Thursday, July 19, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 7 (இறுதி பாகம்)

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 6

கால்பந்தாட்ட மேட்ச்ல்ல முதல் பாதி முடியும் போது லேசா மழைத் தூற ஆரம்பிச்சது... மேகம் சும்மா கரு கருன்னு இருட்டிகிட்டு வந்துச்சு. மழைக்கெல்லாம் ஆட்டத்தை நிறுத்துற வழக்கம் கிடையாதுங்கறதால மழையை யாரும் பெரிசாக் கண்டுகிடல்ல..

ஆட்டத்தைப் பாக்க வந்தவங்கத் தான் ஒதுங்க இடம் தேடிகிட்டு இருந்தாங்க.. முதல் பாதி முழுக்க என்னைக் களத்தில் இறக்கல்ல.கரையில்ல இருந்து தான் மேட்ச்சைப் பாத்துகிட்டு இருந்தேன்..

பிரகாசபுரத்துகாரன்வ நல்லாவே ஆடுனான்வ.. முதல் பாதியில்ல பத்தாவது நிமிசம் நாங்க முதல் கோல் வாங்குனோம்.. அடுத்தக் கோல் நாப்பதாவ்து நிமிசம் வாங்குனோம்.. எங்கப் பயல்வளும் நல்லாத்தான் ஆடிட்டு இருந்தான்வ... ஆனா அவன்வ ஆட்டம் பேய்த் தனமால்லா இருந்துச்சி.. முதல் பாதி முடிய இரண்டு நிமிசம் இருக்கும் போது எட்வின் எங்க டீமுக்கு ஒரு கோல் போட்டது கொஞ்சம் உயிர் கொடுத்தாப்பல்ல இருந்துச்சி.. அந்த அடிப்பட்ட காலையும் வச்சுகிட்டு எட்வின் அட்டகாசமா ஆடுனாப்பல்ல. கோல் விழுந்தவுடனே விசில் அடிக்க வைச்சுட்டான் மனுசன்.. அவ்வளவு அழகாக் கோல் அடிச்சான்ய்யா.

ப்ரேக்ல்ல வந்து ஆளுக்கு ஆள் தண்ணியை எடுத்து தலையிலே கவுத்திகிட்டு உக்காரும் போது இஸ்ரா தான் ரேச்சல் மேட்ச் பார்க்க வந்திருப்பதைக் காட்டினான். குடைக்குள் மறைந்திருந்தாள். நான் இருந்தப் பக்கம் பார்ப்பதையேத் தவிர்த்தாள். நான் வைத்தக் கண் வாங்காமல் அவளையே வெறித்துப் பார்த்தேன்..

இஸ்ரா சிரித்தான்.

"எதுக்குல்லே சிரிக்கா.. இங்கே நான் என்ன உனக்கு ஷோவாக் காட்டுதேன்?"

"ஆமாடே ஷோ தான் நடக்கு... வெங்கலம்.. அவ உனக்கு யார்ல்லே.. அவ யார் கூடப் போனா உனக்கு என்ன? அது அவ விருப்பம்டே.. நீ கிறுக்குப் பைய மாதிரி கிடந்துக் கத்துறா... நாளைக்கு அவ ரயிலேறி பாம்பேப் போயிருவா... மறுக்க சின்னக்குளம் வர்றாளோ வர்றல்லயோ... நமக்கெல்லாம் அவச் சினேகிதம் சரிபடாதுலேய்.. என்ன விளங்குதா?" என் தலையை கோதிவிட்டான்.

இஸ்ரா ஒரு பாசக்கார பைய, என் மேல அக்கறை உள்ளவன்.. அவன் சொன்னா சரியாத் தான் இருக்கும். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். ரேச்சல் மேல கோபப்பட எனக்கு என்ன வந்துச்சு... அது வரை என் மனசைக் காயப்படுத்திகிட்டு இருந்த வலி லேசான மாதிரி இருந்துச்சு..ஆனாலும் வ்லி முழுசாப் போகல்ல.. ஒரு ஓரத்திலே போய் உக்காந்துக்குச்சு.. அது அங்கேத் தான் இருக்கும்... நிரந்தரமா இருக்கும்ங்கறது அப்போ எனக்குத் தெரியல்ல.

அதுக்குள்ளே மழையும் வேகமெடுக்க் ஆரம்பிச்சுருச்சு...

"ஜெர்ரி.. இறங்குலே..இது வரைக்கும் ஆட்டத்தைப் பாத்துருப்பால்லா.. அவன்வ கேம் பிளான் விளங்குதா.. ஜெபா, இஸ்ரா டிபன்ஸ் ஆடுங்க.. ஆல்டன்.. ஆஸ்வால்ட் மிட் மீல்ட் பாருங்க.. ஜெர்ரி நீ என் கூட பார்வேர்ட்ல்ல இறங்கு.... முடிஞ்ச் வரைக்கும் மோதிப் பாத்துருவோம்ல்ல மக்கா...." எட்வின் அண்ணன்(திடீரென எட்வின் மீண்டும் அண்ணன் ஆனாவ)கை என் கையை இழுத்துப் பிடிச்சது. மனிதச் சங்கிலியா கையைக் கோத்துகிட்டு கிரவுண்ட்குள்ளே இறங்குனோம்...

ஆட்டத்தின் அடுத்தப் பாதி ஆரம்பம் ஆச்சு...ஆரம்பிச்சு அஞ்சாவது நிமிசத்துல்ல என் தாடைப் பேந்து ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... பிரகாசபுரத்து டிபன்ஸ் பிளேயர் அசால்ட்டா அபன்ஸ் பன்ணதுல்ல வந்த வினை... ஒரு துணியை வச்சு ரத்தத்தைத் துடைச்சுட்டு வலியைக் காட்டாமக் கெத்தா மறுபடியும் ஆட தயார் ஆயிட்டேன்..ஆனா மக்கா வலி உள்ளுக்குள்ளே உயிர் வரைக்கும் வாங்கி எடுத்தது. எப்படியோ சமாளிச்சு நின்னுகிட்டேன். ரேச்சல் பாக்குறாளான்னு வேற அந்த வலியிலும் ஓரக் கண்ணால் பார்த்தேன். அவளும் பார்த்துகிட்டு தான் இருந்தாள்.

இரண்டாவது பாதியிலே முப்பது நிமிசத்துக்கு யார் பக்கமும் கோல் விழல்ல. ஆட்டம் ரொம்ப் நெருக்கமாப் போயிட்டு இருந்துச்சி.. அந்த நிலையிலே நான் கொடுத்த பாஸ் ஒன்றை வெகு நேர்த்தியா ஆல்டன் கோலாக மாற்றி கணக்கை சம் நிலைக்குக் கொண்டு வந்தான்.

கொஞ்சம் மெப்பா ஆட ஆரம்பிச்ச எதிரணி சுதாரிச்சு ஆட ஆரம்பிச்சான்வ.. அதோட விழைவை ஆட்டம் முடிய பத்து நிமிடம் இருக்கும் போது நான் சந்தித்தேன்.. எதோ எருமை மாடு ஒண்ணு பறந்து வந்து பல்லைக் க்ளோஸ் அப்பல்ல காட்டுனாப்பல்ல் இருந்துச்சு.. அவ்வளவு தான் எனக்குத் தெரிஞ்சுது.. நான் மல்லாக்க விழ என் மேல அந்த எருமை குப்புற விழ என் கை விழுந்த இடத்தில் இருந்த கூரானக் கல்லில் பட்டு கிழிந்தது... முழங்கையில் இருந்து பொங்கிய ரத்தம் கை முழுக்க நனைச்சுருச்சு.

எட்வின் அண்ணன்..(இப்போ அண்ணன் தான் ) ஓடி வந்து தன் பனியனைக் கிழித்து என் கையில் கட்டி ரத்தத்தை நிறுத்தினாவ. எனக்கு கண் எல்லாம் கட்டிருச்சு... ஏற்கனவே தாடைப் பேந்துருச்சு...அவ்வளவு தான் நான் மயங்கி சரிஞ்சுட்டேன்.. என்னப் பொறுத்தவரைக்கும் மேட்ச் முடிஞ்சுப் போச்சு....

"னான்... ஆடுறே....ன்ன்.. என்னை அனுப்...பா....தீ...ய..." கடைசியா இதைச் சொன்ன மாதிரி ஒரு நினைப்பு இருக்கு. ஆனா உறுதியா என்னச் சொன்னேன்னுத் தெரியல்ல..

அப்புறம் நான் கண்முழிச்சுப் பாக்கும் போது எங்க வீட்டுல்ல இருந்தேன். கையிலே கட்டுப் போட்டிருந்தாங்க. நடுவில்ல டாக்டர் வந்து டிடி எல்லாம் போட்டிருக்கார்.. வீரனுக்கு எதுவுமே தெரியல்ல..( நான் தான்ய்யா அந்த வீரன்)..

கண்முழிச்சப் பொழுதில் ந்டந்ததை எல்லாம் நான் ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கும் போது மாடியிலே என் ரூமுக்கு வெளியே நீலக் கலர் தாவணி தெரிஞ்சது...மறுபடியும் அதே தாவணி.. நான் எழுந்து வந்தேன்.. தாவணியின் நுனி கிழிந்து இருந்தது நன்றாக தெரிந்தது...ஆனால் தாவணியைக் கட்டியிருந்தது....

"இது உங்க தாவணியா?" இப்படி ஒரு அறிவுபூர்வமானக் கேள்வியை ரொம்பவும் விறைப்பாக் கேட்டேன்...

"எலேய் எய்யா.. கையிலேயும் தாடையிலும் தானே அடிப்பட்டுச்சுன்னு சொன்னாங்க.. உனக்கு எங்கே எல்லாமோ இல்ல அடிப்பட்டுருக்கும் போல... அவ அவளோடச் சீலையைக் கட்டாம உன் சீலையையாக் கட்டுவா?" எங்கப் பாட்டி தான் குறுக்கிட்டு வாய்பந்தல் போட ஆரம்பிச்சாங்க..

எனக்கு அடுத்து என்னக் கேட்பதுன்னுத் தெரியாம ஒரு மாதிரியா நெளிஞ்சுகிட்டு நின்னேன்... பிரின்சிலின் அக்காவுக்கு என் நிலைமைப் புரிஞ்சுதோ என்னவோ.. என்னைப் பார்த்து மெதுவாச் சிரிச்சாங்க.. பிரின்சிலின் அக்கா ரேச்சலுக்கு உறவு.. நானும் இஸ்ராவும் எப்படியோ அப்படின்னு வச்சுக்கலாம். அவங்க நாசரேத் காலேஜ்ல்ல பி.எஸ்.இசி இரண்டாம் வருசம் படிக்கிறாங்க.. அதிகம் பேசுனதுல்ல.. ஆனா எங்கேப் பாத்தாலும் சிரிப்பாங்க.. சொகம் விசாரிப்பாங்க.. எங்கப் பாட்டிக்கு அந்த அக்கா மேல பாசம் அதிகம்.. அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாங்க போவாங்க..

பாட்டி அடுப்பாங்கரை பக்கம் போறதுக்குப் படி இறங்குனாங்க..நான் இன்னும் குழப்பத்திலே நின்னுகிட்டு இருந்தேன்...பிரின்சிலின் அக்கா பாட்டிப் போகும் வரை எதுவும் பேசாமல் அமைதியா இருந்தாங்க..பாட்டிப் போனதும் அந்தக் கவரை எடுத்து என்கிட்ட நீட்டுனாங்க...

"என்னது?"

"ரேச்சல் கொடுக்கச் சொன்னா..."

நான் கடகடன்னு கவரைப் பிரிச்சேன்... உள்ளே கிரிஸ்டல் கீ செயின் ஒண்ணு இருந்துச்சு.. அதை விருட்டென்னு எடுத்துட்டுப் போய் ஜன்னல் வழியா ரூம்குள்ளே வந்து விழுந்த வெயில்ல காட்டுனேன்... அதுல்ல..

"TO LOVING FRIEND JERRY FROM RACHAEL" அப்படின்னு தங்க கலர்ல்ல மின்னுச்சு.. வாய் விட்டு படிச்சாலும் சத்தம் வெளியே வரல்ல..கவர்க்குள்ளே வேற எதுவோ கூட இருந்துச்சு, என்னன்னுப் பார்க்கும் ஆவலில் அவசரம் காட்டுனேன்.. உள்ளே இருந்த தின்னவேலி அல்வா பாக்கெட்டைப் பாத்ததும் என்னையுமறியாமல் எனக்கு சிரிப்பு வந்துச்சு.

கீ செயினை கைக்குள்ளேப் பொத்தி வச்சுக்கிட்டேன்..

"உனக்கு இன்னிக்குப் பொறந்த நாளாமே.. கோயில்ல பெயர் வாசித்தாவளாம்.. அது தான் கிப்ட் வாங்கி வச்சிருக்கா ரேச்சல்"

"அதை அவளேக் கொடுத்து இருக்கலாமே..." என்று நான் அரையும் குறையுமா இழுக்க.

"கொடுக்கத் தான் வந்தா.. நீ எந்திரிக்க மாதிரி தெரியல்ல.. அதான் காத்திருந்துப் பாத்துட்டு என் கிட்டச் கொடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டா"

"போயிட்டாளா... எங்கே?"

"இன்னிக்கு ரேச்சல் லீவு முடிஞ்சு ஊருக்குப் போறால்லா.. அஞ்சு மணிக்கு நாசரேத்துல்ல திருச்செந்தூர் ட்ரெயின் பிடிக்கப் போயாச்சி.." பிரின்சிலின் அக்கா சொல்லவும் நான் கடிகாரத்தைப் பார்த்தேன்..அதுல்ல மணி நாலு இருவதைஞ்சு.

வாரிச் சுருட்டி எழுந்தவனை மறுபடியும் பிரின்சிலின் அக்காவின் குரல் தடுத்தது..

"அப்புறம் இது தான் என் சீலைத் தான்..."

"என்னது..?"

"ஆமா... நீ கேட்டக் கேள்விக்குப் பதில்.. அன்னிக்கு மோட்டார் ரூம்ல்ல நீ பார்த்தது எட்வின் தான்.. எட்வின் அவியக் கூட இருந்தது..."

எனக்கு எல்லாம் புரிந்து விட்டது.

"ரேச்சலுக்கு ரொம்ப நாளா தாவணிப் போடணும்ன்னு ஆசை.. அதுக்குச் சிக்குனது இந்தக் கிழிஞ்சத் தாவணி... அவ ஆசையா அன்னிக்குத் தாவணிக் கட்டிகிட்டு உன்னைப் பாக்க வந்தா நீ என்னவெல்லாமோ பேசிட்டீயாம்... அவியச் சொன்னாவ..ஆனா ரேச்சல் வாய் திறக்கல்ல...எனக்கு மனசுக் கேக்கல்ல...அதான் சொல்லிரணும்ன்னு அவியக் கிட்டக் கூடச் சொன்னேன்.."

"அக்கா எனக்கு இப்போ ரேச்சலைப் பாக்கணும்... நேரமில்ல.. உங்கக் கிட்ட வந்துப் பேசுறேன்.." மாடி படியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடினேன்..

"உம்மோவனுக்கு நல்லாக் கிறுக்குத் தான் பிடிச்சிருக்குப் போ" பாட்டி எனக்குப் பின்னால் என் அம்மாவிடம் சொன்னது தெளிவாய் காதில் விழுந்தது..

பென்னி அண்ணன் டிவிஎஸை கடனாய் வாங்கி சும்மாக் காட்டுப் பாதையிலே இறக்கிட்டு பறந்தோம்ல்லா.. கல்லையும் முள்ளையும் பாவப்பட்ட டிவிஎஸ் டயரல்ல தாங்க முடியல்ல.. காத்துப் போனப் பின்னாடி அது மேல இருந்த என்னோடப் பாரத்தைச் சுத்தமா அதால்ல தாங்க முடியாம என்னைக் குப்புற கவுத்துப் போட்டிருச்சு... ஏற்கனவே இருந்தச் சேதாரத்த்தை கூட்டி வச்சு பார்க்கும் போது இது ஒண்ணும் ரொம்ப பெரிசாத் தெரியல்ல...

கவுந்த டிவிஎஸும் நானும் நிமிந்தப்போ மணி நாலரை இருக்கும்...இன்னும் ஒரு மூணு இல்ல மூணரை கிலோ மீட்டர் போகணும்.. நல்லா கெதியா இருந்து ஓடுன்னாலே இருவது நிமிசம் ஆயிருமே..இப்போ இருக்க என் பாடி கண்டிசனுக்கு இரண்டு மணி நேரம் ஆனாலும் ஆச்சரியமில்ல...

அந்நேரம் பார்த்து..அக்கம் பக்கம் ஒரு சைக்கிளைக் கூடக் காணும்.. இறங்குற சூரியன் இரக்கமில்லாம முகத்துல்ல முக்காடு போடச் சொல்லி மிரட்டிகிட்டிருந்தான்.. நான் அப்படியே சேர்ந்துப் போய் உக்காந்துட்டேன்... ஒரு இரண்டு நிமிசம் ஓடியிருக்கும்... பக்கத்துல்ல பைக் உறுமுற சத்தம் கேட்டு நிமிந்தா எட்வின் அண்ணனும் பின்னாலே இஸ்ராவும்...

"லேய்.. உன்னிய விரட்டிகிட்டுத் தான் பின்னாலே வந்தோம்...மறுபடியும் அடியா?" இஸ்ரா இறங்கி ஓடி வந்தான்.

"மெட்ராஸ்காரனுக்கு பேச்சு மட்டுமில்ல.. அடி ஓதை வாங்கி வீரமும் காட்டத் தெரியும்ங்கறது இப்போ இந்த ஊர்காரவீயலுக்கு தெரிஞ்சிருச்சுல்லா"

எட்வின் அண்ணன் சிரித்தாவ... இஸ்ராவும் சிரித்தான்.. நானும் தான்.. என்னச் சிரிக்க சிரிக்கத் தாடையிலே யாரோ உக்காந்து குத்துறாப்பல்ல இருந்துச்சு... இருந்தாலும் சிரித்தேன்..

நாசரேத் ரயில் நிலையத்துக்குள் நாங்கள் நுழையும் போது...ரயில் எஞ்சின் புகையைக் கக்க ஆரம்பிச்சுருச்சு... புகைவண்டி காலமது... அந்த ஊர்ல்ல அதிகமா யாரும் ரயிலேற மாட்டாங்க.. வண்டி நிக்கப் போறது அஞ்சு நிமிசமோ... அதுக்கும் கூட ஒரு நிமிசமோ...

ரேச்சலைக் கண்டுபிடிக்கிறது எனக்கு அதிக சிரமமாயில்லை... ரேச்சல் அவள் அப்பா, அம்மா, தம்பி..இன்னும் அவள் குடும்ப மக்கள் ரயில்டியிலே நின்னுப் பேசிக்கிட்டு இருந்தாங்க..நான் தயக்கமா ரேச்சலைப் பாத்துகிட்டு நின்னேன்...அவங்க அப்பா சிரிச்சார்...அவ தம்பி ஓடி வந்தான்..

"ஹேப்பி ப்ர்த்டேவாமே உனக்கு.. அக்காச் சொன்னா.." என்று கைக் கொடுத்தான்.

பாக்கெட்டுக்குள் இருந்த சாக்லேட்டை எடுத்து அவனுக்குக் கொடுத்து தேங்க்ஸ் சொன்னேன். அவங்க அப்பா, அம்மா, நாசரேத் ஸ்டேஷன் மாஸ்டர்.. அப்புறம் அங்கே இருந்த எல்லாருக்கும் என் பர்த்டே சாக்லேட் கொடுத்தேன்.. எல்லாரும் எனக்கு ஹேப்பி பர்த் டே சொன்னாங்க... என் வாழ்க்கையிலே ரொம்பவும் சந்தோஷமானப் பர்த்டே அது...

"அடப் பாவி.. கூடவே இருந்த எனக்கு ஒத்தச் சாக்லேட் தர்றல்ல.. அங்கே அள்ளி இல்லா விடுறான்.." ஆமா இஸ்ரா தான் எட்வின் அண்ணன் கிட்டச் சொல்லிகிட்டு இருந்தான்.

ரயில் எஞ்சின் சவுண்ட் விட்டுருச்சு...எல்லாரும் வண்டியிலே ஏறிட்ட்டாங்க.. ரேச்சல் படிகளில் நின்றாள்.. நான் நடையில் கொஞ்சம் வேகம் கூட்டி ரேச்சல் பக்கம் போனேன்... என்னாலே எதுவும் பேச முடியல்ல..அவளைப் பாத்துகிட்டே நின்னதுல்ல கண்ணுல்ல தண்ணி வந்துருமோன்னு பயம வந்துருச்சு.. பொது இடத்திலே வீரன் அழுதுற கூடாதுல்லா.. அதுவும் இத்தனைப் பேர் பாத்தா என்னா ஆகும்...ஆனா ரேச்சல் கண் கலங்கிருச்சு...

"எதுக்கு இப்போ இங்கே வந்த?" கண்ணீரும் சிரிப்பூமாய் கேட்டாள்

"ஏய்... மெட்ராஸ்காரன் பர்த்டேக்கு கிப்ட் மட்டும் வாங்கிட்டு சும்மாப் போயிட்டான்னு நீ நினைச்சுரக்கூடாதுல்லா...அதான் பர்த்டே கேக் கொடுக்க வந்தேன்"

ரயில் நகர ஆரம்பித்தது.. நான் கேக் பாக்ஸ் எடுத்து அவளிடம் நீட்டினேன்... அவள் கண்களில் கண்னீர் மீறிய சந்தோஷம் சட்டெனத் தெரிந்தது...

ரயிலோடு நானும் நகர்ந்தேன்

"ம்ஹூம் தின்னவேலிக்கார பையத் தான்லே நீ...இப்படி ரயில் பின்னாடி ஓடி வரத் தான் லாயக்கு... பத்தாம் கிளாஸை சீக்கிரம் முடிச்சுட்டு மேலே படிக்க பாம்பேக்கு வந்துருடா.. உன்னை பாம்பேக்காரனா நான் மாத்திடுறேன்" நகர்ந்த ரயிலின் ஓசையோடு என் காதுபட சொன்னாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் ரேச்சலின் கைப்பிடித்து அவசரத்திலும் அவசரமாய் முத்தம் ஒன்று கொடுத்தேன்.. ரயில் வேகமெடுத்தது.. என் இதயத்துடிப்பு போலவே...

ரேச்சலும் ரயிலும் கொஞ்ச நேரத்தில் பார்வையில் இருந்து மறைந்துப் போனார்கள்..

நான் அங்கிருந்த ஸ்டேஷன் பெஞ்சில் போய் சாய்ஞ்சேன்.... எனக்கு ரொம்பப் பக்கத்துல்ல விசுக் விசுக்குன்னு அழுகை சத்தம் கேட்டு நான் திரும்ப அங்கே எங்க ஊர் பொடியன் தொப்புளான் கண்ணீர் விட்டபடி நின்னுகிட்டு இருக்கான்

நான் அவனைப் பாத்தேன்.. அவன் என்னைப் பாத்தான்...

"என்னடா எதுக்கு அழுவுற?"

"ம்ம்ம் நான் அந்த அக்காவை லவ் பண்ணுறேன்.. அந்த அக்கா என்னை விட்டுட்டுப் போவுது " என்றானே பார்க்கலாம்...

எட்வின் அண்ணன், இஸ்ரா இரண்டு பேரும் இதைக் கேட்டுட்டுச் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க நானும் அவங்களோடச் சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். தொப்புளான் கண்ணைத் துடைச்சுட்டு நான் கொடுத்த சாக்லேட்டைச் சாப்பிட ஆரம்பிச்சான்..

எங்களுக்குச் சிரிப்பு இன்னும் அதிகமாப் போயிருச்சு...


பிகு: மேட்ச் முடிவு பத்தி ஆர்வமுள்ளவங்களூக்கு.. நான் மயங்கி விழுந்தப் பின் எனக்கு பதில் தொப்புளானைத் தான் களத்தில் இறக்கியிருக்காங்க.. அது வரை புட்பாலை உதைத்து அறியாத தொப்புளான் சின்னக்குளத்துக்காக ஒரு கோல் அடிச்சது அடுத்து வந்தப் பல ஆண்டுகளுக்குச் சின்னக்குளத்து நிரந்தரப் பேச்சு பொருள் ஆகிப் போச்சு... இப்போ தொப்புளான் என்ற பால் மதுரையில் ஒரு ஜவுளிக் கடைக்கு முதலாளியாயிட்டான்.

எட்வின் அண்ணனுக்கும் பிரின்சிலின் அக்காவுக்கும் அதுக்கு இரண்டு வருசம் கழிச்சி சின்னக்குளத்துல்ல வச்சு கல்யாணம் நடந்தது.. பயங்கர வெட்டுக் குத்து எல்லாம் நடக்கப் போய் அப்புறம் தான் எட்வின் அண்ணன் தாலி கட்டுனாவ. அவங்களுக்கு இரண்டு பசங்க... இரண்டு பேரும் இப்போ அண்ணன் மாதிரியே நல்லா புட் பால் ஆடுறானுவளாம்.. இப்போ காட்டுப் பாதையிலே மோட்டார் ரூமே இல்லையாம்.. எட்வின் அண்ணன் தான் இடிச்சதா பென்னி அண்ணன் சொன்னாங்க ஆனா எட்வின் அண்ணன் ஒத்துக்க மாட்டேங்கறாங்க...

ம்ம்ம் நீங்க எல்லாரும் கேக்குறது புரியுது.. ரேச்சல் தானே...கடைசியாப் பிரின்சிலின் அக்காக் கல்யாணத்துக்கு வருவான்னு எதிர்பாத்து ஊருக்குப் போயிருந்தேன்.. வர்றல்ல... அப்புறம் எஸ்தர் பாட்டிப் போனதுக்கும் அவங்க வீட்டுல்ல இருந்து யாரும் வர்றல்ல...ஒரு கட்டத்துக்கு மேல அவங்க குடும்பத்தோட யாருக்கும் தொடர்பில்லாமலேப் போயிருச்சு... ஒவ்வொரு விடுமுறைக்கும் ரேச்சலை பார்ப்போம் அப்படிங்கற நம்பிக்கையிலேத் தான் ஊருக்குப் போவேன்... ஆனா பாக்கமுடியறதில்ல...

இதோ இப்போ ரொம்ப நாளுக்குப் பொறவு ஊருக்குப் போறேன் எப்பவும் போல அதே நம்பிக்கையோட....

இப்போதைக்கு சின்னக்குளத்துக்கும் விடுமுறைகளுக்கும் விடுமுறை விட்டுருவோமா...

31 comments:

அனுசுயா said...

அய்யா தேவ் டச் பண்ணீட்டீங்க போங்க. அதுலயும் கடைசியா தொப்புளான் சொன்ன டயலாக் தான் சூப்பரு. எப்டியோ கடைசி வரைக்கும் நீல கலர் தாவணிய வெச்சு நல்லபடியா நகர்த்தீட்டீங்க.
வாழ்த்துக்கள். மீண்டும் அடுத்த பல கதை களை எதிர்பார்க்கிறோம்.

இம்சை அரசி said...

ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போச்சு அண்ணா... எல்லாருக்கும் இது மாதிரி ஒரு அழகி கதை இருக்கும் போல... :)))

CVR said...

hmmmm
Unga Narration-a adicchikka mudiyaadhu!!
Rock on!! :-)

siva gnanamji(#18100882083107547329) said...

விறுவிறுப்பே உன் பெயர்தான்
தேவ் என்பதா?

Prathi said...

Very interesting and created an itch to read the next part at the end. Expecting more from you Dev. Keep it up :-)

குசும்பன் said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள், தொடர் வாசகனாக மாற்றி விட்டீர்கள்.

அடுத்து எப்பொழுது????

Unknown said...

//அய்யா தேவ் டச் பண்ணீட்டீங்க போங்க. அதுலயும் கடைசியா தொப்புளான் சொன்ன டயலாக் தான் சூப்பரு. எப்டியோ கடைசி வரைக்கும் நீல கலர் தாவணிய வெச்சு நல்லபடியா நகர்த்தீட்டீங்க.
வாழ்த்துக்கள். மீண்டும் அடுத்த பல கதை களை எதிர்பார்க்கிறோம்.//

ரொம்ப நன்றிங்கோ.. கதைக்காப் பஞ்சம் நம்ம ஊர்ல்ல ...சொல்லிருவோம்ங்க..

Unknown said...

//ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போச்சு அண்ணா... எல்லாருக்கும் இது மாதிரி ஒரு அழகி கதை இருக்கும் போல... :))) //

நன்றிமா!!!

இது அழகி கதை இல்ல.. நல்லா படிச்சுட்டு சொல்லு.. இது ஒரு மாவீரனின் கதையாக்கும்

Unknown said...

//hmmmm
Unga Narration-a adicchikka mudiyaadhu!!
Rock on!! :-) //

Thanks CVR.. u made my day..rather evening with ur comment

Unknown said...

//விறுவிறுப்பே உன் பெயர்தான்
தேவ் என்பதா? //

ஐயா மிகவும் பெரிய பாராட்டு இது... தன்யன் ஆனேன்.. நன்றிகள் பல

Santhosh said...

சூப்பர் கதை மாப்பி.. நமக்கு தொடர்கதை டென்ஷன் ஒத்துக்காது அதனால் தான் இன்னிக்கு உக்காந்து மொத்த கதையையும் முழுசா படிச்சேன்.. கலக்கல் தேவு...

Unknown said...

//Very interesting and created an itch to read the next part at the end. Expecting more from you Dev. Keep it up :-) //

Thanks daa.. good to know u follow my blogs.. stay in touch daa

Unknown said...

//அருமையாக எழுதி இருக்கிறீர்கள், தொடர் வாசகனாக மாற்றி விட்டீர்கள்.

அடுத்து எப்பொழுது???? //

நன்றி நண்பா... அடுத்தக் கதை ரெடியானதும் ரிலீஸ் பண்ணிருவோம்

ILA (a) இளா said...

அட்டகாசம் தேவ், 7 பகுதியையும் ஒரே மூச்சில படிச்சு முடிச்சுட்டேன். நானே ஏதோ ஒரு கிராமத்துல வாழ்ந்தா மாதிரியெ இருந்துச்சு. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பத்தியும் சூப்பர். அதுவும் ரேச்சலின் வர்ணனை ரொம்ப நேர்த்தியா வந்துருக்கு. இப்படி ஒரு கிராமிய மணம் கமழுற கதை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. முடிவு சரியானதுதான், கொஞ்சம் அசற அடிச்ச முடிவுதான். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க செத்துக்கள்ல ரொப்ம ரசிச்ச தொடர் இது. ஒன்னே சொல்றேன் மாப்பி, பழைய ஃபார்முக்கு வந்துட்டே.

ILA (a) இளா said...

ஒட்டுமொத்த கதையையும் ஒன்னா படிக்கனுமின்னுதான் இவ்ளோ நாள் காத்துட்டு இருந்தேன். அதுக்கு பலன் நல்லாவே இருக்கு.

G.Ragavan said...

வரிசையா ஒவ்வொரு பதிவாப் படிச்சிக்கிட்டு பின்னூட்டம் போட்டுக்கிட்டு வந்தேன். ஒரு கட்டத்துல முடியாம..கடகடன்னு பதிவுகளைப் படிச்சிட்டு முடிவுக்கு வந்துட்டேன். :) நல்ல கதை. நல்லாயிருந்தது. மிகவும் ரசித்தேன். சூப்பர். நம்மூருக்குப் போயிட்டு வந்த உணர்வு. நல்ல கதை.

கோபிநாத் said...

குருவே....அட்டகாசமாக இருந்திச்சி ;)))

என்ன சொல்லறது...பின்னிட்டிங்க ;))

Sridhar V said...

நன்றாக இருந்தது. அந்த மண் சார்ந்த நடைக்காவே தொடர்ந்து படித்து வந்தேன்.

7-வது பகுதி எதிர்பார்த்தார்ப் போல் பல இடைவெளிகளை இட்டு நிரப்புவது போல் இருந்தது.

நிறைவாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

கொஞ்சம் 7G ரெயின்போ காலனி, கொஞ்சம் அழகி, கொஞ்சம் சென்னை 600028 என்ற வெற்றிப்படங்களின் சாயல் தெரிகிறது என்று அறிவுஜீவித்தனமாக ஒரு பின்னூட்டம் விட்டுவிடலாம்.

ஆனால், அந்த வெற்றிப்படங்களின் வெற்றிக்குக் காரணம் என்ன? பார்ப்பவர்களுக்கும் அதே போன்ற அனுபவங்கள் இருந்தமையும், அந்த அனுபவங்களை சிதைக்காமல், போலித்தனமின்றி, நேர்மையாக பதிவு செய்தமையும், பார்ப்பவன் தன்னை உணரும்படியாக செய்ததும்தான்.

அந்த அனைத்து அம்சங்களும் இந்தத் தொடரிலும் இருந்தது. எளிமையான, புரிதல் கஷ்டமற்ற வட்டார பாஷை, விடலைக்காதல் நடுவே விளையாட்டு தரும் திரைக்கதை வேகம், அதிகம் வளர்த்தாத நடை, உண்மையான பாத்திரங்கள்.. தேவ், ரொம்ப அருமை. இப்படிப்பட்ட பொய் கலக்காத கதைகளைத் தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி - இப்படைப்புக்கு.

Unknown said...

//அட்டகாசம் தேவ், 7 பகுதியையும் ஒரே மூச்சில படிச்சு முடிச்சுட்டேன். நானே ஏதோ ஒரு கிராமத்துல வாழ்ந்தா மாதிரியெ இருந்துச்சு. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பத்தியும் சூப்பர். அதுவும் ரேச்சலின் வர்ணனை ரொம்ப நேர்த்தியா வந்துருக்கு. இப்படி ஒரு கிராமிய மணம் கமழுற கதை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. முடிவு சரியானதுதான், கொஞ்சம் அசற அடிச்ச முடிவுதான். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க செத்துக்கள்ல ரொப்ம ரசிச்ச தொடர் இது. ஒன்னே சொல்றேன் மாப்பி, பழைய ஃபார்முக்கு வந்துட்டே.

ஒட்டுமொத்த கதையையும் ஒன்னா படிக்கனுமின்னுதான் இவ்ளோ நாள் காத்துட்டு இருந்தேன். அதுக்கு பலன் நல்லாவே இருக்கு.//


மிக்க நன்றி இளா

Unknown said...

//சூப்பர் கதை மாப்பி.. நமக்கு தொடர்கதை டென்ஷன் ஒத்துக்காது அதனால் தான் இன்னிக்கு உக்காந்து மொத்த கதையையும் முழுசா படிச்சேன்.. கலக்கல் தேவு...//

நன்றி சந்தோஷ்

Unknown said...

//வரிசையா ஒவ்வொரு பதிவாப் படிச்சிக்கிட்டு பின்னூட்டம் போட்டுக்கிட்டு வந்தேன். ஒரு கட்டத்துல முடியாம..கடகடன்னு பதிவுகளைப் படிச்சிட்டு முடிவுக்கு வந்துட்டேன். :) நல்ல கதை. நல்லாயிருந்தது. மிகவும் ரசித்தேன். சூப்பர். நம்மூருக்குப் போயிட்டு வந்த உணர்வு. நல்ல கதை. //

நன்றி ஜி.ரா.

அப்புறம் அந்த பனை வெல்லம் கருப்பட்டி மேட்டர் பத்திச் சொல்லணும்ன்னு எங்க வீட்டுல்ல மக்கள் ரெண்டு பதத்தையுமே பயன்படுத்துவாங்க..அதனாலத் தான் அதையே நானும் கதையிலே பயன்படுத்திட்டேன்.

Unknown said...

//குருவே....அட்டகாசமாக இருந்திச்சி ;)))

என்ன சொல்லறது...பின்னிட்டிங்க ;)) //

தேங்க்ஸ்மா கோபி

Unknown said...

//நன்றாக இருந்தது. அந்த மண் சார்ந்த நடைக்காவே தொடர்ந்து படித்து வந்தேன்.

7-வது பகுதி எதிர்பார்த்தார்ப் போல் பல இடைவெளிகளை இட்டு நிரப்புவது போல் இருந்தது.

நிறைவாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். //

நன்றி வெங்கட்

Unknown said...

//கொஞ்சம் 7G ரெயின்போ காலனி, கொஞ்சம் அழகி, கொஞ்சம் சென்னை 600028 என்ற வெற்றிப்படங்களின் சாயல் தெரிகிறது என்று அறிவுஜீவித்தனமாக ஒரு பின்னூட்டம் விட்டுவிடலாம்.

ஆனால், அந்த வெற்றிப்படங்களின் வெற்றிக்குக் காரணம் என்ன? பார்ப்பவர்களுக்கும் அதே போன்ற அனுபவங்கள் இருந்தமையும், அந்த அனுபவங்களை சிதைக்காமல், போலித்தனமின்றி, நேர்மையாக பதிவு செய்தமையும், பார்ப்பவன் தன்னை உணரும்படியாக செய்ததும்தான்.

அந்த அனைத்து அம்சங்களும் இந்தத் தொடரிலும் இருந்தது. எளிமையான, புரிதல் கஷ்டமற்ற வட்டார பாஷை, விடலைக்காதல் நடுவே விளையாட்டு தரும் திரைக்கதை வேகம், அதிகம் வளர்த்தாத நடை, உண்மையான பாத்திரங்கள்.. தேவ், ரொம்ப அருமை. இப்படிப்பட்ட பொய் கலக்காத கதைகளைத் தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி - இப்படைப்புக்கு. //

பினாத்தலாரே.. என்ன்ச் சொல்லுறது.. உங்க விம்ர்சனம் நிச்சயமா எனக்கு ஊக்கமா இருக்கு... இன்னும் நல்லா எழுதணும்ன்னு தோணுது.. மிக்க நன்றி தலைவரே..

Anonymous said...

தல, கலக்கீட்டீங்க தல, முடிவ கொண்டு வந்த விதம் அருமை, நடு நடுவுல சொன்ன உவமைங்க அத விட அருமை.

5வது பகுதி வரைக்கும் ஒரே காமெடி தான், சிரிச்சு சிரிச்சு விழுந்தோம். 6 நடுத்தரம், 7 பினிசிங்.

மொத்தத்துல கலக்கீட்டீங்க, கலக்கீட்டீங்க.

Unknown said...

//தல, கலக்கீட்டீங்க தல, முடிவ கொண்டு வந்த விதம் அருமை, நடு நடுவுல சொன்ன உவமைங்க அத விட அருமை.

5வது பகுதி வரைக்கும் ஒரே காமெடி தான், சிரிச்சு சிரிச்சு விழுந்தோம். 6 நடுத்தரம், 7 பினிசிங்.

மொத்தத்துல கலக்கீட்டீங்க, கலக்கீட்டீங்க.

//


வாங்க இனியவன்.. ஒவ்வொரு பகுதிக்கும் நீங்க வந்து கொடுத்த ஆதரவுக்கும் பாராட்டும் ரொம்ப நல்லா இருந்துச்சுங்க... கதையின் முடிவு உங்களுக்குப் பிடிச்சிருக்குங்கறது தெரியும் போது இன்னும் சந்தோசமா இருக்குங்க.. சமயம் கிடைச்சா பக்கம் 78ல்ல மத்தக் கதைகளையும் கொஞ்சம் புரட்டுங்க.. நன்றி இனியவன்.

மனதின் ஓசை said...

மச்சி.. மேற்கொண்டு ஒன்னும் சொல்றதுக்கில்ல.. அருமை....

Unknown said...

மனதின் ஓசை ஒரு தடவையாவது நான் எழுதுன கதையைக் குறை சொல்லாம விட்டியே.. ரொம்ப நன்றி நண்பா :)

நவீன் ப்ரகாஷ் said...

தேவ் எல்லா பகுதியையும் ஒரே மூச்சிலே இப்பொதான் படிச்சேன்.காதல் , வீரம் , ஊடல், மோதல்ன்னு எல்லாமே சரி விகிதத்திலேஅழகா பின்னி மிக அழகான ஒரு அனுபவத்தை கொடுத்து இருக்கீங்க !! மிகவும் அருமை தேவ்.மிகவும் ரசித்த படைப்பு இது ! வாழ்த்துக்கள் தேவ் ! :))

கப்பி | Kappi said...

கொஞ்சம் கூட தொய்வே இல்லாம அட்டகாசமா கதையை நகர்த்தியிருக்கீங்க!! கலக்கல்ண்ணா!!

தம்பி கடுதாசிக்கு ஒரு ரிப்பீட்டு :))