Saturday, February 17, 2007

கவி 29:ரசிகன்டா



இவனுக்கு அறிமுகம்
தேவை இல்லை...

இவன் இன்னொரு
முகத்திற்காக
தன் சொந்த முகம்
தொலைத்தவன்

கரவொலிகளும்
விசில் வேட்டுகளும்
இவன் அடையாளங்கள்

நடித்தவன்
நிமிர்ந்து எழும்ப
இவன் வீழ்ந்துக் கிடப்பான்

அவன் புகழ்
வெளிச்சத்தில் திளைக்க
இவன் விழிகளை
விற்று இருளை
உடுத்திக் கொள்வான்

தலைவனுக்குக்
கொடிக் கட்ட
இவன் தன்
கோவணத்தையும் துறப்பான்

பிள்ளைப் பால்
கேட்டுக் கதறும்
செவிடனாய் இவன்
கட் அவுட்டிற்கு
பாலாபிஷேகம் செய்வான்

கட்டி வந்தவள் கூந்தலில்
கால் முழப் பூ சூட்டாத இவன்
போஸ்டர்க்கு மலர் மாலை
மாட்டி மகிழ்வான்

அவன் அப்படித் தான்
அவன் ரசிகன்டா..
நாளைய முதல்வர்களின்
இன்றைய தொண்டன்டா..

Friday, February 16, 2007

கவி 28:இன்னொரு காதலர் தினத்தில்



நீ தினம் எனக்குக்
காதலைச் சொன்னப்
பொழுதுகளில் புரியாமல்
போன செய்தி...

பின்னொரு காதலர் தினத்தில்
தொண்டைக்குழிக்குள்
பந்தாய் எழும்பிக்
கண்ணிடுக்கில் கண்ணீர் துளியாய்
கலவரப் படுத்தியது என்னை..

கனவுகளின் பின்னே
கால் வலிக்க ஓடியதில்
காணாமல் போனவைகள்
பட்டியலில்
முதலிடம் எனக்கும்
அடுத்த இடம்
நம் காதலுக்கும்..

பந்தயங்களில்
பரிசுப் பணம்
பாதைகளில்
புகழாரம்..
சேர்த்து சேர்த்து
சோர்ந்தக் கதையின்
சிக்கலானப் பக்கங்களாய்
வாழ்க்கை..

சோர்வையும் சோர்வடிக்க
வித்தைகள் பழகி
விண்ணைத் தொட்டு
விடுவேன் மூச்சை
என்ற படி ஓடியவன்
சிகரங்களின் சிங்காரத்தில்
சில்லிட்டு நிற்கும் போது..

என்னைச் சுற்றிலும்
பேரிரிச்சலாய்
ஆரவார அலைகள்
எனக்குள்ளே
மயான அமைதி...

நிழல்களில் பதுங்கியதில்
நிஜங்களைத் தொலைத்தாயிற்று..
நினைவுகளில் நனைந்தப் படி
ஞாபகங்களில் வெந்துப் போகிறேன்

மொத்தமாய் முடிவதற்குள்
ஒரு முறை
வந்துப் போ

உன் புன்னகையால்
என்னை பெற்று எடு..
இல்லையேல்
உன் நெருப்புப் பார்வையால்
எனக்குக் கொள்ளியிடு..

Saturday, February 10, 2007

கதை 12:அவன்...இவன்.... அவள்

வானத்தில் இருக்க நட்சத்திரங்களை ஒண்ணு ஒண்ணா எண்ண முயற்சிப் பண்ணிகிட்டு இருந்தான் அவன். வானம் மனுசனோட மனசு மாதிரி.. கிட்டத் தட்ட அந்த மனசோடப் பிரதிபலிப்புங்கறது அவன் எண்ணம். மனசு மாதிரித் தான் வானமும் தனக்குள்ளே எத்தனை எத்தனைப் புதிர்களை ஒளிச்சு வச்சிருக்கு அப்படின்னு அவன் எதோ யோசனையிலே வானம் பார்த்துக்கிட்டே நின்றான்.

"வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கு அது சேதித் தரும்..." ரேடியோப் பொட்டியிலே அந்நேரத்துக்கு ஏத்தாப்புல்லத் தான் பாட்டும் ஓடிச்சு.. கையிலிருந்த கிளாஸ்ல்லருந்து கடைசிச் சொட்டு வோட்காவை வாயில் கவிழ்த்தான். தொண்டைக்குழிக்குள் அந்த ஒரு துளி உருண்டோடியது. அந்த கிறக்கத்தில் இன்னும் அண்ணாந்து வானம் பார்த்தான். நிலா அவனுக்குன்னு பொழிஞ்ச மாதிரி இருந்தது. நிலா மழையில் மொத்தமாய் நனைந்தப் படி எதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவன் பக்கத்துல்ல இவன் வந்து உட்கார்ந்தான்.. ரயில் பயணமாகும் தண்டவாளம் மாதிரி அவனுக்கும் இவனுக்கும் சினேகிதம்.. எண்ணங்களாலும் விலகிச் சென்றாலும் அவர்களின் பயணமும் பாதையும் ஒன்றிப் போயிருந்தது. இவன் பார்வையை மரத்திலிருந்து அசையும் இலைகள் மீது பதித்தான். இலைகளின் நடனத்தைத் தாளம் போட்டு ரசித்தான். அப்ப்டியே சவ்ரம் செய்யாத தன் மோவாக் கட்டையை இவன் விரல்களால் பதமா இதமா வருடி விட்டுக் கொண்டே இருந்தான்.

அப்படியே மணித்துளிகள் இரவின் பிடியில் கரைய.. மௌனம் அவனுக்கும் இவனுக்கும் இடையே அமர்ந்து வேடிக்கைப் பார்த்தப் படி இருந்தது.

ஒரு கட்டத்தில் மௌனத்திற்கு விடைக் கொடுத்து வார்த்தைகளுக்கு வரவேற்புரை எழுதினான் இவன்.. அவனும் தன் பங்குக்கு வார்த்தைகளுக்கு உபசாரம் செய்தான். மிதமானப் போக்கினில் பேச்சுப் பரிமாற்றம் நடக்க ஆரம்பித்தது. இவன் அதிகமாய் பேசினான். சிக்கீரம் களைத்துப் போனான். அவன் அதிகம் பேசவில்லை. பேசுவதற்கு அவனிடம் ஒன்றுமில்லை.. எதோ யோசனையில் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவன் பேச ஆரம்பித்தான்.. வார்த்தைகளை வரிக்கு ஒன்றாய் பொறுக்கி எடுத்துப் பேசுவது போல் பேசினான். பேசலாமா என ஒரு ஆயிரம் முறை அவன் மனம் சிந்தனைப் பாறைகளில் மோதி உடைந்த வலியினை அவன் குரல் உணர்த்தியது.. இவனுக்கு அது புரிந்தது.

"இன்னிக்கு நான் அவளைப் பாத்தேன்..கிட்டத்தட்ட ஆறு வருஷத்துக்கு அப்புறம் அவளைப் பார்த்தேன்"

அவள் ..என்ற சொல் கேட்டதும் இவன் கண்களில் ஆச்சர்ய் மின்னல்கள் அவசரப் பிறப்பெடுத்து அதை விட அவசரமாய் செத்துப் போயின்....

"அவ..இன்னும் மாறல்ல.. அப்படியேத் தான் இருக்கா.. அதே வேகம்...அதே குறுகுறுப்பு.. சிரிப்பு.. அதே.. " எதையோச் சொல்ல வந்து நாக்கை மடக்கிக் கொண்டான். அது என்னவென்று புரிந்துப் போனதில் இவன் கன்னம் சிவக்க சிரித்தான்.

"அந்தச் சந்தோசம் தான் இன்னிக்குக் கொண்டாட்டத்துக்குக் காரணாமா?" காலியான சாராயப் பாட்டில்களைச் சுட்டிக்காட்டி மறுபடியும் சிரித்தான்.

"பழசு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா..அதிகமாப் பேச முடியல்ல... அவ அவசரமாக் கிளம்பிட்டா..எதோ ஒரு அட் ஏஜென்சியில்ல காபி ரைட்டரா இருக்காளாம்.. விசிட்டிங் கார்ட் கொடுத்தா.."

கார்ட் வாங்கி அவள் பெயர் பார்த்தான் இவன்.. அதில் அவள் பெயர் மட்டுமே இருந்தது.. இவனிடம் இருக்கும் கேள்விக்கான விடை இல்லை.

"இன்னும் அதே... தளுக்காத் தானே இருக்கா" வார்த்தையில் நாகரீகம் தவறாமல் இருக்க மெனக்கெட்டான் இவன். ஆனாலும் தோற்றான்.. "உன்னைக் கூப்பிட்டாளா.. போடா போய் ஜமாய்.." சொல்லும் போதே இவன் முகத்தில் ஒரு கேலிப் புன்னகை..

அவளைப் பத்தி என்ன ஆனாலும் சரி.. ஓங் கிட்டச் சொல்லக் கூடாது.. பேசக் கூடாதுன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தேன்.. என்னப் பண்ணித் தொலைக்கிறது. இந்த நாலு சுவத்தையும் உன்னையும் விட்டா நான் வாய் விட்டு பேசறதுக்கு வேற நாதி இல்லாமப் போயிடுச்சே.." காலியான மதுப் பாட்டில்களை காலால் உருட்டினான் அவன்.

இவன் அவன் கரம் பிடித்து அழுத்தினான்..

"பேச ஆரம்பிச்சாச்சு ..முடிச்சுட்டுப் போ" என்றான் இவன்.. வானம் நெட்டி முறித்தது. காற்று கொஞ்சம் வேகம் எடுத்து இவன் முகத்திலும் அவன் முகத்திலும் மாறி மாறி அறைந்தது.

"உனக்கு என்னிக்குமே அவளைப் பிடிக்காது.. இது தான் பிரச்சனை.. இது பல வருசமா நமக்குள்ளே நடக்குற சங்கதி தானே" அவன் இவன் முகம் பார்த்துச் சொன்னான். இவன் பதில் சொல்லாமல் நக்கலாய் சிரித்தான்.

"சரி.. அவளுக்கு எந்த இளிச்சவாயனாவது மாட்டியிருக்கானா.. இல்லையா.. அந்த விவரத்தைச் சொல்லு"

"அவ நம்மக் கூடப் படிச்சப் பொண்ணு.. கொஞ்சம் நாகரீகமாப் பேச முடியாதா உன்னாலே.." அவன் குரலில் வெப்பம் வெளிவந்தது.

"சரிப்பா.. அவளுக்கு எந்த ஆம்பளையாவது தாலின்னு ஒண்ணைக் கட்டிட்டு தொட்டானா.. இல்ல இன்னும் .ம்ம்ம் புரியல்லயா.. உன் நாகரீகப் பாஷையிலே அவளுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னுக் கேட்டேன்"

இவன் எகத்தாளம் ஏணி போட்டு ஏறியது.. அவன் இவனைப் புழுவைப் பார்ப்பதுப் போல் பரிதாபப் பார்வைப் பார்த்தான். இவன் அந்தப் பார்வையை அசட்டைப் பண்ணி விட்டு ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்து நிலாவைப் பார்த்து வளையம் வளையமாப் புகையை ஊதினான். புகையின் ஊடே மீண்டும் இவனைப் பார்த்தான்.

"நீ கேட்டிருந்தா.. உனக்கும் கூடத் தான் ஒரு வாய்ப்புக் கொடுத்திருப்பா.. நீ தான் நட்பு நாயகம் நாட்டாமைன்னு விட்டுட்ட... மாப்ளே அவ அப்படி தானேடா" இவன் அவனை மீண்டும் வம்பிழுத்தான்.

இவன் பேச்சுக்கு அவன் எதிர்ப் பேச்சு பேசுவதையே பாவம் என்று எண்ணியவன் போல அவன் வேறு பக்கம் திரும்பி நின்றான்..

"என்ன கஷ்ட்டாமாயிருக்கா.. உண்மை கசப்புத் தான் அப்பு.. சிக்சர் அடிச்சுட்டு அந்தச் சந்தோசத்தை சரக்குப் போட்டு கொண்டாட வேண்டிய நேரத்துல்ல நீ சிந்தாந்தம் இல்ல பேசிகிட்டு இருந்த சிட்டு சில்லுன்னு சிலிப்பிகிட்டுப் போயிருச்சு.. ஆனாலும் சிட்டு செமச் சிட்டுப்பா" இவன் ஓய்வதாய் இல்லை.

"அவளுக்கு ஆம்பளைத் தேவைடா.. அவப் பார்த்த பயல்வ லிஸ்ட் போட்டா கிட்டத் தட்ட மைலாப்பூர் தொகுதி வாக்காளர் பட்டியல் அளவுக்கு நீளும்... அவ ஒரு பக்காத் தே......சரி உனக்காக நாகரீகம் பார்த்து அந்த வார்த்தையை வாயோட வச்சிக்குறேன்.." என்று வாய்க்குள் அந்த வார்த்தையைச் சொல்லி முடித்தான் இவன்.

அவனுக்கு எதோ ஒரு கட்டத்தில் பொறுமை போயிருக்க வேண்டும்.. வேகமாய் இவன் பக்கம் திரும்பி இவன் வாயிலிருந்தப் பாதி புகைந்தச் சிகரெட்டைப் பிடுங்கி தூர எறிந்தான். இவன் சிகரெட் விழுந்தத் திசையை ஏக்க்மாய் பார்த்தான். அவன் கண்கள் கலங்கி துடித்தன..

"நிறுத்து.. யார் மேல உனக்குக் கோவம்.. வருசக்கணக்கா ஏன் இந்த் கோவம்.. உன் கோவம் உனக்குள்ளே உக்காந்து உன் புத்தியைத் திங்குது.. இப்போ வெறும் வக்கிரம் மட்டும் தான் உனக்குள்ளே வாழ்து.. அவ அப்படித் தான்னு சொல்லுறீயே நீ யார் அவளுக்கு சர்டிபிக்கேட் கொடுக்க? என்னத் தெரியும் உனக்கு?"

இவனுக்கு அவன் கோபம் பரிச்சயம் தான்.. ஆனால் இன்று அவன் கோப வெப்பத்தின் முன்னால் இவன் மனம் மூச்சுத் திணறி தடுமாறியது.

"அவ என்னிக்காவது உன்னை வான்னு கூப்பிட்டாளா.. இல்ல நீ அவளை எவனுக்காவ்து ரேட் பேசி கூட்டிக் கொடுத்துப் பொழச்சியா...போடாங்க... சொல்ல வந்துட்டான் "

அவன் கோபம் அவன் நெற்றியில் வேர்வைத் துளிகளாவும் பொங்கி வழிந்தது. இவன் மனம் மூச்சுக் காற்றுக்காக ஏங்கியது. மீண்டும் மௌனம் அழையாத நண்பனாய் அங்கு வந்து இவனுக்கும் அவனுக்கும் நடுவே அமர்ந்துக் கொண்டது. மௌனம் நல்ல நண்பனைப் போல் அவனையும் இவனையும் ஆற்றியது. மெல்ல தேற்றியது. மீண்டுமாய் விடைப் பெற்று வில்லெனக் கிளம்பியது.

"இதுக்கு முன்னால் நான்.. நீ.. அவளைப் பத்திப் பேசியிருக்கோம்...ஆனா உன் கிட்ட இவ்வளவுக் கோபம் நான் பார்த்தது கிடையாது.. வேணாம்டா அவளுக்காக உனக்கும் எனக்கும் சண்டை வேணாம்.. மன்னிச்சுருடா" இவன் மருகினான்.

"எதுக்கும் ஒரு எல்லை இருக்கு நண்பா.. எனக்கும் இருக்கு.. நான் கோபப்ப்டல்ல நண்பா.. உன்னைப் பார்த்துப் பரிதாபப்படுறேன்.. வருத்தப்படுறேன்...திசைகள் நாலு.. ஒவ்வொரு திசையில்ல இருந்துப் பாக்கரவ்னுக்கும் ஒவ்வொரு மாதிரி வாழ்க்கைத் தெரியும்...ஆனையை தடவுன பார்வை இல்லாதவங்க மாதிரி.. யானை இப்படித் தான் இருக்கும்ன்னு சொல்லுறவன் நீ.. நீ பிடிச்ச முயலுக்கு மூணு கால்ங்கறது உன் கருத்து.."

"ஏன் நான் பிடிச்சது நொண்டி முயலா இருக்கக் கூடாதா?" இவன் இடைச் செருகினான்.

"ஒத்துக்கிறேன் உன் பதில்ல புத்திச்சாலித் தனம் இருக்கு.. அந்தப் புத்திச்சாலித் தனம் மட்டும் உன்னை விளங்க வச்சுராது.. நேராவேச் சொல்லுறேன்.. உனக்கு அவ்ளைப் பிடிக்கல்ல.. அப்புறம் எதுக்காக அவ்ளைப் பத்திப் பேசணும்.. அசிங்கப்படுத்தணும்.. ஏன்.. ?"

"அவ நாலுப் பசங்களோட நெருக்கமா நின்னுச் பேசுறது.. தோள்ல்ல கைப் போடுறது.. பைக்ல்ல டக்குன்னு ஏறுறது.. கொஞ்சம் மாடர்ன்னா ட்ரெஸ் பண்றது.. இது தான் அவளை தே... சரி நீயே சொல்லாத வார்த்தை நான் ஏன் சொல்லணும்... அப்படின்னு முடிவு பண்ணக் காரணம்...நம்ம ஊர்ல்ல தாண்டா ஒரு பொண்ணோட கற்பை அளக்க இப்படி எல்லாம் அளவு கோல் கண்டுப் பிடிச்சிருக்கீங்க... சூப்பர்டா என்னப் பண்றது? அவ மார்பைப் பார்த்த அளவுக்கு அதுக்குப் பின்னாடி இருக்க அவ மன்சைப் பாக்கற பாக்கியம் உனக்குக் கிடைக்கல்லயே"

அவன் முகத்தில் இவனைப் பார்த்து ஏளனப் புன்னகை ஒன்று பூத்தது.

"அவளை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு பார்த்து இருக்க.. கதைக் கட்டி விட்டவன் கிட்டக் கதைக் கேட்டிருப்ப...எனக்கு அவளை நல்லாத் தெரியும்டா.. அவ அழுகைய நான் பார்த்து இருக்கேன்டா.. அவ வெக்கத்தைப் பார்த்து இருக்கேன்டா...இந்தா இதே கையிலே அவ அழுதக் கண்ணீரைத் தாங்கி இருக்கேன்டா...அவ எல்லாம் தேவதைடா அவக் கூட வாழக் கொடுத்து வச்சுருக்கணும்டா" ப்ச் என்று உதட்டைப் பிதுக்கினான் அவன்.
அவன் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்பட்டான்...

"காதலா? உனக்கும் அவளுக்கும் காதலா?" இவன் மெதுவாகக் கேட்டான்..அவன் இவனைப் பார்த்து சத்தமாய் சிரித்தான்...

"உனக்கு ஒண்ணுமே புரியாதா.. இல்ல புரியாத மாதிரியே வாழ்ந்து முடிச்சுருவியாடா?"

அவன் கேட்டக் கேள்வி இவனை உறுத்தியது...

இரவு இன்னொரு விடியலுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டிருந்தது.

அவன் தூங்கிப் போனான்.. இவன் தூக்கம் தொலைத்திருந்தான்.. அவள்.. புரிந்தவர்கள் புரிந்துக் கொள்ளுங்கள்

Wednesday, January 31, 2007

கதை 11: இது விச்சுவின் கதை - பகுதி 2

இது விச்சுவின் கதை - பகுதி 1

விச்சுவின் கதை இந்தப் பகுதியிலிருந்து நந்தினியின் கதையா மாறிடுச்சு... ஆனாலும் இதை நாம விச்சுவின் கதையாவேப் பார்ப்போம் என்ன ரைட்டா? இனி நந்தினியின் கதை உங்கள் பார்வைக்கு...

போட்டோவில் வலது ஓரம் இருப்பவனைப் பார்த்தவுடன் எனக்குச் சிரிப்பு வந்தது.

"விச்சு இவன் தான் செல்லப்பனா?"

"ஆமா இவனே தான்... எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

"எல்லாம் ஒரு யூகம் தான்..அந்தப் புட்பால் மேட்ச்ல்ல சேம் சைட் கோல் போட்டு உங்க கிட்ட அடி வாங்குன பையன் தானே ஒரு அப்பாவி முழி அப்படியே இருக்கே "

"அவனா அப்பாவி.. அடப் பாவின்னு சொன்னா அவனுக்கு கரெக்ட்டாப் பொருந்தும்.
புட் பால் மேட்ச்க்கு வந்துப் பொண்ணுங்கப் பாக்குறாங்கன்ன ஓடனே பையனுக்கு அடுத்தவன் கோலுக்கும் எங்க கோலுக்கும் வித்தியாசம் தெரியாமப் போச்சு.. ஆர்வத்துல்ல எங்க கோலுக்கே பாலை அடிச்சி.. ஸ்கூலைத் தோக்க வைச்சுட்டான்..."

"ம்ம்ம் அது சரி... விளையாடத் தெரியாதப் பையனை நீங்கத் தானேடா டீம்ல்ல சேர்த்தீங்க..."

"ஆள் கம்மின்னு சேர்த்தோம்...அதுக்குன்னு..." விச்சுவின் மொபைல் சிணுங்கியது. அவன் எழுந்துச் சென்றான்.

செல்லப்பனை எனக்குத் தெரியும். நேரடி அறிமுகம் இல்லையேத் தவிர செல்லப்பனின் கதைகள் அனைத்தும் எனக்கு அத்துப் படி. செல்லப்பன் கிட்டத்தட்ட விச்சுவின் பள்ளிக்கால கைப்புள்ளன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு அப்புராணி. அவனை உசுப்பேத்தி அவன் உடம்பை ரணகளமாக்கிப் பார்ப்பதில் விச்சுவுக்கும் அவன் கடைசி பெஞ்ச் நண்பர்களுக்கும் அலாதி பிரியம்.அந்தக் கதைகளைத் தனியா தொடராவேப் போடலாம். மீண்டும் நந்தினிக்கு வருவோம். விச்சு போன் பேசி முடித்து விட்டு கையில் முறுக்குகள் நிறைந்த தட்டோடு வந்தான்.

"நந்தினி யார்ன்னு சொல்லலியே...கூட வேற நிக்குற..."

"தேவ்.. நம்ம செல்லப்பன் ஒரு பொண்ணைத் தீவிரமாக் காதலிச்சான்னு சொல்லுவேனே அந்தப் பொண்ணு தான் இந்த நந்தினி..."

நான் மறுபடியும் நந்தினியைப் பார்த்தேன்... நம்ம வெயில் படத்துல்ல வர்ற பாவனா மாதிரி பளிச்சுன்னு இருந்தாப் பொண்ணு.. கண்ணுல்ல ஒரு ஈர்ப்பு சக்தி.. உதட்டுல்ல புன்னகைத் தொழிற்சாலைன்னு அழகாப் பாந்தமா இருந்தா.

"செல்லப்பன் எங்க கூட இருந்தாலும் நல்லாப் படிப்பான்.. கிளாஸ் பர்ஸ்ட்.. அந்த நந்தினி கிளாஸ் செகண்ட்.. நான் எல்லாம் எதோ பாஸ் ஆவேன்.. என் கூட இருந்த காசி என்னை விட மோசம்.. இந்த செல்லப்பனாலே எனக்கும் காசிக்கும் எப்பவுமே கெட்டப் பெயர் தான்.. எல்லா வாத்தியார் கிட்டயும் பின்னாலே அடி வாங்கியே காசிக்குப் பழுத்துப் போச்சு.. நான் கொஞ்சம் பட்ட.. கழுத்துல்ல கொட்டைன்னு மெயின்டெயின் பண்ணி பிரம்புக்கு தப்பிச்சுக்குவேன்..."

லாரா இன்னொரு சிக்ஸ் அடிக்க அதில் லயித்த விச்சு கதையைச் நிறுத்திட்டு கைத் தட்ட ஆரம்பிச்சான். அவன் மறுபடியும் கதைச் சொல்ல ஆரம்பிக்கும் வரை நான் இரண்டு நெய் முறுக்கினை எடுத்து வாயில் போட்டேன்.. என்ன ருசிடா சாமி.

"அப்புறம் என்ன நான் ஒரு மாஸ்ட்டர் பிளான் போட்டேன். காசி எனக்கு அதுல்ல கூட்டு.. எங்க கிளாஸேப் பார்த்து மயங்கி நிற்கிற நந்தினி செல்லப்பனை விரும்புறதா அவனை உசுப்பேத்த ஆரம்பிச்சோம்.. காசியும் அதுக்கு ஒத்து ஊதுனேன்..பையன் ஆரம்பத்துல்ல மசியல்ல.. நாங்க மெதுவாப் பல செட் அப் வேலை எல்லாம் செய்து அவன் மனசைக் கெடுத்தோம்.. அப்புறம் என்ன .. ஒழுங்காத் தலைவாரிகிட்டு இருந்தவன் தலையைக் கலைச்சுக் கோதிகிட்டான்... பள்ளிக்கொடம் முடிஞ்சதும் ஜிம்க்கு போக ஆரம்பிச்சான்.. ட்யூஷனுக்கு டைட் ஷ்ர்ட்.. டைட் பேண்ட்.. சைக்கிள்ல்ல எஸ் என் அப்படின்னு ஸ்டிக்கர்ன்னு பயலைக் கிறுக்கு புடிச்சு அலையவிட்டோம்."

"அட பாவிகளா அடுக்குமாடா... ??"முறுக்கைக் கடித்தப் படி நான் கேட்டேன்.

"மச்சி அவ உன்னியத் தான் பாக்குறா.. நீ கிரவுண்ட்ல்ல எக்ஸ்ர்சைஸ் பண்றத அவ நேத்துக் கூடப் பார்த்தாடா..அப்படின்னு நான் சொல்ல..காசி அதுக்கு பயங்கரமா ஆமாப் போடுவான்.. பைய இப்படியே படிப்புல்ல கோல் போட்டுட்டு சதா சர்வ காலமும் நந்தினி நந்தினின்னு திரிய ஆரம்பிச்சான்"

" ம்ம்ம் யப்பா எம்புட்டு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்கடா " தண்ணி சொம்பை வாயில் கவிழ்த்தேன்.

"எங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்.. அப்புறம் எங்கக் கூட சேர்ந்து செல்லப்பனும் அடி வாங்க ஆரம்பிச்சான்.. அரையாண்டுல்ல ஒரு பாடத்துல்ல பெயில் வேற ஆயிட்டான்..."

"சந்தோசமா.. அது வேறயா" வாய் விட்டுச் சொன்னேன்

"காசியும் நானும் மரத்தடியிலே உக்காந்து திருட்டு தம் போட்டுகிட்டு இருந்தோம்.. செல்லப்பன் வந்தான்... எனக்கு ஒரு உடனே இப்போ நந்தினி என்னை லவ் பண்றாளா இல்லையான்னு உண்மைத் தெரியணும்ன்னு கோவமாப் பேசிட்டான்."

"பரவாயில்ல பய உஷாரா ஆயிட்டானா? "

"காசியும் நானும் எவ்வளவோ அவனைச் சமாதானப்படுத்திப் பார்த்தும் முடியல்ல.. அவன் நேரா நந்தினியைப் பாக்கப் போயிட்டான்... நானும் காசியும் அவன் பின்னாடி போறதா வேண்டாமான்னு முடிவு எடுக்க முடியாம அங்கேயே நின்னுட்டோம்.."

தட்டில் முறுக்கு தீர்ந்துப் போய் விட்டதால் விச்சு கீழேப் போய் திரும்பி வரும் போது தட்டில் முந்திரி பக்கோடா எடுது வந்தான்.

"அது நடந்து மூணு நாளா செல்லப்பன் ஸ்கூல் பக்கம் வரவே இல்ல... எனக்கும் காசிக்கும் கொஞ்சம் வருத்தமாப் போச்சு.. செல்லப்பன் வீட்டுக்குப் போனா அங்கே செல்லப்பன் படுக்கையிலே கால் ஓடிஞ்சுப் படுத்து கிடந்தான்.. அவ்ங்க அம்மா செல்லப்பன் சிமேண்ட் ரோட்ல்ல வரும் போது தடுக்கி விழுந்துட்டான் அதுன்னால கால் ஒடைஞ்சுப் போச்சுன்னு சொன்னாங்க. நாங்க அதை நம்பல்ல"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"செல்லப்பன் எங்களை முகத்துக்கு முகம் பார்க்காமலே பேசினான்.. ஏன்டா பொய் சொன்னீங்க.. நந்தினி என்னைக் காதலிக்கல்லடா.. அவ்வ்ளவு ஏன் என்னிய சுத்தமாப் பிடிக்காதுன்னு சொல்லிட்டா.. தீயிலே விழுந்த தேவாங்கு மாதிரி இருந்துகிட்டு ஒனக்கு எல்லாம் லவ் கேக்குதான்னு அவன் அண்ணன் வந்து கேட்டுட்டுன்னு மென்னு முழுங்குனான்..."

"ம்ம்ம்"

"எனக்கும் காசிக்கும் செல்லப்பனின் கால் எப்படி உடைஞ்சிருக்கும்ன்னு இப்போப் புரிஞ்சுப் போச்சு... எனக்கு கோவம் தலைக்கேறிப் போச்சு.. காசியும் கொந்தளிச்சுப் போயிட்டான்...செல்லப்பன் பயந்துப் போயிட்டான்.. டேய் எங்க வீட்டுல்ல தெரிஞ்சா எங்கப்பா எனக்கு இருக்க இன்னொரு காலையும் ஓடைச்சு விட்டுருவார்டா இத்தோட இதை மறந்துரலாம்டான்னு சொன்னான். அப்போதைக்குத் தலை ஆட்டிட்டு..செல்லப்பன் கால் குணமடையும் வரை காத்திகிட்டு இருந்தோம். நந்தின் எதுவுமே நடக்காதது மாதிரி ஸ்கூலுக்கு வந்துப் போயிட்டு இருந்தது எங்களுக்கும் இன்னும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது."

"என்னடா செஞ்சீங்க?"

"செல்லப்பன் வீட்டுல்ல ஓய்வா இருந்தது நல்லதாப் போச்சு.. விட்டப் பாடத்தை எல்லாம் படிச்சு பழைய அளவுக்குத் தேறிட்டான். அவன் கால் சரியானதும்.. மூணு பேரும் நந்தினி அண்ணன் வழக்கமா காலேஜ் விட்டு வீடு திரும்பும் வழியில் ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து நின்று கொண்டோம்.. எங்களோடு துணைக்கு காசியின் சித்தி பையனும் வந்திருந்தான். செல்லப்பனுக்கு வெலவெலத்துப் போனது.. நான் போறேன்டா.. என்னை விட்டுருங்க.. இதெல்லாம் வேணாம்..பயம் போகணும்ன்னா இதைக் குடிங்கடா.. காசியின் சித்தி பையன் ஊத்தி கொடுத்த என்ன எழவையோ ( பிற்காலத்துல்லா நான் கொஞ்சி குலாவும் பீர் தான் அந்த எழுவுன்னு எனக்கு அப்போத் தெரியாது). குடிச்சதுல்ல மூணு பேருக்கும் யானை பலம் வந்துருச்சு...அப்புறம் என்ன... நந்தினி அண்ணன் தனியாத் தான் அந்தப் பக்கம் ... நாலு எருமை அவன் மேல ஏறி ஓடுனா என்ன ஆகியிருக்குமோ அந்த அளவுக்கு அவனைச் சேதப் படுத்தி அனுப்புனோம்"

"நந்தினி உங்க மொகத்தைப் பாக்கமலாப் போனான்.?"

"அவன் முகத்தைத் தான் துண்டால்ல நல்லா மூடி கட்டி வச்சு இல்ல உதைச்சோம்... செல்லப்பனுக்கு எங்கிருந்து தான் வீரம் வந்துச்சோ.. ஏறி ஏறி மிதிச்சான்..."

"ம்ம் பழி தீர்த்துட்டீங்க இல்ல?"

"இத்தோடு எங்க ஆத்திரம் அடங்கவில்லை.. நந்தினி ட்யூஷன் முடிந்து தனியா வரும் வீதியில் அவளுக்காகக் காத்திருந்தோம்.. முக்குல்ல அவளை மடக்கி மிரட்டி எச்சரித்து அனுப்புவ்து தான் எங்கள் திட்டம்... ஆனா காசியின் சித்தி பையன் நந்தினி வந்ததும் திட்டத்தை மாத்திட்டான்.. மாப்பூ உன்னிய பார்த்து கருப்புத் தேவாங்குன்னு சொல்லிட்டான் இல்ல இவ அண்ணன்.. கருப்பு தேவாங்கு எப்படி முத்தம் கொடுக்குமோ அப்படி இவளுக்கு இப்போ முத்தம் கொடுடான்னு உசுப்பேத்த நம்ம செல்லப்பனும் போதையின் தயவில் பொங்கி எழுந்து விட்டான்.."

"அட பாவிகளா விவரம் வில்லங்கமா இலல் போயிருக்கு.."

"எனக்குப் பயங்கரமா ஏறிப் போச்சு.. நான் தட்டு தடுமாறி பாக்குறேன்.. ரெண்டு நந்தினி நிக்குறா அவளுக்கு நாலு கண்ணுல்ல இருந்து தண்ணீ வருது.. என் மனசுத் தாங்கல்ல.. டேய் வேணாம்டா பாவம் மிரட்டிட்டு போகச் சொல்லுங்கடான்னு சொல்லிப் பாக்குறேன்.. கைக்கலப்பு ஆகிப் போச்சு.. அந்த காசியோட சித்தி பையன் என்னப் பொழப்புப் பாத்தானோ அப்போ தெரியாது.. சட்டுன்னுக் கத்தி எடுத்து என் தோள்ல்ல குத்திட்டான்.. குப்புன்னு ரத்தம் பாத்ததும் காசி, செல்லப்பன் எல்லோருக்கும் போதை இறங்கிடுச்சு.. படுபாவிக தலை தெறிக்க என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டாங்க... கண்ணைக் கசக்கி கசக்கிப் பாக்குறேன் இப்போ என் முன்னாடி நாலு நந்தினி...கண் இருட்டுது.. போயிடு போயிடுன்னு கையைக் காட்டிட்டு மயங்கி விழுந்துட்டேன்.

தட்டில் இருந்த முந்திரி பக்கோடாவும் முடிஞ்சுப் போச்சு...விச்சு வாங்க தேவ் இப்போ கிளம்புனாத் தான் நாம் சாப்பிட்டு படம் பாக்க போக கரெக்ட்டா இருக்கும். டிவியில் மேட்சும் முடிந்துப் போயிருந்தது. காரில் ஏறி கிளம்புனோம்.

"என்னாச்சு ஏதாச்சுன்னு எனக்குத் தெரியாது... எங்க வீட்டு டிரைவர் வந்து என்னியத் தூக்கிட்டு வந்து வீட்டுல்ல சேத்து இருககார். நம்ம கத்தி குத்து மேட்டரைக் கமுக்கமா முடிச்சு நம்ம பேமிலி டாக்டர் என்னைய் முழுசா எங்க வீட்டுல்ல ஓப்படைச்சுட்டார். தண்ணீப் போட்டதுக்காக எங்க அப்பா என் கூடப் பேசுறதையே விட்டுட்டார்..நான் மறுபடியும் ஸ்கூலுக்குப் போனேன்..வீட்டுக்குக் கூட என்னப் பாக்க வராதா பசங்க கிளாஸ் வாசல்ல என் கையைப் பிடிச்சுகிட்டு அழுதாங்க.. மனசு மறுகிருச்சு... பிளஸ் டூ எக்ஸாம் வந்துச்சு... அதுக்கு முன்னாடி எடுத்தப் படம் தான் அது.. பொண்ணுங்க வரிசையிலே இடம் இல்ல என் பக்கம் கொஞ்சம் இடம் இருந்துச்சு.. நந்தினியா வந்து நின்னா.. என்னைப் பார்த்துச் சிரிச்சா.. யாருக்கும் கேக்காத மெதுவா.. அன்னைக்கு நடந்ததுக்கு சாரி அப்புறம் தாங்க்ஸ்ன்னு சொன்னா. எனக்கு ரொம்ப நெருங்கி வந்து நின்னா.. எனக்கு ஒரு மாதிரி ஆகிப் போச்சு தேவ்.."

இரவுச் சாப்பாடு அதிகம் இல்லை.. ஒரு இரண்டு சப்பாத்தியோட முடிச்சுக்கிட்டு தியேட்டர் நோக்கிக் கிளம்பினோம்...வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆள் கையை ஆட்ட காரை ஓரம் கட்டினான் விச்சு...

"தேவ் இது தான் காசி.. என் ஸ்கூல் மேட்.. தியேட்டர்ல்ல வேலைப் பாக்குரான் ஓனர்.. இவங்க தியேட்டர்ல்ல தான் வேட்டையாடு விளையாடு படம் போட்டிருக்காங்க... மாப்பூ காசி இது நம்ம மெட்ராஸ் ஆபிஸ் பிரெண்ட் தேவ்..."

என்னைப் பார்த்து ஒரு புன்னகையோடு தலையாட்டியக் காசி விச்சுவிடம் எதோச் சொல்லிவிட்டு கிளம்பினான். எதோ அவசரம் என்று புரிந்துக் கொண்டேன்...

"சரி இப்போ செல்லப்பன் எங்கே இருக்கான்?"

"அவன் இப்போ யு-எஸ் போயிட்டான் ஓராக்கிள்ல்ல எதோ பெரிய லெவல்ல இருக்கான் பாத்து ரெண்டு வருஷம் ஆச்சு... கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க.. ஆள் தொந்தியும் தொப்பையுமா இருக்கானாம்.. சொன்னாங்க.."

"ஏய்.. என்னப்பா சிமெண்ட் ரோட்டுக்குப் போகமா இப்படி திரும்புற.. நேரு போன ரோட்டுல்ல நானும் போகலாம்ன்னு பாக்குறேன்.. வரும் போதாவது அப்படி வா... சரி சொல்லு இப்போ நந்தினி எங்கே இருக்கா? எப்படி இருக்கா?"

"தேவ்... நந்தினி இப்போ உயிரோட இல்ல்... அந்த சிமெண்ட் ரோட்ல்ல பிளஸ் டூ லீவுல்ல எதிரே வந்த லாரி மோதி ஸ்பாட்ல்லயே இறந்துட்டா...."

கொஞ்ச நேரத்துக்கு என்னால் எதுவும் பேசமுடியவில்லை..

விச்சுவே மௌனம் கலைத்தான்...

"தேவ்.. வரும் போதும் என்னாலே அந்த சிமெண்ட் ரோட்ல்ல வர முடியாது தேவ்.. என்னைத் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே..."

இல்லை என்பதற்கு அடையாளமாய் என் தலையை அசைத்தேன்.. கார் தியேட்டரை நெருங்கி விட்டிருந்தது. எனக்கு எனோ படம் பார்க்கும் ஆசைத் தொலைந்துப் போயிருந்தது...

இது விச்சுவின் கதையா.. நந்தினியின் கதையா.. நீங்களே சொல்லுங்க...ப்ளீஸ்

Sunday, January 28, 2007

கதை 11: இது விச்சுவின் கதை - பகுதி 1

மூணு வருஷமா விச்சு காரைக்குடிக்கு வரச் சொல்லி கூப்பிடும் போதெல்லாம் என்னால எதாவது காரணத்துன்னாலே போக முடியாமலேப் காலம் ஓடிகிட்டு இருந்துச்சு.. போன முறை அவங்க பெரிய அண்ணாக் கல்யாணத்துக்குக் கூட எங்க செட் பசங்க எல்லாரும் போயிட்டு வந்தாங்க....

விச்சுக்கு என் மேலக் கொஞ்சம் வருத்தம் தான்.. ஆனாலும் அதை எல்லாம் காட்டிக்க மாட்டான். எப்போவும் போல என்னைப் பார்த்தாக் கலகலப்பாத் தான் பேசிகிட்டு இருக்கான். எனக்கும் வருத்தம் தான்.. எப்படியாவது ஒரு தரமாவது விச்சு வீட்டுக்குப் போயிட்டு வந்துடுணும்ன்னு திட்டம் போட்டுகிட்டேத் தான் இருந்தேன்...அந்த நேரம் பார்த்து தான் என்னோட நெருங்குன சினேகிதன் நாகப்பனுக்கு வலையப்பட்டியிலே கல்யாணம்ன்னு கார்ட் வந்து சேர்ந்துச்சு..

வலையப்பட்டியிலே இருந்து காரைக்குடி ரொம்பப் பக்கமாச்சே... விச்சு வீட்டுக்கு போயிட்டு வந்துர வேண்டியது தான்.. முடிவும் பண்ணிகிட்டேன். விச்சு இப்போ பெங்களூர்ல்ல ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியிலே வேலையா இருக்கான். கை நிறைய சம்பளம். அவனுக்கு ஒரு போனைப் போட்டு அந்த வாரக் கடைசியிலே நான் காரைக்குடி வர்ற தகவலைச் சொன்னேன்.. விச்சுவுக்கு ஒரே சந்தோஷம்.. அவனும் கிளம்பி ஊருக்கு வர்றதாச் சொன்னான்.. ஊர்ல்ல பாக்கலாம்ன்னு சொல்லிட்டுப் போனை கீழே வச்சேன்..

அடிச்சிப் பிடிச்சி வினாயகர் சதுர்த்திக்கு ரெண்டு நாள் முந்தி கோயம்பேட்டுல்ல இருந்து திருச்சிக்கு போற ஒரு டப்பா வண்டியிலே இடம் பிடிச்சு உக்காந்துகிட்டேன்...
பொதுவாப் பண்டிகை நேரத்துல்ல பாவப்பட்ட பயணிகள்ட்ட கிட்ட அகப்பட்ட வரையிலே சுருட்டணும்ங்கற முடிவுல்ல டிராவல்ஸ்காரங்க அடிக்கிற கொள்ளைக்கு நானும் தப்பல்ல.. திருச்சிக்கு 500 ரூபா டிக்கெட் செலவு... விச்சுவுக்குத் தெரிஞ்சா பொறிஞ்சுத் தள்ளிருவான்.. எதுவும் சட்டப் படி தான் செய்யணும்ன்னு தீவிரமா இருக்கிறவன் விச்சு...

விச்சுவை எனக்கு ஒரு நாலு வருஷமாத் தெரியும்.. நாங்க இரண்டு பேரும் ஒரு இரண்டு வருஷம் ஒரே இடத்துல்ல வேலைச் செஞ்சுகிட்டு இருந்தோம் அப்ப ஆரம்பமான நட்பு.. விச்சுக்கு அது முதல் வேலை... நெத்தியிலே பட்டை.. கழுத்துல்ல உத்திராச்ச கொட்டை.. எளிமையானக் காட்டன் சட்டை.. எப்பவும் முகத்துல்ல ஒரு அமைதி.. உதட்டோரம் தவழும் ஒரு சிரிப்புன்னு விசுவைப் பார்த்த உடனே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு...

எதாவது ஒரு புத்தகம் படிச்சிகிட்டே இருப்பான் விச்சு... ஆன்மீகத்துல்ல ஆழம் எவ்வளவு உயரம் எவ்வளவுன்னு அளக்குற முயற்சியிலே சதா சர்வ காலமும் இருந்தான் விச்சு.. கிட்டத் தட்ட ஆரம்பக் காலத்துல்ல அவனுக்கு எங்க வட்டத்துல்ல சாமியார், ஞானப் பழம்ன்னு பாசமும் பரிகாசமும் சரி சம விகிததுல்ல கலந்தப் பலப் பட்டப் பெயர்கள் இருந்தன... அதுல்ல ஞானப் பழம் என்னுடைய உபயம்..

ஒரு சனிக்கிழமை விச்சு ரூமுக்குப் போனேன்.. ஏழு மணி இருக்கும்.. அதான் விச்சு ரூமுக்கு நான் முதல் முறையாப் போனது... ரூம்ல்ல பெரிய சைஸ்ல்ல திரிஷா படங்க.. 'சாமி' மாமியின் கிளுகிளூ படங்கள் அறையெங்கும் அலங்காரமா இருந்துச்சு...

"ஏன்டா விச்சா.. ரூம்ல்ல நீ தனியாத் தானேடா இருக்க..இதெல்லாம் யார் வேலை உனக்கு முன்னாடி ரூம்ல்ல இருந்தவன் விட்டுடுப் போன மாமி படமாடா..." நான் கேட்டு வைக்க..

"அய்யோ தேவ்.. இதெல்லாம் நானேப் பார்த்து பார்த்து சேர்த்து வாங்குனப் படமாக்கும்.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் தலைவியை நான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்.. இல்ல 2020ல்ல தமிழ் நாடு சி.எம் ஆக்கிட்டுத் தான் ஓய்வேன் இது சத்தியம்ன்னு கிட்ட வந்து என் தலையிலே கை வச்சான்.."

விச்சுவிடமிருந்து ஒரு கெட்ட வாடை வந்தது. என் பாரவையை அவன் அறையைச் சுத்தி ஓட விட்டேன்.. காலி பாட்டில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய உருண்டுக் கிடந்தன...

தேவ் யார் ஞானப் பழம்... அப்போதும் சிரித்துக் கொண்டிருந்த விச்சு என்னைப் பார்த்துக் கேட்பது போல் இருந்தது...

காரைக்குடி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நான் சேரும் போது மணி கிட்டத்தட்ட நாலு ஆகிப் போச்சு..

மதிய வெயில் கொஞ்சமும் குறையாமச் சுள்ளௌன்னு மொகத்துல்ல அடிச்சிகிட்டு இருந்துச்சு. சர்பத் கடை ஒண்ணு கண்ணுல்ல பட்டுச்சு.. சில்லுன்னு வாங்கிக் குடிக்கவும் விச்சு வந்து என் தோள்ல்ல கை வைக்கவும் சரியா இருந்துச்சு. கூலிங் கிளாஸ்.. பேடட் ஜீன்ஸ் பேண்ட்...கமான் கெட் மீ அயாம் சிங்கிள் ( COME ON GET ME I AM SINGLE)..
அப்படின்னு எழுதுன டீ ஷர்ட்.. ஆளே மாறி போயிருந்தான் விச்சு...

"தேவ்.. நீங்க கொஞ்சம் உடம்புப் போட்டுருக்கீங்கப் போலிருக்கு.. வீட்டுல்ல எல்லரும் சுகமான்னுக் கேட்டுகிட்டே .ஒரு சிகரெட்டை எடுத்துப் பத்த வச்சுக்கிட்டான்.

என்னோடச் சிரிப்புக்கு அர்த்தம் புரிஞ்சுதோ என்னவோ... என்னையும் டீ ஷ்ர்ட்டையும் மாறி மாறி பார்த்தான்..

"அய்யய்யோ தேவ்.. அப்படி எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துறாதீங்க... இது என் பர்த் டேக்கு எங்க டீம் பசங்க வாங்கிக் கொடுத்த கிப்ட்.. எங்க டீம்ல்ல நான் மட்டும் தான் பேச்சுலர். அதான் ஓட்டுணும்ன்னு இப்படி வாங்கிக்கொடுத்துட்டாங்க.."

இன்னொரு சர்பத் சொல்லியிருந்தேன் அதுவும் வந்தது.

"ம்ம் கோயிலுக்கு எல்லாம் போற இல்ல?"

"மனமே கோயில் அதுல்ல இருக்க சிந்தனையே இறைவன்... நீங்க படிச்சது இல்லையா... படிக்கணும் தேவ்.." என்ற படி சிரித்தான் விச்சு.

சர்பத்தும் சிகரெட்டும் ஒரே நேரத்தில் முடிந்தன.. விச்சு எனக்கும் சேர்த்து காசுக் கொடுத்தான். சான்ட்ரோ கார் ஒன்று பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நின்றது. அதில் விச்சுவைத் தொடர்ந்து நான் ஏறினேன்.

கார் காரைக்குடி வீதிகளில் சீறி ஓடியது...

"ம்ம் காரைக்குடி நல்லாத் தான் இருக்கு.. பெரிய பெரிய வீடு... ஹே வேட்டையாடு விளையாடு.. புது படமெல்லாம் இங்கே ரிலீஸ் ஆகுமா?"

"தேவ்.. என்ன நினைச்சிங்க எங்க காரைக்குடி பத்தி... நேருவே நேர்ல்ல வந்துட்டுப் போயிருக்கார் தெரியும் இல்ல.. அழகப்பா செட்டியார் நேரு வரும் போது அவர வர்வேற்க தனியா சிமெண்ட ரோடே போட்டார்ன்னாப் பாருங்க.. எங்க ஊர் பெருமைய..." விச்சு உற்சாகமாச் சொல்லிகிட்டு வந்தான்.

விச்சுவின் வீடு அழகாயிருந்துச்சு. வீட்டு வாசலில் இருந்த பெரிய நாயைப் பார்த்தாக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. விச்சு ராம்போ என்ற அந்த நாயைப் பற்றி ஏற்கனவே என்னிடம் பலக் கதைகள் சொல்லியிருந்தான். ராம்போவிடம் என்னைப் பற்றி சொல்லியிருப்பானோ என்னவோ.. அது என்னைப் பார்த்து வாலாட்டியது.

விச்சுவின் பெற்றோர் அறிமுகம்.. வீட்டைச் சுற்றி பார்க்கும் படலம் என அரை மணி நேரம் செலவானது.. மாடியில் இருக்கும் விச்சுவின் அறைக்க்குப் போய் கால் நீட்டி உட்கார்ந்தோம்.

"அப்புறம் விச்சு.."

"என்ன தேவ் சொல்லணும்.. பெங்களூர் வாழ்க்கையும் அங்கேப் பொங்கி வழியுற டிராப்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமாப் பழகிப் போயிருச்சு.. ஆபிஸ் அம்சமா இருக்கு..மாமா வீட்டுச் சாப்பாடு.. ஐ பாட்ல்ல நம்ம இளையராஜா பாட்டு..சுஜாதாவோட திருவரங்கத்து தேவதைகளை நாலாவது வாட்டியாப் படிக்கிறேன்.. வாழ்க்கைப் போயிட்டு இருக்கு.." விச்சு சிரித்தான்.

"அண்ணனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு.. நீ மட்டும் தான் பாக்கி... எப்போ உனக்கு?" நான் மெதுவாக் கொக்கிப் போட்டேன்.

"என்ன அவசரம் தேவ்... மெதுவாப் பண்ணுவோம்..இப்போ இந்தாங்க ஈ.எஸ்.பி.என் பாருங்க.. ஓங்க மெட்ராஸ்ல்ல எல்லாம் இந்த சேனல் வராது..பெஸ்ட் ஆப் லாரா போடுறான் பாருங்க.." என டிவியில் மூழ்கினான் விச்சு..

"ஒரு வேளை நம்ம ஆபிஸ் வனிதா ஓ.கே சொல்லியிருந்தா.. இன்னேரம் ஒரு புள்ளக்கு நீயும் அப்பன் ஆகி இருப்பியோ" நான் அடுத்த கொக்கியைப் போட்டேன்..

"அஹா அந்த மேட்டரை இன்னும் நீங்க மறக்கல்லியா..விடுங்க தேவ் அந்தப் பொண்ணுக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு.. அதுவுல்லாமல் அப்படி எல்லாம் எனக்கு வனிதா மேல எந்த ஆசையும் கிடையாது.. சும்மா நீங்களும் பசஙக்ளும் சேர்ந்து என்ன ஓட்டுறதுக்கு அவ பெயர் ஒண்ணு மாட்டிகிச்சு.." அவன் மறுபடியும் டிவியில் லாரா விளாசுவதை கண் கொட்டாமல் பார்க்க ஆரம்பித்தான்.

தட்டில் இருந்த குழி பனியாரங்களின் சுவையில் நாக்கு சற்று களைத்துப் போயிருந்தது. நல்ல ருசி.. செட்டி நாட்டு பக்கம் பலகாரத்துக்கு குறைவு இருக்காதுன்னு தெரிஞ்சவ்ங்கச் சொன்னது சரியாத் தான் இருக்கு.விச்சுவின் ஸ்கூல் போட்டோக்களைப் புரட்ட ஆரம்பித்தேன்.

கிட்டத்தட்ட அவன் பள்ளி நண்பர்கள் எல்லாரையும் பற்றி அவன் என்னிடம் கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறான் என்பதால் ஆர்வத்தோடு படங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. எல்லாப் படங்களிலும் விச்சு பக்தி பழமாய் புன்னகைப் பூத்துக் கொண்டிருந்தான்...

"யார்டா இந்தப் பொண்ணு.. உனக்கு ஸ்கூல் காலத்துல்ல பொண்ணுங்க சினேகிதம் எல்லாம் உண்டா..? அதுவும் இவ்வளவு கிட்டக்க நின்னு எடுத்துக்குற அளவுக்கு நெருங்குன சினேகிதமா?" இது கொக்கியா எனக்கேத் தெரியாத போதும் கேட்டேன்.

"இந்த்ப் போட்டோ இங்கேயா இருக்கு.... நந்தினியோடப் போட்டோவாச்சே...தேவ் அது ஒரு பெரியக் கதை..." விச்சுவின் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு பளிச்சிட்டது. என்னால் அது என்ன வென்று அறிந்துக் கொள்ள முடியவில்லை..

வெயிட்டீஸ் படிக்கிற உங்களூக்கும் சந்தேகம் வந்து இருக்குமே.. இது விச்சுவின் கதைன்னு சொல்லிட்டு இப்போ நந்தினி ஒரு பெரியக் கதைன்னு டிராக் மாறுதேன்னு.. இன்னும் கொஞ்சம் வெயிட்டீஸ்ங்க...

நந்தினியின் கதையும் சொல்லுறேன்...சீக்கிரமாவேச் சொல்லுறேன்.. கதை விரைவில் பக்கம் 78ல் வெளிவரும்...

இது விச்சுவின் கதை - பகுதி 2

Monday, January 22, 2007

கவி 27: இன்னும் பெய்யும் மழை - 3


மழைப் பிடிக்குமா?
என கேட்டேன்
மழையில் முத்தம் பிடிக்கும்
என்கிறாய்
மழை வரட்டும்
என்றேன்
அவசரமாய்
அரை வாளி
தண்ணீரை தலையில் கவிழ்த்து விட்டு
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறாய்

சாயங்காலம் வரை
அலுவலகம்
உன் ஞாபகம்
என்னருகே வேணும்
ஏதாவது கொடேன்..
கொஞ்சும் கெஞ்சலாய் நான்...
படுக்கை உதறி
அதில் உதிர்ந்து கிடந்த
உன் மல்லிகைப் பூக்கள்
சேகரித்து
என் சட்டைப் பையில் போட்டு
சிணுங்கலாய் சிரிக்கிறாய் நீ...

என்னது இது..
தொலைபேசியின் வண்ணம்
சிவப்பா மாறியிருக்கு?
ம்ம்ம்...அரைமணிக்கொரு தரம்
அலுவலகத்தில் இருந்து
கூப்பிட்டு
சிவக்க சிவக்க
முத்தம் கொடுத்துட்டு
எதுவும் தெரியாத மாதிரி
கேக்குறதைப் பார்..
செல்லமாய் முறைக்கிறாய் நீ..
சிரிக்கிறேன் நான்..

சாப்பாடு ருசியோ ருசி...
எப்படி?
சொல்ல மாட்டேன் என்று
அடம் பிடிக்கிறாய்..
போ.. நானே கண்டுபிடிக்கிறேன்..
உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி கலந்தாயோ?
உன் வெட்கத்தை
நான் தான் ஏற்கனவே
ருசித்திருக்கிறேனே...

நான் வீடு
திரும்பும் போது
என்னை வரவேற்க
என்ன உடுத்திக்கட்டும்
என்னைக் கேட்கிறாய்?
ம்ம் எப்பவும் போல
உன் புன்னகையை
உடுத்திக்கடா
நான் சொல்ல..
ம்ம்ம்.. அது இல்ல
உடையைச் சொல்லுங்க என்கிறாய்..
அட கொஞ்சம் பொறு..
நான் சீக்கிரம் வந்துடுறேன்..
என்னையே உடுத்திக்கோன்னு..
நான் சொல்ல
போய்யான்னு சொல்லிட்டு
போனை வைத்துவிடுகிறாய்..

இன்னும் பெய்யும் மழை - 1 படிக்க

இன்னும் பெய்யும் மழை - 2 படிக்க

Thursday, December 14, 2006

கவி 26:டிசம்பர் பக்கங்கள்

டிசம்பர் மாதம்..
போர்வைக்குள் தூக்கம்..
மெதுவாய் திறக்கும்
என் இமைகளின்
இடையினில்
பூக்களைச் செருகிச்
செல்கிறாய்...

உன் புன்னகை..

சூடு பறக்கும்
காலைக் காபி..
ம்ம்ம் பருகும் போது
பரவசம்....
கோப்பை நுனியில்
மிச்சமிருப்பது

உன் முத்தம்...

போர்வை விலக்கிச்
சோம்பல் முறிக்க...
தேகம் நெளிக்கிறேன்..
என் செல்கள்
ஒவ்வொன்றிலும்
முந்தைய இரவினில்
குடிப் புகுந்த

உன் வெட்கம்...

ஜன்னல் வழியே
குளிர் காற்று
முகத்தில் அறைய
மூச்சு காற்றில்
மிஞ்சி நிற்கும்

உன் வெப்பம்.....

சன்னமாய் ஒலிக்கும்
சின்னதொரு பறவைக்
குரலின் வழியே
என் விடியல்
அறிவிக்கும்

உன் சிணுங்கல்...

இப்படி
டிசம்பர் மாதம்
என் டைரியின்
மொத்தப் பக்கங்களும்
சேமித்து வைத்திருப்பது

உன் காதல்...

Tuesday, December 05, 2006

கதை11:அப்பா - பாகம் 2

அப்பா பாகம் 1

மறுபடியும் பஸ் கிளம்பிப் போகவும் நான் டீ குடிச்சு முடிக்கவும் சரியா இருந்துச்சு.


சென்னையிலே ஒரு சாப்ட்வேர் கம்பெனியிலே எனக்கு வேலைக் கிடைச்சு வாழ்க்கை ஒரு மாதிரி ஓட ஆரம்பிச்சது. ரஞ்சனியும் சென்னைக்கு வந்துட்டா, ஒரு அனிமேஷன் கம்பெனியிலே வேலைக்குச் சேர்ந்துட்டா. அப்புறம் என்ன எங்கள் காதல் நாளுக்கு நானூறு எஸ்.எம்.எஸ் முந்நூறு மிஸ்ட் கால், இரு நூறு ஈ மெயில்ன்னு எல்லா சாப்ட்வேர் மக்கள் காதல் மாதிரி ரொம்ப ஜோராவே வளர்ந்துச்சு.

ஒவ்வொரு நாளும் ரஞ்சனி என் வாழ்க்கையில் எனக்கு கடவுளால் கிடைத்தப் பொக்கிஷ்ம்ன்னு வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் என்னைப் பார்க்க ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க நபர் ஒருத்தர் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் லேசாப் புன்னகைத்தார். அவர் முகத்தில் அந்த புன்னகையையும் மீறி ஒரு பயங்கர அழுத்தம் இருந்ததை என்னால சட்டுன்னு கவனிக்க முடிஞ்சது. கவனிச்சேன்.

"நீங்க தானே அஸ்வின்?"

"ஆமா.. ஆனா நீங்க யார்ன்னு எனக்குத் தெரியல்லயே? " என்று தாடையில் கை வைத்து சாக்ரட்டீஸ் போஸ் கொடுத்தேன்.

"நான் அப்பா.. ரஞ்சனியோட அப்பா.." என்று மறுபடியும் புன்னகைத்தார் அந்த மனிதர். நான் தடுமாற்றமாய் கைக்குலுக்கினேன்.

"உங்க் கூடக் கொஞ்சம் பேசணும்.." என்றார் ரஞ்சனியின் அப்பா.

"ஸ்யூர்..." என்ற படி அலுவலக நண்பனுக்கு ரிசப்ஷனில் இருந்து கால் செய்து அவசர வேலையா ஒரு மணி நேரம் வெளியே போறேன் அந்த மொக்கை மேனேஜரை எதாவதுச் சொல்லி சமாளிடான்னு சொல்லிட்டு ரஞ்சனியின் அப்பாவோடு கிளம்பினேன்.


அன்று மாலை ரஞசனியை நுங்கம்பாக்கம் காபி டேவில் சந்திக்கும் போது என் முகத்தில் சந்தோஷம் இல்லை.

"ரஞ்சு உண்மையாவே நீ என்னை லவ் பண்றீயா சொல்லு?"

"ஏன் நாலு வருஷமா வராத சந்தேகம் இப்போ திடீரென்னு வந்து இருக்கு.. உனக்கு என்னாச்சு?" அந்த மீன் கண்கள் என்னைக் கொக்கிப் போட்டப் படி பார்த்தன.

"ரஞ்சு நான் உங்க அப்பாவைப் பார்த்தேன்..பேசினேன்...உனக்கு அப்பா இல்ல செத்துப் போயிட்டார்ன்னு என் கிட்ட எதுக்காகச் சொன்ன?"
அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து திரும்பி கொண்டேன்.. ரஞ்சனி எதுவும் பேசாமல் கட கடவென எழுந்து காபி டேவை விட்டு வெளியே நடந்தாள்.

எனக்கு என்ன செயவது என்றே தெரியவில்லை.. காபி ட்ரேவோடு என் முன் நின்ற சர்வரின் பரிதாபப் பார்வை இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. காபிக்கான பணத்தை அவசரமாய் பர்சில் இருந்து எடுத்து அவனிடம் கீப் த சேஞ்ச் சொல்லிக் கொடுத்து விட்டு ரஞ்சனியைத் தேடி ஓடினேன். பார்க்கிங்ல் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டி பெப்ல் அவள் ஏறி உட்கார போன நேரம் நான் குறுக்கேப் போய் கைக் கட்டிக் கொண்டு நின்றேன்.

"என்னை அப்படிப் பார்க்காதே.. நான் அழுதுடுவேன் " என்றாள் ரஞ்சனி

" ஏய் ஏய் இப்போ எதுக்கு அழுவாச்சி...ஏய் ரஞ்சு"

ஸ்கூட்டியில் இருந்து இறங்கி வந்தவள் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

"ப்ளீஸ் எங்க அப்பாவைப் பத்தி என் கிட்ட பேசாதே.. " அவள் கெஞ்சல் பார்வையில் எனக்கு மொத்தமும் உருகிப் போனது.

நான் ரஞ்சனியைத் தான் காதலிக்கிறேன் அவங்க அப்பா கதை எனக்கு எதுக்குன்னு அப்படியே ரஞ்சனியின் அப்பாவோடு எனக்கு நடந்த சந்திப்பை மொத்தமாய் மறந்துப் போனேன். காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை.

பின்னொரு நாளில் மெரீனாப் பீச்சில் ஒரு மாலைப் பொழுதினில் ரஞ்சனி நான் கேட்காமலேப் பேசினாள்...

"அஸ்வின்...எனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது எங்க அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டார்.."

"இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரா?"

"தெரியாது.. எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாங்க"

"எனக்கு அப்பாங்கற மனுஷன் தேவைப் படும் போது அவர் வர்றல்ல.. இப்போ அவர் எனக்குத் தேவையே இல்ல.. "

அப்பா என்ற உறவினை உதறி ஒதுக்கியதற்கானக் காரணத்தை ஒரே வரியில் சுருக்கமாய் சொல்லிவிட்டாள் ரஞ்சனி..

"எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணாலும் என்னை ஒதுக்கல்ல.. எதோ ஒரு ஹாஸ்ட்டல்ல சேத்து எதோ ஒரு வழியிலே எனக்குக் கரை சேர வழி காட்டுனாங்க...கண்ணன் சார் எனக்கு அப்பாவாக முடியல்லன்னாலும் ஒரு பாதுகாப்பாவது இருந்தார்"

"கண்ணன் சார் யார்?"

"எங்கம்மாவோட இரண்டாவது புருஷன்"

"அப்பாவாம் அப்பா.. எங்கேப் போனார்.. அவரைத் தேடி நான் காத்திருந்த சாயங்காலங்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு நாள் கூட அவருக்கு திரும்பி வர்ணும்ன்னு தோணல்லியே"
ரஞ்ச்னியின் கண்கள் கலங்கவில்லை. உதடுகள் ஒவ்வொரு மூறையும் அப்பா என்ற சொல்லை உச்சரிக்கும் போது துடித்தன.

நான் மௌனமாகவே இருந்தேன்.

"அஸ்வின் உனக்கு இது புரியாது .. இது இருபதைஞ்சு வருஷக் கோபம்... ஏக்கம்... தவிப்பு...வலி.. உறவுகள் வார்த்தையில் மட்டும் இல்ல.. அது ஒரு வாழ்க்கை அஸ்வின்.. பொறுப்புக்களைச் சுமந்து செய்யணும் அஸ்வின்.. இல்லன்னா HELL WITH ALL THE RELATIONS"

பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த பையன் ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு ஒரிரண்டு சுண்டல் பாக்கெட்டுகளைத் தரையில் சிதற விட்டான்.

அதுக்குப் பிறகு ரஞ்சனியிடம் அவள் அப்பாவைப் பற்றி பேசுவதைக் கூடுமானவரை தவிர்த்தேன். அதையும் மீறி எப்போதாவது அந்தப் பேச்சு வந்தால் ரஞ்சனியின் அப்பா கோபம் கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.

இதற்கு பிறகு எனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் நடந்தது. கண்ணன் சாரும் ரஞ்சனியின் அம்மாவும் வந்து ஆசிர்வதித்தார்கள். அவங்கப் பசங்க கூட வந்திருந்து வாழ்த்துனாங்க.. ரஞ்சனியின் அப்பாவும் என்னுடைய விருந்தாளியாய் வந்து மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று எங்களை ஆசிர்வதித்தார்.

அதே ஊரில் எங்கள் இல்லறம் இனிதாய் தழைத்து ஓங்கத் துவங்கியது. சின்னச் சின்னச் சண்டைகள் அப்பப்போ ஊடல்கள் பின்னாடியே தொடரும் கெஞ்சல்கள் அப்புறம் கொஞ்சல்கள்ன்னு வாழ்க்கை நல்லாப் போச்சு.

ரஞ்சனிக்குத் தெரியாமல் மாதம் ஒரு முறை அவ அப்பாவை நான் போய் பார்த்துட்டு வர்றதை வழக்கமாக்கிட்டேன். ரஞ்சனிக்கும் அவ அப்பாவுக்கு உள்ள பல் ஒற்றுமைகளை என்னால உணர முடிஞ்சது... நாங்க நல்ல நண்பர்கள் ஆனோம்...எப்படியும் ஒரு நாள் ரஞ்சனியும் அவ அப்பாவையும் ஒண்ணு சேர்த்துடலாம்ன்னு நான் நம்பிகிட்டு இருந்தேன்..

இந்த நிலையிலேத் தான் எனக்கும் அவருக்குமான அந்தக் கடைசி சந்திப்பு நடந்துச்சு...

"அஸ்வின்.. தேங்க்ஸ்.. நீங்க எனக்குச் செயத் எல்லா விஷயங்களுக்கும் நன்றி"

அவர் இப்படி பேசும் போது எனக்கு ஒண்ணும் புரியல்ல. அவர் கையிலே ஒரு பழைய டைரி இருந்துச்சு. அதை என் கிட்ட நீட்டுனார். நான் அதை மறுக்காம வாங்கிகிட்டேன்.

"அஸ்வின் நான் அதிக நாள் இருப்பேன்ங்கற நம்பிக்கை எனக்கு இல்ல.. யூ நோ என் ஹெல்த் என்னுடையக் கன்ட்ரோல்ல இல்ல.. ஐ அம் டையிங்..." மறுபடியும் ஒரு புன்னகை.

"என்னுடைய வாழ்கையை நான் முடிக்கப் போறேன்.. ஆனா அதுல்ல முற்று புள்ளி அரையும் குறையுமாத் தான் இருக்கும்.. இந்த டைரி ரஞ்சனிக்கு நான் எழுதுனது.. ஆனா எந்தக் காரணம் கொண்டும அவ இதைப் படிக்கவோ பார்க்கவோ கூடாது.. என்னுடைய பாரத்தை உங்க மேல இறக்கி வைக்கிறேன்.. ஐ யாம் சாரி...."

"சார்.. உங்களுக்கும் ரஞ்சனிக்கும் ஏன் இந்த இடைவெளின்னு என்னால புரிஞ்சிக்க முடியல்ல.. நீங்க தப்பு பண்றவர் மாதிரியும் இல்ல...பட் இருந்தும்..." என நான் நீட்டி முழக்கினேன்.

"ரஞ்சனி அம்மாவை வேற பொண்ணுக்காக நான் விட்டுட்டு வர்றல்ல.. அவங்க அம்மா தான் என்னை இன்னொருத்தருக்காக விட்டுட்டுப் போயிட்டாங்க.." அதிராமல் அலட்டாமல் பேசினார் ரஞ்சனியின் அப்பா.

"கண்ணன் சாரா..." எனக்கு விக்கி வியர்த்துப் போச்சு.

"ப்ச் அது பத்தி பேச வேண்டாமே...தப்பு சரின்னு எதுவும் இல்ல...LET US GET ON WITH LIFE" மென்மையான குரலில் அமைதியாய் சொன்னார். புன்னகைக்க முயன்றார். அவர் முகம் மேலும் விகாரமடைந்தது.

அப்புறம் அவரோட சதாம் உசேன்ல்ல இருந்து இந்தியன் கிரிக்கெட் வரை பல விஷயங்கள் பேசிகிட்டு இருந்துட்டுக் கிளம்புனேன்.

அதுக்கு பிறகு இப்போ தான் அவரைப் பாக்கப் போறேன்...ஆனா அவர் என்னைப் பார்க்கப் போறதும் இலல் பேசப் போறதும் இல்ல..... கண் முழிச்சுப் பார்த்தப்போ பஸ் சேலம் புறநகரை அடைந்திருந்தது.

அவர் கொடுத்த டைரியை பையிலிருந்து எடுத்துத் திறந்துப் பார்த்தேன்...

அதில் ரஞ்சனிக்கு அவர் சேர்த்து வைத்திருந்த சொத்து விவரம்... ரஞசனியின் எல்.கே.ஜி காலம் முதல் கல்லூரி காலம் வரை அவள் அம்மா அவளுக்குச் செய்ததாய் ரஞ்சனி இந்த நிமிடம் வரை நம்பிக் கொண்டிருக்கும் அனைத்துச் செலவுகளுக்கான கணக்குகளும் தேதி வாரியாக தக்க ஆதாரங்களோடு இணைக்கப் பட்டிருந்தன...

கடைசி பக்கத்துல்ல அவரோடக் கையெழுத்தில்...

ரஞ்சு நான் உலகத்தின் சிறந்த அப்பாவா இல்லாமப் போயிருக்கலாம் ஆனா நீ நினைக்கிற அளவுக்கு மோசமான அப்பா இல்லம்மா....

எனக்குள் என் உணர்வுகளை அடக்க முடியவில்லை.. என் கிட்ட எதுக்கு இந்த டைரியைக் கொடுக்கணும்.. கொடுக்காமப் போயிருக்கலாமே.. இந்த சுமையை நான் எதுக்கு சுமக்கணும்....

எங்கிருந்தோ ரஞ்சனி அப்பாவின் குரல் என் காதில் கேட்டது...

"அஸ்வின்.. இனிமே நீ தானப்பா ரஞ்சனிக்கு அப்பா.... என்னுடைய அன்பையும் சேர்த்து அவளுக்குக் கொடுப்பீயா"

என்னப் பதில் சொல்வேன்...I THINK I HAVE A LIFE TIME TO ANSWER THAT QUESTION...!!!

Monday, December 04, 2006

கதை11:அப்பா - பாகம் 1

ஜன்னல் ஓரமாய் இருந்த தொலைபேசி அறையின் மௌனத்தைக் கிழிக்கிற மாதிரி அலறியது. வெளியே மழை நின்னும் நிக்காமலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

ரஞ்சனி சோபாவில் காலை மடிச்சுகிட்டு உட்கார்ந்து இருந்தாள். விரல் நகத்தை விடாம கடிச்சுகிட்டே விட்டத்தைப் பார்த்துகிட்டு இருந்தா. தொலைபேசி சத்தம் கேட்டதும் அவளோட அந்த மீன் கண்கள் இன்னும் பெரிசாவே விரிஞ்சுப் போச்சு. அந்தக் கண்ணைப் பார்த்து தானே அவ மேலே காதலாகி கசிந்துருகி இப்போ கணவனாகி..ம்ம்ம் இப்போதைக்கு என் நிலைமையை இதுக்கு மேல விவரிக்க விரும்பல்ல.

தொலைபேசி இன்னும் அலறிகிட்டே தான் இருக்கு... நான் ரஞசனியைப் பார்க்க ரஞ்சனி வேணும்னே என்னையும் தொலைபேசியின் அலறலையும் தவிர்க்கற மாதிரி வேற எங்கேயோ பார்வையைத் திருப்பிகிட்டா.

எனக்கு ரஞ்சனி மேல கோபம் கோபமாய் வந்தது.

"ரஞ்சு.. போன் அடிக்கறது உன் காதுல்ல விழ்றதா இல்லையா?"

பதில் இல்லை.

"ரஞசு நான் உன் கிட்டத் தான் சொல்லுறேன்... "

மறுபடியும் பதில் இல்லை.

இதுக்கும் மேல அவகிட்டச் சொல்லி புண்ணயமில்லன்னு நான் போய் தொலைபேசியைக் கையில் எடுத்து ஹலோ சொன்னேன்...

மறுமுனையில் பேசியவருக்கு ம் கொட்டியபடி ரஞ்சனியை பார்த்தேன். ரஞ்சனி இப்பவும் என்னைப் பார்க்கவில்லை. நான் தொலைப்பேசியைக் கீழே வைச்சுட்டு ஜன்னலைப் பார்த்துட்டு நின்னேன். மழை கொஞசம் வேகமெடுத்த மாதிரி இருந்துச்சு.

ரஞ்சனிப் பக்கம் திரும்பாமல் அறைக்குள் போனேன். அவசர அவசரமா டிராவல் பேக்கல்ல இரண்டு நாளுக்கு தேவையான துணிகளை எடுத்துப் போட்டுகிட்டு மறுபடியும்
ஹாலுக்கு வந்தேன்.

ரஞ்சனி கையிலே டிவி ரிமோட்டை வச்சுகிட்டு கன்னாபின்னான்னு சேனலை மாத்திகிட்டு இருந்தா. என் பக்கம் திரும்பவே இல்லை.

டிவி ரிமோட்டை அவ கையிலே இருந்து வலுக்கட்டாயமாப் பிடுங்கிட்டு அவ கண்களுக்கு நேரா என் கண்களைக் கொண்டு போனேன்...பல முறை நான் பார்த்து பார்த்து பரவசமடைந்த கண்கள் அப்போ அங்கே இல்லை... ஒரு வித வெறுப்பும் கோபமும் எரிச்சலும் அந்தக் கண்களின் அழகினைத் திரைப் போட்டு மறைத்துக் கொண்டிருந்தன.

"லுக் ரஞ்சு... எல்லாம் முடிஞ்சுப் போச்சு... உன்னோட புருஷனா இல்ல.. நல்ல நண்பனாச் சொல்லுறேன்.. எல்லாத்தையும் மறந்துட்டு கிளம்பு"

ரஞ்சனி தன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.. என்னை வெறி வந்தார் போல எட்டிப் பிடித்துத் தள்ளி விட்டாள். அவக் கண்களில் கண்ணீர்...

"அஸ்வின்.. யூ நோ...HOW MUCH I HATE HIM..?" ரஞ்சனி கட்டுபடுத்தக் கூடிய நிலையில் இல்லை. வெடிக்க தயாராக் இருக்கும் ஒரு எரிமலை மாதிரி இருந்தா.

"எஸ் ஐ நோ... நல்லாத் தான் தெரியும்.. அதனாலத் தான் சொல்லுறேன்...அந்த வெறுப்பை எல்லாம் நீ சுமந்தது போதும்.. வா..வந்து தூக்கி எறிஞ்சுட்டு வந்துடலாம்"

ரஞ்சனி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்...அவள் கோபத்தை என் மீது காட்டாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் செய்து தோத்துக்கிட்டு இருந்தா. அந்த நிமிடம் நான் ரஞ்சனியை இன்னும் அதிக அதிகமாய் காதலிச்சேன்...

அவளை விட்டு இரண்டு அடி தள்ளி நின்னேன்...

"மரணத்துல்லக் கூட மன்னிக்க முடியாத தப்புன்னு எதுவும் இல்ல ரஞ்சு... ப்ளீஸ் உங்க அப்பாவும் ஒரு மனுஷன் தான்..அவரை மன்னிக்க முயற்சி பண்ணு..."

அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் நான் வாசல் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தேன்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போய் சேலம் செல்லும் பேருந்தைத் தேடிப் பிடிச்சு ஏறி உட்கார்ந்துகிட்டேன்.

பஸ் கிளம்புறதுக்கு முன்னாடி என் மனசு கிளம்பிடுச்சு..ரிவர்ஸ் கியர் போட்டுகிட்டு பின்னாடி போக ஆரம்பிச்சுடுச்சு..

1999 எம்.சி.ஏ படிக்க மதுரைப் போயிருந்த நேரம்...அங்கேத் தான் ரஞ்சனிய முதன் முதலாச் சந்திச்சேன்.. ரஞ்சனி நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா கலகலப்பு என்பது மருந்துக்கு கூட அவக் கிட்ட கிடையாது. சரியான் சுடுமூஞ்சி.. சுள்ளுன்ணு கோபம் வரும்...யார் கிட்டயும் பேசமாட்டா.. அப்படியே மீறி பேசினாலும் நறுக் தெறிச்சா மாதிரி வெடுக்குன்னு பேசி காயபப்டுத்திடுவா. எனக்கு கலகலப்பா நம்ம ஜோதிகா மாதிரி பொண்ணுங்க தான் இஷ்ட்டம் அதுனால இவ இருக்கற பக்கம் சைட் அடிக்கக் கூட திரும்புனது இல்ல.

ஆனா எப்போ எப்படி என் கவனம் பக்கம் திரும்பிச்சுன்னு எனக்கேத் தெரியல்ல...ஒரு நாள் எதேச்சையா அவளோட நோட் புக் ஒண்ணைப் புரட்டும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சுது..அதுல்ல முழுக்க முழுக்க கவிதை.... எல்லாம் அந்த சுடுமூஞ்சி தான் எழுதியிருந்துச்சு.. படிச்ச எனக்குச் சுத்தமா நம்பிக்கையே வர்றல்ல... அப்படி கவிதைகளை அந்தச் சுடு மூஞ்சியால எழுத முடியுமான்னு...

அவ்வளவு ரசனையான வரிகள் படிச்ச என் மனசை என்னவோ பண்ணிடுச்சு...

நான் நல்லா வரைவேன்...உண்மையாவே.. சரின்னு சுடுமூஞ்சி எழுதுன ஒவ்வொரு கவிதைக்கும் உட்கார்ந்து ஏத்த மாதிரி பென்சில் ஸ்கெட்சஸ் வரைஞ்சு... சுடுமூஞ்சி கிட்டக் கொண்டு போய் நீட்டுனேன்.. ஆனாப் பாருங்க அந்த சுடு மூஞ்சி ஈவு இரக்கமில்லாமல் படங்களை அரையும் குரையுமாப் பார்த்துட்டு

"என்ன இது கிறுக்குத் தனமா படமெல்லாம் வரைஞ்சுகிட்டு... லவ் பண்றீயா?" அப்படின்னு வெடுக்குன்னு கேட்டிருச்சு.

எனக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல்ல...

"ம்ஹ்ம் உன்னை லவ் பண்ணல்ல... ஆனா கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி எல்லாம் பெத்துகிட்டு கடைசி வரைக்கும் நீ எழுதுற கவிதைக்கெல்லாம் இப்படி கிறுக்குத் தனமாப் படம் வரைஞ்சிகிட்டே செத்துப் போயிடணும் அவ்வளவு தான்" அப்படின்னு மூச்சு விடாமச் சொல்லிட்டு சுடுமூஞ்சியைத் திரும்பிப் பார்க்காமல் போயிட்டேன்..

"ஹேய் உனக்குப் பைத்தியமா?" சுடு மூஞ்சி எனக்குப் பின்னால் கத்தியது என் காதில் நல்லாவே கேட்டது. நான் திரும்பவில்லை.

"யூ ... என்னப் பண்ணிட்டு போற...இடியட்.." அன்று வரை சுடுமூஞ்சி அவ்வளவு அலறலாய் கத்தி நான் மட்டுமில்லை எங்க காலேஜ்ல்ல யாருமே கேட்டது இல்ல. மதுரைப் பொண்ணுங்க எல்லாத்துக்கும் சவுண்ட் ஜாஸ்திம்பாம்ங்க.. நம்ம சுடுமூஞ்சியும் அதை அன்னிக்கு நிருபிச்சிடுச்சு.

அதுக்கு அப்புறம் அவ் கிட்ட நான் மூஞ்சிக் கொடுத்துப் பேசவே இல்ல,. ஆனா சுடுமூஞ்சி என்னை ஓரக் கண்ணாலேப் பார்த்துக்கும். அதையே நான் கவ்னிச்சுட்டா அப்படியே கல்கத்தா காளி மாதிரி ஒரு போஸ் கொடுப்பா. அவக் கூட வார்த்தையாலேப் பேசல்லயே தவிர அவளை வரையாத நாளே கிடையாதுன்னு சொல்லலாம்.

பச்சைக் கலர் சுரிதார்ல்ல ஒரு படம்...அந்தச் சுரிதார்ல்ல அவ ஒரு தேவதை மாதிரி இருப்பா.. அந்தச் சுரிதார்ல்ல இருக்கும் போது மட்டும அவ உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை இருந்துட்டே இருக்கும் ( எல்லாம் நம்ம நினைப்பு தான்)..முன் நெத்தியிலே முடி கத்தையா வந்து விழுற மாதிரி நான் வரைஞ்சதலே எனக்கு ரொம்ப பிடித்தமான படம்.. தினமும் ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி அந்த படத்துக் கூட ஒரு ரெண்டு மணி நேரமாவது கடலை போடாமல் நான் தலைச் சாயச்சதாச் சரித்திரமும் இல்ல பூகோளமும் இல்ல.
என் ரூம் மேட் தூக்கம் என்னால் பறி போனது தனி கதை..காதலிச்சுப் பாருங்கப்பா அர்த்த ராத்திரி உளறல்கள் இலக்கியமாத் தெரியும்..

இப்படியே கல்லூரி முடியற நாளும் நெருங்கி வந்துடுச்சு. வெறும் படம் மட்டும் வாழ்க்கைக்குப் போதாதுன்னு முடிவு பண்ணிட்டு நேரா சுடுமூஞ்சியப் பாக்கப் போனேன்.

"ம்ம் சொல்லு எப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற?" அப்படின்னு தைரியாமவே கேட்டுட்டேன். சுடுமூஞ்சி அடிச்சு வைக்கப் போகுதுன்னு ரெண்டு அடி கேப் விட்டெ நின்னேன். ஆனாப் பாருங்க சுடுமூஞ்சி துளி கூட கோபப் படமா கக்கபிக்கன்னு என்னைப் பார்த்து சிரிச்சுடுச்சு. எனக்கு வானம் தலையிலே முட்டுன மாதிரி இருந்துச்சு.. அந்த கணம் பாய்ஸ் பாட்டு எகிறி குதித்தேன் என்னைச் சுத்தி கேக்குது...

கையிலிருந்து ஒரு கவிதை நோட் புக்கை எடுத்து என் கையிலேக் கொடுத்து
"இந்தக் கவிதைக்கெல்லாம் எப்போ நீ படம் வரைஞ்சு முடிக்கிறியோ அந்த நிமிஷமே நான் உன்னக் கட்டிக்க ரெடி"
அப்படின்னு ரெண்டு கண்ணு முழுக்க சிரிப்பு வழிய என்னைப் பார்த்தா... அந்தப் பார்வை ஒண்ணு போதுமே....இன்னும் நூறு ஜென்மம் ஆனாலும் உன்னோடத் தான் என் வாழ்க்கை அமையணும்ன்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டேன்..

பஸ் பிரேக் சத்தம் ஞாபகத்தைக் கலைச்சு விட்டிருச்சு... எழுந்து உட்கார்ந்தேன்...திண்டிவனம் மேம்பாலம் கண்ணில் தெரிந்தது...

பாகம் 2

Friday, November 17, 2006

கவி 25:இன்னும் பெய்யும் மழை - 2

காலம்
உன்னை எனக்கு
அறிமுகம் செய்தது
நீ எனக்குக்
காதலை
அறிமுகம் செய்தாய்....

----------------------------

கண்ணாமூச்சி
உனக்கு பிடித்த
விளையாட்டுத் தானே
கண்டுபிடியேன்
எனக்குள் ஒளிந்திருக்கும்
உனக்குரிய காதலை...

---------------------------------


எனக்காக இல்லை...
என்று தெரிந்தும்
எடுத்து பத்திரமாய்
சேமித்து வைக்கிறேன்...
நீ பாதையோரமாய்
வீசிச் செல்லும்
உன் பார்வைகளை..
-----------------------------------

வந்துப் போனது
நீயா....
என்று திரும்பி பார்க்கிறேன்
கேசம் கலைத்துச்
சென்ற காற்றின்
திசை நோக்கி...

---------------------------------
உன் கோபம்
எனக்குப் பிடிக்கிறது
அதன் இலக்கு
நானாக இருப்பதினால்...

----------------------------------

சிலப் போர்கள்
எப்போதும் ஓய்வதில்லை
என் பார்வைகளும்
உன் மௌனங்களும்...

-------------------------

ஒதுங்கிச் சென்றாலும்
அடிக்கடிச் சந்தித்து
சித்ரவதைச் செய்கினறன
உன் பார்வைகள்

------------------------------

பார்வைகளால்
பேசியது போதும்
இதழ்களால்
ஓரிரண்டு வார்த்தைகள்
எழுதக் கூடாதா?

-------------------------------

ம்ம்ம்
என் நிழலுக்கு
கிடைத்தப் பாக்கியம்
எனக்கு இல்லை
உன் நிழலைத்
தழுவிய படி
என் நிழல்

-----------------------------
எதையாவது கேள்
எதையாவது சொல்
...
நீ பேசவில்லை
உன் விழி பேசியது
என் விரல் நுனியில்
உன் கண்ணீர் துளி

Tuesday, November 07, 2006

கவி 24:இன்னும் பெய்யும் மழை - 1

என்னில் இருந்து
உன்னையும்
உன் நினைவுகளையும்
வேரோடுப் பிடுங்கி
எறிந்து விட்டதாய்
நினைத்து
உன்னைப் பார்த்தேன்
உன் பார்வையால்
உன்னை மீண்டும்
எனக்குள்
விதைத்து விட்டு
மழைக்கால மின்னல் போல்
புன்னகைத்தாய்...

-----------------------------

ம்ம் குடை எதற்கு
என் தாவணி போதும்
நம் இருவருக்கு

மழைக்குக் குடை
விரிக்கப் போன
என் மீது கோபப்பட்டாய்...

-------------------------------

சில புயல்கள்
கரையைக் கடப்பதில்லை
தெரியுமா உனக்கு?

அப்படியா?
அகல விரிந்த
உன் விழிகள்
பார்த்து சொன்னேன்..

என் இதயத்தில்
மையம் கொண்டிருக்கும்
நீயும் ஒரு புயல் தானே..

---------------------------


மழை முடிந்தப் பின்னும்
இன்னும் மலர்களில்
மிச்சமிருக்கின்றன
உன் வெட்கத்தின்
வண்ணங்கள்
-----------------

ஒரு வார்த்தைச்
சொல்லிட்டுப் போ

போதுமா!!!

என் உதடுகளில்
ஒரு வாக்கியமே
எழுதிவிட்டு

கேலியாய் கேட்டாய்
என்னிடம்..

-----------------------------

மழைக் காலப் பரிசா
ஏதாவது கொடுக்கச்
சொல்லிக் கேட்டாய்...

கவிதை வேண்டுமா
என்றேன்...

ம்ம்ம் சரி என்றாய்..

மழலைகளை விட
சிறந்தக் கவிதை
வேறு உண்டோ
என்றேன்...

நீயோ
ச்சீ போடா
என்றாய்...
----------------------------

மழை இன்னும் பெய்யும்......

Wednesday, November 01, 2006

கதை10: கதிரேசன் கதை - பகுதி 3

கதிரேசன் கதை - பகுதி 1

கதிரேசன் கதை - பகுதி 2

மாலைக் காற்று முகத்தில் மோதி ஆனந்தனின் கேசம் கலைத்துப் போட்டது. ஆனந்தனின் தோள் பிடித்து மெல்ல மெல்ல நடந்த தாஸ் வாத்தியாரின் நடையில் கொஞ்சம் தெம்புத் தெரிந்தது.

மதிகெட்டான் சோலை நோக்கி இருவரும நடந்துச் சென்ற குறுக்குப் பாதை ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. பாதையில் கட்டுபாடின்றி வளர்ந்திருந்த பச்சை தாவரங்களின் வாசம் உணர்வுகளை வருடியது. அந்த பாதை ஓரங்களில் ஒளிந்திருந்த வருணணைக்கு மீறிய இயற்கையின் அமைதியும் அதன் அர்த்தங்களும் ஆனந்தனின் மனத்தை பாரமாய் அழுத்த ஆரம்பித்தன.

தாஸ் வாத்தியார் அவன் தோள் பிடியில் இருந்து கையை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும் நின்றார். நிலத்தைப் பார்த்து எதையோத் தேடினார். இலைகளும் சருகுகளும் கோபுரமாய் குவிந்துக் கிடந்த இடத்தில் மண்டியிட்டு உட்கார்ந்துக் கொண்டார். தீடிரெனத் தன் வயதுக்கும் மீறிய சக்தியோடு கைகளால் அந்தக் குப்பைகளை அப்புறப் படுத்தத் தொடங்கினார்.அந்த குப்பைகளுக்குக் கீழே அழுக்கு அடைந்து உடையும் நிலையிலிருந்த சமாதியை வாஞ்சை ததும்பியக் கண்களோடு பார்த்த வண்ணம் பார்வையை நிறுத்தினார்.

"கதிரேசன் இங்கிட்டுத் தான் தூங்குறான்..." வார்த்தைகள் தெளிவாய் வெளிவந்தன. அவர் குரல் பல வருடங்களுக்கு முன்பிருந்த மாதிரி ஒலித்தது. ஆனந்தன் அதைக் கவனிக்காமல் அந்தச் சமாதியை வேதனைக் கலந்த உணர்வுகளோடு பார்த்தப் படி நின்று கொண்டிருந்தான்.அப்பொழுது அவன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் சமாதியின் அழுக்குப் படிந்துப் பழுப்பேறிய இடங்களில் விழுந்துக் கொண்டிருந்தன. அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

கண்ணீர் விழுந்த இடம் கண்டு தாஸ் வாத்தியார் இதழ்களில் ஒரு அழுத்தமான புன்னகை தோன்றியது.

அங்கு சூழந்த அமைதியின் காரணமாய் ஆனந்தன் மனம் பின்னோக்கி பயணமானது. கதிரேசன் உடல் ஊர் வீதியில் கண்டெடுக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்...

"ககதிரை எப்படியாவது காப்பாத்தணும்... அ அவன் நல்லவன்.." தனக்குத் தானே பேசிக்கொண்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான் ஆனந்தன்.

"மாமா..."

ஆனந்தனின் உயிர் மூலையில் அவன் ரகசியமாய் பதிந்து வைத்திருந்த செண்பகத்தின் குரல் மிகவும் பக்கத்தில் கேட்டப் போது அவன் சிலிர்த்துப் போனான். தன் கவலைகளை ஒரு கணம் காணாமல் அடித்து விட்டு செண்பகத்தின் குரலில் கவனம் பதித்தான்.

தன் திக்குவாய் காரணங்களால் செண்பகத்திடம் ஆனந்தன் அதிகம் பேசுவதில்லை. செணபகம் என்றில்லை யாரிடமும் அந்தக் காரணம் கருதியே அதிகம் பேசுவதில்லை. (அதற்கு கதிரேசன் மட்டும் விதிவிலக்கு.) அவளைப் பார்த்தால் ஒரு அசட்டுச் சிரிப்பு. ஓரிரு வார்த்தைகள் அவ்வளவுத் தான். அப்போதும் அவன் அவளிடம் என்ன என்று வாய் திறந்துக் கேட்கவில்லை, அவள் இருக்கும் பக்கம் தலையை மட்டும் திருப்பினான்.

" மாமா.. இதுல்ல மருந்து இருக்கு.. குண்டு அடிபட்ட உங்க கூட்டாளிக் காட்டுல்ல இருக்காரே அவர் காயத்துக்கு மருந்து..கொண்டு போய் கொடுக்குறீங்களா?"

"இ இதுது.. எல்லாலாம் ஓஒனக்கு எப்பபடி?"
ஆனந்தன் அவளை ஆச்சரியமாய் பார்த்தான். அவன் மனத்தில் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுந்தன. அவன் நாக்கு கேள்விகளின் சுழலில் சிக்க செண்பகம் புரிந்துக் கொண்டாள்.

"திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல்ல வச்சு கொடுத்தாய்ங்க.. அவரோட இயக்கத்துக்காரயங்களாம். கதிரேசன் ஊர்கார பொண்ணு தானே நீயு.. ஒன் மாமன் ஆனந்தன் தான் கதிருக்கு ரொம்ப சினேகிதகாரன்.. அவன் கிட்ட இதைக் கொடுத்துரு.. அவன் இதைக் காட்டுக்குள்ளே எப்படியும் கதிர் கிட்டச் சேத்துருவாய்ன்.. கதிரைக் காப்ப்பாத்துணும்.. எங்களை அந்த மிராசு குருப்பும் , போலீஸும் தேடிகிட்டு இருக்கு.. கதிர் கிட்டச் சொல்லு... நெலமைச் சரியானதும் நாங்க அவனைப் பாக்குறோம்ன்னு... அது வரைக் காட்டுக்கு வெளியே கதிர் வர வேணாம்.. வந்த அந்த எஸ்.ஐ அரசுடையப்பன் போட்டுருவான்..... அப்படின்னு சொல்லி இந்த மருந்தைக் கொடுத்துட்டுப் போயிட்டாய்ங்க "
என்று மூச்சு விடாமல் தன்னிடம் அந்த மருந்து வந்து சேர்ந்தக் கதையை ஆனந்தனிடம் சொன்னாள்.

ஆனந்தன் செண்பகம் சொன்ன விசயங்களை மறு சிந்தனையின்றி மனத்தில் வாங்கிக் கொண்டான். அவனுக்கு முன்னை விட இன்னும் அதிகமாய் அந்தப் பொழுதினில் செண்பகத்தின் மேல் காதல் பொங்கி வழிந்தது. அது அவன் முகத்தில் தெரிந்தது.

"மாமா.. ஓங்க கூட்டாளிக்கு இந்த மருந்துப் போட ஆராவது இருக்காய்ங்களா..???"

" நானேத் தான் போடணும்..." திக்காமல் பேசினான் ஆனந்தன்

" மருந்துப் போட்டுவிட வேணும்ன்னா நானும் ஓங்க கூட வர்றேன்... இல்ல நர்ஸ் படிப்பு தானே நானும் படிக்கேன்.."

"அது காடு.. அங்கிட்டு நீ எல்லாம் வந்துக்கிட்டு அவ்வளவு உசிதம் இல்ல" மறுபடியும் வார்த்தைகள் தடையின்றி வந்தன.

"எவ்வளவு காடா இருந்தா என்ன.. ஓங்கக் கூடத் தான் வர போறேன்.. என்னிய நீங்க காப்பாத்த மாட்டீங்களா"

"சரி வா" யோசிக்காமல் பளிச்செனச் சொன்னான் ஆனந்தன்.
"உன்னிய காப்பாத்தறதுக்காக தான் இந்த வாழ்க்கையே இன்னும் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்..." தனக்குள் உரக்கச் சொல்லிச் சந்தோஷப் பட்டுக்கொண்டான்.

இந்த முறை மழைக் கொஞ்சம் வெறித்திருந்த நேரமாய் ஆனந்தன் செண்பகத்தைக் கூட்டிக் கொண்டு காட்டிற்குள் போனான்.

தனிமையில் செண்பகத்தோடு இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும்த் தன் பிறப்பின் பயனாய் நினைத்துக் கொண்டாடிய படி நடந்தான். ஒற்றையடி பாதையில் இருவரும் நெருக்கத்தில் நடந்துப் போய் கொண்டிருக்கும் போது ஒரு கணம் செண்பகம் பாதம் இடறி அவன் மீது அனிச்சையாய் சரிந்தாள். அந்த வினாடியில் அவன் மீது படர்ந்த செண்பகத்தின் வாசம் அவன் சித்தத்தைக் கலக்கியது.

"நீ முன்னாலப் போ செம்பகம்...."

அவளைப் பின் தொடர்ந்த அவன் மனம் அவள் அங்க அசைவுகளில் ஆட்டம் போட்டது. அடங்க மறுத்தது. அவனை ஆசை அலைகளில் சிக்கித் தடுமாறிப் போனான்.. அவன் மூச்சு காற்று அந்த குளிர் காட்டைத் தீயிலிடும் நோக்கில் அவன் நாசி விட்டு புறப்பட்டது.

"இல்ல .. இப்போ கதிரைப் பாக்கப் போறோம் .. செம்பகம் என்னிய நம்பி எனக்காக என் நண்பனுக்கு ஒதவி பண்ண எங்கூட வந்து இருக்கா.. கிறுக்குத் தனமா யோசிக்கக் கூடாது.." தனக்குத் தானே லகான் மாட்டிக் கொண்டான்.

"என்னிக்கிருந்தாலும் செம்பகமும் அவ மொத்த அழகும் எனக்குத் தான்..அப்போ அந்த மொத்த அழகையும் கொஞ்சம் கொஞ்சமா......" ரகசியமாய் தன் மனத்திற்குள் சிரித்துத் தொலைத்தான்..அவன் சிரித்த நிமிடம் செண்பகத்தின் விசும்பல் சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தான்.

செண்பக்த்தின் நினைப்பில் கொஞ்ச நேரம் தன்னை மறந்த நிலையில் நடந்த வந்த ஆனந்தன் அப்போது தான் சுயநிலைக்குத் திரும்பியிருந்தான்....

"செம்பகம் அழதாடா..."

அந்தக் குரல் தன்னுடையது இல்லையே என்று ஆனந்தன் முழுவதுமாய் யோசித்து முடிக்கும் முன்.. அவன் கண்கள் செண்பகம் கதிரேசனை இறுக கட்டிக் கொண்டு ஓ வென அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டன....

ஆனந்தன் கண்களிலும் கண்ணீர்...

"சீக்கிகிரர்ம் ச்செச்ம்ப்கம் ப்ப்போவ்வல்லாம்"

செண்பகம் கதிரேசனுக்கு மருந்திட்டுப் பணிவிடைகள் செய்து அவன் மார்பைத் தன் மொத்தக் கண்ணீராலும் நனைத்துப் பின் அவன் கன்னங்களில் தன் இதழ்கள் வலிக்க முத்தங்கள் பொழிந்து அவனை விட்டு இன்னும் அகல மனமின்றி நின்று கொண்டிருந்த தருணத்தில் ஆனந்தனின் வாயிலிருந்து வார்த்தைகள் வழக்கத்திற்கும் அதிகமாய் திக்கி வந்தன.

அந்த முழுச் சந்திப்பில் ஆனந்தன் கதிரேசனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. கதிரேசன் ஆனந்தனை இறுக அணைத்துக் கொண்டான். செண்பகமும் கதிரேசனும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனந்தன் அந்த விவரஙகளைக் காதினில் வாங்கவே இல்லை. அவனுடைய உலகம் அவன் கண்முன்னே இடிந்துக் கொண்டிருந்தது. அதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாதவனாய் உண்மையிலே திக்கிப் போயிருந்தான்.

மாலை நேரம் நெருங்கும் போது காட்டை விட்டு செண்பகமும் ஆனந்தனும் கிளம்பினார்கள். கிளம்பும் போது கதிரேசன் ஆனந்தனை இன்னொரு முறை இறுகத் தழுவினான்.

"ஓங்கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லியிருக்கணும்.. நான் சொல்லாதது தப்புத் தான்.. என்னிய மன்னிச்சுரு மாப்பி.. எல்லா விசயம்ங்கறது செம்பகத்தையும் சேத்தி தான் " என்று அவன் காதுகளில் கிசுகிசுப்பாய் சொன்னான்.

ஊர் திரும்பும் வரை ஆனந்தன் செண்பகத்திடம் எதுவும் பேசவில்லை. ஊர் எல்லை நெருங்கும் போது மழை வலுவாகப் பிடித்துக் கொண்டது

"திண்டுக்கல்ல கதிரேசன் கூட்டாளிக ஒங்கிட்ட மருந்துக் கொடுத்தனுப்ப நீ க்திரேசன் ஊர்காரிங்கறது மட்டும் தான் காரணமா....."
மழையின் சத்தங்களுக்கு இடையில் ஆனந்தன் நிதானமாய் செண்பகத்தை முகம் பார்த்துக் கேட்டான்.

'மாமா ஓங்க கிட்ட நான் எல்லாத்தையும் சொல்லியிருக்கணும் .. சொல்லாதது தப்புத் தான்...எல்லாத்தையும்ங்கற்து அவரையும் சேர்த்தி தான்.. என்னிய மன்னிச்சுருங்க" என்று சொன்ன செண்பகம் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

"அவரை அந்த காட்டுக்குள்ளே யாரும் ஒண்ணும் செய்ய முடியாது.. அவர் இருக்க இடம் தாஸ் வாத்தியார் சொல்லித் தான் நமக்கே தெரியும்...அந்த அரசுடையப்பன் எஸ்.ஐயை யாராவது காட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போய் காட்டுனாத் தான் உண்டு.. அப்படி யார் இருக்கா இந்த சுத்துப் பட்டு கிராமத்துல்ல...நீங்க கவலைப் படாமப் போங்க..."

ஆனந்தனைச் சகஜ நிலைக்குக் கொண்டு வரச் செண்பகம் சொன்ன அறுதல் இது....

அன்றிரவு ஆனந்தன் தன் அறையைப் பூட்டிக்கொண்டு மவுனமாய் கதறினான். பல வருடங்களாய் செம்பகத்திற்கு கொடுப்பதற்கென அவன் பறித்து வைத்திருந்த ரோஜாப் பூக்களின் காய்ந்த இதழ்கள் மீது படுத்து அப்படியே உறங்கிப் போனான்.

சரியாக அதற்கு ஒரு வாரம் கழித்து கதிரேசனின் உடல் ஊர் வீதியில் கிடந்தது.

அதற்குப் பின் செண்பகத்தின் அப்பா உபயத்தில் ஊர் அரசியலில் சின்னதாய் இடம் பிடித்தது. அவர் கைகாட்டியதில் ஊர் தாண்டி அவன் எல்லைகள் விரிந்தது.. ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் எனப் பெயர் வாங்கிய அவன் சென்னை வரை போனது... பின்னொரு நாளில் செண்பகத்தின் அப்பா அரசியல் காரணுங்களுக்காக செண்பகத்தை அவனுக்குக் கல்யாணம் செயது வைத்தது. செண்பகத்தை மணந்தானே தவிரச் செண்பகத்துடன் அவனுகிருந்த காதல் செத்துப் போயிருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவனுக்கு எல்லாமே ஒரு கனவு போலிருந்தது..

இன்று அவன் மாண்புமிகு தமிழக அரசு அமைச்சர் ஆனந்தன்... அந்த உணர்வு தட்ட கண்களைத் திறந்தப் பார்த்தான்...

அங்கு அவன் முன்னால் சாமாதி மீது, தவத்திலிருக்கும் ஒரு முனிவர் போல தாஸ் வாத்தியார் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். வலது கையில் ஒரு துப்பாக்கியைச் சரித்துப் பிடித்து இருந்தார்.

ஆனந்தனை ஆழ ஊடுருவி பார்த்த தாஸ் வாத்தியார் துப்பாக்கியைத் தூக்கி அவன் முகத்திற்கு நேராக குறி வைத்தார்.

"இங்கிட்டு வச்சுத் தான் எஸ்.ஐ அரசுடையப்பனைப் போட்டேன்... கதிரேசனை வீரனாத் தான் வளத்தேன்.. ஆனா அவன் முதுகுல்ல குண்டு பட்டுச் செத்துருக்கான்ய்ன்.."

தாஸ் வாத்தியார் எழுந்து வந்து துப்பாக்கி முனையை ஆனந்தனின் நெற்றி பொட்டில் வைத்து அழுத்தினார். மறு கையைத் தன் நெஞ்சின் மீது வைத்து இரண்டு தடவை அடித்துக் கொண்டார்.

"ஆனந்தா... எதுக்காக இப்படி பண்ணுன?" கேள்வியில் ஆற்றாமையும் அவதியும் வலியும் கலந்து வழிந்தன.

"க்க்திரேச்சன் செம்பகத்தக் காகாதலிச்ச்சருக்கக் கூடாதுது...காததலிச்ச்" இரண்டாவது முறை அவன் முடிப்பதற்குள் அவன் நெற்றியினை தாஸ் வாத்தியாரின் துப்பாக்கித் தோட்டாத் துளைத்தது....

பறவைகள் கிரிச்சிடும் சத்தம் கேட்டது.

சட்டைப் பையிலிருந்த சிகப்பு ரோஜாவை எடுத்து அவன் உடல் மீது வைத்து விட்டு காட்டை நோக்கி நடந்தார் தாஸ் வாத்தியார்

-The end

Thursday, October 26, 2006

கதை 10:கதிரேசன் கதை - பகுதி 2

கதிரேசன் கதை முதல் பாகம் படிக்க...

"ஏய் திக்குவாயா, வெளியே வாடா"

சத்தம் போட்டுக் கூப்பிட்ட கால்சட்டைச் சிறுவர் கும்பலில் ஒருத்தன் ஒரு கல்லை எடுத்து வீட்டிற்குள் விட்டெறிந்தான்.

கல் விழுந்த வேகத்தை விட அதிகமான வேகத்தோடு வீட்டிற்குள் இருந்து இன்னொரு கால்சட்டை பையன் வெளியே வந்தான். அவன் மற்ற சிறுவர்களை விட நல்ல உயரம். தமிழர் நிறத்திற்கு பொருத்தமில்லாத செவ்வண்ணத்தில் இருந்தான். தீர்க்கமான பார்வை. வேகத்திலும் இடராத நடை.

"ஆனந்தனைத் திக்குவாயன்னு கூப்பிட்டவய்ன் ஆருடா?" சிறுவன் குரலில் கம்பீரம் களைக் கட்டியது. அவன் கண்கள் சிறுவர்கள் மீது சுழன்றன.

பதில் எதுவும் வரவில்லை. "வீட்டுக்குள்ளே கல் விட்டவய்ன் ஆருடா?" அடுத்தக் கேள்விக்கும் பதில் வரவில்லை.

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு அவன் திரும்பி வீட்டிற்குள் நுழையப் போனான். சரியா அந்தத் தருணத்தில் அவன் மீது மழையெனக் கற்கள் வந்து விழுந்தன. அவன் முகத்தை இருகரங்களாலும் மூடிக் கொண்டான். இருந்தும் அவன் நெற்றியில் பட்டு தெறித்த கல் ஒன்று அவன் முகத்தை ரத்தச் சேறாய் அடித்தது.
கல் வீசிய சிறுவர்கள் திரும்பி ஓட ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருத்தன் நின்னு சத்தமாச் சொன்னான்.

"டேய் கதிரு, எங்களுக்கும் அந்தத் திக்கு வாயனுக்கும் தான் சண்டை. நீ குறுக்கால வந்து தர்மத்துக்கு அடி வாங்கிகிட்ட.. இன்னொரு தடவ அந்தத் திக்கு வாயனுக்காக எங்க கூட மோதாதே..சில்லு சிதறிடும்டீயோ புரியுதா?

கதிர் ரத்ததைப் பொருட்படுத்தாமல் எழுந்து அவர்களை விரட்டப் போன அதே நேரம் தாஸ் வாத்தியார் வீட்டிற்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. கதிர் தன் கால்களைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"ஆனந்தா.. !!!" தாஸ் வாத்தியார் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.

ஆனந்தன் தான் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான்.

"இங்கிட்டு என்ன நடந்துச்சு .. சொல்லு?" தாஸ் வாத்தியார் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார்.

"அது வந்துங்கப்பா.." என்று ஆரம்பித்த கதிரேசனைப் பேசவிடமால் பார்வையாலேத் தடுத்தார் தாஸ் வாத்தியார். அவர் ஆனந்தனையேப் பார்த்தார். ஆனந்தன் பரிதாபமாய் கதிரேசனைப் பார்த்தான்.

"சொல்லு.. நீ தான் பொய் சொல்ல மாட்டியே... என்ன நடந்துச்சுன்னு அப்படியே சொல்லு" கதிர் ஆனந்தனைப் பார்த்துக் கோபம் கொப்பளிக்கச் சொன்னான். ஆனந்தன் திக்கி திக்கி நடந்த விவரங்களை ஒன்று விடாமல் தாஸ் வாத்தியாரிடம் ஒப்பித்து முடித்தான்.

ஒரு ரோஜாப் பூவுக்காக இவ்வளவு தகராறா? ஏன் நம்ம வீட்டுத் தோட்டத்துல்ல ரோஜா பூவே இல்லையா.. அங்கிட்டு அவிஙக தோட்டத்துல்ல போய் பறிச்சுருக்க..." தாஸ் வாத்தியார் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார்.

"அவிங்கத் தோட்டத்துல்ல தானே சிகப்பு ரோஜாப்பூ வச்சிருக்காயங்க.. அதாய்ன் போய் பறிச்சுருக்காய்ன்"

கதிர் மெல்ல முணுமுணுப்பாய் சொன்னான்.

"இந்தா இங்கிட்டு என் மொகம் பாத்துப் பேசு.. பொட்டப்புள்ளக் கணங்காத் தரையப் பாக்காதே.. சிகப்பு ரோஜாச் செடி தானே வேணும்.. கவுஞ்சியிலே இர்ந்து வாங்கிட்டு வரச் சொன்னா ஆச்சு..இங்கிட்டு நடந்த விசயம் இங்கிட்டோட முடியணும். நீ அவிங்களை அடிக்கக் கிளம்பிறபிடாது ..தெரியுதா...?"

தாஸ் வாத்தியார் கையில் கதிரேசன் காயத்திற்கு மருந்து இருந்தது. ஆனந்தன் கதிருக்கு வலிக்காத வண்ணம் பொறுமையாக அவன் காயத்தைத் துடைத்து மருந்து வைத்தான். ஆனந்தன் சட்டைப் பையில் இருந்த சிகப்பு ரோஜா அவங்க நட்பைப் பார்த்து புன்முறுவல் செயவது போலிருந்தது.
மறுநாள் கதிரேசன் மீது கல் வீசிய பசங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்த அனைத்து ரோஜாச் செடிகளும் எதோ காரணத்தால் பட்டுப் போக ஆரம்பித்தன.

இப்பொழுது தாஸ் வாத்தியார் வீட்டில் கிட்டத் தட்ட ஏழு எட்டு சிகப்பு ரோஜா செடிகள் இருந்தன. எல்லாச் செடிகளிலும் கொத்து கொத்தாய் அழகிய சிகப்பு ரோஜாப் பூக்கள் நித்தம் பூக்கின்றன.

"மாப்பி, பத்து வயசுல்ல ஆரம்பிச்ச ரோஜாப்பூ கிறுக்கு இன்னும் போகல்ல உனக்கு.. தைப் பொறந்தாக் கழுதை உனக்கு இருபதைஞ்சு வயசு ஆயிரும்.."
சிலம்ப பயிற்சி முடித்து விட்டு துண்டால் முகத்தைத் துடைத்தப் படி கேட்டான் கதிர். கதிரின் சிறுவயது அழகு இப்போது பன்மடங்குப் பெருகியிருந்தது. தேகப் பயிற்சி அவன் உடலை இரும்பைப் போல் உறுதிப்படுத்தியிருந்தது.

உதட்டில் சதா நிலைக் கொண்ட அந்த சிறு புன்னகை அவன் வசீகரத்தை மேலும் கூட்டியது.

ஆனந்தன் சட்டைப் பையில் ஒரு சிகப்பு ரோஜா காம்போடு தலை நீட்டியது.
ஆனந்தன் அதிக உயரமில்லை என்றாலும் குள்ளமில்லை. கொஞ்சம் ஒல்லியான தேகம். பொது நிறம். சிறு வயதில் இருந்து அவனை விட்டு இன்றும் அவனோடு இப்போதும் பிரியாமல் இருப்பது ஒன்று அவன் திக்குவாய்.. இன்னொன்று அவன் கதிரோடு கொண்ட நட்பு.

"ஆனந்தா பதில் சொல்லணும்ப்பூ.. கேக்குறோம்ல்ல பதில் சொல்லுப்பூ"

முகத்தைத் துடைத்தக் கையோடு தண்டால் எடுக்கத் தரையில் அமர்ந்தான் கதிர்.

"நீ..நீக் கூடத் தான் வாரத்துக்கு ரெண்டு தரம் திண்டுக்கல்லுக்கு சைக்கிள் எ எடுத்துட்டுப் போயியிடுரே.. நாநான் கேகேட்டாலும் காரணம் சொல்லுறீயாப்ப்பூ"

கதிரேசன் பதில் சொல்லாமல் சிரித்தான். தண்டால் எடுத்து முடித்து விட்டு ஆனந்தன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

"திண்டுக்கல் கடைவீதிப் பக்கம் ஒரு நல்ல சிவத்த புள்ளைய நான் ஆருக்கும் தெரியாம கல்யாணம் கெட்டி வச்சிருக்கேன்.எங்க ரெண்டு பேத்துக்கும் ஒரு பொட்டப் புள்ளக் கூட இருக்கு, வர்ற சித்திரை வந்தா அந்தப் புள்ளக்கு வயசு ஒண்ணு முடிஞ்சுப் போயிடும்... இந்தச் சேதிய ஓங்கிட்டச் சொன்னா எங்கப்பார் கிட்ட போய் ஒளறி வைக்கமாட்டியா அதான் நான் சொல்லல்ல போதுமா?" என முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு ஆனந்தன் நம்பும் படி பேசினான்.

ஆனந்தன் அதை நம்பவில்லை.

"சரி ஒன் சிகப்பு ரோஜாக் கதையச் சொல்லுப்பூ"

"நாநான் ஒரு புள்ளயக் காதலிக்கேன்.. அவ ஆசசப் பட்டாங்கறதுக்காக தான் நிதமும் அவளுக்கு சிகப்பு ரோஜா பறிச்சிட்டு போறேன் போதுமா?"

"அடக் கொக்காமக்கா,,, காதலிக்கீயா.. அந்தப் புள்ளக்கி இது தெரியுமாப்பூ..பூக் கொண்டுப் போய் கொடுத்துட்டு இருக்கா..கடைசியிலே அவ கல்யாணத்துக்கு உன்கிட்டயே ரோஜாப் பூ மாலைக்கு ஆர்டர் வைக்கப் போறா..பாத்துப்பூ"

கதிரேசன் சிரித்தான். ஆனந்தன் உதட்டளவில் சிரித்தாலும் உள்ளுக்குள் உறுதியாய் சொல்லிக் கொண்டான்.

"எஞ் செண்பகத்துக்கு என் மனசு புரியும்..."

சரி சரி.. ஓம் பஞசாயத்தை வந்து வச்சிக்கிறேன்... இப்போ எனக்கு ஓஞ் சைக்கிளைக் கொஞ்சம் கடனாக் கொடு.. திண்டுக்கல் வரைக்கும் போயிட்டு வர்றேன்..."

கதிரேசன் தேகப் பயிற்சி முடித்து விட்டு குளிக்க்க் கிளம்பினான்.

"க்கதிரு நானும் வரேன்...எனக்கும் இங்கிட்டு மலையிலே எந்த ஒரு வேலயும் இல்ல"

"ம்ம்ம் பொய் சொல்லாதே உனக்கு எம்புட்டு வேலைக் கிடக்குது... அங்கிட்டு அந்த கல்லுல்ல் உக்காந்துக்க அப்படியே கையிலே சிகப்பு ரோசாவைப் பிடிச்சுக்க..அந்தப் புள்ளயப் பத்தி நினைச்சிகிட்டு அப்படியே கனாக் கண்டுகிட்டு இரு அதுக்குள்ளே நான் திரும்பி வந்துருவேன்.."

ஆனந்தனிடம் சைக்கிள் வாங்கிப் போன கதிரேசன் அன்றிரவு ஊர் திரும்பவில்லை... காலையும் வராது போகவே ஆனந்தன் மனம் கலவரமானது...

மதியம் வீட்டுல்ல வச்ச மீன் குழம்பைக் கூட ஏனோ தானோன்னு சாப்பிட்டுட்டு ஒர்ரே சிந்தனையாக் கிடந்தான்.
ஒரு மூணு மணி வாக்குல்ல தாஸ் வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினான். அவர் வீட்டுக்குச் சமீபமாய் போலீஸ் ஜீப் நிற்பதைக் கண்டு ஆனந்தன் அடி வயிற்றில் பயப் பந்து உருண்டு விளையாடியது.

ஆனந்தன் வீட்டுக்குள் போகாமல் சுவத்தோரமாய் பதுங்கி நடப்பதைக் கவனித்தான்..சுருட்டி விட்ட மீசையை நீவிய படி நின்றிருந்த காக்கிச் சட்டைக்காரர் சன்னமான குரலில்தான் பேசிக் கொண்டிருந்தார்.தாஸ் வாத்தியார் முகம் வாடிப் போயிருந்தது. அவர் கைகள் அனிச்சையாய் கட்டிக்கொண்டன. அவர் காக்கிச் சட்டைக்காரரிடம் எதோப் பேசினார். வார்த்தைகள் ஆனந்தன் காதுகளில் சரியாக விழவில்லை.

"வாத்தியாரே.. இது மொத தடவைக் கிடையாது.. ஒங்க மவனை பெரிய இடத்தோடு பிரச்சனைப் பண்ண வேணாம்ன்னு ஒங்களைப் பாக்கும் போதெல்லாம் சொல்லிகிட்டுத் தானே இருந்தேய்ன்... இப்போ எல்லாம் கைமீறி போயிடுச்சுங்க..."

ஆனந்தனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. முகம் வேர்வையில் வழிந்தது.

"நேத்து சாயங்காலம் மார்கெட்ல்ல வச்சு மிராசு மருமவனைப் போட்டுருக்காயங்க.. வெட்டியிருக்காயங்க... தப்பி ஓடும் போது மிராசு மருமயன் கூட இருந்த அரசுடையப்பன்.. எங்க ஸ்டேஷன் எஸ்.ஐ சுட்டுருக்காய்ரு... அதுல்ல கதிருக்குத் தோள்ல்ல குண்டு பட்டிருக்கு... இப்போ அவிங்க கோஷ்ட்டியா மதிகெட்டான் சோலைக்குள்ளேப் பதுங்கித் திரியறாய்ங்களாம்..மிராசு இவன் உசுரு வேணும்ங்கிறாரு.. பார்த்த இடத்துல்ல அவனைப் போட்டு தள்ளுறோம்ய்யான்னு அரசுடையப்பன் எஸ் ஐ கங்கணம் கட்டிகிட்டு அலையுறாரு...பெரிய இடத்துல்ல எல்லாம் பகையாப் போயிடுச்சு"

ஆனந்தன் இரண்டு கைகளையும் தலை மீது வைத்துக் கொண்டு மண்ணில் உட்கார்ந்தான்.அவன் கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. அதைத் துடைக்கத் திராணியற்றவனாய் மண்ணில் முகம் புதைத்தான்.

"வாத்தியாரே.. வந்து நேரமாச்சு.. விசாரிக்க வர்றதாச் சொல்லிட்டு தான் வந்தேன்..விசயத்தைச் சொல்லிட்டேன்...இங்கிட்டு வந்தா கதிரேசன் கதை அம்புட்டுத் தான்.. அப்படியே அவனைக் கேரளாவுக்கோ அதையும் தாண்டியும் எங்கிட்டாவதுப் போகச் சொல்லுங்க... உசுராவது மிஞ்சும்.."

"அவன் போக மாட்டான்ய்யா" வாத்தியாரின் குரல் தீனமாய் ஒலித்தது.

"பழகுன்ன பாவத்துக்கு ஒங்ககிட்டத் தகவல் சொல்லத் தான் நான் வந்தேன்..என் சோலி முடிஞ்சுது நான் கிளம்புறேன்.. எஸ்.ஐ எந்நேரம்ன்னாலும் வருவார்.. பார்த்துப் பேசுங்க"

காக்கிச் சட்டைக்காரர் போனதும் அவசரமாய் வீட்டுக்குள் நுழைந்தான் ஆனந்தன்.

தாஸ் வாத்தியார் தூணைப் பிடித்துக் கொண்டு ஆழமானச் சிந்தனையில் இருந்தார்.

"நாநா..ன் கதிரைப் பாக்கப் போறேன்..நா..நான் சொன்னா அவன் கேகேப்பாய்ன்....அவனைக் கேரளாவுக்குப் போச் சொல்லுறேன்..." வழக்கத்தை விட அதிகமாய் திக்கியது ஆனந்தனுக்கு.

தாஸ் வாத்தியார் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.

கதிரேசனின் குரல் அவர் காதுகளில் கேட்டது.

"இது என் ஊர்.. இவிங்க எல்லாம் எம் மக்கள்...இவிங்களை விட்டுட்டு நான் எங்கேப் போவேன்.. அந்த மொதலாளி பயல்வ..இவிங்க ஓடம்புல்ல ஓட்டப் போடதக் கொறையா அவிங்க ரத்தத்தை ஊறிஞ்சுறாயங்க... அதைக் கேள்விக் கேட்டா.. போலீஸை விட்டு மெரட்டுறாயங்க.. நான் பயப்படமாட்டேய்ன்...இங்கிட்டு இருந்து கதிரேசன் போ மாட்டான்... வேணும்ன்னா அவன் உசுருத் தான் போகும்..இனி இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்ய்க.."


"எ என்ன.. எதுவும் பேசமாட்டீங்களா...?"

"ம்ம்.. அவன் யார் சொன்னாலும் கேக்கமாட்டாய்ன்... நான் என்னத்தச் சொல்ல?"

ஆனந்தன் அழுகையும் ஆவேசமும் ஆட்கொள்ள மதிகெட்டான் சோலை நோக்கிப் போனான். வானம் அவனுக்கு வழி காட்ட மறுத்து காற்றுடன் கைக்கோர்த்துப் பெரு மழையெனப் பொழிந்தது. ஆனந்தனுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் அழுகை அதிகமானது.

காற்றும் மழையும் ஓய மூன்று நாட்கள் பிடித்தன.

கதிரேசனைப் பற்றி ஊர்மக்கள் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர். கதிரேசன் மீது ஊர் மக்களுக்குப் பிரியம் ஜாஸ்தி. அந்த ஊரிலேயே அதிகம் படித்தவன் அவன் தான்.ஊர் திருவிழாவில் அவன் கம்பு சுத்துவதைப் பாக்கவே அந்த ஊர்க் குமரிகள் தினம் தினம் திருவிழா வராதான்னு ஏங்குவார்கள். அறிவிக்கப் படாத மகளிர் ரசிகர் மன்றம் ஒன்று கதிரேசனுக்காக மும்முரமாக இயங்கி வந்தது.

கதிரேசன் தங்களுக்கு அடிக்கடி செய்த உதவிகளை எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர்.

"என்னப் பேசி என்ன பிரயோசனம் மிராசு மருமவனை இல்ல கதிரு தம்பி வெட்டியிருக்கு.. எஸ் ஐ அரசுடையப்பன் வேற மிராசுக்கு சொந்தமாமே.. கதிரைப் போடாம விடுறது இல்லன்னுச் சாமி சத்தியம் பண்ணிட்டு அலையுறானாமே..."

"மிராசு மருமவன் என்ன சத்யசீலனா... பொட்டைக் கள்ளன்..வயல் வேலைக்கு வந்தப் பிள்ளையள இழுக்கறவன் தானே.. கதிர் தம்பி சரியாத் தான் போட்டிருக்கு"

"கதிர் தம்பி எதோ இயக்கத்துல்ல இருக்குதாமா.. அந்த இயக்கம் அடுத்த தேர்தல்ல நிக்கப் போவுதாம். அப்போக் கதிர் தம்பிக்குத் தான் ஓட்டுப் போடலாம்ன்னு இருந்தேன்"

ஊருக்கு ஒதுக்குப்புறமானக் குடியிருப்புக்களில் இந்தப் பேச்சு பலமாகவே வீசிக் கொண்டிருந்தது.

ஆனந்தன் சிகப்பு ரோஜா பறிப்பதை மறந்தான்... சதா கதிர் ஞாபகமாவே அலைந்தான்...

சரியாக ஒரு வாரத்துக்குப் பின்..ஊர் மக்கள் கதிரைப் பற்றிய பேச்சைக் குறைத்திருந்த ஒரு அதிகாலை வேளையில்

தாஸ் வாத்தியார் வீட்டு நாய் அவர் வேட்டியைப் பிடித்து இழுத்தது...
நாயை விரட்டிக் கொண்டு தாஸ் வாத்தியார் விழுந்தடித்து ஓடினார்...ஓடும் போதே அவர் மனம் சுக்கு நூறாய் ஒவ்வொரு யோசனையிலும் உடைந்துக் கொண்டிருந்தது...

ஓட்டம் முடிந்த இடத்தில் நாய் சுற்றி சுற்றி வந்தது..

எல்லோரும் பார்த்து பரவசப்பட்ட அந்த முகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கோரச் சேதமடைந்து ரத்தச் சேற்றில் குளித்து கிடந்தது...

நித்தம் நித்தம் தேகப் பயிற்சியினால் உரமேற்றபட்ட அந்த இரும்பு தேகம் உருக்குலைக்கப்பட்டு நடு வீதியில் கிடந்தது...

ஊருக்கெல்லாம் உதவிய அந்தக் கால்களும் கரங்களும் கண்டபடி வெட்டப் பட்டு கிழிந்துத் தொங்கிக் கொண்டிருந்தன....ஈக்கள் அந்த இடத்தில் இறுதி மரியாதைச் செலுத்திக் கொண்டிருந்தன...

தாஸ் வாத்தியார் பார்வை உடலின் கீழ் பாகம் காணும் முன் அவர் கைகள் தானாய் அவர் வேட்டியைக் களைந்து உடல் மீது போர்த்தியது...

ஊருக்கு உதவ நினைத்த உனக்காடா மகனே.. இந்த நிலைமை.... அவர் குரல் எழவில்லை....

அவர் குரல் எழுந்தப் போது அதில் ஒலித்தப் பெயர்......

"உன் நண்பனைப் பாருடா ஆனந்தா.............."


இன்னும் இருக்கு கதிரேசன் கதை...

Wednesday, October 18, 2006

கதை 10:கதிரேசன் கதை - பகுதி 1

"ஏனப்பா... இ இது என்னப் பாட்டு.. தமிழ் தானா.. கேகேட்டா ஒண்ணும் விளங்கல்ல்" குவாலிஸ் காரின் பின் சீட்டில் ஒய்யாரமாய் சாய்ந்துக் கொண்டு டிரைவரைக் கேட்டார் ஆனந்தன்.

"ஐயா இதுதானுங்க இப்போ ஹிட் பாட்டு..எளையராஜா மகன் போட்ட பாட்டுங்க,.. ஒரு ரெண்டு தடவைக் கேட்டா உங்களுக்கும் பிடிச்சுப் போகும்ங்க"

"அட என்னமோ போப்பா நமக்கெல்லாம் ககண்ணதாசன் எழுதி எம்.எஸ்.வி போட்டப் பாட்டுத் தான் பாட்டு மாதிரி இருக்கு..நீ சசவுண்ட்டைச் சசன்னமா வச்சுக்க.. இன்னும் ஊர் போறதுக்கு எவ்வளவு நேரமாகும்?"

ஆனந்தனுக்கு வயசு அம்பதுக்கும் சற்று இருக்கும், டிரைவருக்கு வயசு முப்பதுக்குள்ளே இருக்கும். ரசனையின் இடைவெளிக்கு இந்தக் காரணம் போதாதா? குவாலிஸின் முன்னால் பறந்தக் கட்சிக் கொடி, வண்டி நம்பர் பிளெட்டில் இருந்த என்ற ஒற்றை எழுத்து ஆனந்தன் அதிகார மையத்தின் பிரதிநிதி என்பதை சாமான்யர்க்ளுக்கு விளம்பரப்படுத்தியது.

"திண்டுக்கல் நெருங்கிட்டோம்ய்யா.. இன்னும் மூணு மூணரை மணி நேரத்துல்ல கொடைக்கானல் போயிரலாம்ய்யா.. அங்கிட்டு இருந்து ரோடு நல்லா இருந்தா மதியம் 3 மணிக்கு பூம்பாறைத் தாண்டிரலாம்..பூண்டி அங்கிருந்து பக்கம் தானே!"

"ஏம்ப்பா பூண்டி ரூட் உனக்கு நல்லா தெரியுது விசாரிச்சிகிட்டியா..முன்னாடி டிராவல்ஸ்க்கு ஓட்டுன்னப்போ வந்து இருக்கியோ?" டிரைவரின் பதிலை ஆனந்தன் எதிர்பார்க்கவில்லை.

"நான் லேசா தலையைச் சாச்சுக்கிறேன் நீ ஊர் கிட்ட வரும் போது எழுப்பி விடு" ஆனந்தன் கையைத் தலைக்குக் கொடுத்து இன்னும் வசதியாக இருக்கையில் சாய்ந்துக் கொண்டார்.

அதே சமயம் பூண்டி ஊராட்சி எல்லை.

"அமைச்சர் ஆனந்தன் அவர்களைப் பூண்டி பகுதி கழகம் வரவேற்கிறது" ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி வாசித்து முடித்த பாண்டி முகம் கோபத்தில் சிவந்துப் போனது.

"அந்தப் பெயிண்டர் பன்னி எங்கன இருக்கான்.. விளக்குமாத்து பயல்வளா.. அண்ணனுக்குச் செயல் புயல்ன்னு பட்டமிருக்குல்ல அது அந்த ...(படிப்பவர் ரசனைக் கருதி வார்த்தைகளை சென்சார் செய்கிறேன் &&&&& - என்று குறிக்கப்படும் இடங்கள் தணிக்கைச் செய்யப்பட்டவை என் அறிக) தண்ணியப் போட்டுட்டுச் செத்து ஓழிய வேண்டியது தானே.. செய்யச் சொன்ன ஒத்த வேலையை சொத்தயாப் பண்ணியிருக்கான்.. பாத்தா வெட்டிபுடுவேன்னு சொல்லு.. ஏய்.. கரகாட்டக் குரூப் மருதையிலே இருந்து வாந்தாச்சா..?"

"கொடைக்கானல் வந்துட்டாங்களாம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல்ல இங்கே இருப்பாய்ங்கண்ணே"

"செத்த மூதிகளா.. கட்டு கட்டா நோட்டை வேட்டிக்குள்ளே வச்சு அவுத்து விடல்ல.. வட்டிக்கு வாங்கிச் செலவு பண்ணிகிட்டு இருக்கேய்ன்.. நேரத்துக்கு வர்றல்ல.. இந்த மலைக்காட்டுல்ல கேரட் தோட்டத்துல்ல பொதைச்சுருவேன் சொல்லிட்டேன். ஆமா மாலைக்கும் கீரிடத்துக்கும் சொல்லியிருந்தெனே என்னடா ஆச்சு"

"ரெடிண்ணே, கவுஞ்சியிலே இருந்து ஆளு மாலையோடப் பொறப்பட்டாச்சுண்ணே"

"இந்தா &&&&&.. எதாவது நேரம் தப்பிச்சுன்னு வை வர்ற மாலை உன் சவத்துக்குத் தான் போடுவேன் பாத்துக்க...சமையல் ஒழுங்கு எல்லாம் பார்த்தியா...?"

"ஆச்சுண்ணே.. ரெடியாகிட்டு இருக்குண்ணே"

பாண்டி கட்சி அலுவலகம் நோக்கி நடந்தான். ஆபிஸ் வாசல்ல நுழையவும் வழ்க்கம் போல் தாஸ் வாத்தியாரின் இருமல் சத்தம் அவன் காதில் விழுந்து அவன் சிடுசிடுப்பை அதிகப்படுத்தியது.

"&&&&& அந்தக் கிழட்டு வாத்தியானை கொளுத்தி தொலைங்கடா.. &&&& எப்படியும் அவன் செத்தா அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரு &&&& கிடையாது.. அவன் போனா அவன் இருக்க வீட்டையும் ஆபிசோடச் சேத்து வளைக்கலாம்ன்னு பாக்குறேன்.. போவேனாப் பாருன்னு அடம் பிடிக்கிறான்"

அடுத்த சில மணி நேரங்களில் பூண்டி ஊராட்சி அமர்க்களப்பட்டது. தன் சொந்த அக்கா மகன் திருமணத்திற்கு வருகை தரும் அமைச்சர் ஆனந்தனை வரவேற்பதில் கழக கண்மணிகள் கடும் போட்டியில் இருந்தனர்.

"ஓங் கட்சிகாரங்க எல்லாம் ஒன்னிய வரவேக்க வேட்டிய இறக்கிவிட்டுகிட்டு ஊர் எல்லையிலே நிக்குறாய்ங்க.. நீ பூனை மாதிரி பதுங்கி உள்ளே வந்துருக்க..."

"அக்கா நான் ககட்சிக்காரனா வர்றல்ல ஒன் ததம்பியா ஓன் வீடு கல்யாணத்துக்கு இல்ல வந்து இருக்கேன்...எங்கண எம் மருமவளைக் காணும்.."

"இருக்கா காலத்துக்கும் சேத்து வச்சிருந்த வெக்கத்தை மொகத்துல்ல அப்பிகிட்டு பின்னால தான் நிக்கா.. அது கிடக்குது.. செம்பகம் வர்றல்லயா. வருவான்னு ஆசயா இல்ல இருந்தோம்"

ஒரு பெரூமூச்சு மட்டுமே பதிலாய் தந்தார் ஆனந்தன்.

"ஏன் தம்பி செம்பகம் இன்னுமா எல்லா விசயத்தையும் நினைப்பு வச்சுகிட்டு இருக்கு.. 30 வருஷம் ஓடிப் போயிருச்சு.. ஒங்களுக்கும் மூணு புள்ளக இருக்கு... என்ன த்ம்பி இது....?"


"யக்கா.. விவிசேசத்துக்கு வந்துருக்கேன் விசாரணைப் பண்ணிகிட்டு இருக்க.. இந்தூரூக்கு என் மூச்சு இருக்க வரைக்கும் வரக் கூடாதுன்னு நினைச்சேன்.. இப்போ ஒம் புள்ளக்கு ககலியாணம்ன்னு சொல்லி வர வச்சுட்ட... சரி..அந்தப் பேச்ச விடு.. ஆவுற வேலையைப் பாப்போம்"

ஆனந்தன் சொல்லிமுடிக்கவும் வாசலில் செயல் புயல் உள்ளிட்ட இதர பட்டப்பெயர்களோடு இணைக்கப்பட்ட ஆனந்தனின் பெயர் கொண்ட கோஷங்கள் பேரிரைச்சலாய் கேட்டது.பாண்டி தலைமையில் கட்சிக்காரகள் வீட்டுக்குள் நுழைய முண்டியடிக்க...வாசலுக்கு வந்தார் ஆனந்தன்

"ய்ப்பா நானே கட்சி ஆஆபிஸ்க்கு வர்றேன்யா.. கல்யாண வீட்டைக் ககட்சி மேடையாக்கிராதீயப்பா..."

"அண்ணனுக்கு நாட்டுக் கோழி குழம்பு, ஆட்டுக் கால் சூப்பு, நண்டு வறூவல், எறா, புறான்னு அம்புட்டு தயார் பண்ணி வச்சிருக்கோம்ல்ல எல்லாம் என் ஏற்பாடு தான்... இன்னும் கரகம் , ஓயிலாட்டம்ன்னு நிறைய ஏற்பாடு பண்ணியிருக்கோம்ல்ல..." பாண்டி தன் பிரதாபம் பேச...

"நான் ககவுச்சி சாப்பிடுறது இல்ல.. எதுக்கு இம்புட்டு ஏற்பாடு எல்லாம் வீணாப் பண்ணிகிட்டு... சரி சரி நீங்க ஆபிஸ்க்குப் போங்க நான் வர்றேன்.."

பாண்டி தலைத் தொங்கிப் போனது.

"அண்ணே சைவச் சாப்பாடும் ரெடி பண்ணியிருக்கோம் இல்ல... " பாண்டியின் எடுப்பு எடுத்துவிட பாண்டி முகம் பல்பாய் எரிந்தது.

"சரிய்யா ஓங்களோட வந்துச் சாசாப்பிடுறேன்.. எங்க வீட்டு ஆளுங்களை ரொம்ப நாள் கழிச்சுப் பாக்குதேன்.. பேசி இருந்துட்டு வர்றேன்ய்யா"

கட்சி ஆபிஸ் விருந்துக்கு பக்காவாய் தயார் ஆனது.

ஆனந்தன் அந்த வீதியில் நடக்கும் போது அவர் மனத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் ஓடின.

செண்பகத்தின் ஞாபகம் அவர் மனத்தில் அதிகமாய் வந்தது. செண்பகம் ஆனந்தனின் மனைவி. ஆனந்தன் மனத்தில் இப்போது தூளி கட்டி ஊஞ்சாலடியது அவ்ரோடு 30 வருடமாய் வாழ்ந்து வரும் அவர் மனைவி செண்பகம் அல்ல. முப்பது சொச்சம் வருடங்களுக்கு முன் தன் உயிரை விடவும் ஆனந்தன் அதிகமாய் காதலித்த அவர் அத்தை மகள் செண்பகம்.

அந்தச் செண்பகத்தை இதே வீதிகளில் எத்தனை நாள் ஆசையோடும் காதலோடும் இரண்டும் கலந்த ஒரு வித ஏக்கத்தோடும் பார்த்திருப்பேன் என நினைத்த வண்ணம் அந்த வீதியில் மெதுவாய் நடந்தார் ஆனந்தன்.

சின்ன வயசுல்ல ரெட்டை சடைப் போட்டுகிட்டு சுட்டித் தனமாய் சிறகடித்தப் பட்டாம்பூச்சி செண்பகம்.
பருவம் வந்ததும் தாவணியில் அழகியத் தீயாய் வலம் வந்த செண்பகம்
திருவிழா சமயங்க்ளில் தேவதையாய் தோழிகளோடு உலா வந்த செண்பகம்
கோலம் போடும் பொழுதுகளில் ஓவியமாய் செண்பகம்

இன்னும் தன் உள்ளத்தின் ஒவ்வோரு ஜன்னல் வழியாகவும் பார்த்துப் பரவசப்பட்ட செண்பகத்தின் ஒவ்வொரு பிம்பமும் ஆனந்தனின் ஒவ்வொரு செல்லையும் செல்லமாய் உசுப்பிவிட்டுப் போனது.

அந்த செண்பகம் இந்த வீதியில் தான் இன்னும் வாழ்கிறாள் என ஆனந்தன் எண்ணிக் கொண்டார். எண்ணங்களின் ஊடே ஆன்ந்தனின் பார்வை ஒரு வீட்டின் மேல் பதிந்து நின்றது. அந்த வீடும் அதன் கோலமும் ஆனந்தனை மேலும் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியது.
அந்த வீட்டுக்குள் இருந்து லொக் லொக் என்ற இருமல் சத்தம் தொடர்ந்து வந்தது.
வேலிகளில் முழுவதும் படர்ந்திருந்த காட்டுச்செடிகளும் உடைசலாய் விழுந்துக் கிடந்த வேலிக் கதவுகளும் அந்த வீட்டோடு வீட்டிலிருப்பவரின் நிலையையும் ஆனந்தனுக்கு அறிவித்தன.

"தாஸ் வாத்தியார் வீடு தானே இது...ஏன் இப்படி இருக்கு?"

"ஆனந்தனுக்குத் தெரியாதது இல்ல..பேச்சை நிறுத்தி பல வருசம் ஆச்சு... தாஸ் வாத்தியார் உடல் நிலைமையும் அவ்வளவு சீரா இல்ல..சாவுக்கு தான் இழுத்துகிட்டு கிடக்கார் ஆனாலும் எதோ ஒண்ணு அவரைச் சாகவிடாம தடுத்துகிட்டு இருக்கு... பழைய ஆளுங்களுக்கு அவரைப் பத்தி ஓரளவு தெரியும் இப்போ இருக்க இளந்தாரிகளுக்கு அவர் ஒரு சாகக் கிடக்கிற கிழவன்னு மட்டும் தான் தெரியும்...கவனிப்பு இல்ல"

"உனக்கு அவர் யார்ன்னு தெரியும் இல்ல...எனக்குச் சொல்லியிருக்கலாம் இல்ல...என்னய்யா நீங்க? "

"ஆனந்தா இனி ஒண்ணும் பண்ண முடியாது.. வெறும் கூடு தான் இருக்கு உசுரு எப்போ வேணும்ன்னாலும் பறந்துப் போகும்"

ஆனந்தன் கதவை மெல்ல நகர்த்தி விட்டு இருமல் வரும் திசை நோக்கி நகர்ந்தான். சத்தம் வந்த திசையில் பழைய பிரம்பு நாற்காலியில் பள்ளிக்கூட பயலாஜி லேப்களில் இருக்கும் எலும்புக் கூட்டினை ஒத்த மனித உருவம் ஒன்று இருமிக் கொண்டிருந்தது.

தாஸ் வாத்தியார் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனந்தன் அவர் முன்னால் சென்று மண்டியிட்டான். அவர் கையில் ஒரு சட்டம் போட்ட புகைபப்டம் இருந்தது.
அவர் கவனத்தைப் பெற முயன்ற ஆனந்தன் அவர் கையில் இருந்து அந்தப் படத்தை வாங்கினான்.

தாஸ் வாத்தியார் கண்கள் மெல்ல இவன் பக்கம் திரும்பின,. படத்தை திருப்பி அதில் உள்ள படம் தெரியும் படி பிடித்தார் ஆனந்தன்.

"ஆனந்தா இது கதிரேசன் படம்..."

ஆனந்தனின் கண்கள் நீர் வார்த்தது. அவசரமாய் கண்ணீரைத் துடைத்தார். தாஸ் வாத்தியார் கண்களில் அதிசயமாய் ஒரு புன்னகைப் பூத்தது. அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனந்தன் எழுந்துக் கொண்டான். வீட்டைச் சுற்றி ஒரு பார்வைப் பதித்தான்.

" தாஸ் வாத்தியார் இப்படி இருக்கக் கூடாது.. எவ்வளவு செலவு ஆனாலும் சரி... அவர் எப்படி வாழ்ந்தாரோ அப்படியே இந்த வீட்டை மாத்துங்க.. அவர் கடைசி காலம் இப்படி இருக்கக் கூடாது. உடனே செய்யுங்க" ஆனந்தன் குரல் கிட்டத் தட்ட உடைந்துப் போனது

"தோ பார்டா நாமளும் இந்த வீட்டை அடிக்க என்னவெல்லாமோச் செஞ்சோம்,...அமைச்சர் வந்தார்.. ஓடனே வேலையை ஆரம்பிச்சுட்டார். கிழவனைக் கவனிக்கிற மாதிரி கவனிச்சு அவன் போன ஓடனே வீட்டை அடிக்கிற திட்டமிது" பாண்டியின் ஈன மூளைக்கு இப்படியாகப் பட்டது

தாஸ் வாத்தியார் கண்கள் அசைந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. ஆனந்தன் மெதுவாய் வாசலை நோக்கி நகர்ந்தார்.

"ஆ..னன்ந்த் தா...." குழறியபடி வார்த்தை வந்த திசையில் தாஸ் வாத்தியார் நாற்காலி விட்டு எழுந்து நின்றுகொண்டிருந்தார்...

கதிரேசன் கதை - பகுதி 2

கதிரேசன் கதை - பகுதி 3

Thursday, September 28, 2006

கதை 9:ஆஷிரா

காமராஜ் உள்நாட்டு விமான நிலையத்தின் முன்னால் கம்பெனிக்கு சொந்தமான டாட்டா இன்டிக்கா காரின் டிரைவ்ர் சீட்டில் உட்கார்ந்து மூணாவது சிகரெட்டைப் புகைத்து முடித்தேன். நாலாவது சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கவும் செல்போன் சிணுங்கியது.டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானம் மேகமூட்டம் காரணமாக இன்னும் ஒரு இருபது நிமிடங்கள் தாமதமாக வரும் எனற எஸ்.எம் எஸ் படித்து விட்டு செல்போனைச் சட்டைப் பைக்குள் சொருகினேன்.

டெல்லியிருந்து ஆஷிரா வருகிறாள். ஆஷிரா எங்கள் குர்கான் அலுவலகத்தில் ERP பிரிவில் சீனியர் CRM CONSULTANT.வயது 27. அந்த வயதில் கிட்டத்தட்ட நான் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கும் படு சாமர்த்தியசாலி. இங்கு நாங்கள் ஏற்று கொண்டு இருக்கும் ஒரு புதிய திட்டத்தைச் செயலாக்கப்படுத்தவும் எங்கள் அலுவலக ச்காக்களுக்கு பயிற்சி அளிக்கவும் சென்னைக்கு நான்கு மாதப் பயணமாக வருகிறாள்.

பெயரைப் பார்த்தா வடநாட்டுக் காரியாத் தெரியுது. வளமைக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் அரைகுறை உடுப்புக்கும் பஞசமிருக்காது. என் மனத்திற்குள் நானே ஒரு கணக்குப் போட்டுக் கொண்டேன். அவசரப் படாதீங்க.. நீங்க நினைக்கும் கணக்கு அல்ல இது.. இது போன்ற பெண்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. ஆனால் என்னச் செய்ய பொழப்பு அப்படியாகிப் போச்சு.. ஆஷிராவுக்காக இங்கு தேவுடு காத்து நிற்கிறேன். இன்னிக்கு ஞாயிற்று கிழ்மை. ஆபிஸ் டிரைவர் அவசர வேலையாக் கிளம்பிட்டான். அம்மணியோ ரொம்பவும் முக்கியப் புள்ளி. என் தல அதான் பாஸ் எனக்கு அன்புக் கட்டளைப் போட்டுட்டாரு...

"பன்னீர்..MAKE SURE THAT SHE REACHES THE GUEST HOUSE FROM THE AIRPORT SAFELY...SHE DOESNT KNOW CHENNAI"

போடாங்க... என்னப் பண்ண..பாஸ் உத்தரவு.. ஒரு நல்ல ஞாயித்துக்கிழமை காலைத்தூக்கம் போச்சு. நாலாவ்து சிகரெட் ஓயவும். டெல்லி விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது. என் கையில் ஆஷிரா என்று எழுதப் பட்டிருந்த அட்டையை வேண்டா வெறுப்பாய் தூக்கிப் பிடித்துக் கொண்டு வரிசையில் நின்றேன்.

"டிரைவர்.. மேரா சாமான் இதர் ஹை.. வண்டி எங்கே இருக்கு?"

அழுத்தமான ஆணவப் பெண்குரல் ஒன்று என் காதுகளைக் கிழித்துச் சென்றது.
மூர்க்கமான முகத்தோடு அவளைப் பார்த்தேன். உச்சி முதல் பாதம் வரை முழுசா உக்கிரமானப் பார்வைப் பார்த்தேன். அவள் அழகு தான்.. அழகை ரசிக்க விடாமல் அவள் ஆணவம் என்னைத் தடுத்தது.

"அரே டிரைவர்.. க்யா தேக் ரஹே ஹோ.. வண்டி சீக்கிரம் எடுப்பா"

என் கை கார் இருக்கும் இடம் நோக்கி சுட்டியது.. அவள் விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தாள். நான் வேறு வழியில்லாமல் அவள் மூட்டைகளை நகர்த்தியபடி காருக்கு வந்தேன். எதுவும் பேசாமல் காரை செலுத்தினேன். கொஞ்சம் வேகமாகவே ஓட்டினேன்.

பின் சீட் கண்ணாடியை அவள் இறக்கிவிட்டாள், சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து புகையை வெளியே விட்டாள்.என்னிடம் எதுவும் பேசவில்லை.

நானும் எதுவும் பேசவில்லை. காரை வேகமாக ஈ.சி.ஆர் ரோட்டை நோக்கி விட்டேன். கார் நீலாங்கரை கம்பெனி கெஸ்ட் ஹவுஸை அடைந்தது. அவள் இறங்கினாள். கெஸ்ட் ஹவுஸ் வேலையாள் இம்முறை என்னை மூட்டைத் தூக்கவிடாமல் காப்பாற்றினான். அவள் சல்லென்று உள்ளேப் போய்விட்டாள். வேலையாளிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டு பொடி நடையாய் பஸ் ஸ்டாண்ட நோக்கி நடந்தேன்.எனக்கு அவளைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதையும் மீறி பேருந்துப் பயணத்தில் அவள் வளைவு நெளிவுகள் என் சிந்தையில் வந்து மோதி என் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

மறு நாள் காலை பத்து மணிக்கு தான் நான் அலுவலகம் போனேன். முன் கூட்டியே காலத் தாமத்திற்கு அனுமதி வாங்கியிருந்தேன்.என்னுடையக் கேபினை அவளுக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனக்கு எரிச்சல் அதிகமானது.எரிச்சலை உள்ளுக்குள்ளேப் புதைத்துவிட்டு எனக்கு ஒதுக்கியிருந்த வேறு இடத்தில் போய் அமர்ந்தேன். அங்கிருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது.

கலைந்த கேசம்... மிடுக்கானக் கண்கள்... நெற்றியில் புரளும் கற்றை முடி.. அதில் ஒரு விரல் வைத்த அவள் விளையாடியது.. கூர்மையான மூக்கு... மிருதுவான உதடுகள்.. ம்ம்மம் அம்சமாத் தான் இருக்கா.. அதான் திமிர் எனக்கு நானேச் சொல்லிக்கொண்டேன். பாஸ் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். முந்தைய நாள் என்னைப் பார்த்துப் பேசியதற்கான எந்த அறிகுறியும் அவள் நடவடிக்கையில் தென்படவே இல்லை.அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல் படு யதார்த்தமாகப் பேசினாள்.நானும் பாஸ் முன்னாடி சிரிச்சு வச்சேன்.

மத்தியானம் லஞ்சுக்கு வெளியேப் போயிருந்தோம். சாப்பிட்டு முடித்த உடன் தம் அடிக்க நான் வெளியே ஒதுங்கினேன். அவளும் வந்தாள். பற்ற வைக்க வத்திப் பெட்டி இல்லாமல் அக்கம் பக்கம் பார்த்து விட்டு என்னை நோக்கி வந்தாள். வந்துக் கேட்டாக் கண்டிப்பாக் கொடுக்க கூடாது. எனக்குள் ஒரு வைராக்கியம் நுழைத்துக் கொண்டு இறுக்கமாய் நின்றேன். அவள் என் பக்கமாய் வந்து என்னைக் கேட்காமலே என் வாயிலிருந்த சிகரெட்டை எடுத்து தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சாவகாசமாய் புகையை விட்டாள். என் கோபம் என் கட்டுப்பாட்டினை மீற துடித்தது.

"சோ இந்த் ஆபிஸ்ல்ல வாங்குற சம்பளம் உங்களுக்குப் பத்த மாட்டேங்குது அப்படித் தானே? என்று கேட்டு விட்டு தலையை ஸ்டலாக் ஒரு புறம் பார்த்து தாழ்த்தினாள்.
"எனக்குப் புரியல்ல.." என்று நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.

"இல்லை வீக் டேஸ்ல்ல SOFTWARE ஜாப். வீக் என்ட்ஸ்ல்ல டிரைவர் ஜாப்... வருமானம் நல்லாத் தான் இருக்கும் என்று கிண்டலாய் சிரித்தவள்... பட் யூ நோ.. யூ ட்ரைவ் த கார் வெல்" என்றாள்.
எனக்குக் கடுப்பு அதிகமானது. வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் டைட் ஜீன்ஸை என் ஓரக் கண்ணால் அளவெடுத்தேன். அவள் இடுப்பில் சட்டைக்கும் ஜின்ஸ்க்கும் ஒரு நூல் அளவு இடைவெளி. அந்த இடைவெளியில் என் பார்வைப் பதிந்து நின்றது.

மாலை அலுவலக்ம் விடும் நேரத்துக்கு முன்பாக என்னையும் என் சகா கார்த்தியையும் பாஸ் கூப்பிடனுப்பி மாலையில் எங்களுக்கு என்ன வேலை என வினவினார்.
கார்த்தி எப்பவுமே உஷார் பார்ட்டி.. " பாட்டிக்கு கேட்ரக்ட் ஆப்பரேஷ்ன் சார்.. இன்னிக்குப் பாக்கப் போறேன்" டக்குன்னு அள்ளிவிட்டான்.
நான் சாதுவா ஒண்ணுமில்ல சார் என்று தலையாட்டி நின்றேன்.
"மச்சி பெரியப்பா எதாவது டாகுமெண்ட் வேலையை உன் தலையிலேக் கட்டப் போகுதுப் பார்" எனக் கிசுகிசுத்தான் கார்த்தி.

பாஸ் சொன்ன விஷ்யமே வேறு. ஆஷிரா மாலையில் சென்னையில் எங்கோப் போக வேண்டுமாம். அதுக்கு காவலாளி வேலைப் பார்க்க ஆள் வேண்டும். நான் தான் மீண்டும் சிக்கினேன். கார்த்தி கொந்தளித்துவிட்டான்.
"ம்ம் உனக்கு மச்சம்டீ.. அரேபியக் குதிரையை ஓட்டிட்டுப் போறே... ம்ம்ம்" அவன் விட்ட பெருமூச்சை சிலிண்டிரில் பிடித்து வைத்திருந்தால் ஒரு மாதம் சமையலுக்கு ஆகும்.மறுபடியும் அதே இன்டிக்கா... டிரைவர் சீட். இம்முறை அவள் பின்னால் உட்காராமல் முன்னால் உட்கார்ந்துக் கொண்டாள். செம பர்ப்யூம் வாசனை. மனுஷனைக் கும்முன்னு தூக்கிச்சு.

அதிசயமாச் சிகரெட் பிடிக்கவில்லை. கபாலிஸ்வரர் கோயிலுக்குப் போகணும்ன்னு சொன்னாள். வண்டியை மயிலாப்பூருக்கு விட்டேன்.
நான் கோயிலுக்குப் போகவில்லை. அவள் என்னைக வரச் சொல்லி கூப்பிடவுமில்லை, காரணுமும் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் காத்து இருந்தேன். வந்தாள். நெற்றியில் குங்குமம் இட்டு, பிரசாதம் கையில் ஏந்தி , தலையில் ஒரு முழம் மல்லிகைச் சூடி ஜின்ஸ் அணிந்த ஒரு தேவதையாய் வந்தாள்.

"ARE U AN ATHEIST?" அவள் கேட்டாள்
"நோ.. அடுத்து எஙகப் போகணும்? " என்று கேட்டேன்.
"அடையார் கேன்சர் இன் ஸ்டியூட்டிட்"
"அங்கே யார் இருக்கா?"
"அங்கேப் போகணும்" உறுதியானக் குரல் பதிலாய் வந்தது. அவள் கையில் ஒரு ரோஜாப் பூ இருந்தது. நான் வண்டி நிறுத்துமிடத்தில் நின்று கொண்டேன்.

அவள் போய் ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள். அவள் முகத்தில் ஒரு சின்னப் புன்னகைப் புதிதாய் பூத்திருந்தது.
"அடுத்து எங்கே?"
"நல்ல ரெஸ்டாரெண்ட் போலாம்"
"நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்குவேன்"
"ரிலாக்ஸ் உங்களைப் பில் எல்லாம் கட்டச் சொல்லமாட்டேன்"
அவள் சிரித்தாள். நானும் சிரிக்க முயற்சித்தேன்.
"சிரிக்க வேண்டாம்.. உம்ன்னு இருந்தாலே ஜம்ன்னு இருக்கீங்க"

ஹோட்டலில் சைவ வகைகளை ஆர்டர் செய்தாள். நான் ஜீஸ் சொன்னேன்.

"எப்படியிருக்காங்க?"

"யார்?"

"கேன்சர் இன் ஸ்டிடியூட்ல்ல பாக்கப் போணீங்களே அவங்க.."

"ஓ அதுவா? அங்கே இப்போ யாரும் இல்ல. எங்க அப்பா அங்கே இருந்தார். கடைசியா எட்டு மாசம். வார்ட் நம்பர் 13. அப்போ எனக்கு எட்டு வயசு. நிறைய சிகரெட் பிடிப்பாராம். போயிட்டார். அவருக்கு ரோஸ் ரொம்ப பிடிக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்க,, அதான் அவர் கடைசியா இருந்த ரூம்ல்ல ஒரு ரோஸ் வச்சுட்டு வந்தேன்" என்ற படபடப்பாய் பேசி முடித்தாள்.

"நீங்களும் நிறைய ஸ்மோக் பண்றீங்க?"

"அப்பா கிட்ட போகணும் அவர் கூட மிஸ் பண்ண சைல்ட்ஹூட் டேஸ் எல்லாம் மறுபடியும் வாழணும்ன்னு ஒரு ஆசை.. அதான் நானும் பிடிக்குறேன்.." என்று கலகலவெனச் சிரித்தாள்.எனக்குச் சிரிப்பு வரவில்லை. ஆர்டர் செயத் அயிட்டங்கள் பரிமாறபட்டன. அவள் ஒவ்வொன்றாய் எடுத்து ருசிக்க ஆரம்பித்தாள்.

"ஜோக் மேன்... காலேஜ் டேஸ்ல்ல ஜாலியா அப்படியே ஆரம்பிச்ச பழக்கம் இப்போ அப்படியே போகுது,,, நீ எப்படி மேன்? ரொம்ப மூடி டைப்பா இருக்கே?"

நீங்க தேயந்து நீயானது. அவள் கேட்டக் கேள்விக்கு என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்தேன்.

"உங்க..உனக்கு தமிழ் எப்படி தெரியும்? " நானும் வேண்டுமென்று மரியாதைத் தவிர்த்தேன். என்னை விட ஒரு வயசு சின்னப் பொண்ணு தானேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

"நான் தமிழ் பொண்ணு தானே.. அப்பாவுக்கு பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் நன்னிலம். ஆனா இது வரை தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. இது தான் முதல் தடவை. பாட்டி உயிரோட இருந்த வரைக்கும் என்னைச் சென்னைப் பக்கம் விட்டதே இல்லை"

ஒரு நீருற்றாய் வார்த்தைகள் அவளை விட்டு புறப்பட்டன. அருவியாய் அவள் பேச்சு பொங்கியது. ஒரு நதியாய் என் காதுகளில் அவள் மொழி நடந்தது. ஒரு சில நிமிடங்களில் அவளைப் பற்றிய என் அபிப்பிராயங்கள் மாறத் துவங்கின. என்னவெல்லாமோ பேசினாள். ஆனால் எதிலும் அவள் தன் தாயைப் பற்றி மறந்தும் குறிப்பிடவில்லை. எனக்குக் கேட்க வேண்டும் என்று உறுத்தியது. ஆனாலும் கேட்கவில்லை.

அலுவலகம் வந்து விட்டால் வேலையில் கில்லியாய் நிற்பாள். வேலையைத் தவிர வேறு சிந்தனை எதுவுமே அவளிடம் இருக்காது. வேலைச் சொல்லிக் கொடுப்பதிலும் அவள் கெட்டிக்காரி.

ஒரு சனிக்கிழமை மாலை என்னை அவள் வீட்டுக்கு அழைத்திருந்தாள். நானும் போனேன்.
கதவைத் திறந்தவள் கால்சட்டையும் டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ஒரு நல்ல ஓட்டப் பந்தைய வீராங்கனைக்குரிய கால்களை அவள் பெற்றிருந்தாள்.

"கம் இன்"

அவள் அறையில் புத்தகங்கள் இறைந்துக் கிடந்தன. பாதிக்கும் மேல நமக்குப் புரியாத பிரெஞ்சு மொழியில் கிடந்தன.

"புக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மொழி பேதமில்லாமல் படிப்பேன்... படிக்கணும் அப்போத் தான் நம்ம உலகம் இன்னும் பெருசாகும்... பெரிய உலகத்திலே சின்ன சின்ன விஷ்யங்கள் காணாமல் போயிடும்"

நான் கையில் கிடைத்தப் புத்தகங்களைப் புரட்டினேன்.இசைத் தட்டுகளை ஆராய்ந்தேன். சுவற்றில் இருந்த படங்களைப் பார்த்தேன். அதில் ஒரு படத்தில் ஒரு அழகானச் சிறுமி இருந்தாள். அது ஆஷிராவாகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அவள் குடும்ப படம் இருந்தது. ஆஷிராவின் அம்மா படமும் இருந்தது. ஆஷிராவின் அம்மா கிட்டத்தட்ட ஆஷிராப் போலவே இருந்தாள்.

"சரி என்ன ட்ரிங்க் வேணும் விஸ்கியா ஜஸ்ட் பியரா?"
"நோ தாங்க்ஸ்"
"குடிக்க மாட்டியா? வெறும் தம்மு தானா?"
"இல்ல இப்போ வேணாம்"
"ஓ ஓஓஓஓ... ஏன்? " அவள் குரலில் நக்கல் இருந்தது.

அவள் விஸ்கி ஊற்றி கொண்டாள். கோப்பையிலிருந்து மெதுவாக எடுத்து பருகினாள்.
அவ்ள் கண்களில் ஒரு வித சோகம் இழையோடியது.

"ஹே.. ஒரு அழகான பொண்ணு..நான் அழகாத் தானே இருக்கேன்?"
நான் பதில் சொல்லாமல் இருந்தேன்.
"அப்புறம் அந்த அழகான பொண்ணு செக்ஸியான டிரெஸ்ல்ல.. தண்ணியடிச்சுட்டு இருக்கா.. அதுவும் தனியா இருக்கா.. உனக்கு செக்ஸ் எண்ணம் வரலியா?"

நான் உள்ளுக்குள் அதிர்ந்துப் போனேன். நம்ம மனசுக்குள்ளே இவ எட்டிப் பாக்குறாளான்னு ஒரு வினாடி திகைச்சுப் போயிட்டேன்.

"ஹே ரிலாக்ஸ் உங்க தமிழ் படத்துல்ல எல்லாம் அப்படித் தானே காட்டுவாங்க... தம் தண்ணி இதெல்லாம் ஒர் பொண்ணு அடிச்சா அவ எதுக்கும் தயார் அப்படி தானே உங்க நினைப்பு"

ஆஷிரா அதுக்கும் மேல் எவ்வளவோ பேசினாள். நான் ம்ம் கொட்டி வைத்தேன்.

"ஹே நீ யாரையாவ்து லவ் பண்ணி இருக்கீயாடா?"
"ம்ம் பண்ணியிருக்கேன்"
அவள் எக்காளமாய் சிரித்தாள்.
"இந்த சுடு மூஞ்சிய யார்ப்பா லவ் பண்ணா?"
"என் காலேஜ் மேட் அவப் பேர் ரஞ்சனி. இப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. யு.எஸ்ல்ல இருக்கா. அவளுக்கு ஒரு பையன் இருக்கான்"

கோப்பையில் இருந்த மதுவை மெல்ல விழுங்கினாள்.

"அவ பையனுக்கு உன் பெயரா வச்சுருக்கா? உன் காதலி" அவள் பேச்சில் ஒரு விட்டேத்தித் தனம்.

"இல்லை"
"ரொம்ப லவ் பண்ணீயோ?"
"ம்ம்"
"நானும் லவ் பண்ணேன்.. ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இல்ல.. நிறைய வாட்டி..இப்போ ஒரு ஆம்பிளைக் கிட்ட என்ன வேணும்ன்னு எனக்குத் தெரியும் " என்று என் அருகில் வந்தாள்.

நெற்றி முடியினைக் கையில் பிடித்தப்படி என் விழி பார்த்துச் சொன்னாள்.
"தைரியம்டா.. அது உங்க எவன்கிட்டயும் இல்லடா.. இருட்டல்ல இருக்க தைரியம் வெளிச்சம் வந்தா உங்களுக்குப் போயிடுதுடா..."

என் கன்னத்தில் பளீரென்று யாரோ அறைவதுப் போலிருந்தது. அந்த விடிந்தும் விடியாதுமான இரவினில் ரஞ்சனியை அவள் உறவுக்காரர்கள் வந்து இழுத்துப் போனதும்.. அவரகளுக்குப் பயந்து ரஞ்சனியின் கை உதறி நான் புதருக்குள் போய் பம்மியதும் நினைவுக்கு வந்தது..

"என்னாச்சு?" கொஞ்சலாய் அவள் உதடுகள் என் உதடுகளின் வெகு அருகினில் இப்போது. அவள் மூச்சின் உஷ்ணம் என் முகத்தில் மோதி அறைந்தது.

"நான் போகணும் ... ராத்திரி ஒம்போது மணிக்கு அம்மா ஊருல்ல இருந்து பேசுவாங்க.. செல்போனை ரூம்ல்லயே விட்டுட்டு வந்துட்டேன்" என்ற படி திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

Thursday, September 21, 2006

கவி 23:நான் நடந்து வந்த காதல் வீதி












என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்

யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...

வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..

உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..

என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..

முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...

அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..

சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில் உன் பெயர்
மழையில் கரைந்த என் பெயரைத்
தேடி தேடித் தொலைகிறேன்

வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்

ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி

Monday, September 11, 2006

கவி 22:வான் தொடும் பொழுது

இன்றும் என் மீது மிச்சமிருக்கிறது
இன்னும் அந்த வலி என்னில் இருக்கிறது
மரணத்தோடு ஒரு சந்திப்பு
மௌனங்களின் ஆர்ப்பரிப்பு

எட்டிப் பிடிக்கும் தூரத்தில்
என்னருகே மரணம்
எல்லாம் முடிந்தது
என்னும் மரணத்தின் ஆணவம்

அறுத்தெறிந்து ஓடினேன்
அழுகையின் ஊடே ஓடினேன்
நிற்கவும் நேரமில்லை
நின்றாலும் ஆவது ஏதுமில்லை

பூக்களின் புன்னகை
பாதையின் ஓரமாய்
கண்ணாடி ஓவியங்கள்
காயங்களின் தோரணமாய்
பொக்கிஷ்மாய் நினைத்ததெல்லாம்
பொருட்டாய் தோன்றவில்லை

இன்னொருத்தனின் வலி
இதயம் தொடவில்லை
இன்னொரு குரல்
இம்மியளவும் என்னை நிறுத்தவில்லை

சாவின் சங்கிலிக்கு
சிக்கக் கூடாது
சாத்தான்கள் சத்தம்
சாட்டை சுழற்றியது

என் கைகளில்
என் உயிரின் சுவாசம்
பிழைத்துக் கொண்டேன்
பிறருக்கு இல்லாத பாக்கியம்
பிழைத்துக் கொண்டேன்

உயரங்கள் மிஞ்சவில்லை
உயிர் மட்டும் மிஞ்சியது..
உடைந்தக் கண்ணாடியில்
உடைந்த என் உருவம்

என் அடையாளம்
எனக்குத் தெரியவில்லை
என் முகம்
எனக்குப் பிடிக்கவில்லை

என்னை முத்தமிட வந்து
என்னைத் தேடிய மரணமே
என்னைக் காணாது
எத்தனைக் கோபம் உனக்கு?

அழுத கண்ணீர் காயந்துவிட்டது
அழிந்த உயிர்கள் ???

இன்று காலை இந்து நாளிதழில் 9/11 உலக வியாபார மையம் இடிப்பட்டப் போது அதில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவரது பேட்டியினைப் பிரசுரித்து இருந்தார்கள். கண்ணருக்கே பலரின் மரணம் கண்டு அதில் தான் பிழைத்ததுக் குறித்து அந்த மனிதனால் மகிழ்ச்சி கொள்ளமுடியவில்லை.. ஒரு வித குற்றயுணர்ச்சியினால் அந்த மனிதர் தவிக்கிறார். அந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.