Monday, July 16, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 5

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 4


இன்னும் இரண்டு நாள் தான் மூணாவது நாள் மெட்ராஸ்க்கு ரயில் ஏற வேண்டியது தான்..

அன்னிக்கு காலையிலே வீட்டுக்கு முன்னாடியிருந்த வேப்பம் மரத்துல்ல இருந்த குச்சியை வச்சு (குச்சிக்கு மேல கோல்கேட் பேஸ்டும் வச்சுத் தான்) பல் விளக்கிட்டு இருக்கும் போது தான் இஸ்ரா வந்து என் கிட்ட அந்த விசயத்தைச் சொன்னான்.. விசயம் ஒண்ணுமில்லங்க.. எல்லாம் விளையாட்டு விவகாரம் தான்..

"எட்வின் அண்ணனுக்கு கால்ல சரியான அடிடா.. நாளைக்கு அவர் மேட்ச்ல்ல ஆடுறது சந்தேகம் தான்..வேற ஆளுக்கு எங்கேயும் போக முடியாது...உம் பேரை நான் தான் சொன்னேன்.. எடவின் அண்ணனும் ஒத்துக்கிட்டாவ.. எனக்காக வந்து விளையாடுலே..."

நான் பல் விளக்குவதில் தீவிரமாக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

"மூணு வருசமா பிரகாசபுரத்துக்காரன்ட்ட தோத்துகிட்டு இருக்கோம்... இந்த மொறையாவது செயிக்கணும்ன்னுப் பாக்கோம்...லேய்.. நீ மெட்ராஸ்காரனாப் போனாலும் சின்னக்குளம் உனக்கும் சொந்த ஊர்ங்கறதா மறந்துராதே..."

எனக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேறிருச்சு.

"போன வருசம்.. மேட்ச் வச்சப்போ .. வந்து எவ்வளவு கெஞ்சியிருப்பேன்..உங்க எட்வின் நொண்ணேன் தானே நாலு பேர் பாக்க நக்கலடிச்சு நாணப்படுத்தி அனுப்புனாவ.. ஏன் இந்த் வருசமும் ஆரம்பத்துல்ல எல்லாம் கண்டுகிடவும் இல்ல.. கூப்பிடவுமில்ல... இப்போ டீம் நொண்டி அடிச்சவுடனே.. ஊர்... உறவு எல்லாத்தையும் சொல்லி வந்து நிக்குறீயளோ? போங்கடா... நீங்களூம்...."

"100 ரூபா பந்தயப் பணம்... நீ ஆடுனா உன் பங்கு ரெண்டு மடங்கு... கிட்டத் தட்ட 10 ரூபா வரும்...அது மட்டுமில்லாம செயிச்சா அன்னிக்கு ராத்திரி பனங்கள்ளும் உண்டு.... என்னச் சொல்லுத..?"

இஸ்ரா வேற எதுக்கும் இவன் ஒத்து வர மாட்டான் என நினைத்தானோ என்னவோ நேராகவே வியாபாரத்திற்கு வந்தான். எனக்கும் வியாபாரம் பிடிச்சுப் போச்சு.. பட்டுன்னு ஒத்துக்கிட்டா கொஞ்சம் கெத்து கொறஞ்சிரும் என யோசித்தேன்,

"இஸ்ரா.. அவிய எல்லாரும் என்னிய அசிங்கப்படுத்துனதையும் மறந்து மன்னிச்சி நான் விளையாட வார்ரேன்னா அது உனக்காக மட்டும் தான் வேற எதுக்காவும் இல்ல....நீ வந்து இவ்வளவு தூரம் பேசியிருக்கப் பார் அதுக்காக மட்டும் தான்... வேற எதுக்காகவும் இல்ல..." மீண்டும் ஒரு முறை அழுத்திச் சொன்னேன்.

"இன்னிக்கு சாயங்காலம் ஸ்கூல் கிரவுண்ட்ல்ல பிராக்டீஸ் இருக்கு வந்துரு.. உனக்கு ஷூ எல்லாம் நான் ஏற்பாடு பண்ணிடுறேன்.. நீ ஒழுங்கா வந்துச் சேர் அது போதும்."
இஸ்ரா மேட்ச்க்கான மிச்ச ஏற்பாடுகளைக் கவ்னிக்க கிளம்பிவிட்டான்.

எனக்கு சிறு வயசுல்ல இருந்தே கால்பந்தாட்டம்ன்னா ரொம்ப பிடிக்கும். எங்கப்பா வழியாக எனக்கு வந்த் ஆர்வம் அதுன்னு நினைக்கிறேன்.. மரடோனான்னா நமக்கு அப்படி ஒரு பாசம்ங்க.. என்ன ஒரு வேகம்.. என்ன ஒரு வீரம்.. விளையாட்டுன்னா அது கால்பந்தாட்டம் தான்... அப்படின்னு ஒரு எண்ணம் நமக்கு.. அந்த மாதிரி ஒரு எண்ணம் எனக்குள்ளே அழுத்தமா நிலைக்குறதுக்கு இன்னொரு காரணம் வருசந்தோறும் எங்கச் சின்னக்குளத்துல்ல நடந்துகிட்டு வர்ற விடுமுறை கால்பந்துப் போட்டி தான்..சின்ன வயசுல்ல இருந்து அந்த போட்டியை வருசம் தவறாம நான் பாத்துட்டு வந்துருக்கேன்.

ஒவ்வொரு வருச மே மாசம்மும், சரியா விடுமுறை முடியும் நேரம் சின்னக்குளத்துக்கும் அதுக்குப் பக்கத்துல்ல இருக்க பிர்காசபுரம்ங்கற ஊருக்கும் கால்பந்தாட்டப் போட்டி நடக்கும்.. சும்மா ஊரே ஒண்ணுக் கூடிருவாங்க்.. இந்தியா பாகிஸ்தான் ரேஞ்சுக்கு 90 நிமிசமும் கிரவுண்ட்ல்ல சூடு பறக்கும்.. மூஞ்சு மூக்கு எல்லாம் பேந்துப் போற அளவுக்கு விவகாரமா ஆட்டம் பட்டயக் கிளப்பும்.

அந்த விடுமுறை கால்பந்துப் போட்டிங்கறது ஒரு மானப்பிரச்சனை..ஊர் பெரியவர்கள் இந்தப் போட்டியை வெளிப்படையா ஆதரிக்கறதில்ல.. இருந்தாலும் பயல்வ ஜெயிக்கணும்ங்கற ஆசையைக் காட்டாம இருக்கறதும் இல்ல..

"எலேய் லீவுக்குன்னு வந்துபுட்டு எதுக்குலேய் இப்படி பந்தடிச்சிகிட்டு சாகுதீய... ஒழுக்கமா இந்தப் போட்டியை எல்லாம் நிறுத்துங்கலேய்" எங்கப் பாட்டியை மாதிரி தாய்குலங்களுக்கு இந்த் ஆட்டம் எப்போதுமே பிடிப்பதில்லை.. ஆனால் எங்களுக்கு அது ஒரு வீர விளையாட்டு.. ஒவ்வொரு விடுமுறையும் ஊருக்கு எங்களைப் போகச் சொல்லி வற்புறுத்தும் முக்கிய காரணங்களில் இந்தக் கால்பந்தாட்டமும் ஒன்று...

அப்புறம் நானும் ஒண்ணும் சும்மா காலபந்தை டிவியிலே பாத்து சத்தம் போடுற ஆள் இல்ல.. எங்க ஸ்கூல் டீம்க்கு ஸ்டைரக்கர்.. சும்மாக் கிரவுண்ட்ல்ல இறங்கிட்டோம்ன்னா நிலவரம் கலவரமா மாறும் வரைக்கும் ஓயமாட்டோம்ல்லா..

போன வருசம் எட்வின் அண்ணன்..(அவர் தான் சின்னக்குளம் கால்பந்து டீம்க்கு போன முணு வருசமாக் கேப்டன்) என்னியச் சின்னப் பையன்னு சொல்லி சேத்துக்காம கழிச்சு வைச்சது எனக்குப் பெருத்த அவமானமாப் போயிருச்சு... ஆனா இந்த வ்ருசம் அந்த எட்வின் அண்ணன் இடத்துல்ல நான் ஆடப் போறேன்.. இது தான் விதிங்கறதா.... இந்த வருசம் பிரகாசப் புரத்துக்காரன்வ முட்டி கெண்டைக் கால்ன்னு ஏறி மிதிச்சாவ்து செயிச்சு சின்னக்குளம் வரலாற்றிலே என் பேரைப் பதிச்சுரணும்டா.. எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்..

பஸ் ஸ்டாப் திண்ணையிலே உக்காந்து யோசிச்சிகிட்டே இருந்தேன்.. உச்சிப் பொழுது ஆயிருச்சு.. வயிர் பசி வேற உயிரை கிள்ளிகிட்டு இருந்துச்சு...பதனீர் வாங்கி கொஞ்சம் போல் குடித்து விட்டு மீண்டும் வீட்டைப் பார்த்து நடந்தேன்...

அந்த நேரம் சல்லென்று வேகமாய் பைக் ஒண்ணு வேகமாய என்னைத் தாண்டிப் போனது. போன வேகத்தில் சரட்ன்னு காட்டுப்பாதையில் இறங்கியது... அது யார்டா நம்ம ஊர்ல்ல பைக் எல்லாம் வச்சிருக்கது.. அதுவும் உச்சி நேரத்துல்ல காட்டுப் பாதைக்குள்ளே போறது...பைக் அந்தப் பாதையில் போகவே முடியாதே... பாதையிலே கிடக்க முள்ல்ல டயர் சிக்குன்னா அந்துப் போயிருமேப் போனவன் பொழப்பு..

பதனீரை தொண்டைக் குழிக்குள்ளே குலுங்க விட்டு ஓட்டமும் நடையும் காட்டுப்பாதைப் பக்கம் போனேன். டயர் தடம் பாத்துக்கிட்டே நடந்தேன்.. ஒரு அம்பது அடி தூரம் போயிருப்பேன்.. பைக் அங்கே ஒரு பனை மரத்து மேல சாய்த்து நிப்பாட்டப்பட்டிருந்தது.

சுற்றிலும் யாரையும் காணவில்லை... நான் பைக் பக்கம் போனேன். குனிஞ்சு டயரைச் சரி பார்த்தேன்.. டயருக்கு எந்த சேதாரமும் இல்ல... வந்தவன் அவசரத்துக்கு எங்கியாவது ஒதுங்கியிருப்பானோ...அத்துப்புடுங்குன வேகத்துல்ல இல்ல பாய்ந்து வந்தான்.. சத்தம் கொடுக்க நினைத்து அடக்கிக் கொண்டேன்.. சரி.. நம்ம வேலையைப் பார்ப்போம் என் திரும்பியவனை சற்று தொலைவில் இருந்து கேட்ட கிசுகிசுப்பான பேச்சு சத்தம் தடுத்து நிறுத்தியது...

"அஹா..மொட்டை வெயில்ல மெரீனாப் பீச்சுல்ல நடக்குற விசயம் இங்கேயும் நடக்குதா..."

மெதுவா சத்தம் வந்த பக்கம் அடியெடுத்து வச்சவன்.. ஒரு கணம் தயங்கி நின்னேன்.. இதை எல்லாம் தனியாப் போய் பார்த்தா எதாவது சேதாரம் வருமான்னு யோசிச்சேன்.. துணைக்கு இஸ்ரா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..எதாவது எக்குத் தப்பாப் போயிருச்சுன்னா எபப்டியாவது தப்பிக்க வழிச் சொல்லிருவான்..

அவனைப் போய் கூட்டிட்டு வரலாம்ன்னா..அது வரைக்கு காட்சி நடக்குமான்னுத் தெரியல்ல..சரி வருவது வரட்டும் அப்படின்னு சத்தம் வந்த இடம் நோக்கி அடி மேல் அடி வைத்து பூனை மாதிரி நகர்ந்தேன்.. வழக்கமாய் வேலை செய்யும் நம்ம ஏழாவது அறிவு சொன்னப் படி ஒரு முன்னெச்சரிக்கையாய் பைக் டயர்ல்ல காத்தைப் புடுங்கிட்டேன்... அங்கே நடப்பதை நான் பாக்க.. அதை அவன் பாக்க.. அப்புறம் பைக் எடுத்து அவன் துரத்த இந்த வில்லங்கம் எல்லாம் வேண்டாம்ன்னு தான் அப்படி ஒரு ஏற்பாடு..

இங்கே ஒரு மோட்டார் ரூமே இருக்கா... மண்டி கிடந்த புதரை ஒதுக்கி எட்டிப் பார்த்தேன்... மோட்டார் ரூமில் ஒரு பெண் குரலும் ஆண் குரலும் கேட்டது..

ஆண் மட்டும் தான் பேசினான்.. பெண் 'ம்' கொட்டுவதும்.. ச்சீ சொல்லுவதுமாய் இருந்தாள்.. பேச்சு ரொம்பச் சன்னமாப் போயிட்டு இருந்துச்சு..

வெறும் பேச்சு தானா.. இதுக்காடா இங்கே வந்தீங்க.. வெறும் பையல்களா... மனத்திற்குள் நானேச் சொல்லிகிட்டேன்.

எப்படியாவது உள்ளே யார் இருக்கறதுன்னுப் பாத்துரலாம்ன்னு பார்த்தா ஒண்ணும் முடியல்ல மோட்டார் ரூம் கதவு மூடியிருந்தது.

ஆணும் பெண்ணும் முதுகு காட்டியப்படி இருந்தனர்.. அதுவும் சுவத்துல்ல இருந்தச் சின்ன ஓட்டை வழியாப் பார்த்ததில்ல எதுவும் தெளிவாக தெரியவில்லை.. ஆண் போட்டிருந்த கருப்பு சட்டை ஒரளவுக்கு தெரிந்தது. பெண் அவன் மடியில் படுத்து இருந்ததால் அவளைப் பற்றிய் எதுவும் சரியாகத் தெரியவில்லை... அவள் தலை மட்டும் லேசாகத் தெரிந்தது...

முழுசாப் பதினைஞ்சு நிமிசம் காத்திருந்தும் ஒண்ணும் நடக்கவில்லை... பதனீர் குடிச்சது வெளியே வர்றேன்னு தந்தி அடிச்சுச் சொல்லிகிட்டு இருந்தது.. அடக்க மாட்டாமல் அருவியாய் பாதையோரத்தை ஈரப்படுத்த்க் கிளம்பி... செயலும் ஆற்ற துவங்கிய நேரம்...

"எலேய்...இங்கே என்னலே பண்ணுதா?"
பக்கத்து வீட்டு பென்னி அண்ணன் குரல்... நாசரேத் போயிட்டு டிவிஸ் 50ல் திரும்பிக் கொண்டிருந்தார்.

வீட்டுக்குத் தானேப் போறா... அவர் குரல் உயர்த்தி பேசிக் கொண்டிருந்தார். என் பார்வை என் செயலில் பாதியும் மோட்டார் ரூமில் மீதியுமாய் அலைக்கழிந்துக் கொண்டிருந்தது.
மோட்டார் ரூம் பக்கம் என் பார்வைப் போவதைப் பார்த்த பென்னி அண்ணன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்தார். வேட்டியை ஏத்திக் கட்டிக் கொண்டு மோட்டார் ரூம் பக்கம் நடந்தார்.

நான் ஆர்வக்கோளாறில் பாதியிலே என் கடமையினை நிறுத்திவிட்டு பென்னி அண்ணன் பின்னால் நடந்தேன்..

"ஏய் யார்ல்லே அது மோட்டார் ரூம்லே இந்த நேரத்துல்ல.... போன மாசமே உங்களைப் பிடிக்கும் போது சாணியைக் கரைச்சுத் தலையிலே ஊத்தி ஊருக்குள்ளே ஊர்வலம் விட்டிருந்தா விளங்கிப் போயிருப்பீயே.. போனாப் போகுதுன்னு விட்டா.. இங்கிட்டு குடித்தனமா நடத்துறீய... நாத்தம் பிடிச்ச்ப் பயல்வளா?" கையில் ஒரு உருட்டுக் கட்டையை எடுத்துக் கொண்டார்

"ஆகா இது பல நாளா நடக்குற கூத்துப் போல இருக்கே.. நாசரேத் போய் படம் பாத்ததுக்கு இங்கிட்டு வந்திருந்தா டிக்கெட் இல்லாமலே ஓசியிலே படம் பாத்துருக்கலாம் போல இருக்கே.."

நான் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே பென்னி அண்ணன்.. மோட்டார் ரூம் கதவை ஓங்கி உதைத்து உள்ளேப் போனார்.. அண்ணனுக்கு பின்னால் நானும் போய் நின்னேன்.. உள்ளே யாரும் இல்லை.. அண்ணனின் டிவிஎஸ் சத்தம் கேட்ட ஓடனேயே மக்கள் தெறிச்சுட்டாங்கப் போலிருக்குன்னு நினைச்சிகிட்டேன்..

பென்னி அண்ணன் சுத்தி முத்திப் பாத்துட்டு..
"அடுத்த மொறை சிக்கட்டும் சுவத்துல்ல வச்சு மூஞ்சைத் தேச்சுரமாட்டேன்" என்று கருவிக்கொண்டார்.

அவர்கள் மீது இருந்த கவனம் இப்போ என் பக்கம் திரும்பியது..

"ஆமா நீ என்னலேய் இந்தப் பக்கம் பண்ணுதா?" என்னை முழு சந்தேகத்தோடுக் கேட்டாவ.

"அதுவா வீட்டுல்ல நேரம் போவல்ல... இந்தா இந்தப் பக்கம் ஒரு முசல் ஒண்ணு ஓடுச்சு.. கவணை வச்சு அடிக்கலாம்ன்னு வந்தேன்... அது இந்த மோட்டார் ரூம் பக்கம் வந்துருச்சு... அதைத் தொரத்திட்டு வந்த வேகத்தில்ல எனக்கு ஒண்ணுக்கும் வந்துச்சு... அதான் அந்த ரூமைப் பாத்துகிட்டு நீங்க வரும் போது...." என்று இழுத்தேன்..

நான் விட்ட கதை ஓரளவு நம்பும் படி இருந்ததால் பென்னி அண்ணனும் நம்பிட்டாவன்னுத் தான் சொல்லணும்...
'முயல் கிடக்கட்டும்.. இந்தப் பக்கம் எல்லாம் இப்படி திரியாதே.. இது சரியான இடம் இல்லலேய்.. வா என் கூட ஏறு வண்டில்ல "

மோட்டார் ரூம் விட்டு வெளியேறும் போது தான் பார்த்தேன்.. ஜன்னல் ஓரம் கிழிந்து தொங்கிய நீல நிற தாவணியின் நுனியை..பென்னி அண்ணன் அதைப் பார்க்கவில்லை.

"அடப் பாவிகளா அந்த சின்ன ஜன்னல் வழியா எப்படிடா வெளியேப் போனீங்க" எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்.

பென்னி அண்ணன் வண்டியில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினோம்...

"லேய்.. நீ இந்த வருசம் டீம்ல்ல இருக்காப் போலிருக்கு..."

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எட்வின் தான் சொன்னான்.. அவன் என் கிளாஸ் மேட்ல்லா.. அருமையான ஸ்ட்ரைக்கர் அவன்.. சவத்துப் பைய கால்ல அடியாம்ல்லா.. அதான் உன்னியச் சேத்ததாச் சொன்னான்... அவனுக்கு உன்னியச் சேக்கத்துல்ல விருப்பமே இல்ல.."

அதான் எனக்குத் தெரியுமே.. மனசுக்குள்ளேச் சொன்னாலும் வெளிக்கு வெறும் 'உம் ' கொட்டிக் கொண்டேன்.

"அந்தப் பிரகாசபுரம் டீம் மொத்தமும் எருமை மாட்டு பயல்வ... காட்டு ஆட்டம் தான் ஆடுவான்வ... உன்னைய அவன்வக் கூட ஆட விடுறது கோழிக் குஞ்சை மத யானைக்கூட்டத்துக்குள்ளே விடுற மாதிரின்னு சொல்லி வருத்தப்பட்டான் எட்வின்.. ஒருக்கா நீ மெட்ராஸ்ல்ல ஆடுன மேட்சை எட்வினும் பாத்துருக்கானாம்.. எதோ பீட்ஸ் கிரவுண்டாம்ல்லா.. எட்வின் மெட்ராஸ்ல்ல தானே போர்ட் ட்ரஸ்ட்ல்ல வேலைப் பாக்கான்.. உனக்குத் தெரியும்ல்லா.. உன் மேட்ச்ல்ல நீ ஆடுனதைப் பாத்தானாம்... பைய ஆடுவான் அதைப் பத்தி எல்லாம் பிரச்சனையில்ல.. சின்னப் பைய அந்த காட்டான்கிட்ட அடிகிடி வாங்கிரப்பிடாதுடேன்னு சொல்லிகிட்டு இருந்தான்"

பென்னி அண்ணன் பேசி முடிக்கவும் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

"சரி என்ன அடி தாங்குவீயால்லே.." பென்னி அண்ணன் மறுபடியும் சிரித்துக்கொண்டேக் கேட்டாவ.

பென்னி அண்ணன் கேள்விக்கு நான் பதில் சொல்லும் முன் என்னைக் கடந்துப் போன பைக் மீது என் கவனம் பதிந்தது. மோட்டார் ரூம் அருகே பாத்த அதே பைக்..

அப்புறம் பைக் ஓட்டிட்டு போனவன் போட்டிருந்த சட்டையின் கலரும் கருப்பு...

ஆகா வில்லங்கம் வில்லேஜ்க்குள்ளேயே தான் இருக்கா.... இஸ்ராவை உடனேப் பார்க்க வேண்டும் என முடிவு செய்துக் கொண்டேன்.

விடுமுறை முடியப் போவதுங்கோ...

8 comments:

மனதின் ஓசை said...

என்னய்யா .. கதை U டர்ன் அடிக்கிறாப்புல இருக்கு..

அனுசுயா said...

என்னங்க இது ஆரம்பத்துல ஒன்னும் தெரியாத சின்ன புள்ளதனமா ஆரம்பிச்சு இப்ப விவகாரமா போயிட்டு இருக்கு. ஆனாலும் இந்த பார்ட் கொஞ்சம் வில்லங்கமாதான் இருக்கு :)

Anonymous said...

ரேச்சல தேத்திட்டாய்களா...

பாத்துன்னே, நாங்களெல்லாம் அது உங்களுக்குன்னு தான் நெனச்சுக்கிட்டு இருக்கோம்.

Anonymous said...

ரேச்சல் தாவணி போடாதே,, சரி பாப்போம்....

CVR said...

நல்லா கதை சொல்லுறீங்க அண்ணாச்சி!
சீக்கிரமா அடுத்த பகுதி போடுங்க!! :-)

கோபிநாத் said...

அண்ணே...என்ன இது கதை ரேச்சலவுட்டு வேற மாதிரி போகுது...இதுவும் நல்லா தான் இருக்கு ;)))

கோபிநாத் said...

\\இனியவன் said...
ரேச்சல தேத்திட்டாய்களா...

பாத்துன்னே, நாங்களெல்லாம் அது உங்களுக்குன்னு தான் நெனச்சுக்கிட்டு இருக்கோம்.\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

/// விடுமுறை முடியப் போவதுங்கோ... //

மக்கா, கவலப்படாதீங்க, அண்ணெ அடுத்த பகுதியில முடிக்கப் போறாரு. விடை கெடச்சுரும்.