Thursday, July 12, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 4

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 3

"டேய்.. என்ன கேசட்டுடா இது?" இஸ்ரா என் கையில் இருந்த பெயர் எழுதப்படாத 90 டி.டி.கே கேசட் கவரைப் பார்த்துக் கேட்டான்.

"இஸ்ரா இது பாப் மியூசிக்.. மைக்கேல் ஜாக்ஸன் பாட்டு..மெட்ராஸ்ல்ல அம்பது ரூவாக் கொடுத்து ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கேன்... வீட்டுக்குத் தெரியாது."

இதை வச்சு இந்த சின்னக்குளத்தை என்னலேய் பண்ணப் போறா?" இஸ்ரா மிரட்சியுடன் கேட்டான்.

"பாம்பேகாரிக்கு எங் கெத்தையும் காட்டணும்ல்லா... நாங்களும் இங்கிலீஸ் பாட்டு எல்லாம் கேப்போம்ன்னு சொல்லணும்ல்லா"

"எலேய் நம்ம வீட்டுல்ல வேதப் பாட்டைத் தவிர வேற பாட்டு போட்டா வெளுத்துருவாவலே.. இப்பவே சொல்லுதேன் எனக்கு இது சரியாப் படல்லே"

"வேதப்பாட்டைத் தவிர வேற பாட்டுப் போட்டா வெளுத்துருவாவங்கறது எங்களுக்கும் தெரியும்ல்லா..இதை இங்கிலீஷ் வேதப் பாட்டுன்னு கதை விட்டுருவோம்ல்லா"

"வெளக்கெண்ணெய்..பாட்டி அத்தை எங்கம்மாவைக் கூட ஒண்ணுக்கு மூணு தடவ அடிச்சுச் சொன்னா நம்பிருவாவ.. உங்க அப்பாவும் எங்க அப்பாவையும் ஏமாத்த முடியாதுல்லேய்... இப்படி கூத்துப் பாட்டைக் கூரையிலே போடுதான்னு தெரிஞ்சா தோலியை உரிச்சுருவாவ.. அதோட நம்மச் சோலி முடிஞ்சுன்னு நினைச்சுக்க.."

""எலேய் இஸ்ரா.. அதை எல்லாம் நாங்க யோசிக்கமலாக் காரியத்துல்ல இறங்குவோம் மதியம் உங்கப்பாவும் எங்கப்பாவும் தூத்துக்குடி டவுணுக்குப் போறாவளாம்.. 2 மணி ரத்னாவுக்கு..அவிய வர்றதுக்கு ராத்திரி ஆயிரும்..தாத்தா எதோ வேலைன்னு பிரகாசபுரம் பஞ்சாயத்து ஆபிஸ்க்குப் போறாவ..வீட்டுல்ல பொம்பளையல் மட்டும் தான் இருப்பாவ..இது இங்கிலீஸ் வேதப் பாட்டுன்னு சொல்லிட்டா அவ்வளவு பேரும் நம்பிருவாவ.. பக்தியா பாப் கேப்பாவ..பிரச்சனை இல்லை"

"சம்மர் லீவு சாப்பாட்டுக்குச் சேதாரம் ஆகாம இருந்தாச் சரிஆனாலும் நீ சாமிதி படப் போறான்னு எனக்குப் படுதுல்லே"

"எலேய் பயந்தா அந்தப் பாம்பேக்காரி போற போக்குல்ல அவ பாவாடைய என் கையிலேக் கொடுத்துக் கெட்டிக்கச் சொன்னாலும் சொல்லிருவா.. அதுன்னால முடிவு பண்ணிட்டோம்ல்லா பாப் மியூசிக்கைச் சும்மாக் கேக்கபிடாது மக்கா.. கெத்தாக் கேக்கணும்.."

மாமா பொன் போல பொத்தி வைத்துப் பாதுகாத்து வரும் சோனி டேப் ரிக்கார்டரை எடுத்து மொட்டை மாடியிலே ரெடி பண்ணிகிட்டோம். கரண்ட் கனெக்ஷன் வேலை எல்லாம் இஸ்ரா அருமையாச் செஞ்சு முடிச்சான். வெயில் காலம் தான்னாலும் ஓங்கி வளர்ந்த வேப்ப மர நிழல் குளிர்ச்சியா இருந்துச்சு.

கண்ணுல்ல கூலிங்க் கிளாஸ் மாட்டிகிட்டு சட்டையை பனியன் தெரிய திறந்துவிட்டுகிட்டு.. இஸ்ராவையும் நம்ம கெட் அப்க்கு மாத்திவிட்டு..

2 மணி ரத்னா ஊர் எல்லையைக் கடக்கக் காத்திருந்தோம்...

அந்தக் கேப்பிலே..அன்னிக்கு காலையில் எனக்கும் ரேச்சலுக்கும் நடுவில் நடந்த நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் என் மனதில் ரி வைண்ட் பட்டன் அழுத்தாமலே ஓடிக்கொண்டிருந்தது.

ரேச்சல் கொடுத்த கேக்கின் சுவை நாக்குல்ல இருந்து கரைவதற்குள் அவளுக்கு எதாவது கிப்ட் கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணிகிட்டு நான் ரூம்ல்ல குறுக்கும் நெடுக்கும் ந்டந்துகிட்டு இருந்தப்போ இஸ்ரா பொட்டியிலே இருந்த அந்தப் பொருள் என் கண்ணுல்லப் பட்டுச்சு...

பாழாப் போன என் பொருளாதார சூழ்நிலை.. என்னைக் கையேந்தச் சொல்லிச்சு.. ஆனா நம்ம புத்தி இறைவனிடம் மட்டும் தான் கையேந்தணும் இருக்கவன் கிட்ட இருந்து எடுத்துக்கணும்ன்னு எக்குத் தப்பாச் சொல்லிக்கொடுத்துச்சு...ரேச்சலுக்கு ஒரு அழகான கிரிஸ்டல் கீ செயின் கிப்ட் ரெடி..

கிளம்பும் போது..மேசையிலே தின்னவேலி இருட்டுக் கடை அல்வாப் பொட்டலம் ஒண்ணு.. மொத நாள் தாத்தாச் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டு பென்னி அண்ணன் வாங்கிட்டு வந்தது எடுத்துக்கச் சொல்லி வற்புறுத்திச்சு. மறுக்க முடியாம அதையும் எடுத்துக்கிட்டேன்.

"இந்தா..." அழகாச் சுருட்டப்பட்ட பொட்டலத்தை ரேச்சலிடம் நீட்டினேன்.

"என்னது...?"

"அல்வா"

"அடப்பாவி கடைசியாக் கொடுக்கறதை முதல்லயே கொடுக்குறீயா..உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்..எனக்கு வேண்டாம்.. நீயே சாப்பிடு"

"ஏய் இது என்னன்னு நினச்சுட்ட..இது தின்னவேலி இருட்டுக் கடை அல்வா..உங்க ஊர்ல்ல கிடைக்காது.. உன் பொறந்த நாளுக்கு கேக் தின்னுட்டு வாயைத் துடைச்சுட்டுப் போயிட்டேன்னு அவப் பெயர் எனக்கும் என் பின்னாடி வர்ற சந்ததிக்கு வந்துறக் கூடாதுல்லா.. அது தான் வாங்கிட்டு வந்தேன்.. பிரிச்சுப் பாரு அந்தப் பொட்டலத்துக்குள்ளே ஒரு சின்னப் பரிசும் இருக்கு"

ரேச்சல் வாக் மேனைக் காதில் மாட்டியப் படி பொட்டலத்தைப் பிரித்தாள்.. உள்ளே இருந்த அந்த கிரிஸ்டல் கீ செயினைக் கையில் எடுத்தாள்...சூரிய ஒளி அதில் படும் படி தூக்கி பிடித்து அவள் பார்க்கும் போது தான் நானும் அதைப் பார்த்தேன்... படித்தேன்..

TO MY BEST FRIEND ISRAEL...WITH LOVE ANITHA

கொஞ்சம் சத்தமாவே படித்துவிட்டேன்... இருட்டுல்ல அந்தக் கீ செயினை லவட்டிட்டு வரும் போது அதில்ல இப்படி ஒரு வில்லங்கம் ஒளிஞ்சு இருக்கும்ன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல்ல...

ரேச்சல் முகத்திலே என்ன ரியாக்ஷன் இருக்கும்ன்னு பாக்கக் கூட திராணியில்லாமல் தலையைக் குனிஞ்சுக்கிட்டேன். அப்படியே தலையை நிம்ர்த்தாமல்

'ஆனா அல்வா சத்தியமா உனக்கே உனக்குன்னு வாங்குனது...அதையாவது எடுத்துக்கோ' கொஞ்சம் கெஞ்சலாய் சொல்லி பார்த்தேன்

"உங்க வீட்டுக்கு வந்து கேட்கவா?"

"என்னை நம்பு.. நான் அவ்வளவு மோசம் இல்ல... எதோ கிப்ட் மாறிடுச்சு"

என் கையைப் பிடித்து நீட்டி என் உள்ளங்கையில் அல்வாப் பொட்டலத்தையும் கீ செயினையும் வைத்தாள். வாக் மேனில் ப்ளே பட்டனை ஓங்கி அழுத்தினாள். வாய் இருந்து இருந்தால் அந்த பட்டன் அலறியிருக்கும்.

"என்னப் பாட்டு ஓடுது?"

"ம்ம்ம் பாப் மியூசிக்.. இங்கிலீஸ் ஆல்பம்.. பிஜீஸ்... உனக்குப் புரியாது... YOU R A REAL DUMBO" என்று சொல்லிவிட்டு விருட்டெனப் போய்விட்டாள்.


அதன் தொடர்ச்சியாகத் தான் எங்க வீட்டு மொட்டை மாடியில் பதில் கச்சேரிக்கு ஏற்பாடு நடந்துகிட்டு இருந்துச்சு.

ரத்னா பஸ் போய் பத்து நிமிசம் கழிச்சி டேப் ரிக்கார்டரில் அதிகப் பட்ச சத்தம் வச்சி மைக்கேல் ஜாக்ஸனை சின்னக்குளத்துக்கு நான் அறிமுகம் செய்து வைத்தேன்...அந்த ஏரியாவையே இப்படி அலற விடக்கூடிய ஒரே திறமை வாயந்த டேப் ரிக்கார்டர் எங்க் மாமாவோடது தான்...

சும்மா ஜாக்ஸன் அதிர... மதியம் தூங்கி வழிந்த சின்னக்குளம் சிலுத்துக்கிட்டு எழுந்துருச்சு......

இஸ்ரா பய நிலைமை நிதானம் தவறுவதைக் கண்டுகிட்டு நைசா நாய்ஸை யூஸ் பண்ணிகிட்டு எனக்குத் தெரியாம பக்கத்து வீட்டு மாடிக்குத் தாவி எஸ்கேப் ஆயிட்டான்..

இது எதையும் கொஞ்சம் கூட கவனிக்காமல் கண்ணாடி குலுங்க... தலையை பரபரக்க விட்டு நான் ஜாக்சன் இசைக்கு ஜாக்குவார் தங்கம் ரேஞ்சுக்கு ஸ்டண்ட் பண்ணிகிட்டு இருந்தது பெரும் கொடுமை.

"எலேய் என்ன ஆச்சு இவனுக்கு.. என்னது இது சீக்கு வந்த கோழி சிலுப்பிகிட்டு துள்ளுர மாத்திரி நடு வெயில்ல நட்டமா நின்னு ஆடிக்கிட்டு நிக்கா?" பாட்டிச் சொன்னது கேட்கவில்லை.

நங்கென்று நடு மண்டையில் முறத்தால் அடி ஒன்று விழுந்ததும் மைக்கேல் பாடுவதும் கேட்கவில்லை.. மை மதர் அடுக்கு மொழியில் என்னை ஏசியதும் கேட்கவில்லை..
எதோ ஒரு வீரத் தமிழச்சிகிட்ட ஒரு புலி முறத்தாலே அடி வாங்கியிருக்குன்னு கதைச் சொல்லக் கேட்டிருக்கேன். அந்த அடி பட்ட அந்தப் புலிக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு அந்த வினாடியிலே இந்தப் புலிக்கு புரிந்தது...எங்க அம்மா ஒரு வீரத் தமிழ்ச்சியாயிட்டாங்க...சுத்தி சுழன்டு அப்போத் தான் பாத்தேன்..

ஊரே வீட்டு முன்னாலே கூடியிருச்சு..ஊர் கூடி என்னப் பயன் ... யாருக்காக இந்தக் கச்சேரியை ஏற்பாடு பண்ணியிருந்தேனோ அவளைக் கூட்டத்தின் ஒரு ஓரமாய் கூடக் காணல்ல.. இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல்ல... பாட்டி, அம்மா, அத்தைன்னு எல்லாரும் பொங்கி மாடிக்கு பாய்ஞ்சு வந்துருக்காங்க..

அக்கம் பக்கம் எல்லாம் சுற்றி நின்று என்னை வேடிக்கைப் பாத்துக்கிட்டு நின்னாங்க..நடு மண்டையைத் தடவிய படி நான் நின்னுகிட்டு இருந்தேன்.

"ஏய்யா இவனைக் கொண்டு ஜெபத்திலே வைங்க... நடு மத்தியானம் இப்படி மொட்டை வெயில்ல் கிறுக்காட்டம் போட்டுகிட்டு இருக்கான்... புத்திப் பேதலிச்சுப் போச்சோ என்னமோத் தெரியல்லயே.. ஏய்யா.. இவிய அய்யா வேற வெளியே போயிருக்காவளே... என்னப் பண்ணுறது?"
எங்கப் பாட்டி ஏகத்தும் எமோஷ்னல் ஆக... ஊர் கிழவிகளும் ஒண்ணு கூடி என் பாட்டிக்கு ஆளுக்கொரு ஆறுதல் என இரக்கமில்லாமல் என் மீது அருவாளை வீசுனாங்க...

"பய ராத்திரி எல்லாம் வெளியேத் திரிஞ்சாம் இல்ல... சாம்த்துல்ல சாத்தான் செஞ்ச வேலையாயிருக்கும்.. சரியாகிரும்"

இஸ்ரா அப்போத் தான் மாடிக்கு வருவது போல் படியேறி மெதுவாய் கூட்டம் விலக்கி என் பக்கம் வந்தான்...

"என்ன ஆச்சு...என்ன சத்தம்?" எதுவுமறியாதவன் போல மெதுவாக பாட்டு கேசட்டைக் கையில் எடுத்தான்.

"அடப்பாவி கொய்யால்ல..." ஒரளவுக்கு தெளிந்த நான் இஸ்ராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

"ஆ..இது அந்த வெள்ளைக்கார பிரசங்கியார் கேசட்ல்லா.. போன வாரம் தின்னவேலில்ல பாத்தேனே... " நான் எழுதி பேசத் தவறுன்ன டயலாக் எல்லாம் இஸ்ரா சரமாரியாப் பேச ஆரம்பிச்சான். நான் கண் கலங்கி நின்றேன்.

"இவ்வளவு நேரம் இவன் கேட்டு ஆடிகிட்டு இருந்தது கடவுள் பாட்டா" எங்க பாட்டி கேட்டாங்க.

"பாட்டி நம்ம வீட்டுல்ல சினிமாப் பாட்டெல்லாம் என்னிக்கு ஓடியிருக்கு.. எப்போக் கேட்டிருக்கோம்..." இஸ்ரா நீ செல்லம்லேய்... என்ன காப்பாத்த வந்த மாமனிதன்லேய் நீ.. என் மனம் இஸ்ராவை வாழ்த்தியது.

"ஆமா இதை அவனேச் சொல்லியிருக்கலாமே"

"அவன் சொல்லியிருக்கலாம் பயலுக்கு பக்தி முத்திருச்சு..எதுவும் பேசியிருக்கமாட்டானே.. இந்தா ஆடு திருடிட்டு அகப்பட்டவன் மாதிரி முழிக்கான் பாருங்க" இஸ்ரா அவனுடைய மொத்தத் திறமையையும் காட்டிக்கொண்டிருந்தான்.

"நாங்க என்னவோ எதோன்னு பயந்துட்டோம்ய்யா... ஏய்யா இஸ்ரா சத்தத்தைக் குறைச்சு வச்சு கொஞ்சம் வெயில் இறங்கனப் பொறவு ஆடச் சொல்லு.. பயத் தனியா ஆட வேண்டாம்.. துணைக்கு நீயும் ஆடு... மத்தியானம் தூக்கம் கெடுதுல்லா.." பாட்டி பாசமாய் சொல்லிவிட்டு படி இறங்கினாங்க..

பாட்டிக்குப் பின்னாலே மொத்தக் கூட்டமும் இற்ங்கிப்போச்சு.. அம்மாவுக்கு மட்டும் சுத்தமாய் என் மீது நம்பிக்கை இல்லை..இறங்கும் போதுக் கூட மொறைப்பு குறையவே இல்லை.

அந்த நிமிடத்தில் ரேச்சலின் மொறைப்பும் எனக்கு ஞாபகம் வந்துப் போனதைத் தவிர்க்க முடியவில்லை.

கூட்டம் இறங்கிப் போனதும் இஸ்ராவை அப்படியேக் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன்...

"எலேய்.. என்ன இது என்னவெல்லாமோ பேசுன.. பிடிப்பட்ட ஓடனே கரண்ட் கம்பியிலே சிக்குன பட்டம் மாதிரி கவுந்து நின்னுட்ட... லேய்.. இதெல்லாம் சரி வராது.. பாம்பேகாரிக்கு இருக்க மெதப்பு இருந்துட்டுப் போவுதுன்னு உன் வழியைப் பாத்துட்டுப் போயிட்டே இரு.. அவக் கிட்ட மல்லுக்கு நிக்குறதை இத்தோட நிறுத்திக்க... அது தான் உனக்கு நல்லது... எனக்கு நல்லது.. இந்தா மொத்த சின்னக்குளத்துக்கும் நல்லது.. மைக்கேல் ஜாக்சனை எல்லாம் இந்த ஊர் தாங்காதுலேய்..".

நான் எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை.

"லேய்.. இன்னும் இரண்டு நாள் தான் அவ மும்பைக்குக் கிளம்பிருவா... அதுக்கு மேல ஒரு மூணு நாள் நீயும் மெட்ராச்க்கு வண்டி ஏறிருவ... இரண்டு நாள் எல்லாத்தையும் அடக்கிட்டு இரு..."

இஸ்ரா என் முகத்தை இழுத்துத் தன் பக்கம் திருப்பி வைத்துச் சொன்னான்.

அந்த இரண்டு நாட்கள் என்ன நடந்தது தொடரும்

7 comments:

இலவசக்கொத்தனார் said...

//அந்த இரண்டு நாட்கள் என்ன நடந்தது //

என்ன நடந்தது?

வெட்டிப்பயல் said...

அருமையா போயிட்டு இருக்கு...

அடுத்த பகுதிக்காக ஆவலுடன்.

சேதுக்கரசி said...

//உள்ளே இருந்த அந்த கிரிஸ்டல் கீ செயினைக் கையில் எடுத்தாள்...சூரிய ஒளி அதில் படும் படி தூக்கி பிடித்து அவள் பார்க்கும் போது//

அவ கண்ணில் மின்னும் ஒளியைப் பத்தி எழுதுவீங்கன்னு பார்த்தா.. கீசெயின் கவுத்துடுச்சே :)

CVR said...

சூப்பர் நகைச்சுவை!!!!

//நங்கென்று நடு மண்டையில் முறத்தால் அடி ஒன்று விழுந்ததும் மைக்கேல் பாடுவதும் கேட்கவில்லை.. மை மதர் அடுக்கு மொழியில் என்னை ஏசியதும் கேட்கவில்லை..
எதோ ஒரு வீரத் தமிழச்சிகிட்ட ஒரு புலி முறத்தாலே அடி வாங்கியிருக்குன்னு கதைச் சொல்லக் கேட்டிருக்கேன். அந்த அடி பட்ட அந்தப் புலிக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு அந்த வினாடியிலே இந்தப் புலிக்கு புரிந்தது...எங்க அம்மா ஒரு வீரத் தமிழ்ச்சியாயிட்டாங்க...சுத்தி சுழன்டு அப்போத் தான் பாத்தேன்..
//

Ultimate!!!
வாழ்த்துக்கள்!!! :-)))

கோபிநாத் said...

குருவே...சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க

Anonymous said...

அண்ணே, தாங்கல..அடிச்சு பிண்றிங்க..

மனதின் ஓசை said...

:-))))))