ணுறோம்...தப்புப் பண்ணிட்டு தப்பிக்க நினைக்கக் கூடாது.. நீ தப்பிக்க நினைக்கல்லடா.. நிக்குறேடா..அதான்டா உன்ன எனக்குப் பிடிக்குது..." சேகர் செல்வாவின் தலையை ஆதரவாய் கோதிவிட்டு லுங்கியை இறக்கிக் கட்டிக் கொண்டு நடந்தான். செல்வா சேகர் போனத் திசையை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.


"இதுல்ல மூவாயிரம் ரூபா இருக்கு.. தேங்கஸ்" மூன்று வாரங்கள் கழித்து சேகரை காலேஜ் ஹாக்கி கிரவுண்டில் தனியாய்ச் சந்தித்த செல்வா ஒரு கவரை மடித்து நீட்டினான். சேகர் எதுவும் பேசமால் கவரை வாங்கிப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்வா கேலரியில் இருந்து இறங்கி நடந்தான்.

கல்லூரியின் எஞ்சிய வருடங்களிலும் சேகரோடு செல்வா நெருங்கிப் பழகவில்லை, சேகர் செல்வாவை எங்குப் பார்த்தாலும் டேய் ரூம் நம்பர் 23 என்று உற்சாகமாய் குரல் கொடுப்பதும் செல்வாப் பதிலுக்கு கை அசைப்பதுவும் தவிர அவர்களுக்குள் வேறு எதுவும் பெரிதாய் கிடையாது....


செல்வா மெல்ல முனங்கினான்... அவன் கண்கள் திறந்துப் பார்க்கும் போது சேகர் என்ற செவலூரான் சுவற்றில் சாயந்தப் படி கால்களை நீட்டி அம்ர்ந்திருந்தான். செல்வா மிகவும் கஷ்ட்டப்பட்டுத் தலையைத் தூக்கினான். வலி அவன் நரம்பு மண்டலத்தை ஊடுருவிப் பாய்ந்தது... அவன் முகம் வலியினால் கோணியது...சேகர் மெல்லச் சிரித்தப் படி அவன் முகத்தருகே வந்து அவன் தலையைத் தூக்க உதவிச் செயதான்.

"டேய் ரூம் நம்பர் 23... உன்னிய நான் மறுபடியும் பாப்பேன்னு நினைக்கவே இல்ல.. காலேஜ் முடிஞ்சவுடனே சொல்லக் கொள்ளாம போயிட்ட" என்றான் அதே பழையச் சிரிப்பு மாறாமல்.

செல்வாவுக்கு வலியின் மிகுதியில் வார்த்தைகள் வரவில்லை. மிகவும் சிரமப்பட்டு தன் உடலை தன் முழு பலம் பயன்படுத்தி சுவற்றின் ஓரமாய் நகர்த்தி அதில் சாய்ந்துக் கொண்டான். கையைத் தலையின் பின்பக்கம் வைத்து அழுத்திக் கொண்டான்.

"ரூம் நம்பர் 23 போலீஸ்காரன் ஆயிட்டே.. ரொம்ப சந்தோசம்ய்யா..நீயுன்னு தெரிஞ்சிருந்தாப் போட்டுருக்க மாட்டேன்.. போலீஸ்காரன்னால்லே பொங்கிப் போயிருது.. கொலைவெறி வந்துருது.." மறுபடியும் அதேச் சிரிப்பு.

"ஆமா.. இப்போ எந்தூர்ல்ல இருக்க? என்னியப் புடிக்கவா..ம்ம்ம் போடவா இங்கே வந்த?" சேகர் செல்வாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். செல்வா வலியின் பிடியில் இருந்து முழுவதுமாக வெளியே வரவில்லை. சுருங்கிய புருவங்களும் கண்களும் அவன் வலியினால் படும் அவஸ்தையை சொல்லிக்கொண்டிருந்தன.

"ம்ம் அட ஒன் பாக்கெட்ல்ல தம் இருக்கு.. ஒண்ணு எடுத்துக்குறேன்" அனுமதியை எதிர்பார்க்காமல் சேகர் சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்.

"கிங்க்ஸா.. காலேஜ்ல்ல அடிச்சது.. இப்போல்லாம் 555 தான் பழகிடுச்சு.. வேற சிகரெட் ஒத்துக்க மாட்டேங்குது" சிரித்தான் சேகர்.

"சரி.. கலியாணம் பண்ணிகிட்டல்ல.. " சேகரின் குரலில் ஒரு தவிப்புத் இருந்தது.

செல்வா மெல்ல தலையாட்டினான்.

"அந்தப் பொண்ணைத் தானே.." சேகரின் குரலில் தவிப்பு அதிகமாகியது.

செல்வா இப்போதும் தலை ஆட்டினான்.

"இப்போ ஒனக்கு குழந்தைங்க இருக்கா?" சேகர் குரலில் தவிப்பு மாறாமல் கேட்டான்.

"இருக்கு.. ரெண்டு.." செல்வாவின் கண்கள் கலங்கிப் போயிருந்தன. வேறு எதோ ஒரு வலியினில் அகப்பட்டவனாய் செல்வாத் துடித்தான். அவன் துடிப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

"எல்லாம் சொகமா இருக்காங்களா?" சேகரின் அக்கறையான விசாரிப்பு தொடர்ந்தது.

ம் கொட்டினான் செல்வா.

சேகரின் முகத்தில் பழையச் சிரிப்பு. சிகரெட்டை மெல்ல இழுத்தான்.

"யார் தான் தப்பு பண்ணல்ல? எல்லாரும் பண்ணுறோம்...தப்புப் பண்ணிட்டு தப்பிக்க நினைக்கக் கூடாது.. நிக்குறேடா..அதான்ய்யா உன்னிய எனக்குப் பிடிச்சுது...பிடிக்குது..."

செல்வாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த பழைய இரவின் சம்பவமும் சேகரின் ஈரம் மாறாத குரலும் செல்வாவின் காதுகளில் விழுந்தது.

"அன்னிக்கு நீ இல்லன்னா எனக்கு என்ன ஆயிருக்கும்ன்னு சொல்லத் தெரியல்ல..அவசரத்துல்ல நான் செஞ்சத் தப்பு... அது அவ வயித்துல்ல வளந்துச்சு...உனக்கு நான் கடன் பட்டிருக்கேன்..என் காதலைக் காப்பாத்துன.. என் காதலியைக் காப்பாத்துன...என்..."

"உன் புள்ளயை அது பொறக்குறதுக்கு முன்னாடியே கொல்ல உனக்கு ஐடியாவும் கொடுத்து பணமும் கொடுத்தேன்..." ஒரு வித அழுத்தம் பிறீட சொன்னான் சேகர்.

"அப்போ வேற வழி இல்ல... அது கொலை இல்ல.... நான் பண்ணத் தப்புக்கு எனக்கு நானேக் கொடுத்துகிட்ட தண்டனை..."

"ஸ்....அதெல்லாம் முடிஞ்சுப் போச்சு.. மறுபடியும் சொல்லுறேன் தப்பு பண்றது இயற்கை... நீ தப்பு பண்ண.. ஆனா ஓடிப் போகல்ல..அதே பொண்ணைக் கட்டிகிட்டு ரெண்டு புள்ளகளைப் பெத்துகிட்டு வாழுறே.. கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... நீ மனுசன்டா..."

சிகரெட்டை அழுத்தமாய் வாயில் வைத்து இழுத்தான் செவலூரான் என்ற சேகர். ஜன்னலுக்கு வெளியே சலசலப்புக் கேட்டு செல்வாக் கஷ்ட்டப் பட்டு எழுந்தான். செல்வா எழும்பும் போது தன்னிடமிருந்த பிஸ்டலைத் தேடினான். சேகர் அதைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தான். சேகர் ஜன்னலோரம் மறைந்திருந்து வெளியேப் பார்த்தான்.அவன் கண்களில் திரளானக் காக்கிச் சட்டைகளின் அணிவகுப்பைச் செல்வாவால் பார்க்க முடிந்தது. சேகர் ஒரு விதக் களைப்புடன் மறுபடியும் சுவற்றோரமாய் சாயந்தான். அவன் உதடுகளில் பழையச் சிரிப்பு நிரந்தரமாய் ஒட்டிக் கொண்டது.

"ஒரு நூறு பேர் இருப்பாயங்களா?" செவலூரான் களைத்தும் கண்களில் பயமின்றிக் கேட்டான்.

"தெரியல்ல.. நாங்க ரெண்டு பேர் தான் வந்தோம்..இது எனக்குத் தெரியல்ல" செல்வாவின் தலை பயங்கரமாய் வலித்தது.

"செவலூரானைப் பிடிக்க நல்லாத் தான் தூண்டில் போட்டுருக்காங்க" என்று பயங்கரமாய் சிரித்தான் சேகர்...செல்வாவுக்குப் பாதி புரிந்தது...இருந்தாலும் அதிகம் யோசிக்க முடியாதப் படி அவன் தலை வலித்தது. மறுபடியும் அரை குறையாய் தன் பிஸ்டலுக்காக அறையைப் பார்வையால் துழாவினான். வெளியே போலீஸ் புட் சத்தம் மெல்லக் கேட்க துவங்கியது. வினாடி இடைவெளியில் சத்தம் கூடியது. செல்வா தட்டு தடுமாறி எழுந்தான்.

"உன்னக் காப்பாத்தணும் அது என் கடமை... என்னைக் கேடயமா வச்சு நீ தப்பிச்சுப் போ" என்று செல்வா உண்மையான அக்கரையோடுச் சொன்னான்.

சேகர் ஒரு ஏளனப் புன்னகைப் பூத்தான்... கைவிரல்களை மடக்கி நீட்டினான். போலீஸ் பூட் சத்தம் இன்னும் அதிகமானது...

"தூண்டில்ல இருக்க புழு நீ.... ஓன் கருணையினால எனக்கு என்னய்யா பிரயோஜனம்? உன்னிய அனுப்பிட்டு உன் பின்னாடியே நூறு பேரு கிளம்பி வந்துருக்கான்.. எதுக்கு... நான் தப்பிக்க நினைச்சா உன்னியப் போட்டுட்டு... நான் உன்னைப் போட்டேன்னு சொல்லி என்னையும் போடுவானுங்க... பசங்க..."

"ஏன் இந்தப் பொழப்பு உனக்கு... உங்க அப்பன் ரவுடின்னா நீயும் ரவுடியாத் தான் சாகணு....மா?" ஆத்திரத்தில் செல்வாவுக்கு வார்த்தைகள் குழறிக் கொட்டின.

"உன் குழந்தைகளுக்கு எத்தனை வயசு...?

"நீ கொஞ்சம் நினைச்சிருந்தா வேற பொழப்புப் பார்த்து இருக்கலாமே.. இப்படி ஒரு நிலமை வந்து இருக்காதே..."

"என் பையனுக்கு ஆறு வயசு...பொண்ணுக்கு மூணு வயசு... நான் வந்த கார்ல்ல அதுகளுக்கு வாங்குன பொம்மை இருக்கு... நிறையவே இருக்கு உன் புள்ளகளுக்கும் எடுத்துக்கோ.. கொடுத்துருவீயா?"

"ஏன் ரவுடி பொழைப்பு...? நீ தான் படிச்சியே.. எத்தனைப் பொழப்பு இருக்கு ஒலகத்துல்ல.." செல்வா தொடர்ந்துப் பேசிக் கொண்டே இருந்தான்.

"என்னை நம்பி வந்துட்டா... என் பொண்டாட்டி.. அவளைக் கோர்ர்ட்.. போலீஸ் ஸ்டேஷன்னு அலையவிட்டறக் கூடாது.. வேணாம்..."

"சேகர்.. நான் உன்னிய எப்படியாவது காப்பாத்துறேன்... என் உசுரைக் கொடுத்தாவது காப்பாத்துறேன்" செல்வா சேகரின் முன் மண்டியிட்டு உட்கார்ந்துப் பேசினான்.

"எங்க அப்பன் சாவுக்கு என் கூடப் பொறந்தவங்க எல்லாரும் பாடையைக் கையிலே எடுத்தானுங்க... நான் எங்கப்பன் கீழேப் போட்ட கத்திய எடுத்தேன்.. அன்னிக்கே எனக்கு கவர்மெண்ட் செலவுல்ல தான் கருமாதின்னு முடிவு ஆகிருச்சுடா... ஓம் பாக்கெட்ல்ல இருக்க அந்த ஒத்த சிகரெட்டைக் கொடு... "
சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தான் சேகர்...ஒரு தரம் புகையை இழுத்து விட்டான்..

"இது எரிஞ்சு முடியற வரைக்கும் எனக்கு நேரம் இருக்கான்னு தெரியல்ல...
நீ எனக்குப் பட்ட கடனுக்கு எதாவது செய்யணும்ன்னு ஆசப்படுறீயா...... ம்ம்ம் இந்தா.....

செல்வாவின் பிஸ்டலை அவனிடம் வீசிவிட்டு தன் சட்டைப் பட்டன்களைத் திறந்துவிட்டு மார்பில் கை வைத்து செல்வாவைப் பார்த்து அதே பழைய நமுட்டுப் புன்னகையைத் தவிழவிட்டான் சேகர்.

செல்வா கடிகாரத்தில் இருந்த முட்கள் வினாடிகளை நகர்த்தத் திராணி இன்றி நின்று போனது.. ஒரு கனத்த மவுனத்திற்குப் பின்... துப்பாக்கி தன் மொழி பேசி மௌனம் கலைத்தது..

கலைந்த மௌனத்தின் மிச்சங்களாய் சிகரெட் தரையில் விழுந்தும் புகைந்துக் கொண்டிருந்தது... பிஸ்டலில் இருந்து மெல்லிய புகை வெளிபட்டுக் கொண்டிருந்தது....

போலீஸ் காரர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சிப்பதற்கு ஒரு வினாடி முன்னதாக செல்வா அவர்களுக்குக் கதவைத் திறந்து விட்டான்.

"மாப்ளே உன் ஸ்கோர் 15 டே.. போட்டுத் தாக்குறே" என்று ஓடி வந்து கட்டிப்பிடித்த ராஜதுரையை வறட்டுப் புன்னகைச் சிந்தி விலக்கி விட்டு நடந்தான் செல்வா.

அந்தி வானம் மெல்ல போர்வை போர்த்த சென்னை இன்னோரு இரவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.ரயில்வே தண்டவாளம் அருகே உட்கார்ந்து உயிர் கிழியும் அளவிற்கு அலறி அழுத செல்வாவின் குரல் காற்றோடு காற்றாக கலந்து காணாமல் போனது.....

அதிகாலை செய்தித் தாள்களில் முதல் பக்கத்தில் சிரித்த முகத்தோடு வெளிவந்திருந்த செல்வாவின் புகைப் படத்தை சேகரின் ஆறு வயது மகன் கிழித்துக் கொண்டிருந்தான்.

28 comments:

MyFriend said...

உங்கள் புது தொடரை பார்த்தேன்.. ஆனால், படிக்கவில்லை..
படித்தால், இதனின் தொடர்ச்சியை நீங்கள் வெளியிடுவதுக்கு என்னால் வேய்ட் பண்ண முடியாது; எந்த வேலையும் செய்ய முடியாது. முதலில் எழுதி முடியுங்கள். அப்புறம் பாருங்க.. உங்க கதையய் எத்தனை தடவை படிக்கிறேன்னு.. :-D

Anonymous said...

தேவ்,

உங்கள் கதைகள் முழுவதும் இப்போது தான் ஒரே மூச்சில் கடந்த இரண்டு தினங்களாக படித்து முடித்தேன். மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

MyFriend said...

முடிச்சாச்சா? நன்று. இப்போதே படிக்கின்றேன். பிறகு ஒரு பின்னூட்டத்தை போடுகிறேன். ;-)

Unknown said...

வாங்க மை பிரேண்ட்,

உங்க உற்சாகத்துக்கும் ஆர்வமும் எனக்கு ரொம்ப ஊக்கம் அளிக்குது.. அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் உள்ளது. கதையைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் போடுறேன்னுச் சொல்லிட்டு காணாமப் போயிட்டீங்க.. என்னாச்சுங்க?

Unknown said...

வாங்க சுப்பு,

//தேவ்,

உங்கள் கதைகள் முழுவதும் இப்போது தான் ஒரே மூச்சில் கடந்த இரண்டு தினங்களாக படித்து முடித்தேன். மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்//

எல்லாக் கதைகளையும் படிச்சதுக்கு மிக்க நன்றி. இனி வரும் கதைகளையும் படிங்க.. நிறைகளையும் குறைகளையும் சொல்லுங்க... ரொம்ப சந்தோஷமாயிருக்கும். தொடர்ந்து பக்கம் 78க்கு வாங்க...

MyFriend said...

// அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் உள்ளது. கதையைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் போடுறேன்னுச் சொல்லிட்டு காணாமப் போயிட்டீங்க.. //

ஆபிஸ்ல தலைக்கு மேல வேலை. இங்கவும் அங்கவும் திரும்ப கூட நேரம் இல்லை.
உங்க கதையை படித்தால் ஒரு வித ரசாயண மாற்றங்கள் ஏற்ப்படுகின்றன என்று முன்பே சொல்லியிருந்தேன். சோ, படிச்சா கொஞ்ச நேரம் அந்த கதையை ரசிப்பேன்.

அதான் பல்லை கடிச்சுகிட்டு வார இறுதி வரையிலும் காத்திருந்தேன் தேவ்.

MyFriend said...

// சிகரெட்டை வாங்கிக் கொண்டு செல்வாவின் பிஸ்டலை அவனிடம் வீசினான் சேகர். சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டு கட்டை விரலை செல்வாவுக்கு உயர்த்திக் காட்டினான் சேகர்.

சிகரெட் தரையில் விழுந்தும் புகைந்துக் கொண்டிருந்தது... செல்வாவின் பிஸ்டலில் இருந்து மெல்லிய புகை வெளிபட்டுக் கொண்டிருந்தது....போலீஸ் காரர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சிப்பதற்கு ஒரு வினாடி முன்னதாக செல்வா அவர்களுக்குக் கதவைத் திறந்து விட்டான்.

"மாப்ளே உன் ஸ்கோர் 15 டே.. போட்டுத் தாக்குறே" என்று ஓடி வந்து கட்டிப்பிடித்த ராஜதுரையை வறட்டுப் புன்னகைச் சிந்தி விலக்கி விட்டு நடந்தான் செல்வா. //

இந்த கட்டம் எனக்கு புரியவில்லை. செவலுரோன் தன்னை சுட்டுகொண்டாரா இல்லை செல்வாதான் சுட்டாரா?

எழுந்து உட்காரவே தெம்பு இல்லாமால் இருந்த செல்வா எப்படி நடந்துபோய் கதவை திறந்தான்?

MyFriend said...

நம்ம ஹீரோ செவலுரோன் ஒரு வீரன்ல.. ஹீ ஹீ.. சேகரின் கேரக்டர் எனக்கு புடிச்சிருக்கு. அவன் ரௌடியாய் இருந்தாலும், அவனுள் உள்ள இரக்க குணம் என்னை கவர்ந்தது..
:-)

Unknown said...

//ஆபிஸ்ல தலைக்கு மேல வேலை. இங்கவும் அங்கவும் திரும்ப கூட நேரம் இல்லை.
உங்க கதையை படித்தால் ஒரு வித ரசாயண மாற்றங்கள் ஏற்ப்படுகின்றன என்று முன்பே சொல்லியிருந்தேன். சோ, படிச்சா கொஞ்ச நேரம் அந்த கதையை ரசிப்பேன்.

அதான் பல்லை கடிச்சுகிட்டு வார இறுதி வரையிலும் காத்திருந்தேன் தேவ். //

ஒரு வழியாக் கதையைப் படிச்சிட்டீங்களா மை பிரெண்ட்.. :)

Unknown said...

//இந்த கட்டம் எனக்கு புரியவில்லை. செவலுரோன் தன்னை சுட்டுகொண்டாரா இல்லை செல்வாதான் சுட்டாரா?

எழுந்து உட்காரவே தெம்பு இல்லாமால் இருந்த செல்வா எப்படி நடந்துபோய் கதவை திறந்தான்? //

மன்னிக்கணும் கொஞ்சம் வேலை அதான் கணிணி பக்கம் வரமுடியவில்லை. உங்க சந்தேகத்துக்கும் விளக்கம் தர முடியவில்லை. செவலூரான் தன் நண்பனைக் காப்பாற்ற தன் நண்பன் கையாலே தன் உயிரை விடுகிறான்.

எல்லாம் முடிந்தப் பிறகு தன்னிடம் மிஞ்சிய சக்தி முழுவதையும் பயன்படுத்தி செல்வா எழுந்து கதவைத் திறக்கிறான்.

இது தான் நான் சொல்ல வந்தது. இப்போ உங்க சந்தேகம் தீர்ந்துச்சா.. :)))

Unknown said...

//நம்ம ஹீரோ செவலுரோன் ஒரு வீரன்ல.. ஹீ ஹீ.. சேகரின் கேரக்டர் எனக்கு புடிச்சிருக்கு. அவன் ரௌடியாய் இருந்தாலும், அவனுள் உள்ள இரக்க குணம் என்னை கவர்ந்தது..
:-) //

மை பிரெண்ட் எல்லாக் கல்லுக்குள்ளும் நிச்சயம் ஈரம் உண்டுங்க... நமக்குத் தான் சட்டுன்னு தெரியறது இல்ல...

Anonymous said...

dev romba arumaiyana story. well done. story mudinjum kooda manasula oru baaram :) rasigai

Unknown said...

வாங்க ரசிகை,


//dev romba arumaiyana story. well done. story mudinjum kooda manasula oru baaram :) rasigai //


உங்களுக்குக் கதைப் பிடிச்சிருக்கா ரொம்ப சந்தோஷம்ங்க..

MyFriend said...

ok.. ippothu purinchiduchchu. puthu kathai eppOthu, Dev?

Unknown said...

அடுத்தது விச்சுவின் கதை விரைவில் வரப் போகுது மை பிரெண்ட்.. படிச்சுட்டுச் சொல்லுங்க..

CVR said...

WOW!!!
great!!!

wonderfully narrated!!!
awesome!!

Divya said...

வாவ்! தேவ் அண்ணா,கதையை படிச்சுட்டு உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை............

கதையின் நடை, காட்ச்சிகளை கண் முன் நிறுத்தியது,
ஒரு திரைபடம் பார்த்த உணர்வு!

Divya said...

\\கல்லூரியின் எஞ்சிய வருடங்களிலும் சேகரோடு செல்வா நெருங்கிப் பழகவில்லை, சேகர் செல்வாவை எங்குப் பார்த்தாலும் டேய் ரூம் நம்பர் 23 என்று உற்சாகமாய் குரல் கொடுப்பதும் செல்வாப் பதிலுக்கு கை அசைப்பதுவும் தவிர அவர்களுக்குள் வேறு எதுவும் பெரிதாய் கிடையாது...\\

இந்த வரிகளை படிக்கும் போது, சேகர் செய்த உதவி [ பணம்] எதற்கு என்று நீங்கள் கூறாததால் , ஏதோ ஒரு சாதாரனமான பண உதவி , காலேஜ் ஃபீஸ் கட்டுவதற்கு போலிருக்கு என்று நினைத்தேன்,
பின்பு தான் தெரிந்தது சேகர் செய்த உதவி எதற்கு என்று, காரணத்தை பிற் பகுதியில் கூறியிருப்பது அருமை.

Divya said...

\\"சரி.. கலியாணம் பண்ணிகிட்டல்ல.. " சேகரின் குரலில் ஒரு தவிப்புத் இருந்தது.

செல்வா மெல்ல தலையாட்டினான்.

"அந்தப் பொண்ணைத் தானே.." சேகரின் குரலில் தவிப்பு அதிகமாகியது.\\


\\"என்னை நம்பி வந்துட்டா... என் பொண்டாட்டி.. அவளைக் கோர்ர்ட்.. போலீஸ் ஸ்டேஷன்னு அலையவிட்டறக் கூடாது.. வேணாம்..."\\

எத்தனை பெரிய ரவுடியாக இருந்தாலும், பெண்களை மதிக்கும் சேகரின் குணம் என்னை மிகவும் கவர்ந்தது!

கோபிநாத் said...

அட்டகாசம், அருமை, விறு விறுப்பு, சூப்பர், பின்னிட்டிங்க, கலக்கிட்டிங்க....... ;) (படித்தவுடன் எப்படி சொல்றதுன்னு தெரியல அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..)

\\செல்வாவின் பிஸ்டலை அவனிடம் வீசிவிட்டு தன் சட்டைப் பட்டன்களைத் திறந்துவிட்டு மார்பில் கை வைத்து செல்வாவைப் பார்த்து அதே பழைய நமுட்டுப் புன்னகையைத் தவிழவிட்டான் சேகர்.

செல்வா கடிகாரத்தில் இருந்த முட்கள் வினாடிகளை நகர்த்தத் திராணி இன்றி நின்று போனது.. ஒரு கனத்த மவுனத்திற்குப் பின்... துப்பாக்கி தன் மொழி பேசி மௌனம் கலைத்தது..

கலைந்த மௌனத்தின் மிச்சங்களாய் சிகரெட் தரையில் விழுந்தும் புகைந்துக் கொண்டிருந்தது... பிஸ்டலில் இருந்து மெல்லிய புகை வெளிபட்டுக் கொண்டிருந்தது....

போலீஸ் காரர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சிப்பதற்கு ஒரு வினாடி முன்னதாக செல்வா அவர்களுக்குக் கதவைத் திறந்து விட்டான்.\\

இந்த இடம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த வசனங்களால் அந்த காட்சியை எளிதாக கற்பனை பண்ணி பார்க்க முடிந்தது ;))

அண்ணே இப்படி வித்தயாசமாக எப்பவும் கலக்குங்க ;))

Unknown said...

//CVR said...
WOW!!!
great!!!

wonderfully narrated!!!
awesome!!//

Thanks very much CVR!!

Unknown said...

//Divya said...
வாவ்! தேவ் அண்ணா,கதையை படிச்சுட்டு உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை............

கதையின் நடை, காட்ச்சிகளை கண் முன் நிறுத்தியது,
ஒரு திரைபடம் பார்த்த உணர்வு!//

நல்ல தயாரிப்பாளர் தெரிஞ்சாச் சொல்லும்மா படமா எடுத்து விட்டுருவோம் :-)

Unknown said...

திவ்யா ம்ம் வர வர பயங்கரமான விமர்சகராக மாறிட்டு வர்ற கதையை அக்குவேறு ஆணிவேறு அலசி ஆராய்ஞ்சு இருக்க. கலக்கல் கருத்துக்கள். இந்த விமர்சனத்தை தொடர்ந்து செய்யணும் ஓ.கே. கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிம்மா..

Unknown said...

கோபி நன்றிப்பா. சில சமயம் நாம ரொம்ப யோசிச்சு ரசிச்சு எழுதும் எழுத்துக்களை இன்னொருத்தரும் ரசிக்கும் போது நம்ம சந்தோஷம் பல மடங்கு ஆகுது. அந்த விதத்தில் இந்த வரிகள் நானும் மிக ரசித்தவை...:)

Divya said...

\\தேவ் | Dev said...
திவ்யா ம்ம் வர வர பயங்கரமான விமர்சகராக மாறிட்டு வர்ற கதையை அக்குவேறு ஆணிவேறு அலசி ஆராய்ஞ்சு இருக்க. கலக்கல் கருத்துக்கள். இந்த விமர்சனத்தை தொடர்ந்து செய்யணும் ஓ.கே.\\


அருமையா கதை எழுதியிருக்கிறீங்க, படிச்சுட்டு விமர்சிக்காமல் இருக்க முடியவிலலை அண்ணா!

Unknown said...

//அருமையா கதை எழுதியிருக்கிறீங்க, படிச்சுட்டு விமர்சிக்காமல் இருக்க முடியவிலலை அண்ணா!//

நல்ல விமர்சனத்திற்கு நன்றி :))

நாதஸ் said...

arumai annachi !!!

Unknown said...

//nathas said...
arumai annachi !!!
//

நன்றிங்க நாதாஸ் முதல் தடவையா நம்ம பக்கம் பக்கமா வந்து இருக்கீங்க.. மீதி கதைகளையும் படியுங்க.. கருத்தைச் சொல்லுங்க..