Tuesday, July 17, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 6

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 5

"லேய் எல்லாம் சரி... மோட்டார் ரூம் கதை ஊருக்குள்ளே அரசல் புரசலா அடிபடுற விசயம் தான்... கண்டிப்பா நம்ம நம்ம ஊர் மக்களா இருக்காது.. வெளியூர்காரனாத் தான் இருக்கும்... இங்கே யாருக்கும் அப்படி தைரியம் வராதுலேய்.." இஸ்ரா விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான்.

"நம்ம ஊர்ல்ல யார்ட்டல்லே யமஹா பைக் இருக்கு?"

"யார்ட்டயேயும் இல்ல..சும்மாக் குழப்பிட்டுத் திரியாதல்ல வெங்கலம்..மேட்ச்க்கு உனக்கு ஷூ ரெடி பண்ணிட்டேன்...இந்தா இன்னும் பத்து நிமிசத்துல்ல காபியைக் குடிச்சுட்டுக் கிளம்பு"
இஸ்ரா விளையாட தோதான உடையை மாட்டிகிட்டு ஷூவையும் மாட்டிகிட்டு காபி வாங்க அடுப்பாங்கரை பக்கம் போனான்.


நான் இன்னும் யோசனையில் ஆழ்ந்தப்படியே இருந்தேன்...ஒரு வழியா எதோ நினைப்பிலே ஷூவையும் மாட்டிகிட்டு இஸ்ரா நீட்டுனக் காபியையும் குடிச்சுப்புட்டு அவன் கூட விளையாடக் கிளம்புனேன்..

போற வழியெல்லாம் எங்கிட்டாவது யமஹாவோ... கருப்புச் சட்டையோ கண்ணுல்லப் படுதான்னு கண்ணை அகலமாத் திறந்துப் பாத்துகிட்டே போனேன். எந்தப் பக்கமும் நான் தேடுன எந்தப் பொருளும் கண்ணுல்ல சிக்கவே இல்ல.. ஒவ்வொரு தெருவா போய் டீம் மொத்தத்தையும் கூட்டிகிட்டு கிரவுண்ட் பார்த்துப் போனோம்..

"லேய் மக்கா நில்லுங்கடா..." பாம்பே போலீஸ்காரரின் சிங்கக்குரல் எங்களைத் தடுத்தது.. நிறுத்தியது. பாம்பே போலீஸ்காரருன்னு சொல்லுறதை விட ரேச்சல் அப்பான்னா உங்களூக்கு சட்டுன்னு புரிஞ்சிடும்.

"இது தான் புட் பால் டீமா.. யார்லே கேப்டன் இதுல்ல?"

"எட்வின் அண்ணன்..அவிய நேராக் கிரவுண்ட்க்கு வர்றேன்ன்னு சொல்லிட்டாவ.." இஸ்ரா தான் பதில் சொன்னான்.

"லேய் நீ தாவீது மகனா.. தூத்துக்குடியிலேத் தானே இருக்கா.. உங்க அத்தைக்கு ஒரு மகன் இருக்கான்லா மெட்ராஸ்காரன் அவனும் டீம்ல்ல இருக்கானா? எங்கேலே அவன்?"

என்னைப் பத்திக் கேக்குறார்ன்னு தெரிஞ்சதும் எனக்கு அடி வயிரில் லேசா ஒரு சின்னப் பிரளயமே நடந்து முடிஞ்சுப் போச்சு. நான் மெல்ல தலையை நீட்டி அவர் முன்னால் இஸ்ராவுக்கு நெருக்கமாய் போய் நின்னேன்.

"உங்க அப்பன் தாவீதும் நானும் சின்னக்குளம் புட் பால் டீமுக்கு ஆட இறங்குனோம்ன்னா செயிக்கமாத் திரும்ப மாட்டோம்.. இப்போ மவன் நீ.. அவன் இடத்தைப் பிடிச்சிருக்கா.. எனக்குப் பொட்டப்புள்ளயாப் போச்சி.. இல்லன்னா இறக்கி விளையாட விட்டராலாம்... " என்று சொல்லிவிட்டுச் சத்தம் போட்டு சிரித்தார்

"இப்போ இறக்கிவிட்டாலும் அவ நல்லாவே ஆடுவா.." வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாம விழுங்கிக்கொண்டேன்.

'சரி.. மூணு வருசமா தொடர்ந்து அந்தப் பிரகாசபுரம்காரன்வட்ட மிதிபட்டுட்டுல்லா கிடக்கியளாம்டே.. சின்ன்க்குளத்து இளவட்ட்ங்களுக்கு விளையாட்டு வரல்லயா இல்ல சொனைக் கெட்டுப் போச்சாடே..' என்று கேட்டு விட்டு எங்கள் பதிலுக்காக எங்களைப் பார்த்தார்.

"சொணை எல்லாம் கெடல்ல...விளையாடுறவங்க வினைச் சரி இல்ல..விளையாடத் தெரிஞ்சவனை இறக்கி விட்டாத் தானே விளையாட முடியும்.. சும்மா மெப்புக்கு ஓடத் தெரியாதவனை எல்லாம் ஆட விட்டா அலறி அடிப்பட்டுகிட்டுத் தான் வர்றணும்"

"இதான் உன் அத்தை மோவனா.. அவன் அம்மாவை மாதிரியாத் துடுக்காப் பேசுதான்.. ரேச்சல் உன்னியப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா..சரியாத் தான் இருக்கு, ஆமா உன்னிய ஆட்டத்துல்ல இறக்க மாட்டேன்னு யார் சொன்னது?" என்று சிரிச்சிகிட்டேக் கேட்டார்.

"மாமா சோமா இருக்கியளா...?"

"வாய்யா எட்வின்..உன்னியப் பத்தி பையக் குத்தம் சொல்லுதான்.. ஆட்டத்துல்ல இவனுவளைச் சேக்காமா ஒதுக்கி வைக்கியாமே ஏம்ப்பா?

"மாமா பைய இன்னும் பள்ளியூடத்துல்ல பத்தாப்பே முடிக்கல்ல...ஆனா ஆடணும்ங்கான்... பிரகாசபுரத்துல்ல எல்லாம் காலேஜ் முடிச்சப் பயல்வ.. இங்க நம்ம செட்ல்ல எல்லாம் சின்னப்பயல்வ... நான்..ஆல்டன்..ஜெபா..குரூஸ்.. இப்படி கொஞ்சம் வேர் தான் அவன்வ டீம்க்கு சரியான குரூப்...என்னப் பண்ண? எனக்கும் கால்ல அடிப் பட்டுருச்சு..இந்த வருசமும் கஷ்ட்டம் தான்.."

"பத்தாப்பு படிக்கப் பையன் பந்தடிச்சா பந்து கோல்குள்ளே போவாதோ... உங்க வயசு வரைக்கும் வளந்து தான் பந்தடிக்க வர்றணுமோ... மூணு வருசமா நாங்களும் தான் பாக்கோம்ல்ல.. உங்க குரூப் கும்பி கிழிஞ்சு வந்த நிக்கக் கதையை..." நான் கொஞ்சம் காட்டமாகவே பேசிவிட்டேன். எட்வின் அண்ணனுக்கு முகம் சிவந்து விட்டது.

"எலேய் மெட்ராஸ்காரா பேச்சு எல்லாம் உஙக ஊர் பொழ்ப்புக்கு வேணும்ன்னா சரியா வரும்... இந்தப் பக்கம் எல்லாம் வெத்துப் பேச்சு வெத்தலைச் சுண்ணாம்புக்குக் கூட ஆவாதுலேய்.." ரொம்ப விறைப்பும் முறைப்பும் சேர்த்துகிட்டு என்னைப் பாத்து எட்வின் அண்ணனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்துச்சு.

'சரி மக்கா.. இந்த வருசம் போட்டியிலே நீங்க செயிச்சா.. ஆளுக்கு அம்பது ரூவாத் தாரேன்... என்ன?"
வார்த்தை வளர்வதைத் தடுக்க ரேச்சல் அப்பா இடையில் குறுக்கிட்டு தன் அறிவிப்பை வெளியிட்டார். அப்படித் தான் நான் நினைக்கிறேன்.

வார்த்தைகளின் வேக வீச்சு அப்போதைக்கு அங்கே கட்டுப்பட்டாலும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறுன பார்வையிலே அனல் சும்மா கொந்தளிச்சதுன்னு சொல்லணும். எட்வின் அண்ணன் (ம்ஹ்ம் இனிமே என்ன நொண்ணன் வேண்டிக்கிடக்கு..) எட்வின் என்னைப் பார்த்தப் பார்வையில் எனக்கு எல்லாச் சேதியும் திருத்தமா விளங்கிப் போச்சு. வில்லங்கத்தை மொத்தமா விலை பேசி வாங்கியாச்சுன்னு புரிஞ்சுப் போச்சு... எட்வின் என்னை மொறைப்பதை நிறுத்தவில்லை.. ஒரு கட்டத்தில் நானும் அடப் போடாங்க என்று திருப்பி மொறைக்க ஆரம்பிச்சேன்...

இப்படி ஒரு வரலாற்று மதிப்பு மிக்க பனிப்போர் துவங்கியதை கொஞ்சமும் உணராம மொத்த டீமும் ரேச்சல் அப்பாவின் அறிவிப்பைக் கேட்டு ஆர்வத்தில் ஆனந்தக் கூத்தாடிக்கொண்டிருந்தது.

எட்வின் நடந்துப் போவதையேப் பார்த்துக்கொண்டு நான் நின்றேன்... சந்துக்குள் போன எட்வினுக்குப் பின்னால் பைக் உறூமும் சத்தம் கேட்டது.. சந்தேகமின்றி அது யமஹா பைக் சத்தமே தான்.. வேற எதையும் யோசிக்காமல் நான் தெறிச்சுக் குதிச்சி சந்தை நோக்கி ஓடினேன்.

அங்கே கருப்புச் சட்டையைக் கழுத்தில் கட்டிக்கொண்டு மோட்டார் ரூம் அருகே நான் பார்த்த அதே யமஹா பைக்ல்ல ஏறி எட்வின் பறப்பதை நான் பார்த்தேன்...

"அடப்பாவி நீ தானா அவன்....உன்னியக் கண்டுபிடிச்சாச்சு உங்கூட இருந்த ராசாத்தியையும் கண்டுபிடிச்சுட்டேன்னு வை.. இருக்கட்டும் என் ராசாக்கட்டி... என்னையவா கட்டம் கட்டி மட்டம் தட்டுற..மெட்ராஸ் காரன் வாயைத் தொறந்துப் பேசுனா நீ முடிஞ்சுப் போயிருவடா என் எட்வின் அண்ணா"

அன்னிக்குச் சாயந்திரம் பிராக்டீஸ்க்கு எட்வின் வந்திருந்தாலும் விளையாடல்ல, நாங்க எல்லாம் விளையாடுனோம்... நான் நல்லா விளையாடியும் எட்வின் வேணும்ன்னு என்னை மட்டம் தட்டுனான். ஒரு கட்டத்துல்ல எனக்கு ஆத்திரம் பொங்கிருச்சு... பந்தை ஓங்கி அவன் மேல அடிக்கப் போயிட்டேன்.....இஸ்ரா வந்து நிறுத்திட்டான். எட்வினும் அதைக் கவனிக்கல்ல.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் எட்வின் என்னைக் எகடியம் பண்னிகிட்டு இருந்தான்.. நான் பொறுத்துப் போயிட்டு இருந்தேன்..காரணமே பெரிசா இல்லாம எனக்கும் எட்வினுக்கு பகை வளந்துகிட்டேப் போச்சு... சின்னப் பையன்னா அவ்வளவு இளக்காரமா.. உன்னை இந்த லீவு முடிஞ்சு ஊருக்குப் போறதுக்குள்ளேப் போட்டுக் கொடுக்காமப் போறதுல்லன்னு எனக்கு நானே சபதமெல்லாம் போட்டுகிட்டேன்.

எட்வின் பத்தி நான் கண்டுபிடிச்ச பரம ரகசியத்தை இன்னும் இஸ்ரா கிட்டச் சொல்லல்ல. அதுக்குச் சம்யம வாய்க்கல்ல. இஸ்ரா கிரவுண்டுக்கு வந்ததிலே இருந்து கிட்டத் தட்ட பிலேவின் மறுபிறப்பு ரேஞ்ச்சுக்கு படம் காட்டிகிட்டு இருந்தான்.

திடீரென்னு விளையாடிகிட்டு இருந்த அத்தனைப் பயலும் ஆட்டத்தை நிறுத்திட்டு திபு திபுன்னு கிரவுண்ட் ஓட ஒரு முக்குக்கு போய் குத்த வச்சுட்டாங்க...

அன்னிக்குத் தான் முதல் தடவையா பிராக்டீஸ் போயிருந்தாலே அதுக்கானக் காரணம் எனக்குப் புரியல்ல.. இஸ்ரா பிராக்டீஸ் போகும் நேரம் நான் பெருமபாலும் இழுத்து மூடிகிட்டு தூங்கிருவேன்... அழைக்காத இடத்துக்கு சும்மா வேடிக்கைப் பாக்கக் கூடப் போறதுல்லன்னு அவ்வளவு வைராக்கியம் எனக்கு..

நானும் இஸ்ராவும் தான் கடைசியாப் போனோம்...

எல்லாருக்கும் கொறிக்கறதுக்கு பலகாரம் வந்து இருந்துச்சு... அதிரசம், நெய் முறுக்கு, மஸ்கோத அல்வா, ஓமப்பொடி, ரவா லட்டு, விவிக்கா, முந்திரிக் கொத்துன்னு வகை வகையா வந்து இருந்துச்சு...ஆசையா எடுக்கப் போனவன்
"எலேய் நல்லாத் தின்னுப்புட்டு மல்லாந்துராதீய... விளையாடணும்... நாளைக்கு ஆட்டத்துல்ல செயிச்சா இதை மாதிரி இன்னும் ரெண்டு மடங்கு உண்டுல்லா" என்று எட்வின் சொன்னதைக் கேட்டு அப்படியே நகர்ந்து போய் சொம்புல்லருந்த தண்ணியை மடக் மடக்குன்னு குடிக்க ஆரம்பிச்சேன்..

தண்ணியைக் குடிச்சுட்டு தலையை இறக்கிப் பார்த்தா.. எதிரில் ரேச்சல் நிக்குறா...

அப்படியே மின்னல் கண்ணுக்குள்ளே வந்து வெட்டுற மாதிரி சிரிப்பு... சடைப் பின்னிச் சும்மா இரண்டு மொழம் பிச்சிப் பூவை வச்சுகிட்டு... சன்னமா முகத்துக்கு பவுடர் போட்டும் போடாமலும்.. கையிலே நாலு கல் வளையல்... காதுல்ல சின்னதா வைரக்கல வச்ச தொங்கட்டான் குலுங்குது.. அவளைப் பார்த்துகிட்டே குடிச்சத் தண்ணிய விழுங்க மறந்துட்டு வாயைத் தொறந்தப் படியே நின்னுட்டேன்.. ஆங் அந்த முன் நெத்தியிலே சுருளா சுருளாக் குவிஞ்ச முடியை வாயை வச்சு காத்து ஊதி கலைச்சு விட்டு கண் சிமிட்டினாப் பாருங்க... குடிச்சத் தண்ணி பொறை ஏறி இரும ஆரம்பிச்சேட்டேன்,

"ம்ஹூம் உங்க ஊர் பசங்க எல்லாம் நல்லா வாயைப் பொளந்துகிட்டு சைட் அடிக்க மட்டும் தாண்டா லாயக்கு...." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

"யார் இப்போ சைட் அடிச்சா?"

"அப்போ இப்போ இவ்வளவு நேரம் .. நான் இங்கே வந்து அஞ்சு நிமிசம் ஆச்சு... இந்த அஞ்சு நிமிசமும் நீ என்ன நாலு கொயர் நோட்டு நிறைய டைப்பா அடிச்ச?"

"அது நான் உன்னை இப்படிப் பார்த்ததே இல்லையா அதான் கொஞ்சம் அதிர்ந்து நின்னூட்டேன்"

சுளுக்கெனச் சிரித்தவள்.." ஏன் இப்போ எனக்கு என்ன ஆயிருச்சுன்னு அதிர்ந்துட்டே?"

"அது நீ பொண்ணு மாதிரி எல்லாம் ... அது தான் தாவணி எல்லாம் போட்டுகிட்டு... எங்க ஊர் பொண்ணு மாதிரி தலை எல்லாம் வாரி.. பூ எல்லாம் வச்சு..." என்ன என்னவோ சொல்ல முயன்று உளற ஆரம்பிச்சேன்.

"அதாவது.. அன்னிக்கு சொன்னீயே .. பொண்ணுன்னா.. அப்படின்னு ஒரு டயலாக் அது மாதிரி இப்போ நான் இருக்கேனா?" லேசா வெட்கப்பட்ட மாதிரி இருந்தாள். அவள் ஏற்கனவே ரோஜாப் பூ கலர்.. இப்போ சிவப்பு ரோஜாக் கலருக்கு அவள் முகம் மாறியது.

"ம்ம்ம் " என்று நான் தலையசைக்க.. அவள் தாவணியின் நுனியெடுத்து முகம் மறைத்து வெட்கத்தை ரொம்பவே உறுதி செய்தாள்.

ரேச்சல் முகம் மூடிய நீலக் கலர் தாவணியின் நுனி கிழிந்திருந்தது என் கண்ணில் பளிச்செனப்பட்டது. அதைப் பார்த்த நான் சித்தம் தடுமாறி நின்ற அதே வேளையில்
அங்கே யமஹா பைக்ல்ல சீறி வந்த எட்வின் பைக்கை ஒரு முறுக்கு முறுக்கி...

"ரேச்சல் வாப் போலாம்.... நேரமாச்சுல்லா" என்றது இடிச் சத்தத்தை விடவும் பலமாய் என் காதுல்ல விழ்ந்துச்சு. தாவணியை விரல் நுனியாலே பிடிச்சுச் சுத்திகிட்டே ரேச்சலும் பைக்கில் ஏறப் போனா.

கிழிந்த நீலக் கலர் தாவணி, யமஹா பைக், எட்வின் எல்லாமாய் சேர்ந்து என்னை முறுக்கியது... எட்வின் வண்டியை இன்னும் முறுக்கினான்.
வண்டி சீறியதை விட எனக்குள் எதோ ஒன்று எக்குத் தப்பாய் சீறியது..ரேச்சல் மெதுவாய் நடந்துப் போய் வண்டியின் பின்னால் ஏறி கொண்டாள்.

அவ்வளவு தான்.. அதற்கு மேலும் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை...ஆன மட்டுக்கும் ஆவேசம் கொண்டு பைக்கைப் போய் மறிச்சு நின்னுகிட்டேன்..உள்ளுக்குள்ளே உறுமுன மனத்தின் ஓசையை வார்த்தைகளாய் வெடிச்சுத் தள்ள ஆரம்பிச்சேன்..

"எங்கேப் போறீங்க... மோட்டார் ரூமுக்கா....ச்சீ... வெக்கமா இல்ல..."நான் இப்படிச் சொல்லக் கேட்டதும் எட்வின் கைச் சட்டென்று வண்டியில் இருந்து விடுபட வண்டி நின்று போனது.

ஆனால் எட்வின் எந்த மறுப்பும் சொல்லாதது எனக்கு அந்த நிலையிலும் ஆச்சரியம் அளித்தது. என் கோவத்தை மேலும் கிளறிவிட்டது.எட்வினை விட்டு விட்டு பின்னால் ரேச்சலை எட்டிப் பார்த்தேன்.. அவள் முகத்தைப் பார்க்க சுத்தமாய் திராணியற்று அவள் தலை தூக்கவும் நிலத்தைப் பாத்தேன்.

"உனக்கு என்னக் காட்டுப்பாதையிலே பம்பாய் பசங்க செய்யறதச் செய்ய இங்கே ஒரு ஆள் கிடைச்சுட்டானா....? அதுக்குத் தானே நீ ஆசைப் பட்ட... நான் பாத்தேன் எலலா இழவையும் பார்த்தேன்.... உங்க அசிங்கம் எல்லாத்தையும் பாத்துத் தொலைச்சேன்.... ச்சீ..த்தூ....' கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன் போல கத்தினேன்.

விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி இதெல்லாம் நடந்துக் கொண்டிருந்தது. இதற்குள் பலகாரம் சாப்பிட்டப் பல பேரும் கலைந்துப் போயிருந்தார்கள்... எட்வின் .. ரேச்சல்.. நான் மூவரும் மட்டும் மீதமிருந்தோம்....நான் போட்ட சத்தம் கேட்டு இஸ்ராவும் வந்துச் சேர்ந்தான்..

"இன்னும் ஏன் நிக்குறீங்க... போங்க.. போய்யா அவளை மோட்டார் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ... " என்று நான் முழுசாய் சொல்லி முடிக்கும் முன் என் கன்னத்தில் அது வரை நான் அறிந்திராத வலியைத் தர்ற மாதிரி ஒரு அறை விழுந்தது...காதுக்குள்ளே வண்டு வந்து கும்மி அடிக்கிறாப்பல்ல ஒரு எபெக்ட் ஆயிருச்சு.

வலியின் தீவிரம் என் நரம்பு மண்டலங்களில் வேகமாய் பரவிக்கொண்டிருந்தது...சில வினாடிகளுக்கு நடப்பது எதையும் என்னாலே கிரகிக்கக் கூட முடியாம தரையிலே உக்காந்துட்டேன்... லேசாத் தெளிஞ்சுப் பாத்தப் போது எட்வின் மவுனமாய் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருப்பது தெரிந்தது... அவன் தலைக் கவுந்துக் கிடந்தது.

வண்டி கிளம்பியது...வண்டியில் ரேச்சல் இருந்தாள் என் கண்ணில் இருந்து வண்டியும் ரேச்சலும் மெல்ல மெல்ல மறைஞ்சாங்க. அதே சமயம் என் கண்களில் கண்னீர் கட்டுப்ப்டாமல் ஓட ஆரம்பித்தது...

தரையில் கிடந்த என் மீது இஸ்ராவின் நிழல் நீண்டு கிடந்தது...

"நாளைக்கு மேட்ச் மட்டும் இல்லன்னா நீ பேசுன்ன பேச்சுக்கு உன்னிய இங்கேயே வெட்டிப் போட்டிருப்பேன்டா" பைக் மறைந்த பின் அங்கு நிலவிய கடும் மவுனத்தை அதிரும் வார்த்தைகளால் உடைச்சுப் போட்டான் இஸ்ரா.

பைக் போனத் தடத்தையே வெறித்துப் பார்த்தப் படி கையை முழங்காலில் குவித்து நான் உட்கார்ந்திருந்தேன்... சின்னக்குளத்தில் சாய்ங்காலச் சூரியன் சத்தமின்றி குளத்திற்குள் இறம்ங்கிக் கொண்டிருந்தது...

என் மீது படிஞ்சிருந்தப் புழுதியை எல்லாம் உதறி விட்டுக்கொண்டு கண்ணில் வழிந்த கண்ணீரை இன்னொரு கையை வச்சுத் துடைச்சிகிட்டுகடும் வெறி வந்தவனாய் எழும்பி நின்று எட்டு ஊருக்கும் கேட்கும் குரலில் நான் அலறினேன்...

"என்னை அடிச்சது எவன்டாஆஆஆஆஆஆஆஆஆ??"

விடுமுறையின் கடைசி நாள் பொழுது விடிய இன்னும் சரியாய் 12 மணி நேரம் மீதமிருந்தது..அந்த 12 மணி நேரத்துக்குப் பின்... தொடரும்

9 comments:

வெட்டிப்பயல் said...

கதை சூப்பரா போயிட்டு இருக்கு...

ரவி said...

நல்ல விறுவிறுப்பு !!!!!!!!

ரவி said...

http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_18.html

CVR said...

ஹ்ம்ம்
போன பகுதியிலேயே அந்த நீல கலரு தாவணி தான் ரேச்சலுன்னு பட்சி சொல்லுச்சு!!
இந்த கதையையும் சோகமா முடிச்சிறாதீங்க அண்ணாச்சி!!! :-(

கோபிநாத் said...

அட்டகாசமாக இருக்கு தல

சீக்கிரம் போடுங்க அடுத்த பதிவை....

அனுசுயா said...

ஆகா திருப்பு முனை பலமாத்தான் இருக்கு. ஆனா என்ன ரேச்சல் இப்டி பண்ணுவானு எதிர்பார்க்கல. பாக்கலாம் அடுத்த பதிவுல என்ன முடிச்சு வருதுனு.

குசும்பன் said...

சூப்பர் அண்ணாச்சி..கலக்குறீங்க

Anonymous said...

போங்னே, என்ன சொல்றதுன்னே தெரியலே

வெ. ஜெயகணபதி said...

தேவ்.. கதை சூப்பரா போவுது... நான் மதுரைக்காரன்.. இருந்தாலும் எனக்கு தின்னவேலி பாசை தான் ரொம்ப பிடிக்கும்..

என்னோட college friends நிறைய பேரு தின்னவேலி பயலுவ தான்... ரொம்ப சூப்பரா நம்ம சீம பாசையில சும்மா புகுந்து விளையாடி இருக்கீங்க....

ஒரே மூச்சா 6 பதிவையும் படிச்சு முடிசுட்டேன்...

அடுத்த பதிவுக்காக காத்துக்கிட்டு இருகோம்ல... சீக்கிரமா எழுதி அனுப்புங்க...